எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

காதல் தகராறு பெண் பொலிஸை சுட்ட கான்ஸ்டபிள் சுட்டுக்கொலை

pisto.jpgகொழும்பு,  நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய கான்ஸ்டபிள் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;

பொலிஸ் ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலுள்ள பெண்கள் வார்ட்டினுள் ரி56 ரக துப்பாக்கியுடன் நுழைந்த கான்ஸ்டபிள் ஒருவர், முதலில் அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ஆயுதத்துடன் வந்த இவர் தன்னை இலக்கு வைப்பதை அவதானித்த அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் அவர் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கிடையில் மூன்றாவது மாடி ஜன்னல் ஊடாக 2 ஆவது மாடிக்கு குதித்துள்ளார்.

இதேநேரம், அந்த கான்ஸ்டபிள் அங்கு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதனால், அந்த பெண் கான்ஸ்டபிள் கையில் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, அவ்விடத்திற்கு விஷேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த அதிரடிப்படையினர் 3 ஆவது மாடியிலிருந்த வார்ட்டினுள் நுழைந்து அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அவரை அவ்விடத்திலேயே கொன்றுள்ளனர்.

ஆஸ்பத்திரியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே, வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிளுடனான காதல் தகராறால் இவ்வாறு நடந்துகொண்டதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் கான்ஸ்டபிள் உடனடியாக அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.

பிரதியமைச்சர் பாயிஸை எம்.பி. பதவியிலிருந்து நீக்க நேற்று இடைக்கால தடை

கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தார்.

பிரதியமைச்சர் பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அல்லவென்றும், அவர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி மூலம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறும் கோரியே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இவரை நீக்குவதற்கு எதிரான தடையுத்தரவு எதிர்வரும் 8ம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க. மற்றும் மு.கா. ஆகிய கட்சிகளுக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது : எஸ்.பி. திசாநாயக்க

spdesanayaka.jpg“இன்று உலகில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடியினால் பல நாடுகள் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றன. நம் நாடு இன்று 3.5 சதவீத வளர்ச்சியையே கண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 5 வருட காலத்தில், 2005 ஆம் வருடம் 4.4 சதவீத வளர்ச்சியும், 2006 இல் 4.5 சதவீத வளர்ச்சியும், 2009இல் 4.9 சதவீத வளர்ச்சியும், 2008 ஆம் ஆண்டு 4.1 சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தது. 2009இல் பொருளாதார வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.”

ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது :

“சி. டி. ஸ்மித் எனப்படும் கொழும்பு பங்குச்சந்தை தரகர்கள் அமைப்பின் அறிக்கையின் பிரகாரம் கொழும்பு பங்கு சந்தையில் பதிவாகியிருந்த கம்பனிகளின் அதாவது வங்கிகள், வர்த்தக தாபனங்களின் இலாபம் 61 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அதேவேளை 2007 ஆம் ஆண்டு 3341 டொலர்களாக காணப்பட்ட ஏற்றுமதிக்கான வருமானம், இன்று 1000 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.

இலங்கைக்கு இரண்டாவதாக இலாபத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் பெறப்படும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளது. 2006 தொடக்கம் 2008 வரையில் 16 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்தனர். அவர்களுள் 3 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.

2502 அமெரிக்க டொலர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் பெறப்பட்ட அந்நிய செலாவணியாக உள்ளது. அதாவது மத்திய நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களின் இலாபமாக இருந்தது . மலேசியா , தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி 20 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

2002- 2004 வரையான, அதாவது ஐ.தே.கவின் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்கம் 4.4 சதவீதமாகவே காணப்பட்டது. அதன் பிறகு தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பல நாணயங்கள் அச்சிடப்பட்டன. எனவே பணத்தின் சுற்றோட விகிதம் அதிகரித்து, பணத்தின் பெறுமதி குறைந்தது.

பணவீக்க வீதத்தைக் கட்டுப்படுத்தி விட்டதாக அரசு கூறுகிறது. உலகில் பல பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. உலக நாடுகளின் பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது எமது நாட்டின் பணவீக்கம் இன்னும் குறைவடையவில்லை. பணவீக்கம் குறைவடையும் போது ஏற்படும் இலாபத்தை அரசு மக்களுக்கு வழங்கவில்லை.

உலகின் பொருளாதார நெருக்கடி இலங்கையைப் பாதிக்கவில்லை எனக் கூறப்பட்டாலும் சிலவற்றில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான நுரைச்சோலை அனல் மின் நிலையம், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி, கொத்மலை நீர் தேக்கத்திட்டம் போன்றவற்றின் செயற்பாடுகள் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளன.

விவசாயத்துறை, சுற்றுலாத்துறை போன்றவை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன. அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப சில காலங்கள் செல்லலாம். அரசு தேர்தலை நடத்தவும் மற்றும் பல அரச தேவைகளுக்காகவும் வங்கிகளிடமிருந்து அதிகளவிலான கடன்களைப் பெற்றுள்ளது . இத்தகைய செயற்பாட்டினை அரசு குறைத்துக் கொள்ள வேண்டும். வங்கி வட்டி வீதங்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசு மக்களுக்கு உண்மை நிலையை அறியத் தர வேண்டும். நாட்டில் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பொருளியல் ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்களினூடாக மக்களுக்கு உண்மைத் தன்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். 

இந்தோனேஷிய அணைக்கட்டு உடைந்ததில் 58 பேர் பலி

indo.jpg
இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவின் அருகே அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் குறைந்தது ஐம்பத்து எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போயுள்ள டஜன் கணக்கானவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடிவருகிறார்கள்.

டாங்கெரங் வட்டகையில் நகரவாசிகள் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் வந்த வெள்ளம் கார்களை அடித்துச் சென்றதோடு பள்ளங்களை நிறைத்தது. நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் சடலங்களும் குப்பைகூளங்களும் மிதக்க ரப்பர் படகுகளில் மீட்புப் பணியாளர்கள் பயணிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த இந்த களி மண் அணைக்கட்டு கடும் மழையை அடுத்து உடைந்திருந்தது.

புலிகள் நடமாட்டம் குறித்து உன்னிப்பாக அவதானிக்க தாய்லாந்திடம் இலங்கை கோரிக்கை.

thai.jpgவிடுதலைப் புலிகள் கொழும்புக்கு எதிராக தாய்லாந்தை பயன்படுத்துவதனை தடுப்பதற்கு அவர்களது நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு இலங்கை அந்நாட்டிடம் கோரியுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரான ஹஸிட் பிரேமயாவை நேற்று வியாழக்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்த போதே இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார்

நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு

ipl-images.jpgதென் ஆப்ரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ள நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இருபது-20 கிரிக்கெட் தொடரின் துவக்கப் போட்டி ஏப்ரல் 18ஆம் தேதி துவங்கி மே 24ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்கப் போட்டி கேப்டவுனிலும், இறுதிப்போட்டி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடக்கிறது. அரையிறுதிப் போட்டிகள் மே 22ஆம் தேதி பிரிடோரியாவிலும், மே 23ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடத்தப்பட உள்ளன.

இந்தாண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 59 போட்டிகள் நடக்கும் என்றும், இவை கேப்டவுன், ஜோஹன்னஸ்பெர்க், டர்பன், பிரிடோரியா, ஈஸ்ட் லண்டன், கிம்பெர்லி, ப்லோம்ஃப்ன்டெய்ன், போர்ட் எலிசபெத் ஆகிய நகரங்கள் நடத்தப்படும் என்றும் ஐ.பி.எல் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் டர்பனின் கிங்ஸ்மெய்ட் மைதானத்தில் 16 போட்டிகளும், பிரிடோரியாவின் செஞ்சுரியன் மைதானத்தில் 12 போட்டிகளும், ஜோஹன்ன்ஸ்பர்க்கின் வான்டெரர்ஸ் மைதானம், கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் தலா 8 போட்டிகளும், போர்ட் எலிசபெத் நகரின் செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் 7 போட்டிகளும், ஈஸ்ட் லண்டனில் 4 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

இரண்டு புலிகள் ஆயுதங்களுடன் கைது.

pisto.jpgதிருமலை உப்புவெளி பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இரு புலிச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும் நான்கு கிரனேட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் திருமலைப் பிரதேசத்தில் ஊடுருவி இருந்து ஆங்காங்கே தாக்குதல் மேற்கொள்ளும் குழுவொன்றிற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இல‌ங்கை‌க்கு இராணுவ உத‌வி வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை: இ‌ந்‌திய கட‌ற்படை தளப‌தி சுரேஷ் மேத்தா

sures.bmp
இலங்கைக்கு இ‌‌ந்‌திய அரசா‌ல் இராணுவ உதவி வழங்கப்படவில்லை என்று‌ம் இதுபோ‌ன்ற கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ஆதாரம‌‌ற்றது எ‌ன்று‌ம் இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா கூறினார். செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கி இருப்பதாக தமிழ்நாட்டில் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி எந்த உதவியும் வழங்கவில்லை. இது போன்ற குற்றச்சா‌ற்றுகள் ஆதாரமற்றது எ‌ன்றா‌ர்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று விவாதம்?

un-logo.jpgஇலங்கை யில் நடைபெற்று வரும் போரில், பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொது மக்கள் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றனர். இது குறித்து ஐ.நா.பாதுகாப்பு சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) விவாதம் நடைபெறுகிறது.

ஐ.நா., அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் இதர பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் இந்த விவாதத்துக்கு சபையின் மனித உரிமைகள் விவகார தலைவர் ஜோன் ஹோம்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த விவாதத்துக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் இராணுவத்துக்கும், அந்த நாடு தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ள விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் ஒரு உள்நாட்டுப் போர். இந்த போரினால் உலக நாடுகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஆகவே இது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கத் தேவை இல்லை என்று சீனாவும், ரஷ்யாவும் தெரிவித்ததாக அந்த அதிகாரிகள் கூறினார்கள்.

இலங்கையில் வேலையின்றி தவிக்கும் 49 ஆயிரம் தமிழ் விதவைகள்: ஐ.நா. கவலை

இலங்கையில் சுமார் 49 ஆயிரம் தமிழ் விதவைகள் வேலை ஏதும் இன்றி வாழ்க்கை நடத்த முடியாமல் பரிதவித்து வருவதாகவும், இதில் 35 ஆயிரம் பேர் 30-க்கும் குறைவான வயதை உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இத்தகவலை ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.