வரவு செலவுத் திட்ட செலவின ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக இரு அமைச்சுகளுக்கென 986 கோடியே 64 இலட்சம் ரூபாவை குறைநிரப்பு தொகையாக வழங்குவதற்கு சபை நேற்று புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு ஆகிய இரண்டினதும் கீழான செலவினங்களுக்காகவே இந்த குறைநிரப்புத் தொகை வழங்கப்படுகிறது.
பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம் பலாப்பிட்டிய நேற்று இதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையாக 801 கோடியே 64 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையானது 35 கோடி ரூபா மற்றும் 150 கோடி ரூபா என இரண்டு கட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேநேரம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வெளியிடப்பட்ட கட்டளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகளையும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவற்றுடன் சமர்ப்பித்தார்.
அத்துடன், ஏற்கனவே அமுலில் இருக்கும் விடயங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெறவே இந்த பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதனால் எந்தப் பொருட்களினதும் விலையும் அதிகரிக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவை மீதான விவாதத்தின் இறுதியில் குறைநிரப்புப் பிரேரணைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.