செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் ! – மலேசிய முன்னாள் பிரதமர்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் மொகிதின் யாசினுக்கு கடிதமொன்றை அனுப்பி வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மகாதீர் மொகமட் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாவுக்கு நல்லது.

மேலும், ஏனைய நாடுகளைப் போல மலேசியாவும் எந்தவொரு குழுவையும் ‘தீவிரவாதிகள்’ என சுலபமாக முத்திரை குத்திவிடக் கூடாது.

நான் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பிரச்சினை இலங்கையில் இடம்பெற்ற ஒன்று. மலேசியாவுக்கு அதில் தொடர்பில்லை.

அத்துடன், மலேசியாவில் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதபோது அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கை அரசே தீவிரவாத இயக்கம் என்று பட்டியலிடாத போது, மலேசியா ஏன் அந்த இயக்கத்தைத் தீவிரவாத பட்டியலில் வைத்திருக்க வேண்டும்.

இன்றைய மலேசிய பிரதமரும் அண்மையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவரை உள்துறை அமைச்சராக இருந்தவருமான மொகிதீன் யாசினுக்கு எழுதிய கடிதத்தில், புலிகள் இயக்கத்தை இன்னமும் தீவிரவாத பட்டியலில் வைத்திருப்பதற்கான காரணம் ஏதும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தேன்.

ஆகவே, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குவது மலேசியாவுக்கு நல்லது என கடிதத்தில் வலியுறுத்தி  இருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை ” – ஷோய்ப் அக்தர்

ஷோய்ப் அக்தர் அடிக்கடி இந்திய வீரர்களைப் புகழ்ந்து பேசி வருவது வழக்கம், அதுவும் நட்சத்திர வீரர்கள், செல்வாக்குள்ள வீரர்களை தேர்ந்தெடுத்து புகழ்வார்,  இந்த நிலையில் அவர் விராட் கோலியை புகழ்ந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியை அவர் பெரிய அளவில் புகழ்ந்துள்ளார், காரணம் அதற்குள்ளேயே கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களையும், 80 அரைசதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் அக்தர் இந்திய வீரர்களை, குறிப்பாக கோலியைப் புகழ்வது குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்தர் பதில் கூறுகையில், “நான் இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் புகழக்கூடாது. பாகிஸ்தானில்.. ஏன் உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை.

ஏன் என் மீது கோபப்பட வேண்டும், போய் புள்ளி விவரங்களைப் பார்த்து விட்டு பேசுங்கள், பிறகு என்னை விமர்சியுங்கள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போல் இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் தங்கள் வீரர்களிடத்தில் எதிர்பார்த்தனர், ஆனால் இன்றைய நிலமை தலைகீழாகி விட்டது” என்றார் ஷோயப் அக்தர்.

மேலும் சமீபத்தில் இங்கிலாந்திடம் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றதையும் கடுமையாக ஷோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியல் செய்ய வேண்டும்?- ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி !

நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக  கருத்து  தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் மனங்களில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அத்துடன் இன்று  ஜனாதிபதி, கிராமப்பகுதிகளுக்கு  சென்றால், கடவுள் வருகிறார் எனக் கூறும் நாடு இது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை  பெய்து இருந்தது.

இதன்காரணமாக ஜனாதிபதி விமானத்தின் ஊடாக  நாடு முழுவதும் சென்றமையால் இருக்கலாம். இவ்வாறு மக்கள் மனநிலை இருக்கும்போது அரசியலமைப்பு திருத்தம் குறித்துக் கலந்துரையாடுவது பொய்யான விடயமாகும்.

ஆகவே கொடுப்பதை உட்கொண்டு விட்டு வேறு எதற்காவது காத்திருப்பதுதான் தற்போது செய்ய வேண்டிய விடயம்.

இதேவேளை 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் ஜனாதிபதி பதவிக்காலம் மீண்டும் வரம்பற்றதாக இருக்கும். அதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என நாட்டில் ஆட்சி நடைபெறும்.

இவ்வாறு  ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியல் செய்ய வேண்டும்” என அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விலகல்!

ஐ.பி.எல் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை இந்தின்ஸ்  அணியில் முக்கிய மாற்றமாக, அந்த அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளரான லசித் மலிங்காவுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு சீசனில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.

அணியின் திருப்புமுனை பந்துவீச்சாளராக இருந்த மலிங்கா இல்லாதது மும்பை  அணிக்குப் பெரும் பின்னடைவுதான். இருப்பினும், ஆஸி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் வருகை, அந்த அணிக்கு வலு சேர்க்கும்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ”ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் சீசன் டி20 தொடரில் தனிப்பட்ட காரணங்களால் தன்னால் பங்கேற்க முடியாது என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். அவர் குடும்பத்துடன் இலங்கை செல்ல உள்ளார். ஆதலால், மும்பை  அணியில் ஆஸி.யின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அபுதாபி வந்து அணியில் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட செய்தியில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரும் ஜேம்ஸ் பேட்டின்ஸனை வரவேற்கிறேன். மலிங்காவுக்குத் தேவையான ஆதரவை அணி நிர்வாகம் வழங்கும். எங்களுக்குப் பொருத்தமானவராக பேட்டின்ஸன் இருப்பார், எங்களின் வேகப்பந்துவீச்சு வலுப்பெறும், குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழலுக்குச் சிறப்பாக இருக்கும்.

லசித் லெஜெண்ட் வீரர். மும்பை அணியின் தூண்களில் ஒருவர். இந்த சீசனில் லலித் மலிங்காவை நாங்கள் இழக்கிறோம் என்பது வருத்தம்தான், அதுதான் உண்மை. இந்த நேரத்தில் லசித் அவரின் குடும்பத்தாருடன் இலங்கையில் இருப்பது அவசியம் என நம்புகிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி, வீரர்களின் நலன், அவர்களின் குடும்பத்தாரின் நலனில் அதிகமான அக்கறை வைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை அணி தங்கள் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடியது. அந்த தொடரில் மலிங்கா இடம் பெற்றார். ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடி ஏறக்குறைய ஓராண்டு ஆகிவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

இழுபறியிலும் ஒருவர் மீது ஒருவருடைய வசைப்பேச்சிலும் முடிவடைந்துள்ள கூட்டமைப்பின் பொதுக்குழுக்கூட்டம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த (29.08.2020) வவுனியாவில் நடைபெற்றது. பல்வேறுபட்ட இழுபறிகளுடன் முடிவடைந்த இந்த கூட்டமானது கூட்டமைப்பினுள் காணப்படும் தளர்வை தோலுரித்துக் காட்டியுள்ளது என்றே கூற வேண்டும்.

லங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது.

செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் நியமனத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது. அவருக்கு எதிரான நடவடிக்கையை பொதுச்சபையை கூட்டி எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலா ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்ற நோக்கத்துடன் எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் மாவை சேனாதிராசாவிற்கு தெரியாமல் இரகசிய சதி நடவடிக்கையில் கட்சியில் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஈடுபட்டு, தேசியப்பட்டியல் நியமனத்தை கலையரசனிற்கு வழங்கினார் என குற்றம்சாட்டப்பட்டது.

தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குபவர்களின் பெயர் பட்டியலில் பெண் பிரதிநிதித்துவம், அம்பாறை பிரதிநிதித்துவம் ஆகியவற்றை மாவை சேனாதிராஜாவும்  வைத்திருந்த நிலையில் இரகசிய சதி நடவடிக்கையினால் அவரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிகின்றது.

இந்த நிலையில், செயலாளரின் சதி நடவடிக்கைக்கு ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அவரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென கூட்டத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தீர்மானத்தை வாசித்தார். இதன்போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் “மத்தியகுழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் இந்த பிரேரணை இடம்பெறவில்லை. நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத பிரேரணையை நிறைவேற்றுவது சட்டவிரோதமானது, செயலாளர் இந்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்லலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து, செயலாளர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் பொதுச்சபையை கூட்டி நிறைவேற்றுவதென முடிவானது.

அதேநேரம், தேசியப்பட்டியல் விவகாரத்தில் செயலாளர் நடந்து கொண்டது ஒரு சதி நடவடிக்கைக்கு ஒத்தது, அது சட்டவிரோதமானது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், அம்பாறைக்கு நியமனம் வழங்கியதை யாரும் எதிர்க்கவில்லை. அந்த நியமனத்தை அனைவரும் ஆதரித்தனர். எனினும், நடந்து கொண்ட முறை சட்டவிரோதமானது.

செயலாளரை காப்பாற்ற இரா.சம்பந்தனும் முயன்றார். “செயலாளர் கிழக்கை சேர்ந்தவர். இந்த தீர்மானத்தை வடக்கிலுள்ளவர்கள் கொண்டு வருகிறீர்கள். இது பிரதேசவாதத்தை தூண்டலாம். அதனால் இதை இப்போதைக்கு நிறைவேற்றாமல் தவிருங்கள்“ என இரா.சம்பந்தன் கேட்டார்.

இது முழு மத்தியகுழுவையும் கொதிப்படைய வைத்தது. இது பிரதேசவாதமல்ல. கட்சி ஒழுக்கம் சார்ந்தது. இப்படி கீழ்த்தரமாக சிந்திக்காதீர்கள். முதலில் உங்கள் கருத்தை மீளப் பெறுங்கள் என எல்லோரும் கூட்டாக வலியுறுத்த, வெலவெலத்து போனார் சம்பந்தன்.

ஒரு கட்டத்தில், இளைஞரணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன்- “ஐயா நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குத்தான் தலைவர். நாங்கள் உங்கள் வயதிற்கு மரியாதை தந்து பேசாமலிருந்தால் அனைத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கிறீர்கள். இது தமிழ் அரசு கட்சி பிரச்சனை. நீங்கள் பேசாமலிருங்கள். மைக்கை பக்கத்திலுள்ள தமிழ் அரசு கட்சி தலைவர் மாவையிடம் கொடுங்கள்“ என கறாராக சொல்ல, சம்பந்தன் மேலும் வெலவெலத்தார்.

கூட்டத்தினர் ஏகோபித்து இதை ஆமோதித்தனர்.

மன்னார் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு ஒரேயொரு காரணம் இரா.சம்பந்தன் தான் என நேரடியாக குற்றம்சாட்டி, சம்பந்தன் மீதான குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டார். அத்துடன், கட்சியின் செயலாளரை மாற்றாமல், யாரும் கட்சிக்கூட்டம் என மன்னார் பக்கமே வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

சுமந்திரன் பேசும்போது, கே.வி.தவராசா, ஈ.சரவணபவன், அவரது உதவியாளர் பிரதாப், வேலணை பிரதேசசபை உறுப்பினர் நாவலன், அவரது சகோதரன் குணாளன் உள்ளிட்டவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றார்.

அப்போது ஒருவர் குறுக்கிட்டு- அப்படியானால் சுமந்திரன் குரூப்பை வைத்து தனியே கட்சி நடத்தப் போகிறீர்களா என கேட்டுள்ளார்.

பின்னர் சரவணபவன் பேசும்போது- சுமந்திரனிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு, அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென வலியுறுத்தினார். அத்துடன், உதயன் பத்திரிகை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, தமிழ் தேசியத்திற்கு விரோதமானவர்களை – அது எந்த கட்சி சார்ந்தவர்கள் என்றாலும்- பத்திரிகை விமர்சிக்கும். உதயன் பத்திரிகை விமர்சிக்கிறது என யாராவது தமிழ் தேசிய விரோதிகள் குற்றச்சாட்டு முன்வைத்தால், அதை நாம் கணக்கிலேயே எடுக்க மாட்டோம் என சுமந்திரனுடையகருத்துக்கு தன்னுடைய பதிலை அவர் வழங்கியுள்ளார்.

செயலாளர் எழுந்து ;  பேச ஆரம்பிக்க, அவரை ஒருமையில் சிலர் அழைத்து, “உமது கதையை நாம் கேட்க வரவில்லை. உம் மீது நடவடிக்கையெடுக்கவே கூட்டம். சத்தம் போடாமல் இரும்“ என சத்தமிட்டனர். செயலாளர் மேற்கொண்டு எதனையும் பேச முனையவில்லை.

கூட்டத்திலிருந்த ஒருவர் திடீரென, செயலாளரை நீக்க ஆதரவளிப்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். மேடையில் இருந்தவர்கள் தவிர, அரங்கிலிருந்தவர்களில் சுமந்திரன், அவரால் நியமனம் வழங்கப்பட்ட சாணக்கியன், குருநாதன் ஆகிய மூவரையும் தவிர மிகுதி அனைவரும் கையை உயர்த்தினர்.

கே.வி.தவராசா பேசும்போது- சுமந்திரன் காலையில் ஒன்று, மதியத்தில் ஒன்று, மாலையில் ஒன்று என மாற்றி மாற்றி பேசுபவர், அவரது சிங்கள நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டி, அது தவறானது, அதனால் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியை சுட்டிக்காட்டினார். ஆனால், அதன் விளக்கத்தில் திரிவுபடுத்தி பொதுமக்களிற்கு விளக்கமளித்ததையும் சுட்டிக்காட்டினார்.

மாவை சேனாதிராசா பேசும்போது- தமிழ் தேசியத்தை வீழ்த்த தெற்கு பின்னணியில் இயங்கும் வித்தியாதரன் ஒரு பத்திரிகையை நடத்திக் கொண்டு, தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுவதை சுட்டிக்காட்டினார். அதில் சுமந்திரன் தொடர்புபட்டுள்ளார் என குற்றம்சாட்டினார்.

இதை சுமந்திரன் மறுத்தார். தனக்கும் அந்த பத்திரிகைக்கும் தொடர்பில்லையென்றார்.

அதேபோல சுமந்திரனின் நெருங்கிய உறவினரும், அமெரிக்கன் மிசன் திருச்சபையை சேர்ந்தவருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் அண்மையில் தவறான தகவல்களுடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் அனேக தகவல் தவறுகள் இருந்தன. இதை பததிரிகை ஆதாரத்துடன் கூட்டத்தில் காண்பித்த மாவை, இப்படியான தவறான தகவல்களை கொடுத்து, தன்னைப்பற்றிய தவறான விம்பத்தை உருவாக்க சுமந்திரனே முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

டி.பி.எஸ் தனது நெருங்கிய உறவினர் என்பதை ஏற்றுக்கொண்ட சுமந்திரன், அவர் கட்டுரை எழுதியதற்கும் தனக்கும் தொடர்பில்லையென்றார்.

மொத்தத்தில்  எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படியாக அமையப்போகின்றது என….!

ஐபிசி தமிழ் ‘ரீக்கடை’ நடத்தியவர்கள் உட்பட அறுவர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்!!!

சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று ஐபிசி தமிழில் ‘ரீக்கடை’ நடத்தியவர்களையும் பேர்லோ திட்டத்தில் வீட்டில் இருந்தவர்களையும் ஐபிசி தமிழ் வேலை நீக்கம் செய்துள்ளது. ஐபிசி ரீக்கடையயைத் திறந்து சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று அரட்டை அடிக்க அனுமதித்த கோகுலன், முகுந்தன் ஆகிய பாஸ்கரனுக்கு வேண்டப்பட்டவர்களே வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவருடன் ராஜ்குமார், சுலோமி, சுரேஸ், தினேஸ் ஆகியோரும் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஐபிசி கலையகம் பிரித்தானியாவில் தனது மனிதவலுவைக் குறைத்துவருவது இது முதற்தடவை அல்ல. நிறுவனங்கள் மனிதவலுவைக் குறைப்பது இன்றுள்ள காலகட்டத்தில் புதிதும் அல்ல. ஆயினும் 2020 இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் ஐபிசி தமிழ் க்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ஐபிசி ஒன்றும் இலாபத்தில் இயங்குகின்ற ஊடகமல்ல. அதன் வருமானம் அதன் லண்டன் கலையகத்தை இயக்குவதற்கே போதுமானதாக இல்லை. நிறுவனர் கந்தையா பாஸ்கரன் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் விரல்விட்டு எண்ணக் கூடிய பெரும் செல்வந்தர்களில் ஒருவர். அவர் ஐபிசி யை இயக்குவது நிச்சயமாக லாபநோக்கத்திற்காக அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் தன்னையொரு முக்கிய புள்ளியாக, அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ‘கிங் மேக்கர்’ஆக தன்னை உருவகப்படுத்துவதே அவருடைய நோக்கமாக இருக்க முடியும்.

அதன் ஒருகட்ட நகர்வாகவே 2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே பிரிவினையயைத் தூண்டிவிட்டதில் ஐபிசி நிறுவனர் பாஸ்கரன் முன்னணியில் நின்றார். எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிசி நிறுவனர் லட்சங்களை வழங்கியதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தேசம்நெற்க்கு தெரிவித்திருந்தன. அவ்வாறான நிதி வழங்கப்பட்டவர்களில் மாவை சேனாதிராஜா முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர்ணவாகினி குழுமத்தை வாங்குவதற்கும் ஐபிசி திட்டமிட்டு செயற்பட்டு வந்ததும் தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. சுவர்ணவாகினியயை வாங்குவதற்காக மின்னல் ரங்காவோடு ஐபிசி கூட்டுச் சேர்ந்திருந்தது. அச்சமயம் ரங்கா ராஜபக்ச சகோதரர்களின் பக்கம் நின்றார். ஆனால் அவர் விபத்து ஒன்றில் சிக்கியதையடுத்து அவ்வழக்கை சென்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசு அவருக்கு எதிராகப்பயன்படுத்திக் கொண்டது. ரங்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ராஜபக்ச சகோதரர்களுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஐபிசி இன் சுவர்ணவாகினி கனவும் பலிக்கவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் கந்தையா பாஸ்கரனின் கனவைக் கலைத்துவிட்டது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரன் வெல்வது உறுதி என்பது தேர்தலுக்கு முன்னரேயே தேசம்நெற் போன்ற ஊடகங்களினால் உறுதியாக கூறப்பட்டதுடன், தமிழரசுக் கட்சியினுள் கூடுதல் வாக்குகளை சுமந்திரன் பெறுவார் என்பதையும் ஊகித்து இருந்தோம். ஆனால் ஐபிசி தமிழ் சுமந்திரன் தோற்கடிக்கப்படுவார் என்று விருப்புவாக்குகள் எண்ணப்படும் பொழுதுகூட நம்பி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகவும் ஐபிசி சொல்ல முற்பட்டது. அதற்கேற்ப நேர்காணல்களையும் ஒளிபரப்பியது. ஆனால் எம் ஏ சுமந்திரனின் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஒரு போதுமே சர்ச்சைக்குரியதாக இருக்கவில்லை.

மத்தியில் கோத்தபாயாவின் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றதும், சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் கூடுதல் விருப்புவாக்குகளுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் ஆதரித்த வேட்பாளர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதும் கந்தையா பாஸ்கரனின் கனவுகள் கலைக்கப்பட காரணமானது. கோத்தபாய அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் சுவர்ணவாகினிக்குள் யாரையும் நுழைய அனுமதிப்பதாக அவர்கள் இல்லை.

ஐபிசி தமிழி இன் ‘ரீக் கடை’ நிகழ்ச்சி எம் ஏ சுமந்திரன் மீது சேற்றை வாரியிறைக்கும் வகையிலேயே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் எம் ஏ சுமந்திரனால் முன்மொழியப்பட்ட பெண்கள் மீது மோசமான அநாகரிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்கள் இது தொடர்பாக தங்கள் விசனத்தை முகநூலில் பதிவு செய்திருந்தனர். ஐபிசி தமிழின் நன் மதிப்பையும் இந்நிகழ்வு மிகவும் பாதித்து இருந்தது.

சட்டத்தரணியான எம் ஏ சுமந்திரன் மக்களின் கணிசமான ஆதரவுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் சட்டச் சிக்கலுக்குள்ளாகலாம் என்ற அச்சமும் காரணமாகவும் ‘ரீக் கடை’ க்குப் பொறுப்பானவர்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் ஐபிசி தமிழ் தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் அங்குள்ள பணியாளர்களை வைத்து நிறுவனத்தை நட்டத்தில் இயக்க முடியாது என்ற காரணத்தினாலேயே வேலை நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மாகாணசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் மாகாணசபையிலும் ஐபிசி தனது செல்வாக்கை செலுத்த முற்பட்டு வருகின்றது என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர் கட்சியின் தலைவராக இருந்த போதும் உறுதியான முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை. மாகாணசபை உறுப்பினர்கள் தேர்வில் எம் ஏ சுமந்திரனின் கைகள் ஓங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரனின் ஆளாக இருந்த ஆர் நோல்ட்டையும் ஐபிசி சுமந்திரனுக்கு எதிராக திருப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் – ஐபிசி தமிழ் மோதல் மாகாணசபை தேர்தலில் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் செயற்பட்ட போதும் சுமந்திரனின் வெற்றியயை எவராலும் தடுக்க முடியவில்லை. ஒரு வகையில் இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்பட்டு வருகின்றனவோ என்றே எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. ஐபிசி தமிழ், உதயன், காலைக் கதிர், வலம்புரி அனைத்துமே சுமந்திரனுக்கு எதிரான ஊடகங்களாகவே செயற்படுகின்றன.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மாகாணசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும்! – முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள்

பாசமிகு சகோதர சகோதரிகளே!

அன்பார்ந்த நண்பர்களே!

ஆற்றல் மிகு தோழர்களே!

இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 60 சதவீதமான மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தபாய ராஜபக்ச மேன்மைதகு ஜனாதிபதியானார். தொடர்ந்து பாராளுமன்றத்தில் சிறுபான்மையான எண்ணிக்கையுடன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மஹிந்த ராஜபக்ச அப்போது ஆண்டு கொண்டிருந்த கட்சியினரின் ஒப்புதலுடன் கௌரவ பிரதமராகி தற்காலிகமாக மத்திய அமைச்சரவையை அமைத்துக் கொண்டார்.

இந்த ஆகஸ்ட 5ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றதோடு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனைக்  கூட்டணி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்டு மிகவும் உறுதியான ஆட்சியை அமைத்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக உலகை ஆட்டிப்படைத்து வருகின்ற கொரோனா வைரஸ் இதுவரை இரண்டரை கோடி பேருக்கு மேல் பீடித்து எட்டரை லட்சம் பேரை காவு கொண்டு போய் விட்டது: உலக பொருளாதாரத்தை உலுக்கிப் போட்டுள்ளது: மனித குலம் அரண்டு போய் நிற்கின்றது: கொரோனாவின் தாக்கம் இலங்கையில் குறைவே. என்றாலும் பயமும் பதட்டமும் உலக தரத்திலேயே இங்கும் உள்ளது. இலங்கையின் பல்வேறு பொருளாதாரத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பக்கத்து நாடுகளிலும் தூரத்து நாடுகளிடமிருந்தும் பெருந்தொகையில் கடன் வாங்காமல் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

பெரும் நம்பிக்கைகளோடு இலங்கை மக்கள் புதிய அரசாங்கத்துக்கு தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். மைத்திரி – ரணில் கூட்டாட்சி மீது விரக்தியும் ஆத்திரமும் கொண்ட பெரும்பான்மையான மக்கள் ராஜபக்சக்களிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைத்திருக்கிகிறார்கள்  மக்களின் எதிர்பார்ப்புகளில் கணிசமான அளவுக்காவது  ராஜபக்சக்களின் ஆட்சி அரசியல் பொருளாதார சாதனைகளை ஆற்றுவார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும.

மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளாலேயே தான் ஜனாதிபதியானதாக கோத்தபாய ராஜபக்ச தமது பதவியேற்பின் போது வெளிப்படையாகவே கூறினார். அந்தத் தேர்தலில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்களில் 12 சதவீமானவர்கள் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் அடுத்த ஒன்பது மாதத்துக்குள் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் ராஜபக்சக்களின் கட்சிக்கும் அவர்களோடு அணிசேர்ந்து நிற்கும் தமிழ் அரசியற் சக்திகளுக்கும் மிகவும் மாறுபட்ட முறையில் வாக்களித்திருத்திருக்கிறார்கள்:

யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினரும்

திருகோணமலை மாவட்ட தமிழர்களில் சுமார் 25 சதவீதமானோரும்

மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களில் 50 சதவீதமானோரும்

அம்பாறை மாவட்ட தமிழர்களில் 55 சதவீதமானோரும்

ராஜபக்சக்களின் கட்சிக்கும் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.

இது சரியா பிழையா என்பதற்கப்பால் ஒரு வரலாற்று மாற்றம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்த ஆட்சி பற்றி எதிரும் புதிருமாக பல அபிப்பிராயங்கள் ஆரம்பித்துவிட்டன.

இராணுவ சர்வாதிகார ஆட்சி அமைந்து கொண்டிருக்கிறது என சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்க் கட்சிகள் குரலெழுப்புகின்றன:

ஆட்சியில் முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டார்கள் என்றும் எனவே முஸ்லிம்கள் ஆபத்தான அரசியற் சூழலுக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்படுகிறது என்றும் பெரும்பான்மையான முஸ்லிம்களின் தலைவர்கள் எதிர்வு கூறி வருகிறார்கள்:

பாசிச சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி அமைந்துவிட்டதாக தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்பான்மையான அரசியற்காரர்களும் புத்திஜீவிகளும் அளவிடுகிறார்கள்.

19வது அரசியல் யாப்பு திருத்தத்தை நீக்கி புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும் என்றும் நாட்டில் புதிய வகையான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தமது புதிய பாராளுமன்றத்தின் முதலாவது உரையில் குறிப்பிட்டுள்ளார். 19வது திருத்தத்துக்கு திருத்தம் ஒன்றை ஆக்கப் போகிறார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அது எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக எதிர்க் கட்சியில் இருக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு நிலை எடுக்கப் போகின்றன என்பதுவும் தெளிவாக இல்லை.

மாகாண சகைகள் முறையை இல்லாமற் செய்ய வேண்டும் என சிங்கள பௌத்த ஆதிக்க வாதிகள் நீண்டகாலமாகவே கோரி வருகிறார்கள். அரசாங்கத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் தொடர்பான அமைச்சர் தான் காணி அதிகாரத்தையோ பொலிஸ் அதிகாரத்தையோ தரப் போவதில்லை என கறாராக குரலெழுப்புகிறார். ஆனால் இவை தொடர்பாக ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகின்றது இன்னும் சில மாதங்களுக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறப் போகின்றது. அதில் இந்த அரசாங்கம் மிக ஆர்வமாக உள்ளது. ஏதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் எவ்வாறாக அமையப் போகின்றன! எவ்வாறாக செயற்படப் போகின்றன! என்பவை பற்றி இப்போதைக்கு எதையும் உறுதியாகக் கூற முடியாது.

இவையெல்லாவற்றையும் வைத்துக் கொண்டு “தமிழ்த் தேசிய” சுலோகங்களுடன் அரசியல் செய்யும் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பயக் கெடுதியை கிளப்பி மீண்டும் தமது அரசியல் ஆதரவுத் தளங்களை உறுதி செய்ய முனைவார்கள் என்பது தெளிவு. அதேவேளை அரசாங்கத்தோடு அணைந்து நின்று தங்களால் சாதிக்க முடியும் என்போர் அரசாங்கத்தின் சில பொருளாதார கட்டுமான வேலைத்திட்டங்களுக்கு அப்பால் கருத்துத் தாக்கமுள்ள அரசியல்ரீதியான செயற்பாடுகளைக் கொண்டிருப்பார்களா என்ற கேள்விக்கு இப்போதுவரை பதிலில்லை.

மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தலின் முடிவுகளும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக இருக்குமா அல்லது வேறுபட்டதொரு மாறுபாட்டைக் கொண்டிருக்குமா என உறுதியாகக் கூற முடியாது. வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுபவர்கள் எவ்வாறு செயற்படப் போகிறார்கள்: எவற்றைச் சாதிப்பார்கள் என்பதற்கும் இப்போதைக்கு தெளிவான பதில் இல்லை.

இப்படியான சூழ்நிலைமைகளின் பின்னணியில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எவ்வாறான அரசியல் நடைமுறை நிலைப்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவும் தீர்க்கமாகவும் சிந்தித்து –  முடிவுகள் செய்து – செயற்படல் வேண்டும்.

கட்சியின் பிரச்சாரங்களை விரிவுபடுத்தி முன்கொண்டு செல்ல வேண்டும். கட்சி உறுப்பினர்களை கருத்தாற்றல் மிக்கவர்களாகவும் செயற் திறன் கொண்டவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன கட்டமைப்புகளை பரந்துபட்ட மக்கள் தளங்களைக் கொண்டவையாக பரவச் செய்ய வேண்டும். எதிர்வரும் காலங்களிலும் தேர்தல்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாததே. ஏனைய அரசியற் கட்சிகள் மற்றும் அரசியற் குழுக்களுடன் இணைந்தும் அவற்றிலிருந்து தனித்துவமாகவும் செயற்பாடுகளை மேற்கொள்வதுவும் அவசியங்களே!

எமது கட்சியின் சமூக ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையிலான கொள்கைகளும்  கோரிக்கைகளும் எமது மக்கள் மத்தியில் சக்தி மிக்க கருத்துக்களாகப் பரிணமிக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு தார்மீக அரசியல் சமூக இயக்கத்தை முனனெடுப்பதை இலக்காகக் கொண்டு செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இங்கு சுமுகமாக – எல்லோரும் கை தட்டி எப்போதும் பாராட்டும் வகையான நேர்பாதை கிடையாது. நெளிவு சுளிவுகள் தவிர்க்க முடியாதவை

புரட்சிகரமான சமூக முன்னேற்றத்துக்கான பாதையில் பயணிக்க ஒரு புரட்சிகரக் கட்சியின் அவசியத்தை நாம் எப்போதும் உணர்ந்து வந்திருக்கிறோம் – வலியுறுத்தி வந்திருக்கிறோம். அதில் இதுவரை எதிர்பார்த்த வெற்றிகளைக் காணவில்லையே என்ற விரக்தி சரியானதல்ல. இது ஒரு தொடர் பயணம். திருவிழாவுக்குப் போடப்பட்டுள்ள கடைகளில் இதுவும் ஒரு கடையே என்றால் இந்தக் கட்சி தேவையற்ற ஒன்றாகும். தன்னம்பிக்கையற்ற யானைக்கு தும்பிக்கையும் பயன் தராது.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் இருக்கின்றது! நாம் கடந்த காலத்தில் யாராலும் மறுக்க முடியாத மறைக்க முடியாத பங்களிப்பை இலங்கைக்கும் தமிழ் மக்கள் சமூகத்துக்கும் ஆற்றியிருக்கின்றோம். இன்றும் இதன் தேவை மக்களுக்கு உண்டு! புரட்சிகரமான சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளுக்கான இடைவெளி நாம் வாழும் சமுதாயத்தில் உள்ளது! எனவே கட்சியின் ஒவ்வொரு தீர்மானமும் செயற்பாடும் கட்சியை பரந்துபட்ட மக்கள் மத்தியில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சக்தியாக பரிணமிக்கும் நிலையை அடையும் வகையில் செயலாற்றுவோம்.

எமது ஓவ்வொரு செயற்பாடுகளும் எமது கட்சி தலையேற்றிருக்கும் சமூக ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் அவற்றின் அடிப்படையிலான கொள்கைகளுக்கும் ஏற்ப ஏன்? எதற்காக? யாருக்காக? எப்படி? எங்கு நோக்கி? ஏன்ற கேள்விகளுக்கு தர்க்கபூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் தெளிவான பதில்களைக் கொண்டவையாக அமையட்டும்.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் இந்த சமூகவலைத் தளம் கட்சியின் கருத்துக்களின் பிரச்சாரத் தளமாகும்: கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான அறிவூட்டல் களமாகும்: கட்சியோடு தொடர்பு கொள்பவர்களுக்கும் கட்சியின் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் அறிய முனைவோருக்குமான மையமாகும்: நட்புரீதியான மாற்றுக் கருத்துக்களின் முற்றமாகும். இது ஒரே வேளையில் பல்லாயிரம் பேரைச் சென்றடைய எல்லோருமாக கூட்டாக உழைப்போம்.

இது எமது பல முயற்சிகளில் ஒன்றே! ஆக்கமானதென ஊக்கம் கொள்ளும் எதிலும் விடாமுயற்சியோடு செயலாற்றுவோம்;

உங்கள் அன்பின் சகோதரன் – நண்பன் – தோழன்

அ. வரதராஜ பெருமாள்

01 – 09 – 2020

இங்கிலாந்தில் கொரோனாவோடு வாழ்வு

அரசு பாடசாலைகளை திறக்கக் கோருகின்றது!

விரிவுரையார் சங்கம் பல்கலைக்கழகங்கள் கோவிட்-19 போர்க்களமாகலாம் என்கின்றனர்!!

மக்களில் ஒரு பகுதியினர் கொரோணா தடுப்புச் விதிகளை நிராகரிக்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவதற்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிவையில் வெளிவகின்ற செய்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாணதாகவும் குழப்பகரமானதாகவும் உள்ளது. அடுத்து வரும் இரு ஆண்டுகள் வரை உலகம் கொரோணாவோடு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இயல்பு நிலைக்கு எவ்வாறு மீள்வது என்பதில் பிரித்தானிய அரசு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் கொரோணாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஆரம்பகட்டத்தில் அசமந்தமாக இருந்ததினால் தற்போது உத்தியோகபூர்வமாக நேற்று வரை 41,498 பேர் மரணமடைந்ததாக அறிவத்துள்ளது. ஆனால் உண்மையில் இத்தொகை இரட்டிப்பானது என அஞ்சப்படுகிறது.

இப்பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதன் முதற்கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதற்கான திட்டமிடல்களை அரசு மேற்கொண்ட போதும் வினைத்திறனற்ற திட்டமிடல்களால் பல சந்தர்ப்பங்களில் அரசு தனது முடிவுகளை மாற்றிக் கொள்ள – யூ ரேன் – எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் அரசின் அறிவிப்புகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்தும் வருகின்றனர்.

தற்போது பாடசாலைகளை ஆரம்பிப்பதிலும் அலுவலகங்களுக்கு பணியாளர்களை வரவைப்பதிலும் அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அடுத்த சில வரங்களுக்கு இங்கிலாந்தைப் பொறுத்தவரை இதுவே அரசின் முக்கிய செயற்பாடாக அமைய உள்ளது. அதற்கான கொரோணா தடுப்புச் செயற்பாடுகளை பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், அலுவலகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிரித்தானிய மக்களில் ஒரு பிரிவினர் அனைத்து கொரோணா தடுப்புச் செயற்பாடுகளும் அர்த்தமற்றவை என்றும் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருமாறும் கோரி இலண்டனின் போராட்டமையமான ரவல்ஹர் ஸ்ஹயரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தி உள்ளனர்.

ஆனால் இன்று விரிவுரையாளர் சங்கம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டாம் என்ற ஆலோசணையை வழங்கி உள்ளது. கொரோணோ பரவிய ஆரம்ப காலத்தில் வயோதிபர் இல்லங்களே கொரோணாவினால் கூடுதலாக பாதிப்படைந்ததுடன், பல்லாயிரம் பேர் வயோதிப இல்லங்களில் மரணித்தும் இருந்தனர். கொரோணா இரண்டாம் கட்டம் பல்கலைக்கழகங்களின் விடுதிகளே கொரோணாவின் போர்க்களமாக மாறும் என விரிவுரையாளர் சஙங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லெயடஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நிஷான் கனகராஜா (படம்) அதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை கடந்த சிலமாதங்களாக திட்டமிட்டு தீவிரமாக செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து மிகக் கவனமாக திட்மிட்டு அதன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். பிரித்தானியாவில் லெய்ஸ்ரர் பிரதேசமே முதற் தடவையாக இரண்டாவது லொக்டவுன் க்கு உள்ளானது. ஆசியர்களை மிகச்செறிவாககக் கொண்ட இந்த லெய்ஸ்ரர் பிரதேசத்தில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் மக்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கிலாந்தில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளது. இந்த குளிர்காலத்தில் தான் வைரஸ் கிருமிகள் மிகத் தீவிரமாக பரவுவது வழமை. இப்பரவல் பெரும்பாலும் பள்ளி மாவணர்களுடாவவே பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த வைரஸ்க்கு, பிரித்தானியாவைப் பொறுத்தவரை இதுவே முதற் குளிர்காலம் என்பதால் இந்த வைரஸின் பரவலும், தாக்கமும் எவ்வாறு அமையும் என்பது இன்னமும் மில்லியன் பவுண்ட் கேள்வியாகவே உள்ளது. இதற்குள்ளாக அலுவலர்களையும் தங்கள் அலுவலகங்களுக்கு திருப்புமாறு அரசு கோரத் திட்டமிட்டு உள்ளது. இந்தக் குளிர்காலம் பிரித்தானியாவைப் பொறுத்தவரை மிகக் கடினமான, அபாயமான குளிர்காலமாகவே நோக்கப்படுகின்றது.

அதே சமயம் தொடர்ச்சியாக மக்களை லொக் டவுனிலும் வைத்திருக்க முடியாது. ஏற்கனவே அரசு அளித்து வருகின்ற பேர்லோ திட்டம் இந்த ஒக்ரோபர் உடன் முடிவுக்கு வருகின்றது. அது முடிவுக்கு வருவதுடன் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்ட உதவிகளை எவ்வாறு மீளப்பெறவது, எவ்வாறு பிரித்தானியாவின் கடன்தொகையைக் குறைப்பது என்ற குழப்பத்தின் மத்தியில் வேலை இழப்புகள் மக்களை மேலும் அரச உதவியை நோக்கித் தள்ள உள்ளது. சில ஆய்வுகளின் படி நேரடியாக கொரோணாவினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியால் கூடிய மரணங்கள் சம்பவிக்கும் என ஆபாய முகாமைத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி 2025 வரையான ஐந்து ஆண்டுகளில் பிரித்தானியாவில் 700,000 பேர் கொரோணா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் மரணத்தை சந்திப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இன்னும் இரு மாதங்களில் வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு கொரோணாவிற்கு செலவழித் பணத்தை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கு வரியயை அதிகரிக்க வேண்டி ஏற்படும். ஏற்கனவே கொரோணாவினால் பொருட்கள் விலையேறி உள்ள நிலையில் வரி அதிகரிக்கப்படும் பட்சத்தில் அந்த வரி அதிகரிப்பு மக்களை நோக்கியே தள்ளப்படும். அதனால் பொருட்கள் விலையேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு பொதுச் செலவீனங்களை குறைக்க நிர்ப்பந்திக்கப்படும். தற்போது அட்சியில் உள்ள கொன்சவேடிவ் கட்சியானது முற்றிலும் முதலாளிகளினதும் பெரும் கோப்ரேட்களினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி. இவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் பின்தங்கிய கீழ் நிலையில் உள்ள மக்களையே கூடுதலாக பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. பொதுச்செலவீனங்கள் குறைக்கப்படும் போது அரச உதவிக்கொடுப்பனவுகள் குறைக்கப்படும். சுகாதார சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மக்கள் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் என பாரிய நிதிக்குறைப்புகள் பொதுச் செலவீனத்தில் மேற்கொள்ளப்படும். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே 700,000 அடுத்த ஐந்து ஆண்டுகளில் மரணத்தை தழுவுவார்கள் என கணிக்கப்படுகின்றது.

இவற்றுக்கு மத்தியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறுகின்றது. பிரித்தானியாவின் தான்தோண்றித் தனமான யெற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலடிகொடுக்க முயைலாம். அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் பிரித்தானியாவில் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் ஐரோப்பிய சந்தையில் தங்கியுள்ள பிரித்தானிய நிறுவனங்கள் இலாபமீட்டமுடியாமல் திவாலாகிப் போகும் சூழல் ஏற்படும். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கவும் நேரலாம். பிரித்தானிய பொருளாதாரம் கொரோணா என்ற இயற்கை அழிவினாலும் பொறிஸ் ஜோன்சன் என்ற வினைத்திறன் அற்ற செயற்திறனற்ற பிரதமராலும் இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இவ்வழிவுகளில் இருந்து பிரித்தானியா மீண்டும் பழையநிலையை எட்ட இன்னும் ஒரு தசாப்தம் – பத்து ஆண்டுகள் ஆகம் என பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

நூல் அறிமுகம்: குமிழி – புளொட் க்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு – ஆர் புதியவன்

அட்டைப்படம் போலவே எல்லாமே தெளிவற்றுப்போய், நாவலில் சொல்லப்படுவது போல சுனாமி போல் கொன்றொழித்து பாலைவனமாக போன ஒரு தேசத்தின் கதை.

இது புளட் அமைப்புக்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு. இங்கே புளட் என்ற இயக்கப்பேரை நீக்கி விட்டு வேறு எந்த இயக்கத்தின் பெயரைப் போட்டாலும் அச்சரம் பிசகாமல் பொருந்தும்.

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டபோதெல்லாம் வரும் அச்சத்தை சொல்கிற இடத்தில் உயிர் உறைந்து போகும் ஒரு வித வலி.

கோவிந்தனின் புதியதோர் உலகம் முதல் முதல் புளட்டின் வெளித்தோற்றத்தை கிழித்துத் தொங்கப்போட்டது. (அதே கோவிந்தனை பின் புலிகள் சிதைத்துப் போட்டதையும் அறிந்தவர்களுக்கு தெரியும்) இப்போ குமிழி….

” புலியின் உளவாளி என்ற உரப்பலில் தோழர்கள் உண்மையறியாது குழம்பி நின்றார்கள். மீட்பர்கள் அடித்தார்கள்.குதறினார்கள். சுந்தரம் படைப்பிரிவு என்று பெயர் சூடிக்கொண்ட அவர்கள் சுமார் ஆறு ஏழு பேரும் ஒரு பந்தைப் போல மதனை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள்……

மனதைத் திடப்படுத்திக்கெண்டு வாசிக்கத் தொடங்குங்கள். அருமையான படைப்பு. தோழர் ரவி நல்ல எழுத்தாற்றல் மிக்கவர் என்பது தெரியும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுதியை பின்னர் வாசிக்கலாம் என புத்தகத்தை வைத்துவிட முடியாத படி ஒவ்வரு வரியும் உள்ளீர்க்கும் .
நாவலை வாங்க விரும்பினால் Ravindran Pa தொடர்பு கொள்ளுங்கள்.

டிவைன் பிராவோ டி20 போட்டித் தொடரில் 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தி சாதனை !

மே.இ.தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் நேற்று தனது 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தினார் டிவைன் பிராவோ. ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்கு பிராவோ ஆடுவது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 459 போட்டிகளில் 501 விக்கெட்டுகளை எடுத்து பிராவோ சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் மலிங்கா 295 போட்டிகளில் 390 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். சுனில் நரைன் 339 போட்டிகளில் 383 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 295 போட்டிகளில் 374 விக்கெட்டுகளையும் பாகிஸ்தானின் சொஹைல் தன்வீர் 339 போட்டிகளில் 356 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.