எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வெலிகந்தயில் புலிகள் சூடு: நான்கு சிவிலியன்கள் பலி

udaya_nanayakkara_brigediars.jpgவெலிகந்த, மெனிக்தெனிய பிரதேசத்திலுள்ள விவசாயிகளை இலக்குவைத்து புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 10.00 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது. அறுவடையில் ஈடுபட்டிருந்த அப்பாவி விவசாயிகளை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இராணுவப் பேச்சாளர் இங்கு மேலும் தகவல் தருகையில்:- வெலிகந்தை பூனானை வீதிக்கு தெற்காக அமைந்துள்ள மெனிக்தெனிய என்ற கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரங்களையும், கனரக வாகனங்களையும் பயன்படுத்தி அறுவடை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் திடீரென அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவிய இனந்தெரியாத ஆயுததாரிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் நான்கு விவசாயிகள் அந்த இடத்திலே உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் எல்லைப் புறங்களின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாமஸிகள் திடீர் முற்றுகை; தரக்குறைவான மருந்துகள் கண்டுபிடிப்பு

நாடெங் கிலுமுள்ள பாமஸிகளின் (மருந்தகங்களின்) தரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திடீர் சோதனைகளை நடாத்துவதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு தீர்மானித்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் கொழும்பு, கொஹுவல மற்றும் பொரல்லஸ்கமுவ பிரதேசங்களிலுள்ள 15 பாமஸிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

*  காலம் கடந்த மருந்துகள்

* பாவனையில் நீக்கப்பட்ட மருந்துகள்
* பதிவு செய்யப்படாத மருந்துகள்
* பெப். 30உடன் காலம் முடிவதாக குறிப்பிட்ட மருந்துகள்

இவற்றில் 14 பாமஸிகள், பாமஸிக்குரிய தரத்தைக் கொண்டிராதது இத்திடீர் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த பாமஸிகளில், காலம் கடந்த மருந்துகள், இந்நாட்டின் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட மருந்துகள், அந்நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகள், பெப்ரவரி 30ம் திகதியுடன் காலம் முடிவதாக குறிப்பிடப்பட்ட மருந்துகள் போன்றவாறானவை விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த 14 பாமஸிகளில் சில பாமஸியாகளே பதிவு செய்யப்படாதவை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அத்தோடு சில பாமஸிகளில் உணவுப் பொருட்களுடன் சேர்த்து மருந்துப் பொருட்களும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாமஸிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட விருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடெங்கிலுமுள்ள சகல பாமஸிகளிலும் திடீர் சோதனைகள் நடாத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை – நெசபி பிரபு

nasabi.jpgபுலிகள் எந்தவொரு பிரிவினரையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. குறிப்பாக அவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என பிரித்தானியாவின் சர்வகட்சி பாராளுமன்றக்குழுத் தலைவர் நெசபி பிரபு தெரிவித்துள்ளார்.

நெசபி பிரபு அவர்கள் இலங்கையின் நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது 10 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 பாதை திறக்கப்பட்டுள்ளது. புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை பலவந்தமாக தடுத்து அவர்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு சுமார் 2,50,000 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் பேர்வரையிலேயே அப்பிரதேசங்களில் இருப்பதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர்வரை புலிகளது கட்டுப்பாடுகளையும் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது வெளியேறியுள்ளனர்.

இந்த மக்களை விடுவிக்குமாறு ஐ.நா. சபை இணைத்தலைமை நாடுகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்றன விடுத்துவரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை எல்லாம் புலிகள் புறக்கணித்தே வந்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது புலிகள் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சனநாயக வழிமுறைக்கு திரும்ப வேண்டும் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப் படுவார்கள் எனத் தெரிவித்திருந்தார். எனினும் இந்தியத் தலைவர் ராஜீவ் காந்தி உட்பட பல கொலைகளுக்குக் காரணமான புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்ந்தும் தமது மூடக் கொள்கையிலேயே இருந்து வந்தார்.

இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாட்டை தனக்குக்கீழ் வைத்திருந்த கருணா அம்மான் அவ்வமைப்பிலிருந்து வெளியேறினார். ஈழம் என்பது சாத்தியப்படாததொன்று என்பதை அறிந்த கருணா தனது போராளிகள் சகிதம் அரசாங்கத்தரப்பிற்கு மாறினார். அத்தோடு புலிகளது நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் முடிவுக்கு வந்தது.

புலிகள் சரணடைய வேண்டும் அல்லது அழித்தொழிக்கப்பட வேண்டும். புலிகள் ஒருபோதும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வில்லை. அவர்கள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே அங்கு உண்மையான சமாதானம் ஏற்படும் என்பதோடு அப்பிரதேசம் சர்வதேச சமூகத்தின் உதவிகளோடு மீளக்கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிகரெட், சாராயத்தின் விலைகள் அதிகரிப்பு

இரண்டு வகையான சிகரெட்டுகள் மற்றும் சாராயத்தின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்தது.

கோல்ட்லீஃப் சிகரட் 2 ரூபாவாலும் பிரிஸ்டல் ஒரு ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள் ளன. சாராயம் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ரத்மலானையில் – அமைச்சர் பியசேன தகவல்

piyasena_gamage.jpgரத்ம லானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசேன கமகே தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பவியல் பல்கலைக் கழகம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

உயர்கல்வி வாய்ப்பை இழந்த நிலையில் பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் நாட்டின் இளம் சந்ததியினருக்கு முறையான பயிற்சிகளை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். நாடு பூராகவுமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் தற்போது 70 ஆயிரம் பேர் வரை பயில்கின்றனர். இந்த எண்ணிக்கையை ஒரு இலட்சமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ரத்மலானையிலுள்ள தேசிய கைத்தொழில் கற்கை நிறுவன வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராதனைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் கபில குணசேகரவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இலங்கையின் தொழில் பயிற்சிக் கல்வியை உயர்தரத்தில் பேனுவதற்கு தேசிய தொழில்சார் மதிப்பீட்டு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக சலக கற்கைநெறிகளும் சமகாலத்துக்குப் பொருத்தமானதாக வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மருதானை மற்றும் அம்பாறை உட்பட நாடு முழுவதிலுமுள்ள 9 தொழில்நுட்பக் கல்லூரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வன்னி மாவட்ட மாணவரை ஆற்றுப்படுத்த நடவடிக்கை

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆற்றுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உளப்பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் சீரான மனநிலையை மாணவர்கள் கொண்டிருப்பதை நோக்காகக்கொண்டு இந்த ஆற்றுப்படுத்தும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அண்மையில் இப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மூன்றாமாண்டு மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதை அடுத்து இம்மாணவர்களை ஆற்றுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.அதற்கு முதல் காவலாளியாக பணியாற்றும் ஒருவரும் அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இறுதியாக தற்கொலை செய்துகொண்ட மாணவி தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டு தற்கொலைசெய்து கொண்டதாகவும் இவரது பெயர் ரவீந்திரன் சுதர்சினி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கே மோதல் நடைபெறும் பகுதிகளில் வாழும் தமது உறவுகளின் நிலை குறித்து சரியான தகவல்களை பெறமுடியாத நிலையில் மனப்பாதிப்புக்குள்ளானமை காரணமாக இவ்வாறான தற்கொலை முயற்சிக்கு மாணவர்கள் தள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளாகும் இம்மாணவர்களை கவனிப்பதற்கும் தேவையான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்மென வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின் விபரங்களை திரட்டுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா அதிகாரிகளைக் கேட்டுகொண்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாணத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்து கல்விகற்கும் 152 மாணவர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி கவனத்திற்குட்படுத்த வேண்டுமென கிழக்குப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் என். பத்மராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரும்பாலான மாணவர்கள் யாழ்ப்பாணக்குடா நாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்களிடம் எந்தப்பாதிப்பும் வெளிப்படவில்லை. எனினும் வன்னியின் நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவர்கள் உளப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.

இதேவேளை, கலைப்பீட பரீட்சைகள் தவிர ஏனைய பரீட்சைகள் ஒத்திவைக்கப்படமாட்டாது எனவும் இவ்வாரத்தில் பரீட்சைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாநாடுகள் முல்லை அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? : த ஜெயபாலன்

Wanni_Tragedy1.

இந்தத் தலைப்பை இட்டுக் கொண்டு இருக்கையில் வந்த தொலைபேசி அழைப்பு, எனது மனைவியின் மைத்துனியும் அவரது மூன்று குழந்தைகளும் நேற்று (26 மார்ச்) நடந்த செல்வீச்சில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்தனர். புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே இடம்பெற்ற இத்தாக்குதலிலேயே இத்தாயும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். தனது மனைவியையும் குழந்தைகளையும் பறிகொடுத்த இளம் தந்தை விடுதலைப் புலிகளின் ஒரு முன்னாள் போராளி. பதின்மூன்று வயதில் இயக்கத்தில் இணைந்த ஒரு குழந்தைப் போராளி. இன்று உடல்முழுவதும் சன்னங்களுடன் சிகிச்சை பெறவும் வசதியின்றி தெற்காசிய நாடொன்றில் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருப்பது மட்டை போட்டல்ல புலத்து மக்கள் பகட்டுக்காகச் சொல்லும் தாயக விடுதலைக்கு உதவியாக இருந்தமைக்காக.

அவர் தனது மனைவியையும் பிள்ளைகளையும் கண்டு மூன்று வருடங்கள் இருக்கும். இளம் குடும்பம். அவர் புலத்தில் உள்ள உறவுகளுடன் கதறி அழுகிறார். இங்குள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் வார்த்தைகள் இல்லை. அவரை ஐரோப்பாவிற்கு எடுத்துவிட முடியவில்லையே என்ற குற்ற உணர்வும் நெஞ்சை நெருடியது.

காயப்பட்டதனால் போராட இயலாத நிலையில், தொழில் வாய்ப்புகளும் இல்லாத நிலையில், புலிகளுக்கு வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே அவருடைய குடும்பம் தங்கி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அவர் வெளிநாடு வர முயற்சித்து இருந்தார். ஆனால் அவ்வளவு தொகையை அவரால் திரட்டிக் கொள்ள முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால் அவரது மனைவி பிள்ளைகள் வன்னியில் இருந்திருக்க மாட்டார்கள். இந்த யுத்தத்தில் மடிந்திருக்க மாட்டார்கள்.

தான் இளவயதிலேயே இயக்கத்தில் சேர்ந்து கல்வியைப் பாழடித்ததால் தன்னுடைய மகனை படிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த இளம் குடும்பத்தினரிடம் இருந்தது. ஆர்வம் மட்டுமல்ல அவ்வளவு கஸ்டத்திலும் தாயார் தன் மூத்த மகனை புலமைப் பரிசில் பரீட்சையிலும் சித்தி பெற வைத்தார். இது நடந்தது சில மாதங்களுக்கு முன். இன்று அவர்கள் நினைவுகளில் மட்டுமே உள்ளனர்.

இது விதியல்ல. சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகளின் சதி. அதில் புலத்து தமிழனுக்கும் பங்கு இருக்கின்றது. இப்படி வன்னி மண்ணில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஒரு உருக்கமான சொந்தக் கதையுண்டு. சொல்வதற்கு நாதியில்லை. அதனால் புலத்த தமிழன் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகின்றான்.

ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை தனது உயிராகவே கருதுகின்றனர். தாய் தந்தையைப் பொறுத்தவரை குழந்தையின் இழப்பு என்பது அவரகளது மரணம் வரை தொடரும் சோகம். ஆனால் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படுகின்ற வலியின் கொடுமையில் ‘இந்தப் பிள்ளை எனக்கு வேண்டாம்’, ‘இந்தப் பிள்ளையைக் கொல்லுங்கள்’ என்று தாய் கதறுவாள். அவர்களுக்கு உயிருக்கு உத்தரவாதமும் குழந்தை பிறந்ததும் ஏற்படப் போகும் பெருமகிழ்ச்சியும் இருந்தாலும் வலியின் கொடுமை அவர்களை அவ்வாறு சொல்ல வைக்கிறது.

ஆனால் இன்று வன்னி மக்கள் அனுபவிப்பதோ மரணவலி. அடுத்த நிமிடம் உயிருடன் இருப்போமோ என்கிற பயம். அந்த மரண பயத்தில் தப்பி ஓடினாலும் கலைத்து வந்து சுட்டுத் தள்ளுகிறார்கள் பிடித்துவந்து பச்சை மட்டையால் அடிக்கின்றனர் புலிகள். ஒரு புறம் இலங்கை அரச படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகின்றனர். மறுபுறம் புலிகள் தாக்குதல் நடத்தப்படும் பகுதிகளில் இருந்து வன்னி மக்களை வெளியெறவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். புலிகளதும் புலத்து தமிழர்களதும் தாயக வேள்விக்கு வளர்க்கப்பட்ட விலங்குகள் போல் ஆகிவிட்டனர் வன்னி மக்கள்.

2.

Sambandan R TNA MPஇந்த நிலையை வேதனையை யாரிடம் சொல்ல முடியும். யாருக்கு எடுத்துரைக்க முடியும். ‘விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா’ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, ”அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும்? அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்” எனப் பதிலளிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர் சம்பந்தன். ஆர் சம்பந்தன் சொல்வது போல் அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தவர்கள் அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை என்றே வைத்துக் கொண்டால் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற இந்த 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கே? அவர்களது குடும்பங்கள் எங்கே? அவர்கள் மட்டும் ஏன் தங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறினார்கள்? தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் மிக மோசமான அவலத்தை எதிர்கொண்டுள்ள போது அந்த மக்களை மரணப்பொறியில் விட்டுவிட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் ஐரோப்பாவின் நகரங்களிலும் இருந்து கொண்டு ‘வன்னி தமிழர்களின் பூர்வீக மண்’, ‘ஏன் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று கேட்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த அரசியல் அருகதையும் கிடையாது. அந்த ‘மக்களை வெளியேற்ற வேண்டாம்’, ‘வெளியேற வேண்டாம்’ என்று சொல்வதற்கு புலத்துத் தமிழனுக்கும் எந்த அருகதையும் கிடையாது.

‘தெற்கிற்குச் சவப்பெட்டிகள் வரும்’ என்று முட்டாள்தனமாகப் பாராளுமன்றத்தில் பேசுவதும், பொழுது போக்காக பொங்கு தமிழ் வைத்து போர் முழக்கம் செய்வதும், இன்று தமிழ் மக்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. புலிகளின் அரசியல் வங்குரோத்துக்கு துணைபோன இவர்களின் அரசியலை என்னவென்பது.

‘தமிழ் சமூகம் படித்த சமூகம். லண்டனிலலும் ஆயிரக் கணக்கான டொக்டர்கள் என்ஜினியர்கள் எக்கவுண்டன்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு தங்கள் சேவையை செய்கிறார்கள்.’ என்று மேரிக் கொல்வினை அழைத்து நடத்திய சந்திப்பில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் சென் கந்தையா குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது. உண்மை. படித்தவர்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள். லண்டனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் வந்து தங்கள் சேவையைச் செய்கிறார்கள். தங்கள் பெருந்தன்மையைக் காட்ட ‘வணங்கா மண்’ கப்பல் விடுகிறார்கள். ‘வன்னி மாடுகள்’ படிக்கவில்லை. வசதியும் இல்லை. புலியைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறார்கள்.

மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வருகிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிகாந்தா, ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம் ஆகியோரை தேசம்நெற் க்காக நேர்கண்ட போது கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒன்று ‘நீங்கள் ஏன் இந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையை வைத்துள்ளீர்கள்?’ என்பது. அதற்கு அவர்கள் மூவருமே கிட்டதத்தட்ட ஒரே பதிலையே தெரிவித்தனர். ‘நாங்கள் இந்த உறுப்புரிமையை எடுக்காவிட்டால் அரச ஆதரவாளர்கள் தமிழ் விரோத சக்திகள் அதில் உட்கார்ந்து தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளைச் செய்வார்கள்.’ அப்படியானால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் மக்களுக்காக இதுவரை சாதித்தது என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வை ஏன் முன்வைக்கவில்லை? ‘புலிகள் தமிழ் மக்களுடைய ஒரு ஆயுத அமைப்பு’ என்று எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களுடைய அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் முன்னெடுக்கவில்லை. ‘விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்’, என்று சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்தத் தவறிற்கு வன்னி மக்கள் கொடுத்துக் கொண்டுள்ள விலை மிக மிக அதிகம். அது மட்டுமல்ல தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட வரலாற்றுத் தவறுகள் என்று பட்டியல் இட்டால் அதனைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடலாம். அந்தப் பட்டியலை தேசம்நெற்றின் கருத்தாளர்களிடமே விட்டுவிடுகிறேன்.

முல்லைத் தீவில் நடைபெறும் மனித அவலத்தில் – இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் அரசு – புலிகள் என்ற இரண்டு தரப்புகள் சம்பந்தப்பட்டு உள்ளன. இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த இரு தரப்புகளுமே உடன்பாட்டுக்கு வரவேண்டும். அதற்கு இந்த இரு தரப்புகளுடனும் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவது அவசியம். நாங்கள் ஒரு தரப்பினருடன் மட்டுமே பேசுவோம் மற்றயைவர்களைத் தீண்டமாட்டோம் மற்றையவர்களுடன் பேசமாட்டோம் என்று அடம்பிடித்தால் எப்பொதுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இதுவே யதார்த்தம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று (26 மார்ச்)  இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்து இருந்தார். ‘வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது’ எனவும் குறிப்பிட்டு ஆர் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். வன்னிப் படை நடவடிக்கைகள் பெரும்பாலும் இப்பொது ஒரு சில 10 கிரோமீற்றருக்குள்ளேயே முடக்கப்பட்டு உள்ளது. இன்று தினம் தினம் மக்கள் கொல்லப்படுகின்றனர்.  யுத்தத்தை நடத்துகின்ற அரச தரப்பை சந்தித்து தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்துவதை விட்டுவிட்டு ‘படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும்வரை சந்திப்பை மேற்கொள்ள மாட்டோம்’ என்று ஜனாதிபதிக்கு கடிதம் போடுவது எவ்வகையில் வன்னி மக்களின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நீங்கள் கேட்பதை மகிந்த அரசு மட்டுமல்ல எந்த அரசும் தந்துவிடாது. அதற்காகப் தொடர்ந்து அவர்களுடன் போராட வேண்டும். ‘நாங்கள் உங்களுடன் டூ. உங்களுடன் பேசமாட்டோம்’ என்று கோபித்துக் கொண்டிருக்க இது என்ன எங்கள் வீட்டு குழந்தைகளின் சண்டையா? மூத்த அரசியல் சாணக்கியன் என்று சொல்லப்படும் ஆர் சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தால் என்ன பயன்?

யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருபவர்கள் சரியான முறையில் கவனிக்கப்படுகிறார்களா என்பதை வன்னி முகாம்களில் நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பி க்கள் மேற்பார்வை செய்திருக்க வேண்டும். பாராளுமன்றம் சென்று மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும்படி கோரி இருக்க வேண்டும். அப்படி கேட்பதற்கு முடியாவிட்டால் ‘எங்களை வன்னிக்கு அனுப்பி வையுங்கள்! எங்கள் மக்களோடு இருக்க விடுங்கள்!’ என்று பாராளுமன்றத்தில் போராடி இருக்க வேண்டும். அதற்கு அரசு சம்மதிக்கவில்லை என்றால் ஒரே நேரத்தில் தங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை திறந்து சர்வதேசத்தின் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுக்கு உங்கள் பாராளுமன்ற பதவியை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. இன்று ஒட்டுமொத்த வன்னி மக்களும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களுக்கு கொள்ளி வைப்பதற்காக நீங்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினீர்கள். உங்கள் எம்பி பதவிகளை எதற்கு இன்னமும் காவிக்கொண்டு திரிகிறீர்கள்.

3. 

இதற்கிடையே லண்டன் கொழும்பு பெங்களுர் என்று இலங்கையின் நிலவரம் பற்றிய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பற்றி எரிகின்ற ஒரு பிரச்சினை பற்றி தமிழர்கள் கலந்துகொள்கிற மாநாடு. ஆனால் மூன்று மாநாடுமே பெரும்பாலும் இரகசியமான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சாரார் மற்றைய மாநாட்டை குழப்பி விடுவார்கள் என்ற அச்சம் இரு தரப்பிலுமே காணப்படுகிறது. இது தமிழ் மக்கள் தங்களுடைய மிக முக்கிய அரசியல் விடயம் தொடர்பாக வெளிப்படையான விவாதம் ஒன்றை மேற்கொள்ள முடியாத சூழல் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

அறுபது நாட்களுக்குள் 3000 உயிர்கள் இழக்கப்பட்ட போதும் அந்த மக்களின் அவலங்களை அரசியலாக்குகின்ற மூன்றாம்தர அரசியலே நடைபெறுகின்றது. அவல ஓலங்களை ஐபிசி வானலைகளில் பரவவிட்டும், மரணத்தின் அவலத்தை ஜி ரிவியில் காட்சிப்படுத்தியும், தங்கள் புலி அரசியலை விற்கும் இவர்கள், ‘காணத் தவறாதீர்கள் சூரியாவின் ‘அயன்” என்று சொல்லவும் தவறுவதில்லை. மாறாக புலிப் புலம்பல் புலம்பி, அரசுக்கு வக்காலத்து வாங்கி, தங்கள் பழைய இயக்க சாகசங்களை தூசிதட்டி றீல்விடும் இணையங்களுக்கும் குறைவில்லை.

இந்த துருவ அரசியலில் இதுவரை தமிழ் மக்களின் அரசியல் நலன்கள் பந்தாடப்பட்டது. ஆனால் இன்று அதற்கும் மேல் சென்று தமிழ் மக்களின் – வன்னி மக்களின் தலைகளே பந்தாடப்படுகிறது.

இவ்வளவு அவலங்களுக்குப் பின்னரும் ஒரு காத்திரமான அரசியல் விவாதத்தை வெளிப்படையாக நடத்துவதற்கு முடியாத சூழல் இருக்கின்றது என்பது வேதனையான விடயம். புலிசார்பான அமைப்புகள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தால், புலி எதிர்ப்புக் குழுக்களும், அரச ஆதரவு சக்திகளும் அதனை குழப்ப விளைகின்றனர். அதேபோல் புலிக்கு ஆதரவற்றவர்கள் மாநாடுகளை போராட்டங்களை ஏற்பாடு செய்தால் புலி ஆதரவு சக்திகள் அவற்றைக் குழப்புகின்றனர். இதன் எதிரொலியே லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் இரகசியமாக நடத்தப்படுவதற்குக் காரணம்.

லண்டன் மாநாடு நேற்று (26 மார்ச்) புலிகளுக்கு சார்பான அரசியல் நிலைப்பாட்டையுடைய பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் நடக்க இருந்து பின்னர் சிங்கப்பூருக்கும் அதன் பின்னர் கொழும்பிற்கும் மாற்றப்பட்ட மாநாடு இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் இம்மாத இறுதிப் பகுதியில் நடைபெற இருக்கின்றது. பெங்களுர் மாநாடு இந்திய அரசில் தங்கியுள்ள ஈஎன்டிஎல்எப் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாடு ஏப்ரல் முற்பகுதியில் நடக்க இருக்கிறது.

இந்த மூன்று மாநாடுகளுமே ஒரே விடயத்தைப் பற்றியே பேசுகின்றன. அதாவது இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை. அவர்களின் எதிர்காலம். மூன்று மாநாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் முக்கிய பங்கேற்று உள்ளனர். வட அமெரிக்கா ஐரோப்பா அவுஸ்திரெலியாவில் இருந்து வேறு வேறு புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் பங்கேற்கின்றனர்.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மட்டுமல்ல இந்த மாநாடுகளும் திரைமறைவிலேயே நடத்தப்படுகிறது. ‘ஏன் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றது, என்ன விடயங்கள் விவாதத்திற்கு எடுக்கப்பட இருக்கின்றது’ என்பது பற்றிய விடயங்களை முன்னரே வெளிப்படுத்தி இருந்தால் அது பற்றிய விவாதங்களை மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, மக்களுடைய கருத்துக்களையும் பெற்றிருக்க முடியும். மக்களையும் இன்றைய அரசியலுடன் ஈடுபடுத்தி இருக்க முடியும். அதுவே ஜனநாயகச் செயன்முறையாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் தெரிவு செய்யப்பட்ட சிலர் (மக்களால் அல்ல), கூடி ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதனை வெளியிடுவது, அதற்கு மக்கள் ஆதரவைக் கோருவது ஜனநாயக நடைமுறையாகாது. இந்த மூன்று மாநாடுகளின் ஏற்பாட்டாளர்களுமே அடிப்படையில் மக்களை மிகத் தொலைவிலே வைத்துக்கொண்டு மக்கள் பற்றிய விவாதத்தை நடத்துகின்றனர்.

இந்த மாநாடுகள் நடத்தப்படுவதும் விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதும் அவசியம். ஆனால் இந்த மாநாடுகளை அதன் ஏற்பாட்டாளர்கள் தங்கள் அரசியல் நலன்சார்ந்து கையில் எடுக்கும் அபாயம் உள்ளது. அது தொடர்பான விழிப்புணர்வு அதில் கலந்து கொள்பவர்களிடம் இருப்பது அவசியம். அவற்றிற்கு அப்பால் இவ்வாறான மாநாடுகள் உடனடித் தீர்வை ஏற்படுத்தாத போதும் தீர்வை ஏற்படுத்துவதற்கான விவாதிப்பதற்கான அரசியல் சூழலை உருவாக்க இவை அவசியம்.

லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் வேறு வேறு நாடுகளில் மட்டுமல்ல வேறு வேறு அரசியல் பின்புலத்திலும் நடைபெறுகின்றன. இந்த மாநாடுகளின் ஏற்பாட்டாளர்கள், அதாவது பின்னணியில் உள்ளவர்கள், அவர்களே உண்மையான அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள். இன்றைய அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. அவர்களுடன் தொடர்ந்தும் மக்கள் சார்ந்து உரையாடுவதும் விவாதிப்பதும் தவிர்க்க முடியாதது.

30 வருடமாக ஆயுதத்தை நம்பிய தலைமை இன்று மரண ஓலத்தையே தனது அரசியல் ஆயுதமாக்கிக் கொண்டு உள்ளது. ஆனால் 30 வருடம் உறுதியான அரசியலுடன் விவாதித்து இருந்தால் ஏனைய சிறுபான்மை மக்களை மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது ஆதரவையும் தமிழர் போராட்டம் பெற்றிருக்கும்.

இந்திய அமைதிப்படையை வெளியேற்ற முற்பட்ட போது பிரேமதாசாவே பிரபாகரனை தம்பி என்று அழைத்தது மட்டுமல்ல மாவீரர் உரையும் இலங்கை முழுவதும் ஒலிபரப்பப்பட்டது. அதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சுனாமியைத் தொடர்ந்து தமிழ் பகுதிகளுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர்கள் எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள சிங்கள மக்கள். அன்றைய காலத்தில் தமிழ் – சிங்கள – முஸ்லீம் மக்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் ஒத்தழைத்தனர். ஆனால் திட்டமிட்ட இனவாதப் பிரச்சாரங்கள் அம்மக்கள் இணைந்துவிடமால் தடுத்தது.

இந்த மாநாடுகளால் முல்லை அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனாலும் இவ்வாறான மாநாடுகள் விவாதங்கள் அதன் மீதான விமர்சனங்கள் மட்டுமே இலங்கையில் உள்ள இனமுரன்பாட்டை தீர்ப்பதற்கான அரசியல் சூழலை ஏற்படுத்தும். சகல சமூகங்களும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். ஆயுதங்களிலும் பார்க்க இந்த மாநாடுகளும் விவாதங்களும் அவற்றின் மீதான விமர்சனங்களும் ஆரோக்கியமானதே.

வன்னியிலிருந்து ஒரு வாரத்தில் ஒன்பதாயிரம் பேர் வருகை

_mullai_1.jpg
வன்னியிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் சுமார் ஒன்பதினாயிரம் பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் செட்டிகுளம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தற்போது வரும் மக்கள் எதுவித மாற்றும் உடைகளுமின்றி வருகின்றார்கள். அவர்கள் மாற்றுவதற்கு உடைகளும் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீண்ட நாட்களாக போசாக்கு உணவு உண்ணாதபடியால் சோர்வான நிலையில் காயங்களுடனும் பயங்கர கோலத்துடனும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இவர்கள் வருவதாக இராணுவ தரப்பினர் தெரிவித்தனர்.

தினமும் குறைந்தது ஆயிரம் பொது மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி : பொதுக் குழுவில் முடிவு

26-ramsoss.jpgமக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று இன்று நடந்த பா.ம.க. பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படவுள்ளது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதையடுத்து பாமக இன்று இந்த முடிவை அறிவித்தது.

மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படை வீரர் தற்கொலை

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் வீதிக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படைச் சிப்பாயொருவர் இன்று மாலை தனக்குத் தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ளார்

ஊறணி விசேட அதிரடிப் படை முகாமில் சேவையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் யு.எஸ்.பி. திசாநாயக்கா ( வயது 25) என்பவரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தவர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.