இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளை ஒத்ததாக மாகாண சுயாட்சியுடனான அதிகாரப் பகிர்வு இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டனில் தெற்காசியா, மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கைச் சந்தித்திருந்த சுப்பிரமணியன் சுவாமி அதிகாரப்பகிர்வை அமுல்படுத்த தனது அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளவும் பாதுகாப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை ஆரம்பிப்பதில் தீர்வு தங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். பின்னர் சில மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சில ஏற்பாடுகளுக்கு அத்திவாரமாக இவற்றை மேற்கொண்டு சாத்தியமான அளவு பரந்துபட்ட கருத்தொருமைப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் இந்தியா அதிகளவுக்குச் செயற்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன் வைக்குமாறு அமெரிக்காவும் இலங்கை அரசை வலியுறுத்துகிறது. இந்த அதிகாரப்பகிர்வானது தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாகவும் அரசியல் பொதுக் கூட்டத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதாகவும் இருப்பதற்கு துணை நிற்பதாக இருக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.