யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இது குறித்துத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளரும், சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அத்துடன், வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ரெலோ (சிறி அணி) மற்றும் ஈரோஸ் ஆகியனவும் போட்டியிடவுள்ளன. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஐக்கிய, யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலும், வவுனியா நகரசபைத் தேர்தலில் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடவுள்ளது. இக்கட்சி தனது வேட்புமனுக்களை இறுதிநாளான நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளது.
அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்றுத் திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்த நிலையில், வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஐக்கிய தேசியக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளது.