செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இடம்பெயர்ந்தோருக்கான நிவாரண உதவியில் கல்வி அமைச்சும் பங்கேற்பு!

donation_food_anandacollage.jpg வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் வாழும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க கல்வி அமைச்சும் முன்வந்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கமைய அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவின் வழிகாட்டலுடன் இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் என்பன ஒன்றிணைந்து புதிய ஆடைகள்,  டவல்கள்,  தண்ணீர் போத்தல்கள், உலர்உணவு வகைகள்,  மருந்துப் பொருட்கள்,  பாத்திரங்கள்,  சவர்க்காரம்,  பற்பசை போன்றவற்றை அனுப்பவுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருடன் தொடர்புகொண்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட பொருட்களின் விபரம் பற்றி தெரிவிக்குமாறு அமைச்சு மேல்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சொந்தங்களை இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

front.jpgவவுனியா நலன்புரி நிலையங்கள், இடைத்தங்கல் முகாம்கள், நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் ஆங்காங்கே சிதறி இருக்கும் குடும்ப உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்து ஒரே இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தின் இரண்டாவது பகுதியில் நேற்றுக் காலை அமைச்சர் ரிஷாத் விசேட கூட்டமொன்றை நடத்தினார். புலிகளின் பிடிக்குள்ளிருந்து தப்பி வந்த மக்களுள் அரச உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் போன்றோரும் அடங்குவர். இவர்களது உதவியுடன் குடும்ப அங்கத்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் போது குடும்பத்திலுள்ள சிலர் முதலில் பிள்ளைகளையும், சிலர் பெண்களையும் அனுப்பினர். வந்தவர்கள் வவுனியாவில் ஆங்காங்கேயுள்ள இடைத் தங்கல் முகாம்களில் குடும்ப அங்கத்தவர்கள் கட்டம் கட்டமாக தங்க வைக்கப்பட்டதால் சிதறிக் கிடக்க வேண்டிய நிலை உருவாகியது.

தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது. எங்கே இருக்கிறார்கள் என்ற ஏக்கம், தவிப்பு ஏற்படுவது போல பிள்ளைகளும் இதே தவிப்புடன் இருக்கின்றனர். இதனை கருத்திற் கொண்டே அமைச்சர் ரிஷாத் இந்த நடிவடிக்கையை எடுத்துள்ளார்.

வடக்கில் மீள் குடியேற்றப் பணிகள் இன்று ஆரம்பம்!

house_new.jpgமன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றப்பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. முசலி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந 125 குடும்பங்கள்; இன்று முதற்கட்டமாக தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்கின்றன. இவ்வாறு மீளக்குடியேறும் மக்களின்  சேதமடைந்திருக்கும் வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதியினை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் அப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளின் காரணமாக தாமதமடைந்து வந்தன.

இப்பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இந்தியா, அவுஸ்திரேலியா, சுவீடன் போன்ற பல்வேறு நாடுகளின் நிதி மற்றும் நிபுனர்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்தே இப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் இன்று முதல் ஆரம்பமாகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையுடனான உறவை துண்டிக்கமாட்டோம் உயிர்ப்பலி வாங்காத ஆயுதமே வழங்கியுள்ளோம் – அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவிப்பு

pranabl.jpg“இந்தியாவின் நிலை என்ன என்பதை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துவிட்டோம்.இதற்கான பதிலை மத்திய அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; இலங்கையில் தற்போது சண்டை வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கான பதிலை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா எதிர்பார்த்து காத்து இருக்கிறது. இலங்கை அரசாங்கம் அளிக்கப்போகும் பதிலை வைத்துத்தான் அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும்.இலங்கையுடனான உறவுகளை துண்டித்துக்கொள்ளும் திட்டமெல்லாம் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவின் நட்பு நாடுதான் இலங்கை.அந்நாட்டுடன் சுமுக உறவு எப்போதும் இருந்து வருகிறது. எனவே உயிர்ப்பலி வாங்காத ஆயுதங்களைத்தான் அந்நாட்டிற்கு இந்தியா வழங்கியுள்ளது.அங்குள்ள அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்றே இந்தியா வலியுறுத்துகிறது. புலிகள் அமைப்பு என்பது ஒரு தீவிரவாத அமைப்பு.

சர்வகட்சிக் குழுவின் யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் – ரணில் கோரிக்கை

யுத்தம் முடிவடைந்து வரும் நிலையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, புஸ்பதான மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “சுதந்திரத்திற்கான மேடை’ நிகழ்ச்சித் திட்டத்தின் கூட்டமொன்றில் பேசும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்:

இப்போது யுத்தம் முடிவடைந்து வருகிறது இந்த நிலையில் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு யோசனையொன்றை பரிந்துரை செய்வதற்கென அமைச்சரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு சகல கட்சிகளும் தத்தமது அபிப்பிராயங்களையும் யோசனைகளையும் முன்வைத்திருக்கின்றன.

எனவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அது எம்மாதிரியான தீர்வு என்பதை தெளிவுபடுத்தி அரசாங்கம் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்.

எமது நாட்டிலுள்ள பிரச்சினையை பிறர் வந்து தீர்க்க முற்படுவதற்கு முன்னர் நாம் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் சகல கட்சிகளும் தத்தமது அபிப்பிராயங்களை தெரிவித்துள்ள நிலையில் எதற்காக மூடி மறைக்க வேண்டும்?

எனவே தீர்வு யோசனையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் அதை செய்யாததால்தான் பிறர் வந்து கொண்டிருக்கின்றனர். என்றும் கூறியிருக்கிறார்.

சிறுபான்மை மக்களிற்காக குரல் கொடுக்க கிழக்கு மாகாண சபையால் மாத்திரமே முடியும்- கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் கிழக்கு மாகாண சபையினால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் நலன்களிற்காக குரல்கொடுக்க முடியும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாணத்துறை, கிராமிய மின்சார, நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்ட மூலம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் உதுமாலெவ்வை தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்ட மூலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு திருத்தங்கள் செய்யப்பட்டு சபையில் இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டால் தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இதனை ஆதரிப்போம்.

தற்போதுள்ள இச்சட்ட மூலத்தை அங்கீகரிப்பதன் மூலம் சிறுபான்மைச் சமூகத்திற்கு வரலாற்றுத் துரோகம் செய்வதற்கு நாங்கள் தயாரில்லை.

தலைவர் அஷ்ரப், தலைவர் அதாஉல்லா ஆகியோர்களின் தலைமைத்துவங்களினால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆளும் கட்சியில் இருந்தவாறே எங்களது நிலைப்பாடுகளைத் தைரியமாக அறிவித்துள்ளோம்.

கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பில் நான்கு கட்சிகள் உள்ளன. இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை மக்களது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் மாத்திரமே இச்சட்ட மூலங்களை தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பர்.

இதுபோலவே முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார்கள் என்றார்.

அமெரிக்க இராணுவத் தளத்தை தாக்க திட்டமிட்டோருக்கெதிராக நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க இராணுவத் தளத்தைக்தாக்கி படையினரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மூன்று அல்பேனிய முஸ்லிம்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்ற செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பையளித்தது. இந்த மூன்று முஸ்லிம்களும் சகோரர்களாவர். டேர்டின்டுகா வயது 30, ஷெய்ன்டுகா 29, எல்ஜிவீர்டுகா ஆகியோருக்கே ஆயுட்கால சிறைத் தண்டனையளிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் டிக்ஸ் துறைமுகத்தைத் தாக்க திட்டமிட்டதாகக் கருதி இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இன்னும் இருவர் கெரிஹில் என்ற பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டனர். வியாபார நோக்கில் இவர்கள் அடிக்கடி டிக்ஸ் துறைமுகத்துக்குச் சென்று வந்தனர்.

இதனால் இத் துறைமுகம் பற்றிய பரீட்சயம் இவர்களிடமிருந்தது. இதைக் கொண்டு இவ் வியாபாரிகள் துறைமுகத்தை தாக்கத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இவர்கள் கைதான பின்னர் இந்தத் தாக்குதல் இன்னும் நடாத்தப்பட வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அல்பேனிய முஸ்லிம் சகோதரர்கள் நன்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். புனித யுத்தமாக இதைக் கருதும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலையாவார்கள் எனத் தான் நினைக்கவில்லை. குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கத்துடன் இத் தீர்ப்பை வழங்கினேன்.

மூன்று பிள்ளைகளையும் சிறைக் கைதிகளாகக் காண்பது பெற்றோர்களுக்குப் பெரும் வேதனையளிக்கும் என்பது தனக்குத் தெரியுமென்றும் மாவட்ட நீதிபதி தனது தீர்ப்பின் போது டுகா சகோதரர்களின் பெற்றோர்கள், உறவினர்களிடத்தில் தெரிவித்தார்.

இதன் போது டுகா சகோதரர்கள் சிறைக் கைதிகளின் பச்சை நிற சீருடையை அணிந்து கையில் விலங்கிடப்பட்டுக் காணப்பட்டனர். நீதிவான் தீர்ப்பை வாசிக்கும் போது தாங்கள் அப்பாவிகள் அமெரிக்க உளவுத்துறை மிகத் திறமையாக எங்களை இதில் சிக்கவைத்தது என ஆவேசத்துடன் கூறினர். குற்றவாளிகளுக்குகெதிரான முறைப்பாடுகள் உரிய முறையில் சமர்ப்பிக்கப்பட்டது.

தனது அனுபவத்தில் இவ்வாறு விவரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையைக் கண்டதில்லையென நீதவான் கூறினார். அல்பேனிய மூன்று சகோதரர்களுடன் மேலும் இரண்டு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்விருவருக்கான தீர்ப்பு நேற்று புதன்கிழமை வழங்கப்படவிருந்தது.  இச் செய்தி எழுதப்படும் வரை இது பற்றித் தெரியவில்லை. ஒருவர் ஜோர்தானில் பிறந்தவர். இவர் ஆட்டோ சாரதியாகவும் மற்றவர் துருக்கியில் பிறந்தவர் ஸ்டோர் காப்பாளராகவும் கடமையாற்றியவர்கள்.

அமெரிக்காவின் உளவுத்துறை கைதான ஐவர் அடங்கிய ஒளி, ஒலி நாடாவை சமர் ப்பித்திருந்தது. நூறு மணித்தியாலங்கள் கொண்ட இந் நாடாக்களில் புனிதப் போர் குறித்துத் தீர்மானிக்கப்பட்ட விடயம் புலனாய்வுத்துறையின் முஸ்லிம் அதிகாரி ஓமர் ஊடாகத் தெரியவந்தது.

இந்த ஐந்து பேரும் கைதாகி எட்டு வாரங்கள் சிறையிலிருந்தனர். டுகா சகோதரர்களின் பெற்றோர் எங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளா அவ்வாறான பிள்ளைகளைத் தாங்கள் பெற்றெடுக்கவில்லை எனக் கூறினர்.

வன்னியிலிருந்து யாழ்.வந்தோரை கவனிக்க 5 டாக்டர்கள் நியமனம்

doctor.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்து யாழ்.மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் மருத்துவ தேவைகளை கவனிப்பதற்காக மத்திய சுகாதார அமைச்சு ஐந்து வைத்தியர்களை நியமித்துள்ளது. யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் விடுத்த வேண்டுகோளையடுத்தே யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பியிற்சியை நிறைவு செய்த ஐந்து வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்ற இவ்வேளையில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களின் மருத்துவத் தேவைகளைக் கவனிப்பதில் பெரும் நெருக்கடிகள் நிலவுவதாகவும் இதனால் 10 வைத்தியர்களை நியமிக்குமாறு கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்தே, ஐந்து வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் ஐந்து வைத்தியர்கள் அடுத்த வாரமளவில் நியமிக்கப்படுவார்களெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் கடமையாற்றுவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சிகளை நிறைவு செய்த 230 வைத்தியர்களை மத்திய சுகாதார அமைச்சு நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கம்யூனிஸ்ட் ஆர்வலர் சிவம் கனடாவில் மரணம்

வட மராட்சியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்த என்.சிவநாதன் (சிவம்) திங்கட்கிழமை கனடாவின் ரொறன்டோவில் காலமானார். அவருக்கு வயது 58. நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவநாதன் 1970 களில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் சார்பு பிரிவின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு பல போராட்டங்களில் பங்கேற்றவர்.

1983 ஜூலை இன வன்செயலுக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட நிலைவரங்கள் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர்ந்த சிவநாதன் கனடாவிலும் இடதுசாரி இயக்கத்தின் பணிகளிலும் முற்போக்கு காலை இலக்கிய பணிகளிலும் துடிப்புடன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வேளையில் திங்களன்று மாரடைப்பால் காலமானதாக கனடாவில் உள்ள அவரின் நண்பர்கள் அறிவித்துள்ளனர். இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான அவரின் இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை நடைபெறும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கையில் தான் தண்டனை வழங்கப்பட வேண்டும் – கருணா அம்மான்

Karuna Colஇலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது என அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு யுத்த குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருணா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவருக்கு இலங்கையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பின்னர் இந்தியாவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.