செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கையில் ஏற்கமுடியாத அளவுக்கு மக்கள் உயிரிழப்பு- ஐ நா பொதுச் செயலர்

uno.jpgஇலங் கையில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ஏற்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயம் குறித்து ஐக்கியநாடுகள் மன்றத்தின் பொதுச்சபைக்கு விளக்கிப் பேசிய அவர், இறந்தவர்களில் தொகையாக ஐ. நாவினால் எந்தவொரு எண்ணிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும், அப்படியாக ஐ.நாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும் கூறினார்.

அதேவேளை, இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபை குறைத்து வெளியிட்டது என்று கூறப்படுவதையும் தான் குறிப்பாக நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.

அது பற்றி செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஐ.நா தலைமைச் செயலரின் சார்பில் பேசிய மிஷேல் மொண்டாஸ் அவர்கள், இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ நா பொதுச் செயலர் தனது கடுமையான கவலையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து கருத்துக் கூறிய அவர், இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னமும் வெளியாகவில்லை என்றும், வெளியான பல தகவல்கள் ஐ.நாவில் இருந்து வெளியானவில்லை என்றும், பெரும்பாலானவை எமது வெளியீடுகளில் இருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்றும் கூறினார்.

அதே நேரம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்னவாக இருந்த போதிலும், அது ஏற்கப்பட முடியாத அளவுக்கு அதிகமானது என்றும் பான் கீ மூன் சார்பில் பேசவல்ல அதிகாரியான மிஷேல் மொண்டாஸ் கூறினார்.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகளால் விடுக்கப்படுகின்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று மே மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதி தான் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ஐ. நாவின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் முழுமையான பொறுப்பேற்றலும், வெளிப்படைத்தன்மையும் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை தமிழ் பாடசாலைகள் நேற்றும்செயலிழப்பு – ஆசிரியர் இடமாற்ற விவகாரத்திற்கு தீர்வு

teacher.jpgகல்முனை வலயத்தில் சர்ச்சைக்குள்ளான ஆசிரிய இடமாற்ற விவகாரத்திற்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. ஆயினும் கல்முனை தமிழ்ப் பாடசாலைகள் நேற்று 2வது நாளாகவும் மூடப்பட்டிருந்தன.

தமிழ்ப் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆசிரியர்களும், முஸ்லிம் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் ஆசிரியர்களும் மீண்டும் அவரவர் இனப் பாடசாலைகளுக்கு இடமாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களது இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான முறையான இடமாற்றக் கடிதம் எதிர்வரும் 8ம் திகதி முதல் செயற்படும்படியாக அந்தந்த அதிபர்களிடம் 05.06.2009 அன்று வழங்கப்படும்.

இது தொடர்பான எழுத்து மூல உறுதி மொழியை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. அப்துல் நிசாம் ஒப்பமிட்டு சகல தமிழ்ப் பாடசாலை அதிபர்களுக்கும் நேற்று கையளித்துள்ளார். 08 வருடங்களுக்கு குறைவான சேவையுடைய ஆசிரியர்கள் தொடர்பில் பாடசாலைத் தேவைகள், கோரிக்கைகளைக் கவனத்திற்கொண்டு அப்பாடசாலைகளில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவர். 08 வருடங்களுக்கு மேலதிக சேவையுடையவர்களுக்கும் இது பொருந்தும்.

ஆசிரியர்களது மேன்முறையீடுகள் யாவும் இடமாற்றத் திட்டத்தின் படி கடமையேற்று 04.06.2009க்கு முன்பு காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். மேன்முறையீடுகள் அனைத்தும் எதிர்வரும் 08.06.2009 முதல் 12.06.2009 வரை பரிசீலனை செய்யப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் எதிர்வரும் 15.06.2009 முதல் செயற்படும் படியாக மீள் இடமாற்றங்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

தமிழ்ப் பாடசாலைகளின் இத்தகைய விடயங்களுக்குப் பொறுப்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். கே. ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றங்கள் சார்பில் பாடசாலைகளில் தோன்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், பாடசாலைகள் சுமுகமாக இயங்குவதற்கான எடுத்த முயற்சிகளுக்காக ஜனாதிபதியின் மாவட்ட இணைப்பாளர் இனியபாரதிக்கு நன்றி கூறுவதாக வும் பணிப்பாளரின் அதிபர்களுக்கான கையெழுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளரின் இவ் அறிக்கையை கல்முனை, சம்மாந்துறை வலய கல்விப் பொறுப்பாளர் வரதன் சகல தமிழ்ப் பாடசாலை அதிபர்களுக்கும் நேற்று விநியோகித்தார்.

கல்முனை வலய தமிழ்ப் பாடசலைகளின் கல்விச் சமூகத்தை அழைத்து திங்களன்று நண்பகல் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி கல்முனை கல்விப் பணிமனையில் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் கல் முனை மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். கே. ஆனந்தராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். ஜலீல், இலிகிதர் கையூம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கல்முனை, சம்மாந்துறை கல்விப் பொறுப்பாளர் வரதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திற்குச் சமுகமளித்த அதிபர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் கருத்துத் தெரிவித்தனர்.

கல்முனை வலய தமிழ்ப் பாடசாலைகள் சார்பாக கலந்து கொண்ட பெற்றார் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மிகவும் காரசாரமாக தமது நியாயங்களை முன்வைத்தனர்.தமிழ்ப் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியைத் திட்ட மிட்டு அழிக்கும் ஒரு செயற் பாடாகவே இவ்விடமாற்றத்தை நாம் கருதுவதாக சமுகமளித்தோர் குற்றம் சாட்டினர். பதிலளிக்க உரிய அதிகாரியின்மையால் கூட்டம் பல மணிநேரம் நீடி த்தது. தொலைபேசி உரை யாடல்கள் தொடர்ந்தன. ஈற்றில் மாலை 6.00 மணியளவில் தீர்வு சொல்வதாகக் கூறி கூட்டம் முடிவுக்கு வந்தது. முடிவு உரிய வேளையில் கிடைக்காமையினால் நேற்றுப் பாடசாலைகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

களுத்துறை, மாத்தளை, கண்டி இன்று நீர்வெட்டு

மாத்தளை, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று (3ம் திகதி) நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நேற்று அறிவித்தது.

மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று காலை 5.00 மணி முதல் 24 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருப்பதாகவும் அச்சபை குறிப்பிட்டிருக்கிறது. தம்புள்ள நகரம், பொருளாதார மத்திய நிலையம், குருநாகல் வீதி, பொஹரன்வெவ, இப்பன்கட்டுவ நீர்த்தேக்க வீதி, அனுராதபுர வீதி, தெமதஓயா, பெல்வெஹர, கம்உதாவ, கல்வெட்டியாவ, மாத்தளை வீதி, கபுவத்தை, தம்புளுஓயா, நிசங்க வீதி, பஹல வெவ, கண்டலம வீதி, பட்டுயாய, ரத்மல்கஹஎல, மகாயாய, எருவலசந்தி ஆகிய பிரதேசங்களுக்கே 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட விருக்கிறது.

தம்புள்ள நீர்வழங்கல் திட்ட நிர்மாணம் மற்றும் பராமரிப்பு காரணமாக 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் நீரை வீண் விரயம் செய்ய வேண்டாமெனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பாவனையாளர்களைக் கேட்டுள்ளது.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையிலான 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட விருக்கிறது. கெத்ஹேன முதல் பேருவளை வரையான நீர்வழங்கல் குழாயில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாகவே பயாகல, மக்கொன, பேருவளை, மொரகல்ல, அலுத்கம, தர்காநகர், பெந்தர ஆகிய பிரதேசங்களுக்கு இன்று ஒன்பது மணிநேர நீர்வெட்டு அமுல்படுத் தப்படவிருப்பதாகவும் அச்சபை அறிவித்திருக்கிறது.

பாடசாலைகளின் டெங்கு ஒழிப்பு வாரம் 8-15 வரை அமைச்சர் சுசில் பிரகடனம்

mosquito_preventionss.jpg“பாடசா லைகளில் டெங்கு ஒழிப்பு வாரம்” ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பிரகடனப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை “பாடசாலைகள் டெங்கு ஒழிப்பு வாரம்” அனுஷ்டிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். டெங்குக் காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு தொடர்பான வேலைத் திட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் வேகமாக முன்னெடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வாரத்தினுள் சகல பாடசாலைகளிலும் அதன் சுற்றுப் புறச் சூழல்களில் டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாடசாலை மாண வர்களைக் கொண்டே டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைகளை செய்யுமாறும் அமைச்சர் சகல மாகாண, வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு மேலதிகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினங்களிலும் காலை 7.30 மணி முதல் 8.00 மணிவரை பாடசாலை சுற்றுப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு முன்னேற்பாடுகளை செய்யுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சகல பாடசாலை அதிபர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

500 வீடுகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அடிப்படை உரிமை மீறலாகும் -உயர் நீதிமன்றம்

02supreme.jpgஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தீகவாவியை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடமைப்புத் திட்ட வீடுகளை புதிதாக விண்ணப்பங்கள் கோரி சட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர் உட்பட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் தீகவாவியை அண்மித்த பகுதியில் 500 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வீடுகள் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த வேளையில் பௌத்த அமைப்புகளினால் அந்நேரம் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரோ இது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அம்பாறை அரசாங்க அதிபர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ,வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட இம்மனு மீதான தீர்ப்பை நேற்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள் வழங்கினர்.

தீகவாவியை அண்மித்த பகுதியில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை குடியேற்றும் எண்ணத்துடன் 500 சுனாமி வீடுகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அந்த தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த மீதான தாக்குதலுக்கு லக்ஷ்மன் யாப்பா கண்டனம்

33222.jpgஊடக வியலாளரான போத்தல ஜெயந்த மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலை வண்மையாகக் கண்டிப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நேற்று இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்ட போத்தல ஜெயந்த தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு விடுவிக்கப்பட்டு நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் உழைத்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலையானதாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜோன்மேரி யூலியா, ஜனனி ஆகியோருக்கு ஆதரவு

01-janani.jpgதமிழரின் சார்பில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரு ஜோன்மெரி யுலியா (பிரான்ஸ்) ஜனனி ஜனநாயகம் (பிருத்தானியா) ஆகியோருக்கு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
 
பிரான்ஸில் தமிழர் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு. ஜோன் மெரி யூலியா அவர்கள் வெற்றிபெற தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்ஸ் தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த பலவருடங்களாக தமிழர்களின் விடுதலையில் தன்னை இணைத்து கொண்டு உழைத்து வரும் திரு. யூலியா அவர்கள் இன்று தோன்றியுள்ள இறுக்கமான நிலையில் தமிழர்களின் நீதியான போராட்டத்தை உலக அரங்கில் வலுவான நிலையில் உரைக்கும் முகமாக ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவர் வரலாற்றுத்துறை ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இருக்கும்போதே எமது நாட்டின் போராட்ட வரலாற்றை பிற சமூகத்திடம் கொண்டு செல்வதற்கு தனது மொழி அறிவையும், வரலாற்று அறிவையும் அர்பணித்துக் கொண்டவர். 83ல் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பை பிரஞ்சு மக்கள் அறியும் வகையில் பிரஞ்சு மொழியில் “ஜெனசிட் தமிழ்” என்னும் நூலை வெளிக்கொணர்ந்தார்.

அதேபோல் இங்கு பல அரசியல் பிரமுகர்களின் சந்திப்பில் எம்மினத்தின் விடிவிற்கான போராட்டத்தை ஆணித்தரமாக முன்வைத்து அவர்களின் ஆதரவையும், கவனத்தையும் எம் பக்கம் திருப்பியவர்.

இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிக்க முன்வந்துள்ளார்கள். தமிழர்களாகிய நாம் அதற்கான ஆதரவை தெரிவித்து வெற்றிபெற செய்தல்வேண்டும்.

இன்று இலங்கையில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக இயங்கமுடியாத நிலையில். புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் தேர்தல் நடத்த சிங்கள அரசு திட்டமிட்டு வரும்நிலையில்,

எமக்கான அரசியல் பிரதிநிதிகளை எம்மால் தெரிவுசெய்ய முடியாத நிலையில் எமக்கான பிரதிநிதியை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த நாங்கள் தெரிவுசெய்து அனுப்பும் சந்தர்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதனை புலம்பெயர்ந்து வாழும் நாம் சரியாக உபயோகித்துக் கொள்வதினூடாக எமது சுதந்திரத்தை உறுதிசெய்ய முடியும்.

எம்மில் பலர் எத்தனையோ தேசிய கட்சிகளிற்கு ஆதரவாய் இருந்தாலும் எமது பொதுப் பிரச்சனையை முன்வைத்து ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு.யூலியா அவர்களை கட்சி பேதமின்றி ஆதரித்து எமது மக்களின் விடுதலையை முனைப்பு பெறவைக்க வேண்டும்.

இவரின் வெற்றிக்காக அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்வதுடன் பிறநாட்டு நண்பர்களின்; ஆதரவையும் திரட்ட உழைக்கவேண்டுமென தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இதே வேளையில் லண்டனில் போட்டியிடும் இளம்தலைமுறை செல்வி. ஜனனி ஜனநாயகத்தின் வெற்றிக்கும் எமது வாழ்த்துடன் கூடிய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு – பிரான்ஸ்

இராணுவத் தளபதிக்கு ரஷ்யத் தூதுவர் பாராட்டு

russian_ambassador.pngஇலங் கையில் கடந்த 30 வருடங்களாக நீடித்திருந்த புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமைக்காகவும் அதற்காக இராணுவத்தில் ஜெனரல் தரத்துக்குப் பதவி உயர்த்தப்பட்டமைக்காகவும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் விளாடிமிர் பி. மிகாய்லொவ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

வடபகுதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கையளிப்பு

susil_prem_minister.jpgஇடம் பெயர்ந்த வடபகுதி மாணவர்களுக்கு 46 மில்லியன் ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் இன்று (2) கல்வி அமைச்சில் நடைபெறறது. இதன் போது வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேலதிக புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள், மேசை, கதிரை மற்றும் உணவு வகைகள் என்பவற்றை கல்வி அதிகாரிகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி பொருட்கள் 25 லொறிகளில் வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு அனுப்பப்பட உள்ளதோடு அவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நலன்புரிக் கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது. இதனையொட்டி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அடங்கலான குழுவினர் வவுனியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இடம்பெயர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகள் குறித்து ஆராய கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார இருவாரங்களுக்கு முன் வவுனியா சென்றிருந்தார். இதன் போது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க உடனடியாக தேவைப்படும் உபகரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதன்படி 25 ஆயிரம் சீருடைகள், 500 மேசைகள், 1500 கதிரைகள், 5 இலட்சம் பாடநூல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் 5 ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

இதேவேளை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை என்பவற்றுக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கான விசேட வகுப்புகளும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் – இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள்

piyasena_gamagesss.jpgவடக்கில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழிற்பயிற்சி அளிப்பதற்காக இரண்டு வாரங்களுக்குள் இரண்டு தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசென கமகே தெரிவித்தார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா நிவாரணக்கிராமங்களை அன்மித்து இவை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேற்கில் இளைஞர்கள் யுவதிகள் பெற்றுக்கொள்ளும் பயிற்சிகளை வடக்கிலுள்ளவர்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.