செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சூரிய கிரகணம் இன்று

sun.jpgசூரிய கிரகணத்தையோ, சூரியனையோ வெற்றுக் கண் களால் பார்ப்பதால் கண் பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படும் என்று கொழும்பு பல் கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவு ரையாளரும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜய ரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

இன்று (22ம் திகதி) சூரிய கிரகணமாகும். இதனை இந்தியா, நேபாளம், பங்களாதேசம், பூட்டான், மியன்மார், சீனா உட்பட்ட சில நாடுகளில் முழுமையாக பார்க்க முடியுமென்றாலும் இலங்கையில் பகுதியாகவே தென்படும். அத்தோடு கிழக்காசியா, இந்தோனேசியா மற்றும் பசுபிக் கரையோர நாடுகளிலும் இதனை பகுதியாகவே பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் காலை 6.03 மணி முதல் தென்படும் இச்சூரிய கிரகணத்தை சில நிமிடங்கள் வித்தியாசத்தில் வெவ்வேறு நகரங்களில் காட்சியளிக்கும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு நகரில் காலை 6.03 மணிக்கு தென்படத் தொடங்கும் இச்சூரிய கிரகணம் காலை 7.12 வரை இருக்கும். காலை 6.21 மணியளவில் உச்சமாக தென்படும் இச்சமயம் சூரியனின் 40 சதவீதத்தை சந்திரன் மறைப்பதால் இருட்டு நிலை ஏற்படுகின்றது. இச்சூரிய கிரகணத்தை நாட்டின் ஏனைய நகரங்களில் சில நிமிடங்கள் வித்தியாசத்தில் பார்க்க முடியும்.

உதாரணத்திற்குச் சொல்லுவதாயின் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு காலை 5.58 மணி முதல் காலை 7.15 மணி வரை தென்படும். காலியில் காலை 6.03 மணி முதல் காலை 7.11 மணி வரை பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இச்சூரிய கிரகணத்தை உயர்வான இடங்களிலிருந்தோ, மலை உச்சியிலிருந்தோ தெளிவாகப் பார்க்க முடியும்.

இங்கிலாந்தின் அழகுராணியாக முதல் தடவையாக கறுப்பின அழகி

miss_england-2009.jpgஇங்கிலாந்தின் முதலாவது கறுப்பு இன அழகுராணியாக ரேசல் கிறிஸ்ரி (20 வயது) திங்கட்கிழமை இரவு மகுடம் சூட்டிக் கொண்டுள்ளார். இவர் முன்னாள் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட சாம்பியன் லின்போர்ட் கிறிஸ்ரியின் மைத்துனி ஆவார். மேற்கு லண்டனிலுள்ள கென்ஸிங்டன் எனும் இடத்தைச் சேர்ந்த ரேசல் கிறிஸ்ரி 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிச் சுற்றொன்றில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை கார் விபத்து ஒன்றுக்கு ஆளாகிய ரேசல், சிராய்ப்பு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓர் இரவை மருத்துவ மனையில் கழித்தார். இந்நிலையில் தைரியத்துடன் அழகுராணிப் போட்டியில் கலந்து வெற்றி பெற்றுள்ள ரேசல் விபரிக்கையில், “”நான் வாழ்வில் எதைத் தெரிவு செய்தாலும், அதில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே எனது இலட்சியமாகும்” எனத் தெரிவித்தார்.

மத்திய லண்டனில் மெற்றோபோல் ஹில்டன் ஹோட்டலில் மேற்படி அழகுராணிப் போட்டி நடைபெற்ற போது இந்தப் போட்டியானது பாலியல் ரீதியான காட்சிப்படுத்தலாக உள்ளது என கண்டனம் தெரிவித்து ஹோட்டலுக்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

“ஒவ்வொரு பெண்ணும் ஒரு ராணிதான்’, “அழகு என்பது தோலில் இல்லை’ போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்

பாதாள உலகக் கோஷ்டியினர் சரணடைய வேண்டும் – பொலிஸ் மாஅதிபர் கோரிக்கை

jayantha_igp.jpgபாதாள உலகக் கோஷ்டியினரை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ அல்லது பொலிஸ் தலைமைக் காரியாலயத்திலுள்ள குற்றவியல் தொடர்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடமோ சரணடையுமாறு பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற ரட்ட யன எத்த எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பாதாள உலகக் கோஷ்டியினரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸ் மாஅதிபர், இதன்போது பொலிஸார் எத்தகைய அழுத்தங்களுக்கும் உட்பட மாட்டார்கள் எனக் கூறினார்.

பாதாளக் குழுக்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்க முடியும் எனக் கூறிய பொலிஸ் மாஅதிபர், இத்தகவல்களை பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் தலைமை அலுவலகம், கொழும்பு எனும் முகவரிக்கோ அல்லது 0112446174 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டோ அறிவிக்க முடியும் எனத் தெரிவித்தார். தகவல்களை வழங்குவோர் அவற்றைத் தமது பெயரைக் குறிப்பிட்டோ அல்லது குறிப்பிடாமலோ வழங்கலாம் என்றும் பொலிஸ் மாஅதிபர் மேலும் கூறினார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை கொன்று குவித்தவர்கள் எங்களுக்கு மனித உரிமைகள் பற்றி போதிக்கின்றனர் – ஜனாதிபதி

mahinda_raajapakse11.jpgஇலங்கையில் ஊவா வெல்லஸ்ஸவில் இடம்பெற்ற பெரும் கிளர்ச்சியைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட எல்லா இளம் ஆண்களையும் கொன்று குவித்த சில சக்திகள் இன்று எமக்கு மனித உரிமைகள் பற்றி போதிக்கின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் மேற்கொண்ட இந்த படுகொலைகளை மறைப்பதற்காகவே நமது நாடு மனித உரிமைகளை மீறுவதாக இப்போது குற்றம் சாட்டுகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரித்தானிய காலணித்துவ வாதத்திற்கு எதிராக 1818 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பெரும் கிளர்ச்சி நடந்தேறிய பண்டைய வெல்லஸ்ஸ பிரதேசத்தின் பெலவத்த சீனித்தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இப்பிரதேசத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன திட்டங்களை அவர்கள் தகர்த்ததன் மூலம் தன்னிறைவு பொருளாதாரத்தை திட்டமிட்ட முறையில் நசுக்கினர். மிகவும் வளம்பொருந்திய இப் பகுதி வறுமை மிக்கதொரு பகுதியாக மாற்றப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று எமது வீரமிக்க படைவீரர்களால் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த நாட்டைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் தன்னால் இயலுமான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி ஏகாதிபத்தியவாதிகளால் நிர்மூலமாக்கப்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்களை தனது அரசாங்கம் மீள் கட்டமைத்து முன்னிருந்ததைப் போன்று இந்தப் பிரதேசத்தை வளம் மிகுந்த ஒரு பிரதேசமாக மாற்றியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பி நாட்டு மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக சிறிய உள்ளுர் அமைப்புகள்ää மாகாணசபைகள்ää மத்திய அரசாங்கம் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு வினைத்திறன்மிக்க இயந்திரத்தின் சில்லுகள் போன்று ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார

சீன பொறியியலாளர் குழு நாளை யாழ். விஜயம்!

railway_lines.jpg
காங்கேசன்துறையிலிந்து பளைவரையான ரயில் பாதைப்புனரமைப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள சீன பொறியியலாளர் குழுவொன்று நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்

இதேவேளை, அம்பாந்தோட்டையிலிருந்து கட்டடக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு யாழ் புகையிரத நிலையம் முன்பிருந்தது போலவே புனரமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த புனரமைப்புப் பணிகளுக்கு அம்பாந்தோட்டை மக்களும் கனிசமான பங்களிப்பு வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்தேவி ரயில் சேவையை முன்னரைப்போலவே மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் காங்கேசன்துறையில் இருந்தும் வவுனியாவில் இருந்தும் ரயில் பாதை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்தோர் குறித்து நாளை சபையில் விவாதம்

வடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் தொடர்பாக நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறவுள்ளது.
வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களின் நிலைமை தொடர்பான இந்த விவாதமானது சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாகவே நடைபெறவுள்ளது.

ஜே.வி.பி.யினால் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், புதன்கிழமை நண்பகல் 12.30 மணி தொடக்கம் மாலை 4.30 பணி வரையான 4 மணி நேரத்துக்கு இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

மானியங்களைக் குறைக்காமலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிப்பு

050709imf_.jpg மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை சிறதளவும் குறைக்காமலேயே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் கடனுதவி பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களைக் குறைப்பதில்லை என்ற நிலைப்பாட்டுடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கடனுதவி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.சர்வதேச நாணய நிதியமும் சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்தக் கடனுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

குட்டித் தேர்தலாக இருந்தாலும் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதைத் தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது – சித்தார்த்தன்

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல் குட்டித் தேர்தலாக இருந்தாலும், இன்றைய இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகப் பலதரப்பினராலும் கருதப்படுகின்றது. எனவே இந்த முக்கியத்துவத்தைத் தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது என வவுனியா நகரசபைக்கான தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா இறம்பைக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தி்னருடன் இடம்பெற்ற இறுதிச் சண்டைகளின்போது இறுதிப் போராளி இருக்கும் வரையில் போராடுவோம் என சூளுரைத்து போராடிய விடுதலைப்புலிகள் இன்று இல்லை. அந்தச் சண்டைகளின்போது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இறந்து போனார்கள். பலர் காயமடைந்தார்கள். சுமார் 3 லட்சம் மக்கள் தமது சொந்த மண்ணிலேயே அகதிளாக இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், யுத்தம் முடிவடைந்த உடனேயே நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலில் இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவோம் என சூளுரைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் களமிறங்கியிருக்கிறார்கள். இத்தகைய ஒரு போராட்டத்தின் மூலம், வவுனியாவும் இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறிவிடக் கூடாது. அதனை எமது மக்கள் அனுமதிக்கக் கூடாது. இதற்காக இங்கு பிரச்சினைகளே இல்லை. மக்கள் நன்றாக இயல்பாக வாழ்கின்றார்கள் என்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கும் காரியத்தையும் தமிழ் மக்கள் செய்துவிடக் கூடாது.

விடுதலைப்புலிகளை அரசாங்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் பின்னர் தமி்ழ் மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இன்று சர்வதேச நாடுகள் மிகுந்த ஆவலாக இருக்கின்றார்கள். எனவே இந்தத் தேர்தலில் சரியாக வாக்களிப்பதன் மூலம், தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டை எமது மக்கள் சர்வதேச நாடுகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும். என்றார் ரீ.சித்தார்த்தன்

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வவுனியா ஹொரவப்பத்தானை வீதி போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம்லால் திசாநாயக்கவினால் வவுனியா ஹொரவப்பத்தானை இன்று வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டு, ஹொரவப்பத்தானைக்கும் வவுனியாவுக்கும் இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வைபவத்தில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் கலந்து கொண்டார்.

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த இந்த வீதி திறக்கப்பட்டுள்ளதையடுத்து, நாளை புதன்கிழமை 22 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான நேரடி பேருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 7.30 மணிக்கு வவுனியா போக்குவரத்து சாலையைச் சேர்ந்த பேருந்து வவுனியாவில் இருந்து திருகோணமலைக்குப் புறப்பட்டுச் செல்லும். அதிகாலை ஹொரவப்பத்தானையில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற ஹொரவப்பத்தானை சாலையைச் சேர்ந்த பேருந்து வவுனியாவில் இருந்து காலை 8.30 மணிக்கு திருகோணமலைக்குப் புறப்பட்டுச் செல்லும்.

இதேவேளை, காலையில் மன்னாரிலிருந்து புறப்படும் மன்னார் போக்குவரத்துச் சாலையைச் சேர்ந்த பேருந்து வவுனியாவை வந்தடைந்து, காலை 9 மணிக்கு இங்கிருந்து திருகோணமலைக்குப் புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இருபது வருட காலத்தின் பின்னர் மன்னார் திருகோணமலை மற்றும் வவுனியா திருகோணமலை நேரடி பேரூந்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாதாளக் குழுக்கள் பற்றிய தகவலை எனக்கு நேரடியாக அறிவியூங்கள் – பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை

kottabaya.jpgபாதாளக் குழுக்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அது பற்றி குற்றத் தடுப்பு பிரிவினருக்கோ அல்லது நேரடியாக தமக்கோ அறிவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதாளக் குழுக்கள் மற்றும் திட்டமிட்டு குற்றச் செயல்களைப் புரிவோரின் செயற்பாடுகளை ஒழிக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸார் மற்றும் அதிரடிப்படை உறுப்பினர்கள் அடங்கிய விசேட பிரிவொன்று இதற்காக உருவாக்கப்பட்;டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

புலிப்பயங்கரவாதிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பாதாளக்; குழுக்கள் மற்றும் திட்டமிட்டு குற்றச் செயல்களைப் புரிவோரின் செயற்பாடுகளை ஒழிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.