இரண்டரை வயதுக் குழந்தைக்கு நஞ்சூட்டிய தந்தை நேற்று கைது கந்தளாய் பேராறு பகுதியில் சம்பவம்

இரண்டரை வயது பெண் குழந்தையை நஞ்சூட்டி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குழந்தையின் தந்தையை கைது செய்துள்ள சம்பவமொன்று கந்தளாயில் இடம் பெற்றுள்ளது. கந்தளாய் பேராறு பகுதி யுனிப் ஒன்றைச் சேர்ந்த நெளபிதா என்ற 2 1/2 வயது சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குழந்தைக்கு நஞ்சூட்டியதாக சந்தேகிக்கப்படும் குழந்தையின் தந்தையான நவாஸ் என்பர் கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி குழந்தையின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதற்காக சென்றுள்ளார். தாயாரின் சகோதரியின் பாதுகாப்பிலேயே குழந்தை வளர்ந்து வந்துள்ளது. குழந்தையின் தந்தை வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என்றும் தெரி விக்கப்படுகிறது.

சம்பவதினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காலை 8 மணி யளவில் அழைத்துக் சென்றுள்ளார். 8.30 மணியளவில் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து வீட்டு வாசலில் விட்டு விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் வந்த குழந்தை சில மணி நேரத்தில் வாந்தியெடுத்ததுடன் மயக்க மடைந்துள்ளது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாகவும் குழந்தைக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தந்தையான நவாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.கந்தளாய் ஆஸ்பத்திரியிலிருந்து அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு இறந்த குழந்தையின் சடலம் நேற்று அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.குழந்தை நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதா என்பது பற்றி பிரேத பரிசோதனையின் போதே தெரிய வரும் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *