செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

KP_Selvarajah_Pathmanathanநடைபெற வுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும் விளங்கிய கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் களமிறக்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக இவர் நிறுத்தப்படவுள்ளதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இதற்காக கே.பி இற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கே.பி மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள 20 தமிழ் பிரதிநிதிகள் அடங்கிய குழு வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், அரசாங்கம் இவர்களை சகல பாதுகாப்புகளோடு அழைத்துச் சென்றதாகவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரசின் விமானமொன்றில் பலாலி படைமுகாமிற்குச் சென்ற இக்குழுவினர் பின்னர் கிளிநொச்சிக்கு சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இத்கவலை வெளியிட்டார்.

யாழ். சிமெந்து தொழிற்சாலை – உயர்மட்டக்குழு நாளை யாழ். வருகிறது.

KKS_Cement_Factoryகாங்கேசன் துறை சிமெந்து கூட்டுத்தாபனம், லங்கா சிமெந்து நிறுவனம் ஆகியவற்றின் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்வது குறித்து ஆராய உயர்மட்டக் குழுவொன்று நாளை (24-06-2010) யாழ்ப்பாணம் வரவுள்ளது. இவ்விரு நிறுவனங்களினதும் தலைவாராக நியமனம் பெற்றுள்ள தேசமானி எஸ.ஜே.பரணகம தலைமையில் கைத்தொழில்துறை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் நாளை வருகை தருகின்றனர். 

தொழில்சாலையின் செயற்பாடுகள் பற்றி விளக்கவதற்காக செய்தியாளர் சந்திப்பு ஒன்று நாளைக் காலை 9 மணிக்கு இணுவிலில் உள்ள லங்கா சிமெந்து நிறுவன அலவலகத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடு ஆலயத் திருவிழா இன்று ஆரம்பமானது.

madu_churchவரலாற்றுச் சிறப்பு மிக்க புனித மடுமாதா ஆலையத் திருவிழா இன்று (June 23 2010) புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று ஆரம்பமான இத்திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெற்று யூலை மாதம் 2ம் திகதி திருப்பலி ஒப்புக் கொடுப்புடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடுஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி தங்குமிடம், கழிவறை, குடிநீர், உணவு போன்றவற்றிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலயத்திற்கு வருகை தருவோர் மது பாவனையைத் தவிர்த்து புனிதம் பேணுமாறும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். 

வருடந்தோறும் நடைபெறும் மடு ஆலயத் திருவிழாவிற்கு இலங்கை முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களும் பல்லாயிரக் கணக்கில் வருகை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மொழி மாநாட்டில் மலையக ‘காமன் கூத்து’

நாளை (June 24 2010)  தமிழ் நாடு கோவையில் ஆரம்பமாகவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கை மலையக மக்களின் பாரம்பரிய கலையான ‘காமன் கூத்து’ அரங்கேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஹட்டன் தமிழ்ச்சங்கத் தலைவரும். கவிஞருமான சு.முரளிதரன் மேற்கொண்டுள்ளர்.  செம்மொழி மாநாட்டின் இலங்கைக் குழுத்தலைவரான பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வேண்டுகோளுக்கிணங்கவே காமன் கூத்துக் கலைஞர்கள்  அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் இரா.பிரான்சிஸ் ஹெலன் நெறியாள்கையில் 14 பேர் கலைஞர்கள் அடங்கிய குழுவினர் இதற்காக தமிழகம் செல்கின்றனர்.

பொஸன் தினத்தைக் கொண்டாட யாழ். நைனாதீவிற்கு இரண்டாயிரம் பௌத்த யாத்திரிகர்கள்!

Nainathivu_Naha_Viharaநாளை மறுதினம் 25ம் திகதி பொஸ்ன் நோன்மதி தினத்தை முன்னிட்டு யாழ். நைனாதீவு நாகவிகரையில் அதனைக் கொண்டாடுவதற்காக இரண்டாயிரம் பௌத்த யாத்திரிகர்கள் நாளை 24ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளனர். பௌத்த சங்கம் ஒன்றின் ஏற்பாட்டில். நைனாதீவு நாகவிகரையில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்வதற்காகவே இந்த யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளனர். இவர்கள் கிரிமலைக்கும் உட்பட பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பு, தங்குமிடம், உணவு வசதிகள் போன்றவற்றை அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, போர் முடிவிற்கு வந்து ஏ-9 பாதை திறந்து விடப்பட்டதன் பின்னர் வடபகுதிக்கான   சிங்களப் பொதுமக்களின்  சுற்றுலா வருகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

ஐ.நா நிபுணர் குழு நியமனம்

uno.jpgஇலங்கை யின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூறும் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை பான் கீ மூன் நியமித்துள்ளார். இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் எம்.டரஸ்மன், அமெரிக்காவின் சட்டத்தரணி ஸ்ரிபன் ரட்னர், தென்னாபிரிக்காவின் சட்ட நிபுணர் ஜஸ்மின் சூகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இக்குழுவின் தலைமைப் பொறுப்பு எம்.டரஸ்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அமுலாக்கத்துக்கு இந்நிபுணர் குழு செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு நான்கு மாதங்கள் வரை செயற்படும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை கலைப்பு

cmc.jpgகொழும்பு மாநகரசபை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண முதல் அமைச்சர் இந்த அறிவிப்பை  நேற்று விடுத்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை கலைக்கப்பட்டதும் அதன் நிர்வாகம் விசேட ஆணையாளரொருவரின் கீழ் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபைத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவுடனான சுயேச்சைக்குழு வெற்றியீட்டி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த போதிலும் மிகக் குறுகிய காலத்துக்குள் அதன் நிர்வாகம் குழப்பகரமான நிலைக்குத்தள்ளப்பட்டதையடுத்து மாநகர சபையைக் கலைக்காமல் நிர்வாகத்தை இடைநிறுத்தி விசேட தலைமை அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

யாழ்.நூலக எரிப்புச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

9chnpika.jpgயாழ். நூலகத்தை முப்பது வருடங்களுக்கு முன்னால் தனது சமூகத்தைச் சேர்ந்த சில தீயவர்கள் எரித்து அழித்ததற்காக மன்னிப்புக் கோரினார் அமைச்சரும் ஜாதிக ஹெலஉறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க. யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு ஜாதிக ஹெலஉறுமயவினால் ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வு திங்கட்கிழமை அங்கு இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றிய தருணத்திலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க நூலக எரிப்புச் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்ததுடன், மன்னிப்பும் கோரினார்.

அவர் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது;

எமது வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான உணர்வை மீளப்பெறுவதற்கு உதவி வழங்க நாம் விரும்புகிறோம். அதனாலேயே சில புத்தகங்களுடன் நாம் இங்கு வந்திருக்கிறோம். முப்பது வருடங்களுக்கு முன்னர் துரதிர்ஷ்டவசமாக எனது சமூகத்தைச் சேர்ந்த சில தீய ஆட்கள் யாழ்.நூலகத்தை எரித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்த பெறுமதிமிக்க புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அந்தத் தினத்தில் இடம்பெற்றவை தொடர்பாக நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்தோம். துரதிர்ஷ்டவசமாக வரலாற்றை மாற்ற முடியாது. எவ்வாறாயினும் சிறிய வழியிலாவது அந்தக் காயங்களை ஆற்றுவதற்கு எமது பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். அதனாலேயே நாம் இங்கு வந்துள்ளோம். கடந்த காலத்தைப் பற்றி நாங்கள் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நாம் எதனையும் வென்றெடுக்கப்போவதில்லை. நாங்கள் சகோதரர்களாக,சகோதரிகளாக எதிர்காலத்தை அணுகுவோமானால் அற்புதமான விடயங்களை வென்றெடுக்க முடியும்.

அரசியல் பிளவுகள் சில இருந்தாலும் 1983 இற்கு முன்னர் நாங்கள் சமாதானமாக வாழ்ந்தோம். யுத்தத்தின்போது கூட இன மோதல்களை நாம் கொண்டிருக்கவில்லை. வட அயர்லாந்தில் சமாதான கோடுகளென அழைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் இடப்பட்டிருந்தன. அங்கு கத்தோலிக்கரும் புரட்டஸ்தாந்து மதத்தினரும் சண்டையிட்டனர். இந்தியாவில் இன மோதல்கள் பொதுவாக இடம்பெற்று வருகின்றன. நாங்கள் இராணுவ அரசியல் மோதலில் ஈடுபட்டிருந்த போதிலும் அவை சமூக மோதலாக உருமாறிச்செல்லவில்லை. அடிமட்டத்தில் நாங்கள் சமாதானமாகவே வாழ்ந்தோம். ஏனெனில் பல நூற்றாண்டுகளாக நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் கலாசாரப் பாரம்பரியமே இதற்குக் காரணமென நான் நினைக்கின்றேன்.

ஆதலால் நல்லிணக்கத்துக்கான அத்திபாரமானது எமது சமூகத்திற்குள்ளேயே இருப்பதாக நான் நம்புகிறேன். இந்தக் கலாசார அரசியல் பிணைப்புகளை விரிவுபடுத்துவதாக அரசியல் ரீதியான இணக்கப்பாடு அமையும். எமது வரலாற்றில் துன்பகரமான அத்தியாயத்தை இப்போது முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். புதிய எதிர்பார்ப்புகள்,புதிய சிந்தனைகள், புதிய உணர்வுகளுடன் புதியதை ஆரம்பிக்க விரும்புகிறோம். இனிமேலும் கடந்தவையைப் பற்றிக் கதைக்கக்கூடாது.

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பென நாங்கள் உறுதியாக நம்பினோம். அதனை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க வேண்டுமெனக் கருதினோம்.  ஆயினும் எமது போராட்டம் சமாதான வழியிலும் ஜனநாயக ரீதியிலுமாகவுமே அமைந்தது. இப்போது புலிகள் இல்லை. ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தைக்குத் தடையில்லை. எமது வேறுபாடுகளைப் பேணி கடைப்பிடிக்க வேண்டிய தேவையில்லை. இப்போது ஒற்றுமைத் தன்மையை தேடிக்கண்டுபிடிக்கவே விரும்புகிறோம்.

கோட்பாட்டுக்கு மாறான மாற்ற தடைச் சட்டமூலத்திற்கு தமிழ் எம்.பி.க்கள் சிலர் எம்முடன் ஒத்துழைத்துச் செயற்பட்டனர். எமது கலாசாரத்தைப் பாதுகாக்க நாம் விரும்புகிறோம். சிங்களவர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க நாம் விரும்புகிறோம். ஆயினும் ஏனைய சமூகங்களை நாங்கள் அழிக்க விரும்புகிறோம் என இது அர்த்தப்படாது. பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியினராக நாம் உள்ளோம். நாங்கள் எப்போதுமே கலாசார மற்றும் பன்முகத்தன்மை தொடர்பாக நட்புறவுடனேயே உள்ளோம். சகல சமூகங்களின் மத்தியிலும் சிங்களவர்களின் சிறந்த நண்பர்களாக தமிழர்கள் வருவதற்கு முடியும். நாங்கள் ஒன்று சேர்ந்து எதிர்காலத்தில் முன்னேற முடியும்.

பிரிவினைவாதத்தை நம்புபவர்களை ஐக்கிய அமெரிக்காவின் வடபகுதிக்கு எதிராக தெற்கின் பிரிவினைவாத இராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரொபேர்ட் இ லீ குறித்து அறிந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். யுத்தத்தின் பின்னர் ஐக்கிய தேசத்தை ஒன்றுபட்டுக் கட்டியெழுப்புவதற்கு அவர் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவருடைய மாளிகை கூட மயானமாக அழிக்கப்பட்டிருந்தது. அவர் இறந்து 13 வருடங்களின் பின்னரே அவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது. நூறு வருடங்களுக்குப் பின்னரே அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. நல்லிணக்கம் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் எதனையும் செய்திருக்கவில்லை. ஆயினும் அவர் ஒன்றுபட்ட அமெரிக்காவுக்கு அவர் ஆதரவு வழங்கினார். இந்த மாபெரும் இராணுவ ஜெனரலில் வரலாறானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல உதாரணமாக அமையுமென நான் நம்புகிறேன்

செம்மொழி மாநாடு கோவையில் இன்று கோலாகலமாக ஆரம்பம்

semmoli.jpgஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் கோவை நகரில் இன்று 23ம் திகதி காலை கோலாகலமாக ஆரம்பமாகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனாதிபதி பிரதீபாபட்டேல் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கிறார்.

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறுகின்றன. இன்று ஆரம்பமாகும் செம்மொழி மாநாடு தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் நடைபெற்று எதிர்வரும் 27ம் திகதி நிறைவு பெறுகிறது.

இதேவேளை செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகின் சுமார் ஐம்பது நாடுகளிலிருந்து ஐயாயிரம் பேர் வரையான தமிழறிஞர்கள் கோவைக்கு வந்து சேர்ந்துள்ளனர். இலங்கைத் தமிழறிஞரான பேராசிரியர் கா. சிவத்தம்பியும் இவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார். இன்றைய நிகழ்ச்சிகளில் முக்கியமானதாக பேரணியொன்று நடைபெறுகிறது. ‘இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புடன் இன்று மாலை கோவையில் பேரணி நடைபெறுகிறது.

செம்மொழி மாநாட்டில் ஆயிரத்து இருபது தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிஞர்களால் சமர்ப்பிக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள் நடைபெறும் நவீன உள்ளரங்கம், பிரமாண்டமான விழாப் பந்தல், மேடை, கண்காட்சி அரங்கம், ஆய்வரங்கங்கள் ஆகியன கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளன.

வடக்கில் சேதமடைந்த அரச அலுவலகங்களை நிர்மாணிக்க ரூ.89 கோடி

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல அரச அலுவலகங்களையும் மீள நிர்மாணிப்பதற்கான இரண்டு வருட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென முதற்கட்டமாக ஆசிய அபிவிருத்தி வங்கி 89 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் உட்பட யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல அரச நிர்வாகச் கட்டிடங்களும் இதன் மூலம் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் 200 மில்லியன் ரூபா செலவிலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் 60 மில்லியன் ரூபா செலவிலும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களும் இப்பிரதேசங்களிலுள்ள கிராம சேவையாளர் காரியாலயங்களும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள சகல அரச அலுவலகங்களும் தற்போது செயற்படுகின்றன.

புதுக்குடியிருப்பு மற்றும் மருதங்கேனி போன்ற பிரதேச செயலகங்கள் வேறு இடங்களில் இயங்கி வருவதுடன் ஏனைய சகல அரச அலுவலகங்களும் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த செயலகங்களுக்கான தளபாடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பல செயலகங்கள் புனரமைக்கப்பட்டு இயங்க வைக்கப்பட்டுள்ளன. இதற்கென 175 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் அதில் 152 மில்லியன் ருபா செலவிடப்பட்டு பெரும்பாலான கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து 2010ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் இரண்டு வருடத்திட்டமாக முன்னெடுக்கப்படுவதுடன் அதனை அடுத்து வரும் இரண்டு வருடங்களில் சகல அரச கட்டிடங்களும் முழுமையாக மீள்நிர்மாணம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.