செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ் மாநகரசபைக்கு ஐந்து முஸ்லிம்கள்

election000.jpgயாழ் மாநகரசபைக்கு ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.  சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இதன்படி முஸ்லிம்கள் ஐவர் யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபையில் ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கு அ. இ. மு.கா. சார்பாக போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளதுடன், வவுனியா நகர சபைக்கும் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இதன்படி,  வவுனியா நகர சபைக்கு எம். எஸ். எம். பாரி என்பவர் தெரிவாகியுள்ளார். இவர் பெற்ற விருப்பு வாக்கு 2270 ஆகும்.

யாழ். மாநகர சபைக்கு தெரிவாகியுள்ள முஹம்மது மீரா சாஹிப் முஹம்மது ரமீஸ் 1338 விருப்பு வாக்குகளையும்,  முஹம்மது மீராசாஹிப் முஸ்தபா 1029 விருப்பு வாக்குகளையும், பதூர்தீன் அஸ்கர் ரூமி 979 விருப்பு வாக்குகளையும்,  அஜ்மயின் அஸ்பர் 960 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை வவுனியா நகர சபைக்கு மு. கா. உறுப்பினர் ஒருவரும் தெரிவாகியுள்ளார். 587 வாக்குகளை மாத்திரமே பெற்ற மு. கா வுக்கு இந்த ஒரு  ஆசனம் கிடைத்துள்ளது.

யாழ். மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். யாழ். மாநகர சபைக்கு வாக்களிக்க தகுதி பெற்றிருந்த சுமார் 6000 இடம்பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்களில் 70 வீதமானோர் தேர்தலில் வாக்களித்துள்ளனர

முஸ்லிம் பெயரில் புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி கொழும்பில்!

lady00000.jpgபுலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியொருவர்  பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கொழும்பு நகருக்குள் பிரவேசித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான  ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் 09 ஆம் திகதி பிறந்த அப்துல் சலாம் பாத்திமா யெஸ்மின் என்னும் பெயரில் நடமாடும்  தற்கொலைப் படையைச் சேர்ந்த இந்தப் பெண் உறுப்பினர் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தேடப்பட்டு வருகின்றார்.

இவர் கொழும்பு 12,  பழைய சோனகத்தெருவை வசிப்பிடமாகக் கொண்டிருப்பதாக அவருடைய தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பெண்ணினது தேசிய அடையாள அட்டை இலக்கம் 857835641எ யாகும். இவர் பற்றிய தகவல் தெரிவோர் பொலிஸ் தலைமையகத்துடன் 011-2421111 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது பயங்கரவாத தடுப்புப் பிரிவுடன் 011-2321839,  011-2451636,  011-2384401 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும் அல்லது குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துடன் 011-2320141 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது கொழும்புப் பொலிஸின் அவசர நடவடிக்கைப் பிரிவின் 011-2243333 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்களை அறியத்தருமாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

5-வது ஒரு நாள்: பாகிஸ்தான் வெற்றி

kumar.jpgஇலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இலங்கை 147 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை தொடரை 3- 2 என்று கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் யூனிஸ்கான் 74 ரன்களும், மிஸ்பா உல்-ஹக் 73 ரன்களும் முகமது யூசுப் 43 ரன்களும், நவீத் உல்-ஹசன் 33 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் சரிவு ஆரம்பமானது. அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்குள் 8 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆமீரும், நவேது உல் ஹஸனும் முறையே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு கண்டம்பி (42 ரன்), பண்டாரா (31 ரன்) ஆகியோர் தாக்குப்பிடித்து ஆடியதால் இலங்கை அணியால் மூன்று இலக்க ஸ்கோரை தாண்ட முடிந்தது. முடிவில் 34.2 ஓவர்களில் இலங்கை அணி 147 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி தழுவியது.

132 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர், நவீத் உல்-ஹசன் தலா 4 விக்கெட்டுகளும், அப்ரிடி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும்.

பாகிஸ்தான் வீரர் நவீத் உல்-ஹசன் ஆட்டநாயகன் விருதினையும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா (தொடரில் 9 விக்கெட் எடுத்துள்ளார்) தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

அமைதியான தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர்

election000.jpgயாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை உட்பட ஊவா மாகாண சபை என்பவற்றுக்கான தேர்தல்கள் அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பத்து வருடங்களுக்கு பின்னர் நடந்தன. இத்தேர்தல்களும் ஊவா மாகாண சபைக்கான தேர்தலும் மிகவும் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற்றன.

இத்தேர்தல்களை அமைதியாகவும், சுமூகமாகவும் நடாத்தி முடிப்பதற்கு உதவி ஒத்துழைப்பு நல்கிய பொலிஸாருக்கும் முப்படையினருக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பணியாளர் தொழில் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான விசேட கருத்தரங்கு

housemaids.jpg
இலங்கையில் வீட்டுப் பணியாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் செங்கொடிச் சங்கம் அதன் மகளிர் பிரிவுடன் இணைந்து கருத்தரங்கொன்றை நடத்தியுள்ளது.  வீட்டுப் பணியாளர் தொழில் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. இவர்கள் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களாகவுள்ளதால் தொழில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது. புதிதாத அத்தொழிலாளர்களின் தேவைகளுக்கு அமைய சட்டத்தை உருவாக்கும் நோக்கில் கொழும்பு,ஜானகி ஹோட்டலில்  நடைபெற்றபோது பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரச தனியார் தொழிற்சங்கங்கள் பங்குபற்றின.

வீட்டுப் பணியாளருக்கு உரிய சட்டமொன்று அவசியமானது. எனினும், இவர்கள் வரையறையற்றிருப்பதால் சட்டத்தை உருவாக்க சிரமமாகவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் இங்கு பேசுகையில் தெரிவித்தார்.

அத்துடன் தேசிய சட்டத்தின் கீழ் வீட்டுப் பணியாளர்களின் சில உரிமைகள் மீறப்படுமெனின் நடவடிக்கை எடுக்கப்படும். உதாரணாக வயது குறைந்த பணியாளர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேநேரம், முக்கியமாக வீட்டுப் பணியாளர்கள் குறைந்த சம்பளத்தைப் பெறுவதே பெரிய பிரச்சினையாக உள்ளதாக செங்கொடிச் சங்கத்தின் மகளிர் பிரிவு தெரிவித்தது.

எனவே, சம்பள ரீதியில் பாதுகாப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமெனவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

க.பொ.த.உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகிறது

000stud.jpgக.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இப்பரீட்சையில் மோசடிகள் இடம்பெறாது தடுப்பதற்கு இம்முறையும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக பரீட்சைத் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவு ஒன்று இயங்கும் எனவும் இப்பரீட்சையில் ஆள்மாறாட்டம் அல்லது வேறு மோசடிகள் இடம்பெற்றால் இப்பிரிவுக்குத் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பரீட்சை மண்டபம் மற்றும் பரீட்சை அதிகாரிகள் தொடர்பாகவும் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0112784208 அல்லது 0112785220 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 1,827 பரீட்சை மண்டபங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. 2 இலட்சத்து 42 ஆயிரத்து 91 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள 1,263 மாணவர்களுக்கு வவுனியாவில் 10 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையின் பின் 1991 இல் தாய்லாந்து சென்றார் கே.பி.’

pathmanathan.jpg விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் பிளாஸ்ரிக் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் 1991 இல் தாய்லாந்துக்குச் சென்று அங்கு திருமணம் செய்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பல வருடங்களாகப் பயங்கரவாதக் குழுக்களுக்கு கே.பி. ஆயுத விற்பனை செய்தவர் என்றும் ரோலர்களைப் பயன்படுத்தி திறமையாக சமாளித்து ஆயுதங்களைக் கொண்டு செல்பவர் எனவும் அதேசமயம் மிகவும் நவீனமான ஆயுதக் கொள்வனவு முறைமைகளை மேற்கொண்டு பிரதான ஆயுத வியாபாரிகளின் நம்பிக்கையைப் பெற்றிருந்தவர் என்றும் இராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி.யின் பயண முறைமைகளால் விடுதலைப் புலிகளின் கப்பல்களில் நடமாட்டம் அதிகரித்திருந்தது. விமான நிலையங்கள், துறைமுகங்களுக்குக் கொண்டு சென்று மிகவும் சுலபமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவர் ஆயுதத் தயாரிப்பு நாடுகளுக்கும் சென்று வந்தார். முன்னாள் சோவியத் நாடுகள் , மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய ஆயுத உற்பத்தி நாடுகளுக்கு அவர் சென்றுவந்தார். அத்துடன், ஹொங்கொங், சிங்கப்பூர், லெபனான், தாய்லாந்து, சைப்பிரஸ் போன்ற நாடுகளிலுள்ள ஆயுத வியாபாரிகளிடமும் அவர் தொடர்புகளை விருத்தி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சு அறிக்கையின் பிரகாரம் கே.பி. பிரான்ஸ், சைப்பிரஸ், தாய்லாந்து, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, கம்போடியா, பாகிஸ்தான், நோர்வே, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார். வன்னி நடவடிக்கைகளின் பிந்திய கட்டத்தில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு கொழும்புக்கு சர்வதேச அழுத்தத்தைக் கொடுப்பதற்கு கே.பி. செயற்பட்டு வந்தார். இலங்கை அரசுக்கு எதிராக மேற்குலக தலை நகரங்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவதற்கு ஊக்குவித்தும் நிதி ஆதரவு வழங்கியும் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பிரிவினைவாதம் அவரின் அறிக்கைகளில் காணப்பட்டதாகவும் புலம்பெயர்ந்த சமூகத்தை ஈழத்தமிழர்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தை அந்நிய ஆட்சியென கருதப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  2007 செப்டெம்பர் 10 இல் தாய்லாந்து பொலிஸாரால் கே.பி. கைது செய்யப்பட்டதாக தாய்லாந்தின் பாங்கொங் போஸ்ட் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக இந்திய, இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்துவதற்காக அணுகிய போது அந்தச் செய்தி சரியானதல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2009 மே 18 இல் துரிதமாக விடுக்கப்பட்ட அறிவிப்பில் பிரபாகரன் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கே.பி. தெரிவித்திருந்தார். பின்னர் தனது அறிக்கையை அவர் திருத்திக்கொண்டார். முதலாவது அறிக்கை தொடர்பாகவும் பின்னர் அவர் விடுத்த அறிவிப்பு தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய குற்றச்செயல்கள் குறித்து இலங்கை, இந்தியா மற்றும் இன்ரர் போலின் தேடுதல் பட்டியலில் கே.பி.இருந்தார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உட்பட அதி முக்கிய பிரமுகர்களின் படுகொலைச்சதி மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் பில்லியன் டொலர் நிதியை கே.பி.தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பதவி வழங்குவோரிடமிருந்து இதனைப் பெற்றுக்கொண்டதாகவும் இந்த நிதியில் சில பகுதி வெளிநாடுகளிலுள்ள தமிழர்களிடமிருந்து கப்பமாகப் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாசப்படங்கள் பார்ப்பதை தவிர்க்குமாறு கணினி நிலையங்களில் அறிவித்தல்கள்

இணையத்தளங்கள் மூலம் ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர். தனியார் தொலைத்தொடர்பு நிலையங்களில் இணையத்தளங்களை பயன்படுத்துவது குறித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிலையங்கள் இணையத்தளங்களைப் பயன்படுத்தும் நிலையங்களிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எவராவது ஆபாசப்படங்களைப் பார்ப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்த நிலையங்கள் மூடப்படும் எனவும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள இந்த நிலையங்களின் உரிமையாளர்களுடன் பொலிஸார் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

அரசு அண்மையில் ஆபாசப்படங்கள் தொடர்பான சில இணையத்தளங்களை தடை செய்துள்ளதையடுத்து பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.  இதேவேளை, சில தனியார் தொலைத்தொடர்பு நிலையங்கள், கணினி பயிற்சி நிலையங்கள், கணினி நிலையங்கள் என்பவற்றில் “ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் பொலிஸார் அறிவித்தல்’ என்ற விளம்பரங்களும் காணப்படுகின்றன.

இலங்கைத் தமிழருக்கு மாகாண சுயாட்சி கோருகிறார் சுவாமி

இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளை ஒத்ததாக மாகாண சுயாட்சியுடனான அதிகாரப் பகிர்வு இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் தெற்காசியா, மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கைச் சந்தித்திருந்த சுப்பிரமணியன் சுவாமி அதிகாரப்பகிர்வை அமுல்படுத்த தனது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளவும் பாதுகாப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை ஆரம்பிப்பதில் தீர்வு தங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். பின்னர் சில மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சில ஏற்பாடுகளுக்கு அத்திவாரமாக இவற்றை மேற்கொண்டு சாத்தியமான அளவு பரந்துபட்ட கருத்தொருமைப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் இந்தியா அதிகளவுக்குச் செயற்பட வேண்டும்.

அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன் வைக்குமாறு அமெரிக்காவும் இலங்கை அரசை வலியுறுத்துகிறது. இந்த அதிகாரப்பகிர்வானது தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாகவும் அரசியல் பொதுக் கூட்டத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதாகவும் இருப்பதற்கு துணை நிற்பதாக இருக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

“ஆயுதப் பொதிகளை சுமந்து வந்து சேர்த்ததால்’ கே.பி.க்கு பிரபாகரன் வைத்த செல்லப் பெயர் கழுதை

kp_vp_bala.jpgகைது செய்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் கே.பி. என்ற பெயராலேயே பரவலாக அறியப்பட்டிருந்த போதிலும் அவருக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வைத்திருந்த பெயர் “கழுதை’ என்பதாகும். செல்லமாக இந்தப் பெயரை பிரபாகரன் கே.பி.க்குச் சூட்டியிருந்தார்.  இத்தகவலை பற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் தமது இணையத்தளத்தில் எழுதியுள்ளார். கே.பி.யின் கைது தொடர்பாக ஜெயராஜ் மேலும் எழுதியிருப்பதாவது;

கழுதையானது தனது முதுகில் பொதிகளை சுமந்துவரும். தனது முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத மூடைகளை விநியோகித்தவர் கே.பி. அதனால், அவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டிருந்தது.