எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஐ.தே.க.வை அழிக்க முயன்றவர்களின் சதி முயற்சிகள் முழுமையாக முறியடிப்பு

united-national-party.jpgஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு கனவு கண்டவர்கள் அனைவரும் வாயடைத்துப் போயிருப்பதாகவும் எதிர்ச்சக்திகளின் சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, எதிர்வரும் 24 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவின் 60 ஆவது பிறந்த தினத்தன்று கட்சி புத்தாக்கத்துடனான பயணத்தை தொடரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கட்சிக்குள் காணப்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் திங்கட்கிழமை கூடும் செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு அங்கீகாரம் பெறப்பட்டதும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றுதிரட்டி ஐ.ம.சு.மு.வின் அராஜக ஆட்சியை விரட்டியடிப்பதற்கான போராட்டத்தை தொடங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தபோதே பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்கண்டவாறு கூறினார்.

ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் நிலையில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு அரசியல் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஐக்கிய தேசியக்கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்வதில் எல்லோரும் ஆவல் கொண்டிருப்பீர்கள். கட்சிக்குள் எத்தகைய மாற்றங்கள் இடம்பெறும் என்று தடுமாறிக் கொண்டிருப்பீர்கள். கடந்த புதன்கிழமை செயற்குழு நியமித்த விஷேட குழு இதுவரையில் மூன்று சந்திப்புகளை நடத்தி பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் காத்திரமான உடன்பாடுகளை எட்டியுள்ளது. இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் மேலும் இரண்டு சந்திப்புகள் இடம்பெறவிருக்கின்றன. அச்சந்திப்புக்களின் முடிவில் தயாரிக்கப்படும் சிபாரிசு அறிக்கை திங்கட்கிழமை கூடும் விசேட செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும். அதுவரையில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியை அழிப்பதில் கங்கணம் கட்டிச் செயற்பட்டவர்கள் இப்போது வாயடைத்துப் போயுள்ளனர். இக்கட்சி ஜனநாயக கோட்பாடுகளை மதித்தொழுகும் மிகப்பழைய அரசியல் கட்சியாகும். அக்கட்சியில் அனைவருக்கும் கருத்துத் தெரிவிக்கும் உரிமையும், பேச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரது கருத்தும் ஆழமாகப் பரிசீலிக்கப்படும். அவசியமேற்படுமானால் கட்சியின் யாப்பைக் கூட மற்றுவதற்கு தயக்கம் காட்ட மாட்டோம்.

ஒற்றுமையுடன் கட்சியை பலம் கொண்டதாக மாற்றியமைக்க நாம் உடன்பாடு கண்டுள்ளோம். கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் எவருமே செயற்பட முனையவில்லை. அரச தரப்பில் சிலசக்திகள் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்துவிடும் நோக்கில் பின்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றன. கட்சியில் எவரும் அந்தச் சதி வலைக்குள் சிக்கிவிடவில்லை.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் மிக முக்கியமான நாளாகும். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் 60 ஆவது பிறந்த தினமான அன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரையில் விசேட வழிபாடுகளையடுத்து கட்சி முக்கிய உறுதிப் பிரமாணங்களை எடுத்துக்கொள்ளவிருக்கின்றது.

மேல் மாகாண சபைத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் 112 பேரும் தேர்தல் முடிந்த மறுநாளே தமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தும் உறுதிப்பாடு இதில் முதன்மையானதாகும். இதேவேளை, அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் தேர்தல் நடப்பதற்கு முன்னரே ஒரு வேட்பாளர் தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார். இதன்மூலமாக ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி முன்மாதிரியைக் காண்பித்துள்ளது.

அடுத்ததாக ஒவ்வொரு வேட்பாளர்களும் சூழலை பாதிக்காத வகையில் பிரசாரப் பணிகளை முன்னெடுக்கும் உறுதிப்பாட்டைச் செய்யவிருக்கின்றனர்.

இறுதியாக மிக முக்கியமானதொரு உறுதிப்பாட்டையும் செய்யவிருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியூடாக போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று தெரிவாகும் எவரும் தமது பதவிகளை பணத்துக்கோ, பதவிக்கோ தாரைவார்க்கப் போவதில்லை என்பதாகும்’.

வர்ஷாவின் படுகொலை குறித்த விசாரணைகள் எக்காரணங் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது.

Regie_Varsa திருகோணமலைப் பிரதேசத்தில் வர்ஷா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாதென ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தனா தெரிவித்துள்ளார் வர்ஷா படுகொலைச் சம்பவத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கண்டு பிடித்த உயர் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய சதித்திட்டம் இடம்பெறுவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் எந்த காரணத்திற்காகவும் இடைநிறுத்தப்பட மாட்டாது என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் இடமாற்றம் குறித்து எவ்வித கருத்தையும் அவர் வெளியிடவில்லை. ஒரு காவல்துறை அதிகாரியின் இடமாற்றத்தினால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா வின் கொழும்புக்கிளை போலியான தகவல்களை வெளியிட்டுள்ளது.

un-logo.jpgஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளை பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இராணுவத்தினருக்கும்  புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது 2863 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்புக் கிளை ஜெனீவாவில் உள்ள தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும்  இந்தப் புள்ளி விபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பொய்யான அறிக்கையின் பிரதியொன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கைக் கிளையில் தயாரிக்கப்பட்டதென ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்தியல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து வரும் மக்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் வவுனியா மாவட்ட அரச பணிப்பாளர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ்

minister.jpgபல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு ஒதுங்கக் கூரையும் உண்ண உணவும் மட் டும் போதாது என்றும் அம்மக்கள் கண்ணியமாகவும், கெளரவமாகவும் நடத்தப்படல் வேண்டும் என்பதே எமது அரசின் கொள்கையாகும் என்றும் இதனையே தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட அரச பணிப்பாளர்களை நேற்று சந்தித்து கலந்து ரையாடிய போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கப் பிரதி நிதி என்ற வகையிலும் வட மாகாணத்தின் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் தான் இங்கு வருகை தந்து இப்பகுதியின் தற்போதைய பாரிய நெருக்கடிமிக்கப் பிரச்சினையான இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களின் பிரச்சி னைகளுக்கு முதலிடம் கொடுத்து முக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அரச பணியாளர்கள் தங்களை வெறுமனே அரச பணியாளர்களாக மட்டும் கொள் ளாது தமிழ் பேசும் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளாகவும் கருதி இயன்றவரை நேர்மையான முறை யில் உணர்வு பூர்வமாக தங்களது பணிகளை மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எந்த வகையிலும் எந்த இடத்திலும் துர்ப்பிரயோகங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்ட சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூடிய வரையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களுக்கான பணி களை உரிய முறையில் முன்னெடுப்பதை தலையாய பணியாகக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இடம்பெயர்ந்து வரும் பொது மக்களை வருடக் கணக்கில் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைப்பது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்பதை உணர்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தளவிற்கு விரைவில் அம்மக்களை தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமோ அந்தள விற்கு விரைவாக அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடிய மர்த்தும்வரை அம்மக்களை நல்ல முறையில் பராமரித்து பாதுகாப்பது நமது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.

யாழ். நலன்புரி நிலைய மாணவருக்கு இந்தியா உதவும்

160309.jpgவன்னியில் இருந்து யாழ். மாவட்டத்துக்கு வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் யாழ். அரச அதிபருக்கு அறிவித்துள்ளனர்.

மாணவர்களுக்குத் தேவையான கொப்பிகள் மற்றும் உபகரணங்களை இணங்கண்டு அது குறித்து தெரியப்படுத்துமாறு இந்தியத் தூதரகம் யாழ். செயலகத்தைக் கேட்டுள்ளது. தேவை குறித்த யாழ். செயலகத்தின் அறிக்கை கிடைத்த பின்னர் இந்தியத் தூதரகம் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

முல்லைத்தீவிலிருந்து வந்தவர்களில் இதுவரை 40 பேர் மரணம்

navy.jpgமுல்லைத் தீவிலிருந்து திருகோணமலைக்கு கடந்த ஒரு மாதத்தில் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டோரில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 11 தொடக்கம் மார்ச் 14 வரை முல்லைத்தீவிலிருந்து கப்பலில் திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்ட 3,635 பேரிலேயே மார்ச் 20 ஆம் திகதி எடுக்கப்பட்ட புள்ளிவிபரப்படி 40 பேர் உயிரிழந்தனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 31. 1735 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

திருமலை ஆஸ்பத்திரியில் 31 பேர் மரணமானார்கள்.

கண்டியில் 7 பேரும் கொழும்பில் 2 பேரும் உயிரிழந்தனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் தற்போது 431 பேர் தங்கியுள்ளனர்.

ஏனைய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு;

கண்டி115, கொழும்பு 63, மஹரகம 01, சிகிச்சை முடிந்து கொழும்பிலிருந்து 15 பேரும் கண்டியிலிருந்து 57 பேரும் மீண்டும் திருமலை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிவரப்பட்டனர். பொலநறுவை ஆஸ்பத்திரிக்கு 121 பேரும் கந்தளாய் ஆஸ்பத்திரிக்கு 80 பேரும் தம்பலகமம் ஆஸ்பத்திரிக்கு 75 பேரும் அனுப்பப்பட்டனர். 1893 பேர் வவுனியாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் நலன்புரி முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். மன்னார் ஆஸ்பத்திரிக்கும் 908 பேர் அனுப்பப்பட்டனர்.

கடற்புலிகளின் முகாம் கண்டுபிடிப்பு: சிறிய நீர்மூழ்கிகள், படகுகள் மீட்பு

ltte-sm.jpgபுதுக் குடியிருப்புக்கு கிழக்கே புலிகளால் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கடற்புலி முகாம் ஒன்றை கைப்பற்றியுள்ள பாதுகாப்புப் படையினர் அதிலிருந்து சிறிய ரக நீர்மூழ்கி உட்பட அதி நவீன உபகரணங்கள் பலவற்றையும் மீட்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. புதுக்குடியிருப்பில் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசங்களை முற்றாக விடுவிக்கும் நோக்கில் முன்னேறிவரும் இராணுவத்தின் படைப் பிரிவுகள் இதனை கைப்பற்றியுள்ளன.

ஒருவர் மாத்திரம் செல்லக் கூடிய வகையில் இச் சிறிய ரக நீர் மூழ்கி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தயாரிக்கப்பட்ட நிலையிலுள்ள படகுகள் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை, இரணைப் பாலை தென் பகுதியிலிருந்து அதி நவீன தொலைத் தொடர்பு கருவிகள், செய்மதி டிஸ் அன்டனாக்கள், தகவல் பரிமாற்ற கருவிகள் பலவற்றையும் படையினர் கண்டெடுத்துள்ளனர். சிறிய ரக நீர் மூழ்கியை வைக்கோல்களால் மறைத்த நிலையில் புலிகள் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

அதேவேளை, பல முனைகள் ஊடாக முன்னேறிவரும் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. 

வவுனியா முகாம்களில் தமிழ் மக்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர்- வினோ நோகராதலிங்கம் : வன்னி மக்களின் நலன்களை அரசு பேணவில்லை – கஜேந்திரன்

vinonodaralingam.bmpவவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் மக்கள் நிம்மதியாகவே வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினரின் விதவைகள், குழந்தைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முல்லைத்தீவில் தங்களது குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்ந்தாலும் முகாம்களுக்குள் தாம் அச்சமின்றி,  பயமின்றி, நிம்மதியாக வாழ்வதாக வவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம்களில் சிறு சிறு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும்  அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டப்படத்தக்கவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களைப் பிரதிநிதிப்படுத்தும் 22 தமிழ்த் தேசயக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் இருந்தபோதும்   புலிகள் மீதிருந்த அச்சம் காரணமாக இதுவரையில் அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாய் திறந்து பேசியதே இல்லை. புலிகள் இப்போது இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு வருவதனால் தமது சொந்தக் கருததுக்களை வெளியிட அவர்களுக்கு இப்போது ஜனநாயக உரிமை கிடைத்துள்ளதென்பதையே  வினோ எம்.பி.யின் உரை எடுத்துக் காட்டுகின்றது என  அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது . 

வன்னி மக்களின் நலன்களை அரசு பேணவில்லை : கஜேந்திரன்

kajendran.jpgவன்னியில் தங்கியுள்ள 329,000 திற்கும் அதிகமான தமிழ் மக்களது நிலை மனித அவலத்தின் உச்சத்தினை எட்டியுள்ளது. பசி பட்டினி ஒருபுறம் மக்களை வாட்டி எடுக்க மறுபுறத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினாலும் மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் நோயாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் தேவையான போசாக்கு உணவுகள் மற்றும் நோயாளர்கள் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் எதுவும் இல்லா நிலையில் பொது அமைப்புக்களினால் வழங்கப்படுகின்ற கஞ்சியை மட்டும் குடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகின்றது.

தினமும் மூன்று வேளையும் கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் மக்களை இலக்குவைத்து ஸ்ரீலங்கா படைகள் தாக்குதல்களை நடாத்தி படுகொலை செய்யும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றது. அவ்வாறு இறப்பவர்களையும் தாண்டிச் சென்று கஞ்சியை வாங்கினால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலைதான் அங்கு காணப்படுகின்றது.

அவ்வாறு பல துன்பங்களை தாண்டிப் பெற்றுக் கொண்ட கஞ்சியை பசிக்கு உடனடியாக வயிறார குடிக்கவும் முடிவதில்லை. மாறாக அக்கஞ்சியை நீண்ட நேரம் வைத்திருந்து பசியினால் உடல் நடுக்கம் அடையும் பொழுதே அக்கஞ்சியை குடிக்கின்றனர். சிறுவர்களும் இவ்வாறுதான் செய்கின்றனர். ஏனெனில் அப்படியென்றால் தான் நீண்ட நாட்களுக்கு கஞ்சியை குடித்தாயினும் உயிர் வாழ முடியும் என்ற எதிர்பார்ப்பினாலும் அவ்வாறு இறப்பதற்கு முன்னர் புலம் பெயர்ந்த மக்களின் முயற்சியினால் தமக்கு தேவையான உணவுகள் போதுமானளவு வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையினாலுமேயாகும்.

சிறுவர்கள் இயக்கத்தில் இணைக்கப்படுவது தொடர்பாக நீலிக் கண்ணீர் வடிக்கும் அமைப்புக்கள் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள 60,000 ற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களினதும் போசாக்குணவு பற்றி எவ்வித அக்கறையும் இன்றி இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.

சுத்தமான நீர் என்பது மிகப் பெரும் பிரச்சினையாகவே உள்ளது. குடிப்பது முதல் சமையல் உட்பட எந்தத் தேவைக்கும் தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தரப்பாள் கொட்டகைகளுக்குள் வாழும் மக்கள் வெப்பம் காரணமாக அதிக தாகம் ஏற்பட்டாலும் போதியளவு தண்ணீர் அருந்த முடிவதில்லை. இதனால் சிறுநீரகத்துடன் தொடர்புடய நோய்த் தொற்றுக்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பான கழிப்பறைகள் இன்மையாலும் கழிவுகள் அகற்றும் பொறிமுறைகள் இன்மையாலும் அதிகளவு மக்கள் தினமும் இறந்து கொண்டிருப்பதனாலும் பெரும் ஆபத்தான தொற்று நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருகின்றது.

இந் நிலையில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை பங்கிட்டு வழங்குவது, பொது மக்களுக்கு தேவையான குடிநீரை தூர இடங்களில் இருந்து கொண்டு வந்து வழங்குதல், மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் ஏற்படாதவாறு அவர்களது முகாம்களில் சுகாதார நிலைமைகளை ஓரளவுக்கேனும சிறப்பாகப் பேணுதல், தினமும் படையினரின் தாக்குதலில் காயமடையும் பொது மக்களை தற்காலிக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் நாளாந்தம் கொல்லப்படும் பொது மக்களது உடல்களை எடுத்து அடக்கம் செய்வது வரை தபுக பணியாளர்கள் மிகப் பெரும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏனைய சில உள்ளுர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தபுக பணியாளர்கள் தமது உயிரையும் துச்சமாக மதித்து செயற்பட்டும் வரும் நிலையில் அவர்கள் சந்தித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பாக இதுவரை எந்த ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களோ அல்லது ஐநா அமைப்புக்களோ கரிசனை கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது.

329,000 திற்கும் அதிகமான மக்கள் அகதி முகாம்களில் தங்கியுள்ள போதிலும் கூட அந்த மக்களின் சுகாதாரம் உட்பட எந்த ஒரு நலன்களையும் கவனிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு உரிய ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை என்பதுடன் ஐநா அமைப்புக்கள் கூட இன்று வரை அங்கு செல்லவில்லை. ஐநா சபையும் ஏனைய மனித உரிமை அமைப்புக்ளும் வெறும் ஆலோசளையும், வேண்டுதல்களையும், கவலைகளையும் உள்ளடக்கிய அறிக்கைகளை மட்டும் வெளியிட்ட வண்ணம் உள்ளன.

நடை முறையில் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது மட்டுமல்ல மனித அவலங்களும்; அதிகரித்தபடியே உள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தான் அறிவித்த மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை இலக்குவைத்து அதன் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 3200ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 7450 ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

பொது மக்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுகளின் போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் கொத்துக் குண்டுகளும் பல நூறு கிலொ எடையுள்ள குண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்லையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தமது படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு பொய் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. வன்னியிலுள்ள ஒரே ஒரு தற்காலிக வைத்தியசாலையின் களஞ்சியப் பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல் நடாத்திவரும் ஸ்ரீலங்கா படைகள் வைத்தியர்களையும் படுகொலை செய்வதற்கு முயற்சிக்கின்றது. அந்த வைத்தியசாலைக்கு தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பாத காரணத்தினால் அதுவும் மூடப்பட்டுள்ளது.

இந் நிலை நீடிக்குமாக இருந்தால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். இது விடயத்தில் தொடர்ந்தும் அறிக்கைகளோடு மட்டும் தங்கியிருக்காது சர்வதேச சமூகம் உரிய அழுத்தங்களைப் பிரயோகித்து,

உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கும்,

மருந்துப் பொருட்கள் அனுப்பப்படுவதற்கும் வைத்தியசாலை மீண்டும் திறக்கப்படுவதற்கும்,

இடம் பெயர்ந்து வாழும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவும்,

உணவு மற்றும் உணவு, உடை உட்பட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக தேவையான அளவில் அனுப்பி வைப்பதற்கும்,

இடம் பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகள் மற்றும் மரங்கள்; மற்றும் தேவையான தற்காலிக கழிப்பறைகள் என்பவற்றை அனுப்பி வைப்பதற்கும், சமையல் பாத்திரங்களை அனுப்பி வைப்பதற்கும்,

சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் உடனடியாக அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அவசரமாக வேண்டுகின்றோம்.

செல்வராசா கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம்
 

ருபெல்லா தடுப்பூசித் தாக்கம் – 26 மாணவிகள் வைத்தியசாலையில்: ஒருவர் மரணம். காரணத்தை கண்டறிய உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அழைப்பு -ஏகாந்தி

vaccina.jpgஇலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் ருபெல்லா தடுப்பூசி வழங்கப்பட்டதில் சுகவீனமுற்ற பள்ளிக்கூட மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 26 மாணவிகள் மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரி மாணவிகளுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை நேற்றைய முன் தினம் இடம்பெற்றது. இதன் பின்னர் தடுப்பூசி போடப்பட்ட கல்லூரி மாணவிகள் சுமார் 27 பேர் நோய்வாய்ப்பட்டு மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்ளுள் 12 வயது பஷாலா ஹன்சலா என்ற மாணவி நேற்று இறந்துவிட்டார்.

கடந்த 1996 ஆண்டிலிருந்து இந்த ருபெல்லா தொற்று நோய்க்கிருமிக்கான தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், ஆனாலும் இப்போதுதான் இந்த துரதிஷ்டமான சம்பவம் முதன்முறையாக இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் விளக்கம்

nimal.jpgமாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் ருபெல்லா தடுப்பூசியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு உண்மை நிலையைக் கண்டறிவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம். பி. அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; மேற்படி சம்பவம் தொடர்பாக ஆராய நான்கு விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றை மாத்தறைக்கு அனுப்பியுள்ளதுடன் இப் பாதிப்பின் விஞ்ஞான ரீதியான பின்னணியைக் கண்டறிந்து தமக்கு துரித கதியில் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை ருபெல்லா தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் நோய் வாய்ப்பட்டிருப்பதுடன் ஒருவர் உயிரிழந்திருப்பது குறித்து தொடர்பாக மருத்துவ ரீதியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தைக் கேட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் இடம் பெற்றுள்ள மேற்படி சம்பவம் தொடர்பாக சபையில் கேள்வியெழுப்பிய அநுர குமார திசாநாயக்க எம். பி; மேற்படி சம்பவத்தில் மாணவியொருவர் பலியாகியுள்ளதுடன் 26 ற்கு மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  ருபெல்லா தடுப்பூசித் திட்டம் சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு தேசியத் திட்டமாகும். துரதிர்ஷ்டவசமாகவே நேற்று முன்தினம் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது விடயத்தில் சுகாதார அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. எனினும் இது விடயத்தில் பெற்றோர் பயப்படுமளவிற்கு தேவையற்ற சந்தேகங்களை எழுப்புவது முறையல்ல எனவும் தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க எம். பி. தமது கேள்வியின் போது; காலாவதி திகதியை அண்மித்த ஊசி மருந்துகளை உபயோகித்து அதனை முடிக்கும் நோக்கில் இச் செயற்பாடு இடம் பெற்றுள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர்,  அவ்வாறு எதுவும் இடம் பெறவில்லையெனவும் ருபெல்லா தடுப்பூசித் திட்டம் தொடர்ச்சியாக முறையாக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம் எனவும் கூறினார்.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை திங்களன்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சருக்கு கையளிப்போம் என்று மாத்தறைக்குச் சென்றுள்ள மருத்துவ குழுத் தலைவரான டாக்டர் பீரிஸ் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர் விளக்கம்

susil-premaja.jpgருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் ருபெல்லா ஊசி மருந்து மூலமான பாதிப்புகள் பற்றிய சர்ச்சை இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் கல்வியமைச்சர் என்ற வகையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதற்கு விளக்கமளித்தார். அமைச்சர் இதன் போது மேலும் தெரிவிக்கையில், ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் ஒரு தேசிய திட்டமாகும். இது மாகாண மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் மருத்துவ சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகிறது.

மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் இடம் பெற்ற மேற்படி துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து அத் திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன்,  இது பற்றிய பரிசோதனைகளும், விசாரணைகளும் இடம் பெற்று வருகின்றன. அதேவேளை, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக நேற்றுக் காலை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தொலைபேசி மூலம் எனக்கு விபரித்தார். இது விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கலை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

mahinda-rajapaksha.jpgருபெல்லா (ஜேர்மன் சின்னமுத்து) தடுப்பு மருந்து வழங்கலை உடனடியாக இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நேற்று பணிப்புரை விடுத்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கப்பட்ட மாணவியொருவர் உயிரிழந்திருப்பதுடன் 26 பேர் பாதிக்கப்பட்டு மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி பணிப்புரையை சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கினார். இதேநேரம் ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமையானதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இத்தடுப்பு மருந்து தொடர்பாக விசேட மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் இச்சம்பவம் தொடர்பாக விரிவான அடிப்படையில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சரையும், அதிகாரிகளையும் கேட்டிருக்கிறார்.

இதேநேரம், பாடசாலைகளில் மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கும் விதம் தொடர்பாக சுகாதார அமைச்சுடன் இணைந்து விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்துக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் மாணவியின் இறுதிக்கிரியை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், இறுதிக்கிரியைக்கு முன்னர் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேல் மாகாணத்தில் வட – கிழக்கை சேர்ந்தவர்களுக்கு இன்றும் நாளையும் மீண்டும் பொலிஸ் பதிவு

ranjeth-gunasekara.jpgகொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வடக்குஇ கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைவரும் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பொலிஸ் பதிவிற்குட்படுத்தப் படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து கடந்த 5 வருடங்களுக்குள் மேல் மாகாணத்திற்கு வந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்களே இவ்வாறு இரு தினங்களிலும் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த வருடம், வடக்கு பின்னர் கிழக்கு என இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மேல்மாகாணத்தின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தனித்தனியாக பொலிஸ் பதிவுக்குட்படுத்தப்பட்டிருந்ததுடன்இஅதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு என இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மீண்டும் ஒன்றாக பதிவுக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே இன்றும், நாளையும் மீண்டும் பொலிஸ் பதிவு நடைபெறவிருக்கிறது. இவ்விரு தினங்களிலும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் இந்த பொலிஸ் பதிவின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மேல் மாகாணத்திற்கு புதிதாக வந்து தங்கியிருப்பவர்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் உரிய ஆவணங்களுடன் வந்து பொலிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், ஏற்கனவே பதிவுக்குட்படுத்தப்பட்டவர்களுக்கும் மீள தங்களது பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டுமென்றும் ரஞ்சித் குணசேகர கூறினார்.

இதேநேரம், ஏற்கனவே மேல் மாகாணத்தில் பொலிஸாரால் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களிலேயே இம் முறையும் பதிவுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.