இலங் கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 27 சத வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உற்பத்தித் தீர்வை சட்டம் மற்றும் நிதிச் சட்டம் ஆகியவை சார்ந்த 7 கட்டளைகளும் 3 குறைநிரப்புப் பிரேரணைகளும் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த மே மாதம் காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கத்தின் பெறுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலராகும். இது ஜுன் மாதமாகும்போது 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்தது.
நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கம் இத்தகைய குறுகிய காலப் பகுதியில் இந்தளவு வளர்ச்சியடைந்தமை இதுவே முதற்தடவையாகும்.தீர்வை அதிகரிக்கப்பட்டதால் சிகரட் பாவனை குறைவடைந்துள்ளது. வரியை உயர்த்துவதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பது மாத்திரமன்றி சிகரட் பாவனையைக் குறைப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். பொருளாதார வளர்ச்சிப் பதிவின் மூலம் ஆடை உற்பத்தித்துறைக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத்துறையில் சிறப்பாக செயற்பட்ட 125 நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காகவும் அரசாங்கம் பல சலுகைகளை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.