எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஓமந்தையில் நேற்று பொலிஸ் நிலையம் திறப்பு

sri-lanka-police.jpgவவுனியா ஓமந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை புதிதாகப் பொலிஸ் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது. வன்னிக்கான இராணுவச் சோதனை நிலையமாக ஓமந்தை முன்னர் விளங்கிய நிலையில் தற்போது அங்கு நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டது.

இந்தப் பொலிஸ் நிலையத்தைப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், வவுனியா நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பொலிஸ் நிலையங்கள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பல பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏ9 வீதியில் ஓமந்தை முதல் முகமாலை வரையும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கின் யுத்த நடவடிக்கைகள் காரணமாக 49 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர் -மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா

hisbullah.jpgகிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 49 ஆயிரம் பெண்கள் தமது கணவர்களை இழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஒலுவில் மஹாபொல நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளை மக்கள் முன் கொண்டு செல்லும் வெலைத்திட்டம் பற்றி அம்பாறை மாவட்ட மூவின ஊடகவியலாளர்களுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; இந்த நாட்டிலுள்ள எந்தவொரு மாகாண சபையிலும் இல்லாத பெரும் சாதனையொன்று இம் மாகாணத்தில் நிகழ்ந்து வருகின்றது. மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஒரே மேடையில் ஒற்றுமையாக இருந்து கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களினதும் தேவைகளை அறிந்து சேவையாற்றுவதற்காக ஒரே கருத்தில் செயலாற்றி வருகின்றோம்.

கடந்த 20 வருடத்திற்கும் மேலாக யுத்த மேகம் சூழ்ந்திருந்த இந்த மாகாணத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்க வாய்ப்பளித்த எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு நாம் அனைவரும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் நடந்த யுத்த சூழ்நிலைகாரணமாக 49000 விதவைகள் உள்ளனர் இதில் யுத்தம் காரணமாக 24,000 பேர் கணவனை இழந்துள்ளனர். இவற்றுள் 19,000 பேர் 40 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள், 12,000 பேர் 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் எதிர்காலம் என்ன என்பதை பற்றியும் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கும் கிழக்கு மாகாண சபை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நாட்டின் அரிசி உற்பத்தியில் மிகவும் முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கு மாகாணம் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகாரணமாக அரிசி உற்பத்தியில் 12 வீதத்தையே பூர்த்தி செய்கிறது.

கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் பல ஆண்டு காலமாக பயிர் செய்யப்படாத நிலங்களை பொன் விளையும் பூமிகளாக மாற்றுவதற்காக மானிய அடிப்படையில் உரம், வயலை உழுவதற்கு ஏக்கருக்கு 2000 ரூபா நன்கொடை, இலவச விதை நெல், என்பனவற்றை வழங்கியதன் மூலம் கடந்த ஆறுமாதங்களில் ஒரு இலட்சத்து முப்பத் தோராயிரம் ஏக்கர் நிலம் மேலதிகமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டதனால் 30 வீத நெல் உற்பத்தியை கண்டுள்ளது.

இது கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் கிடைத்த வெற்றிகளுள் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

அக்குரஸ்ஸ தாக்குதலுக்கு ஹக்கீம் கடும் கண்டனம்

rauff_hakeem.jpgதேசிய மீலாத் விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் அக்குரஸ்ஸ, கொடபிட்டியவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அங்கு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மிகவும் மிலேச்சத்தனமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீமின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “சம்பவம் பற்றிக்கேள்விப்பட்டவுடன் நான் அங்கு விரைந்தேன் கொடபிட்டிய போர்வைப் பள்ளிவாசல் அருகே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது உலக முஸ்லிம்கள் தம் உயிரை விடவும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டிய தேசிய நிகழ்வின் அங்குரார்ப்பணத்தின் போது இப் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது பலத்த கண்டனத்துக்குரியது.

விடுதலைப்புலிகள் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீதும், ஹஜ் யாத்திரைகள் மீதும், எல்லைப்புறக் குக்கிராமங்களில் வசித்த அப்பாவி முஸ்லிம்கள் மீதும் மேற்கொண்ட பாரிய படுகொலைச் சம்பவங்களின் பின்னர் தெற்கில் இப்பொழுது முதன் முதலாக முஸ்லிம்களின் பிரதான நிகழ்வொன்றின் போது படுமோசமான முறையில் இக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுவாக அனைத்து இன மக்களும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். வடக்கில் அரசாங்கம் முழுஅளவிலான யுத்தத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில் தெற்கில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் மேலோங்கியிருந்த சூழ்நிலையில் இந்த நிகழ்வின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளை அழைத்துவந்து சமய நிகழ்ச்சிகளை அரசியல்மயப்படுத்தும் காரணத்தினால் சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பேராபத்திற்கு ஆளாகின்றனர். இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இனரீதியான புரிந்துணர்வுகளுக்கு பாரிய பின்னடைவையும் இடைவெளியையும் ஏற்படுத்தக் கூடியவை.

இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இலங்கைத் தமிழருக்காகவே பேசும் – ஜெயலலிதா கூறுகிறார்

jayalalitha.jpgஇலங்கைத் தமிழர் விவகாரம் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் திட்டவட்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து தமிழ்நாட்டிலுள்ள சகல தரப்பினரும் அதிகளவுக்கு உடல், உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவை வெளிப்படுத்தி திங்கட்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருந்த ஜெயலலிதாவிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினையானது தேர்தல் விவகாரமாக அமையுமா என்று கேட்கப்பட்ட போது, “அவர்கள் தொடர்பாகவே தேர்தல் பெறுபேறுகள் அமையும். தமது சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகள் கொல்லப்படுவது குறித்து தமிழக மக்கள் அதிகளவுக்கு கவலை அடைந்துள்ளனர்’ என்று “இந்து’ பத்திரிகைக்கு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் இலங்கைத் தமிழருக்கு எந்த உதவியும் அளிக்கவில்லையென்ற பரவலான அபிப்பிராயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. அரசுக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அவர்கள் துரிதமாக உணவு, மருந்துப் பொருட்களை இப்போது அனுப்பியிருப்பார்கள். இனப் படுகொலையை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வெற்று வார்த்தைகளையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இரு அரசுகளுமே இலங்கைத் தமிழருக்கு நிவாரணம் வழங்குவதைப் புறக்கணித்து குற்றம் இழைத்திருக்கின்றன என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கை அரசுக்கு நவீன ஆயுதங்கள், உபகரணங்களையும் இராணுவத்திற்கு பயிற்சியையும் இந்திய அரசாங்கம் விநியோகித்து வருவது தொடர்பான செய்திகளை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு இதனை செய்வது பொதுவான விடயமாக இருந்தாலும் யாருக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே இங்குள்ள கேள்வியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை அரசு தனது இராணுவப் பலத்தை தமிழர்களுக்கு எதிராக பிரயோகிக்கின்றது என்பதே உண்மையாகும். புலிகளுடன் தான் சண்டையிடுவதாக அது கூறக்கூடும். ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையானது அப்பாவித் தமிழர்களும் இலக்காக்கப்படுகின்றனர் என்பதையே தெளிவாகக் காட்டுகின்றது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தனது உண்ணாவிரதம் தொடர்பாக கருணாநிதியின் விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர் நான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பேன் என்பது யாருக்கும் தெரியும்’. என்னால் செய்ய முடியாதது தொடர்பாக நான் ஒருபோதும் உறுதிமொழி அளிக்கமாட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். கட்சிச் செயலாளர் என்ற முறையில் 1 கோடி ரூபாவும் தனிப்பட்ட ரீதியில் 5 இலட்சம் ரூபாவும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதியத்திற்கு ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

உண்டியல் நிதிக்கு வைகோவும் ரூபா 5 இலட்சம் வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய (மார்க்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன், புதிய தமிழகத் தலைவர் கே.கிருஷ்ணசாமி , தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட அ.தி.மு.க. தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

புல்மோட்டை இந்திய வைத்தியசேவை குறித்த ஜே.வி.பி.யின்; குற்றச்சாட்டு அர்த்தமற்றது. – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விளக்கம்

l-yaappa-abayawardana.jpgவடக்கில் யுத்தத்தினால் காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென்ற பெயரில் புல்மோட்டையில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் வைத்தியசாலையானது உண்மையிலேயே இந்திய இராணுவத்தின் முகாமாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்;டுவதில் எவ்வித உண்மையும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேல்விக்கு பதிலளிக்கையிலேயே  அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்:

ஏதாவதொரு நல்ல திட்டம் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிப்பதை மக்கள் விடுதலை முன்னணி ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது. வீணான ஓர் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு முதற்கட்ட தீர்மானங்களை எடுத்து எதிர்ப்பையே தெரிவிக்கின்றது. பின்னர் உன்மையை உணர்ந்து அதனை ஏற்றுக்கொள்கின்றது.
இந்திய இராணுவம் இங்கு வரும்போதும் பல பிச்சினை ஏற்படும் என்றும் இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்ப உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுத்தது. அதேபோன்று எண்ணெய்த் தாங்கிகள் விடயத்திலும் பல கருத்துக்களைத் தெரிவித்தது.

இதற்கு மாகாண சபை மற்றுமொரு நல்ல உதாரணமாகும். மாகாணசபை அறிமுகப்படுத்தப்பட்ட போது இதனால் நாடு பிளவு படும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூக்குரலிட்டது. பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களும் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களாகவும் பதவி வகிக்கின்றனர். இல்லாத ஒரு அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு ஆரம்பக் கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கின்றனர்;. நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏறபடும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையோ திட்டத்தையோ அரசாங்கம் அனுமதிப்பதில்லை.

நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் தோன்றிய சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரையும் அரசாங்கம் நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. எனவே அரசாங்கத்தின் திட்டம் குறித்து வீணான அச்சத்தை ஏறபடுத்திக்கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அமெரிக்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும் – ராமதாஸ்

ramsoss.jpgபோரை நிறுத்தாமல், மக்களை மீட்கிறோம் என்று அமெரிக்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:-

இலங்கை போர்ப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டால், அவர்களது உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகளை அழிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.

இதற்கு இந்தியாவின் ஆதரவையும், அமெரிக்காவின் உதவியையும் பாசிச ராஜபக்சே அரசு நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

வன்னிப் பகுதியில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்காவின் தலைமையில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சிவசங்கர மேனன், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழ் மக்களை அவர்களது பிறந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லுவதும், அவர்களை கட்டாயமாக வெளியேற்ற முற்படுவதும் ஈழத் தமிழர்களின் அரை நூற்றாண்டுகால போராட்டத்தை அவமதிப்பதாகும்.

தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றி இலங்கை படையினரின் சித்ரவதை முகாம்களில் அடைத்திட முற்படும் எந்த நடவடிக்கைக்கும் இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது.

பாகிஸ்தான் ஒரு பக்கம் பகையாக இருக்கிறது. வங்கதேசம் இன்னொரு பக்கத்தில் பகைமை பாராட்டுகிறது. சீனா எந்த நேரத்திலும் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் இருக்கும் இலங்கையும் தனக்கு பகையாக மாறிவிடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக, இனப்படுகொலை நடத்தும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா துணை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலைப்பாடு இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் மிகப்பெரிய மோசமான தவறாகும்.

ராஜபக்சே அரசின் பாசிச அராஜக நடவடிக்கைகளுக்கு இந்தியா வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ துணை நிற்பதை தமிழ்நாட்டில் இருக்கும் 7 கோடி தமிழர்களும் விரும்பவில்லை.

தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது. இந்த உணர்வை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய அரசு தனது கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

முன்பு இந்திரா காந்தி காலத்திலும், அதன்பிறகு ராஜீவ் ஆட்சியின் போது, தொடக்க காலத்திலும் மேற்கொண்ட நிலைப்பாட்டை இந்திய அரசு இப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம் ஆகும்.

இந்திராகாந்திக்கு இருந்த நம்பிக்கை, அவருக்கு இருந்த துணிச்சல், ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஈடுபாடு இப்போதுள்ள அரசுக்கு வரவேண்டும். இதுவும் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.

போர்ப்பகுதியில் அகப்பட்டிருக்கும் மக்களை மீட்க வேண்டும் என்று இலங்கை அரசு விரிக்கும் வலையில் இந்தியா விழுந்து விடக் கூடாது. இந்த வஞ்சக செயலுக்கு அமெரிக்காவின் துணையையும் இந்தியா நாடக் கூடாது.

அமெரிக்காவும் முன்பு சோமாலியாவில் மேற்கொண்ட முயற்சியை இலங்கையில் மேற்கொள்ள முயலக் கூடாது. ஆய்த மோதலுக்கு தீர்வு காணாமல் மக்களை மட்டும் மீட்கப் போகிறோம் என்று படையை அனுப்பி வைத்ததால்தான் சோமாலியாவில் தோல்வி ஏற்பட்டது.

இப்போதும் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல், போர்ப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களை மட்டும் மீட்க போகிறோம் என்று புறப்பட்டால், சோமாலியாவில் ஏற்பட்ட தோல்விதான் இலங்கையிலும் ஏற்படும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

“ஏ 9′ வீதியூடாக அத்தியாவசியப் பொருட்களுடன் 22 லொறிகள் குடாநாட்டுக்குச் சென்றன

lorries.jpgஏ 9  பாதையூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இருபத்திரண்டு லொறிகளும் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தன. முன்னதாக திங்கட்கிழமை காலை வெலிசறை உணவுக் களஞ்சியத்தில் இருந்து இந்த லொறிகள் புறப்பட்டன.

ஏ 9 பாதை போக்குவரத்திற்காகப் திறக்கப்பட்ட பின்னர் யாழ்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதன் முதலாக இந்த லொறிகள் சென்றுள்ளன.  யாழ்ப்பாணம் வந்த இந்த லொறிகளின் பொருட்கள் நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த லொறிகள் மீண்டும் கொழும்புக்குச் செல்லும்போது போத்தலில் அடைக்கப்பட்ட பனம் கள்ளு, பனம் சாராயம், பனம் உற்பத்திப் பொருட்கள், வெங்காயம், கடலுணவுகள் என்பன எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதேவேளை, தனியார் வர்த்தகர்களும் லொறிகளில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வாய்ப்பு தெற்காசியாவிடமிருந்து பறிபோகும் ஆபத்து -அர்ஜுன ரணதுங்க

cricket-arjuna-ranatunga.jpg2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்த தெற்காசிய நாடுகளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக விலகிச் சென்று விடக் கூடிய ஆபத்து இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

பாகிஸ்தான், லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பாக அர்ஜுன ரணதுங்க இந்த கருத்தை வெளியிட்டார்.

“கிரிக்கெட் விளையாட்டு இன்று பிளவடைந்து காணப்படுகிறது. அத்துடன், நடவடிக்கைகளின் போது, எமது ஒத்துழைப்புகளும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. பயங்கரவாத பிரச்சினை காரணமாக 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிருந்து (தெற்காசியாவிலிருந்து) விலகிச் சென்று விடக் கூடும். எனவே இது விடயத்தில் நாம் மேலும் நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டும். என்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாக சபை முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புதிய வத்திக்கான் தூதுவர்

vatican-museum.jpgஅதிவண யோசப் ஸ்பித்தேரி அடிகளார் இலங்கைக்கான புதிய வத்திக்கான் தூதுவராக பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். மோல்ரா நாட்டைச் சேர்ந்த 49 வயதான இவர் பனாமா, ஈராக், மெக்ஸிக்கோ, வெனிஸ்வெலா, போத்துக்கல், கிறீஸ் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வத்திக்கானில் உள்ள இராஜதந்திர பணியகத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் கடந்த நான்கு வருடங்களாக வத்திக்கான் தூதுவராக பணியாற்றி வந்த அதிவணமரியா செனாரி சிரியாவின் வத்திக்கான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து புதிய தூதுவர் இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்

நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணை

sri-lanka-police.jpgமாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. விடுதலைப்புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாக படையினரும் பொலிஸாரும் தெரிவிக்கும் நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த விசாரணைகளை நடத்தும் நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்களும் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை நடத்துவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ.பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளை நடத்துவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவுப் பொலிஸாரது (சி.ஐ.டி.) ஒத்துழைப்பைக் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தத் தாக்குதல் நடைபெற்ற போது அதனை நேரில் பார்த்ததாக கூறப்படுவோரிடம் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்னர் அப்பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் வந்ததாகவும் அதிலிருந்தவர்களின் வயிற்றுப் பகுதி சந்தேகத்திற்கிடமாயிருந்ததாகவும் அதைப் பார்த்துவிட்டு அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே அதுபற்றி பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மறித்த போது அதில் ஒன்று அங்கு நிறுத்தப்படவே மற்ற மோட்டார் சைக்கிள் அப்பால் சென்ற சில செக்கன்களில் பாரிய குண்டுச் சத்தம் கேட்டதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விஷேட பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் பல்வேறு தரப்புகளிடமும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.