எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கோரம் இன்றி சபை ஒத்திவைப்பு

26parliament.jpgகோரம் இன்மையால் இன்று பிற்பகல் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுக்கான குறை மதிப்பீட்டு விவாதம் சபையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை சபையில் போதிய கோரம் இல்லை என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை சபைக்கு அழைக்கும் மணி ஒலிக்கப்பட்டது.

02:05 மணி முதல் 02:10 மணிவiரை மணி ஒலித்தபோதும் மொத்தம் 8 உறுப்பினர்களே அங்கு ஒன்று கூடினர். சபையை தொடர்ந்து நடத்துவதற்கு குறைந்தது 21 உறுப்பினர்கள் தேவை என்பதால் கோரமின்றி சபை ஒத்திவைக்கப்படுவதாக பிரதி நிருவாகத் தலைவர் அறிவித்தார்.

கிழக்கு மாகாணக் கட்டடங்களில் புலிகளின் பெயர்கள் : உடன் அகற்றுமாறு உத்தரவு

கிழக்கு மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பெயர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யூ.கே. வீரவர்தனா சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த உத்தரவை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்,

“இதனை அமுல்படுத்த தவறும் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் தெரிவித்துள்ளார். ‘பாடசாலை மற்றும் கட்டிடங்களுக்கு தனி நபர் பெயர் சூட்டப்படல்’என்னும் தலைப்பிலான அந்த சுற்றறிக்கையில்,

“கடந்த காலங்களில் அரசாங்க பாடசாலைக் கட்டிடங்களுக்கு பயங்கரவாத அமைப்பின் பிரதேச தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை அண்மையில் மூதூர் மற்றும் சம்பூர் பிரதேச பாடசாலைகளுக்கு சென்றிருந்த போது அவதானிக்க முடிந்தது.

பாடசாலைகள் ஆரம்பத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டதோ அந்த பெயரே அமுல் படுத்தப்பட வேண்டும்.பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் ஏற்கனவே இருந்த பெயர்,வலயம் மற்றும் தற்போதைய பெயர் ஆகிய விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஒரு பாடசாலைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்துடனும் மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடனும் எனது அனுமதிக்காக முன் வைக்கப்பட வேண்டும்.

பிரதேச பயங்கரவாத தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும்.வலய கல்விப் பணிப்பாளர்கள் மேற்பார்வை செய்து இதனை உறுதிப்படுத்த வேண்டும்.இந்தத் தவறை திருத்தம் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் எனக்கு அறிவிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையால் உலகையே ஆட்டிப் படைத்த மைக்கல் ஜாக்ஸன் இன்று காலமானார்!

25michael_jackson.jpg
பிரபல பொப் இசை நட்சத்திரமான மைக்கேல் ஜக்சன் லொஸ் ஏஞ்சலில் இன்று தனது 50வது வயதில் காலமானார்.

ஜக்சனின் சுவாசம் நிறுத்தப்பட்டவிட்டதாக வியாழன் நள்ளிரவு அவசர மருத்துவப்பிரிவினர் லொஸ் ஏஞ்சலில் உள்ள அவருடைய பெவர்ல் கில் இல்லத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இரு மணித்தியாலங்களின் பின்னர் இவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.

பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் தொடர் இசைநிகழ்வுகளை நடத்ததுவதற்காக யூலை 13ல் லண்டனுக்கு வருவதாக ஏற்பாடாகியிருந்ததது.

Michael Jackson’s Website/Blog:
http://www.michaeljackson.com/

ஜூன்:26, சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), – புன்னியாமீன்

international-day-in-support-of-torture-victims.jpg

மனித உரிமைகள் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் அதிகமாகக் கதைக்கப்பட்டு வரும் இந்த மிலேனிய யுகத்தில் இதுபோன்ற ஒரு தினம் பற்றி சிந்திக்க வேண்டியிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு விடயமே. மனிதன் எவ்வளவு முன்னேறிவிட்டாலும் ‘மனிதனை மனிதன் வதைப்படுத்தும்” காட்டுமிராண்டித்தனத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை. மாறாக நாகரிகம் வளர வளர மனிதனை வதைப்படுத்தும் உத்திகளும் நாளுக்குநாள் நவீனத்துவமடைந்து கொண்டு போவதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியுமோ முடியாதோ – ஏற்றுத் தான் ஆக வேண்டியுள்ளமை மனித குலத்தின் ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது ஐக்கிய நாடுகள் பொதுசபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலும், ஆறுதல் தெரிவுக்கும் வகையிலும், மனோரீதியான முறையில் அவர்களுக்கு விமோசனமளிக்கும் ஏற்பாடுகளை செய்யும் அடிப்படையில் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் படி சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் உலகில் விடுதலை, நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் இத்தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. இன்று உலகளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவு நல்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படை நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சித்திரவதைக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட நிலையங்கள் செயற்படுகின்றன.

சித்திரவதை என்பது “உடலால், உளத்தால் நோவினையும் வேதனையும் திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது” என்று பொருள் கொள்ளப்படுகின்றது. சித்திரவதை தொடர்பாக சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையிலும் மேற்படி வாக்கியமே வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

சித்திரவதைபற்றி நாங்கள் சமயபுராணக் கதைகளில் இருந்தே நாம் கற்றிருக்கின்றோம். இவ்வுலகத்தில் தீமைபுரிவோர் நரகலோகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு வேதனைப்படுத்தப்படுவர் என்று அக் கதைகள் கூறுகின்றன. இந்துக்களின் சைவ சமய பாடக்கதைகளிற் சமயகுரவரான அப்பர் சமணர்களால் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றித்தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சமணர் அதிகாரமிழந்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றியும் அறியக்கிடைக்கிறது. இயேசுபிரான் தலையிற் முட்கிரீடம் சூட்டப்பட்டுப் பாரச்சிலுவை சுமத்தப்பட்டுப் பின் அதன்மீதே ஆணிகளால் அறையப்பட்டார் என வேதாகமம் சொல்கிறது. சித்திரவதை என்னும் எண்ணத்தின் தோற்றுவாய் சமயப்புராதண கதைகளிலும் சமய சித்தாந்தங்களிலும் ஆரம்பமாகி விடுகின்றது. உலக வரலாற்றில் இருண்ட காலத்திலும் மத்திய காலத்திலும் அடிமை முறையின் கீழும் சமய முறையின் கீழும் சித்திரவதைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. எனவே சித்திரவதைகள் என்ற எண்ணக்கரு மனிதனின் ஆரம்ப காலங்களில் இருந்தே தோன்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

வரலாற்று சம்பவங்களை ஆராயும்போது மத்திய காலத்திற் குறிப்பாக 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிற் சித்திரவதை மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது. பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப்பரவலாக இடம் பெறத்தொடங்கி இக்காலம்வரை நீடித்து வருகின்றது. முன்னைய காலங்களைவிட நவீன காலத்தில் சித்திரவதைகள் மிகவும் அதிகரித்திருப்பதை போல தென்படுவதற்கு ஊடகங்களின் வளர்ச்சியையும் வெளிப்படையாகக் கூறலாம். இரண்டாம் உலக யுத்த காலத்தில் மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய அநாகரிகமான வரலாறு எழுதப்பட்டது. ஜேர்மனிய நாசிகளால் யுதர்கள் மீது புரியப்பட்ட சித்திரவதைகளும் கொலைகளும் உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது.

மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ்வாறு தோன்றியது என்று ஆராயும் போது மனிதர்களின் பரம்பரை அலகுகளை ஆராய்ந்த மருத்துவர்கள் ஒரு சில மனிதர்கள் பிறக்கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய நிறமூர்த்தஅலகுச்சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறுகிறார்கள். ஆனால் சித்திரவதை எனும் செயல் முறை புறநடையான தனிமனித இயல்பினாற் மேற்கொள்ளப்படும் ஒரு சிறுநிகழ்வாகக் கருதப்படமுடியாது. ஏனெனில் இது திட்டமிடப்பட்ட செயல்வடிவமாகவும், தத்தமது நோக்கங்களை அடைவதற்குரிய ஒரு ஆயுதமாகவும் கையாளப்பட்டு வருவதினால் நிறமூர்த்த அலகுகளுக்கும் இங்கு ஈடுபடும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்குமென கருத முடியாது. ஜனநாயக ரீதியிலும்சரி தீவிரவாத அடிப்படையிலும்சரி உலகத்திலுள்ள எல்லாவகையான அதிகார சக்திகளும் தமது இருப்பைப் பேணவே சித்திரவதையைச் செய்கின்றன. சாதாரண குடும்ப உறவுகளில் தொடங்கி அரசாங்கம்-மக்கள் உறவு வரை இதையே அவதானிக்க முடிகிறது.

நவீன காலத்தில் சித்திரவதையின் நோக்கங்களாக செய்த குற்றத்தை அல்லது செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்தல், தேவைப்படும் தகவல் ஒன்றைப் பெறுதல் அல்லது தமக்கு சாதகமான தகவலையறிய தூண்டுதல். கைது செய்யப்பட்டவரைப் பழிவாங்குதல், தேடப்படுகின்ற ஒருவரின் குடும்பத்தினரை அல்லது நண்பர்களைத் துன்புறுத்துவதற் கூடாகத் தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல் அல்லது சரணடைய வைத்தல், தனது கொள்கைகளை முன்வைத்தல் எனப் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களைக்கொண்டதாக உள்ளன. எனவே நோக்கங்களை வகைப்படுத்துவதென்பது இங்கு கடினமான ஒன்றாகும். இன்றைய கால கட்டங்களில் குற்றம் ஒன்றை நிரூபிப்பதற்கு வேறுபல வழிகள் இருக்கின்ற போதும், தேவைப்பட்ட தகவலைப் பெற வேறுவழிகள் உள்ளபோதும், அல்லது அத்தகவல்களைப் பெற்றபின்னரும் கூடச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மனிதனின் அநாகரிகத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

சாட்சி ஒருவரைச் சித்திரவதைக்குள்ளாக்குவதன் மூலம் அவரது உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அழித்துவிடச் சித்திரவதை செய்பவர்கள் விரும்புகிறார்கள். சாட்சி ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை அழிக்கப்படுவது அதிகார சக்திகளுக்கு மிகவும் தேவையானதாகும். ஏனெனில் அரச அமைப்பை எதிர்த்துப் புரட்சி செய்பவர்கள், பிழையான தலைமையை எதிர்ப்பவர்கள் அவற்றுக்கெதிரான கருத்தியலையும் நடத்தைகளையும் கொண்டிருக்கிறார்கள் அவர்களது கருத்தியலும் நடத்தைகளும் இன்னும் பலரையும் தொற்றிகொள்வது தமது அதிகாரத்தைப் பேணவிரும்புகிற அரசாங்கத்திற்கோ தலைமைக்கோ ஏற்புடையதல்ல. எனவே இத்தகையவர்களின் மன உறுதியை உடைத்துவிடுவது அதிகார சக்திகளுக்கு அவசியமானதாகும்.

சர்வதேசமன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றன எனப்பட்டிருந்தது. உலகம்முழுவதும் அகதிகளாகி உள்ளவர்களில் 10 இல் இருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சித்திரவதையானது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நிகழ்த்தப்படுகின்றது. உடலியல் ரீதியான சித்திரவதைகள் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு வழிவகுக்கின்றன. சித்திரவதையானது இராணுவம் பொலிஸ் முதலாளிகளது அடியாட்கள் அல்லது போராளிகளின் ஆயுதக்குழுக்கள் சாட்சியினை கைதுசெய்வதுடன் ஆரம்பிக்கிறது.

சித்திரவதை என்பது ஒரே முறையைக் கொண்டதல்ல. இது ஒவ்வொரு அமைப்புகளுக்கேற்ப வேறுபடும். இருப்பினும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் பின்வரும் அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ளன.

தாறுமாறான தாக்குதல்: தடி, இடுப்புப்பட்டி, மண்நிரப்பிய எஸ்லோன் குழாய், போன்றவற்றினால் மிருகத்தனமாக உடலெங்கும் தாக்குதல் போன்றவை இதனுள்ளடங்கும்.

திட்டமிட்ட தாக்குதல்: தடிகளால் பாதங்களில் தாக்குதல், ஒரே நேரத்தில் இரு காதுகளிலும் அறைதல், முழங்கால் மூட்டுச்சில்லுகளில் அடித்தல், போன்றவை இதனுள் அடங்கும்.

மின்சாரச் சித்திரவதை : மின்சாரம் பாய்ச்சப்படும் போது உடலில் கடும் நோவுடன் கூடிய வலிப்பு தோற்றுவிக்கப்படுகிறது.

மூச்சுத்திணற வைத்தல்: இவ்வகையான சித்திரவதைகளின் நோக்கம் சாட்சியை மிகக்கடுமையான திணறலுக்கு உட்படுத்துவதாகும். இவ்வகைச் சித்திரவதையின் போது சாட்சி மரணமடைந்துவிடாதபடி கைதியின் நாடித் துடிப்பை சித்திரவதைசெய்பவர் கணித்தபடி இருப்பார். இந்நிலையில் மரணங்கள் ஏற்படுவதும் உண்டு.

எரிகாயங்களை உண்டாக்குதல்: எரிகின்ற சிகரட்டினால் உடலின் மென்மையான பாகங்களில் சுடுதல். தீயில் நன்கு எரிக்கப்பட்ட கம்பிகளால் சுடுதல்.

கட்டித்தொங்கவிடுதல்: இருகைகளையும் முறுக்கிக் கட்டி தொங்கவிடுதல், இருகால்களையும் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுதல், ஒருகை அல்லது ஒருகாலில் மாத்திரம் கட்டித் தொங்கவிடுதல் போன்றவை இதனுள் அடங்கும்.

உடற் பாகங்களைப் பிடுங்குதல்: தலைமயிர், நகங்கள், நாக்கு, விதைகள், பற்கள் என்பவற்றைப் பிடுங்குதல் அல்லது உடைத்தல் அல்லது நசுக்குதல்.

பாலியல் ரீதியான சித்திரவதைகள்: உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை உண்டுபண்ணுகிற ஒரு சித்திரவதையாகும்.

உளவியல் ரீதியான முறைகள்: தனிமைப்படுத்தி வெறுமையை உண்டாக்கி மன அழுத்தத்திற்கு உட்படுத்தல்:

அதீதிமான பயமுறுத்தல்கள்:

இப்போது சில நாடுகள் பயன்படுத்தும் சித்திரவதை முறைகள்
இவற்றைவிட அதிகக் கொடுமையாக இருக்கிறதாக மனித உரிமை அறிக்கைகள் கூறுகின்றன. இதற்காக வேண்டி விதம் விதமான கருவிகளும், ஐயறிவுஜீவிகளும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. இன்று சித்திரவதை என்பது தொழில் முறையாகவும் கலைநுணுக்கம் நிறைந்ததாகவும் நவீன உபகரணங்கள் பாவிக்கப்படுவதாகவும் மாறியுள்ளது. சித்திரவதை செய்வோர் சித்திரவதைக்குள்ளாகி உயிர் வாழ்பவர்களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து கைதியை மரணமடையச் செய்யாமல் அதே நேரத்தில் எவ்வளவு கடுமையாகச் சித்திரவதைகளைச் செய்யலாம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். Frederic Forsythe எழுதிய ‘Fist of God’, எனும் நூலில் அவர் வித விதமான சித்திரவதை முறைகளை விலாவாரியாக விவரித்திருக்கிறார்.

இவ்வாறு சித்திரவதைகள் நிகழ்த்தப்பட்ட பின்பு சாட்சியானவர் சித்திரவதை செய்யப்படவில்லையென மருத்துவரொருவர் சான்றிதழை வழங்குவார். அல்லது சாட்சி தான் சித்திரவதை செய்யப்படவில்லை என ஒப்பதல்வாக்குமூலமொன்றில் கையொப்பமொன்றை அல்லது விரலடையாளமொன்றை இடவேண்டியிருக்கும். இந்த நடவடிக்கைகள் அரசாங்கங்கள் தமது தூய்மைத்தன்மையைப் பேணிக்கொள்ள கடைபிடிக்கும் வழிமுறையாகும்.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), இன்று என்ற அடிப்படையில் சித்திரவதைக்கு ஆளானவர்கள் நிலை பற்றி நோக்குதல் அவசியமானதாகும். சித்திரவதையின் விளைவுகள் சடுதியாக அல்லது நீண்டகால அடிப்படையில் வெளிப்படுபவையாக இருக்கலாம். அதேபோல சிகிச்சையின்போது உடனடியாகவும் குணமடையலாம். சிலதாக்குதல்களுக்கு நீண்டகால சிகிச்சையும் தேவைப்படலாம். சிலசந்தர்ப்பங்களில் சித்திரவதையின் விளைவுகள் வாழ்நாள் உள்ளவரை தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக உடல் அங்கவீனம், இனப்பெருக்க ஆற்றல் இழப்பு போன்றவற்றை நிரந்தர விளைவுகளாகக் குறிப்பிடலாம்.

சித்திரவதைக்குட்பட்டவர் தாக்கப்பட்ட நிலையில் வெளிப்படையான காயங்கள், இரத்தக்கண்டல்காயங்கள், சிறிய பாரிய எலும்பு முறிவுகள் என்பனவும் ஏற்பட்டிருக்கலாம். பற்கள் உடைதல் பற்கள் இல்லாது போதல் முழுப் பற்களும் காலப்போக்கில் உதிர்தல் போன்றனவும் அவதானிக்கப்படுகிறது. மூட்டுக்களில் நோ, மூட்டுக்கள் வீங்குதல், நீண்ட தூரம் நடக்கமுடியாமை போன்ற தசை, வன்கூட்டுத் தொகுதிகளுடன் தொடர்புடைய விளைவுகளும் ஏற்பட இடமுண்டு.
மூச்சுத் திணறவைக்கும் சித்திரவதை முறைகளால் சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். அதேநேரம், வயிற்றழர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன. இது தவிர இழைய வீக்கம், தசைத் தொழிற்பாடு மந்தமடைதல் போன்ற நோய்களும் தோன்றுகின்றன. சித்திரவதைக்குள்ளான அனேகமானவர்கள் இருதயம், சுவாசப்பை, உணவுக்கால்வாய் தொகுதி, மூளை ஆகியவற்றுடன் தொடர்புடைய பாதிப்புக்களைக் கொண்டுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உடலியல் ரீதியான சித்திரவதையின் விளைவுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படின் அவற்றிலிருந்து ஓரளவுக்காவது மீள முடியும். ஆயினும் சித்திரவதையினால் ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு சிகிச்சைகளை மேற்கொள்வதே உடலியல் சிகிச்சையை விட முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இதற்காக வேண்டி இன்று பல்வேறுபட்ட கவுன்சிலின் நடவடிக்கைகள் நிறுவன மட்டங்களிலும் தனியார் மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சித்திரவதை செய்யப்பட்டவர் தான் மாற்றப்பட்டுவிட்டதாக, தனது அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதாக ஏற்படும் உணர்வினை கலைவது கடினம். சித்திரவதைக்கு முன்பு உறுதியானவராகவும்

பலமுடையவராகவும் இருந்த அவர் சித்திரவதையின் பின் உறுதியை இழந்தவராக களைப்படைந்தவராக மாறிவிடுகிறார். சுயமதிப்பீடு அவருக்கு சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. சூழ உள்ளவர்களை நம்ப அஞ்சுகிறார். மன அமைதியை இழந்து போகிறார். இது இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கின்றது.

சித்திரவதைக்குள்ளாகி உயிர்வாழும் அரசியல் கைதிகளின் நிலை மிகப் பரிதாபகரமானதே. ஏனெனில் இவர்கள் தாம் எதற்காககாகத் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்பவற்றைக்கூட பிறருடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள முடியாத நிலையில் மாற்றப்பட்டு விடுகின்றார். மறுபுறமாக அவர்கள் எந்த அரசியல் சமூக வாழ்க்கை முறைகளை புரட்சிகரமானதாக கருதினார்களோ அவற்றைப் புரிந்து கொள்ளும் திறனுள்ள மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

பொதுவாக கடுமையான சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி, உறக்கமின்மை என்பன பொது நோய்களாக அமைந்துவிடுகின்றன. எனவே, சித்திரவதைக்குள்ளானோர் சமூகத்தில் அதிகமாக சிந்திக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்காக வேண்டி ஒரு தினத்தை மாத்திரம் உருவாக்கி இவர்கள் பற்றி சிந்திப்பதைவிட தினந்தோறும் பராமறிக்கக் கூடிய ஒரு குழுவினர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும். விசேடமாக மானசீகமான முறையில் இவர்களின் உளத்தாக்கங்கள் கலைய விளைய வேண்டியது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட பதவியாக்க முடிவு – பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க

parliament-of-sri-lanka.jpgகூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட சட்டபூர்வ பதவியாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை காலமும் இப்பதவி நிலை சம்பிரதாயபூர்வமாகவே இருந்தது என்று பிரதமர் தெரிவித்ததுடன் இதற்கான சட்டமூலத்தையும் சபையில் சமர்ப்பித்தார்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு சட்டபூர்வமான அந்தஸ்து வழங்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலத்தை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சபையில் நேற்று சமர்ப்பித்துப் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கையினை அடுத்து பிரதமர் மேற்படி சட்டமூலத்தை சமர்ப்பித்துப் பேசினார்.

இதுவரை காலம் இருந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலைக்கு திறைசேரியிலிருந்து செலவுக்காக நிதிகூட பெற முடியாத நிலை இருந்தது. இச்சட்டமூலத்தினூடாக இப்பதவி நிலைக்கு சட்டரீதியான அந்தஸ்தும் பொறுப்புகளும் எல்லைகளும் வகுக்கப்படுகின்றன. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு படையணிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஆலோசனைச் சபை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படுபவர் நான்கு வருடங்களுக்கு பதவியை வகிப்பார். இப்பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும் அடுத்து இரண்டு வருடங்களாகவும் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும், அதன் பின்னர் தலா ஒவ்வொரு வருடங்களாகவும் வழங்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு – பக்ரியாவை பயன்படுத்தி நுளம்பை அழிக்கும் சாத்தியத்தை ஆராய ஜனாதிபதி பணிப்பு

he_president.jpgடெங்கு ஒழிப்பு சம்பந்தமாக எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சம்பந்தமாக நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் ஜயரத்ன ஹேரத், அமைச்சின் செயலாளர் அதுல கணந்த லியனகே, மாகாண சபை, உள்ளூராட்சிச் சபை அமைச்சின் செயலாளர் கெஷின் ஹேரத், கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ஹத்தானி விஜேவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

பல உள்ளூராட்சிச் சபைகளுக்குப் பைகளைப் போடுவதற்கு உரிய இடமில்லையானால் அவசரகால சட்ட விதிகளுக்கமைய தற்போது உள்ளூராட்சி நிறுவனங்கள் குப்பை போடும் இடங்களை அரசாங்கம் சுவீகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

குப்பை கூளங்களினால் சகல உள்ளூராட்சி நிறுவனங்களிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்கும் வகையில் குப்பைகளை மீள்சுழற்சிக்குட்படுத்த விரும்பும் முதலீட்டாளர்க ளுடன் கலந்துரையாடி அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன், டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக குறிப்பாக சிவில் பாதுகாப்புப் பிரிவு, கல்வியமைச்சு, சமுர்த்தி நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தி இது தொடர்பில் தொடர்ச்சியான செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மழைக் காலங்களில் டெங்குக் காய்ச்சல் பரவி வருவதைக் கவனத்திற் கொண்டு வீட்டுத் தோட்டம், வேலைத் தளங்கள் மற்றும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

கியூபாவில் டெங்கு நுளம்பு ஒழிப்பதற்காக உபயோகப் படுத்தப்படும் பக்aரியாவை இலங்கைக்குக் கொண்டு வந்து அதன் சாத்தியத் தன்மையை பரீட்சிக்குமாறு தெரி வித்த ஜனாதிபதி, இங்கு அந்த பக்aரியாவை உருவாக்க விரும்புபவர்களை ஊக்குவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் இத்தகைய தொற்று நோய்களை கட்டுப்படுத்த சட்டத்தினால் மட்டும் இயலாது எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, சகலரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவது மிக முக்கியமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளோர் தொகை நேற்று வரை 11,968 ஆக அதிகரித்துள்ளதுடன் 146 பேர் இதுவரை பலியாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

இருபது வருடங்களில் அழித்ததை இரு வருடங்களில் கட்டியெழுப்புவோம் – அமைச்சர் டக்ளஸ்

21deva.jpgகடந்த இருபது வருடங்களில் அழிவடைந்த எமது பிரதேசத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரு வருடங்களில் கட்டியெழுப்புவோமென யாழ். வர்த்தகர்களுடன் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புதன் மாலை யாழ். வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பொது சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறக்குறைய ஐநூறிற்கும் மேற்பட்ட யாழ். வர்த்தகர்கள் பங்குகொண்ட இச்சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘நாங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆள்வதற்காக அல்ல, மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் வர்த்தகர்களாகிய நீங்கள் சுதந்திர மாகவும் நிம்மதியாகவும் தொழில் செய்வதற்குமே ஆகும்.

இதன் அடிப்படையிலேயே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை நாம் ஏற்றிருக்கின்றோம். மகிழ்ச்சி தரும் மாற்றங்களையே நாம் விரும்புகின்றோம்.

இதில் ஏமாற்றங்கள் நிகழுமாயின் அதற்கான அனைத்து பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொண்டு எமது தீர்மானங்களைத் திருத்தி எழுதவும் நாம் என்றும் தயாராக இருப்போம். ஆனாலும், நாம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானம் ஒரு போதும் தோற்றுப் போகாது’ என்றும் தெரிவித்தார்.

ஈ. பி. டி. பி. யினராகிய நாம் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரேயொரு தனித்துவமான அரசியல் கட்சி என்ற ரீதியில் எமது தனித்துவங்களோடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு தோழமை கட்சியாக இணைந்து எமது மக்களின் இலட்சியக் கனவுகளை விரைவாகவும், இலகுவாகவும் எட்டுவதற்காக இந்தத் தீர்மானத்தை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எடுத்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ். வர்த்தகர்களினால் கேட்கப்பட்ட கேள்விகள், சந்தேகங்கள் அனைத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக விளக்கமளித்தார்.

சொகுசு வாகன வரி அறவீடு

25dallas_alahapperuma.jpgசொகுசு வாகனங்கள் மற்றும் அரைச்சொகுசு வாகனங்களுக்கான வரி அறவீட்டை பிரதேச செயலகங்கள் ஊடாக அறவிடுவது குறித்து ஆராய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட வரி தனியார் காப்புறுதி நிறுவனங்களாலேயே அறவிடப்பட்டு வந்தது. இதனை வருடாந்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது பிரதேச செயலகங்கள் மூலம் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் டளஸ் அலகப்பெரும இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

த.வி.கூ, மு.கா, சுயேச்சை வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

images-elc.jpgயாழ்.  மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்காக ஏழு அரசியல் கட்சிகளும் ஐந்து சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதேவேளை யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினதும், சுயேச்சைக் குழுவொன்றினதும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வவுனியா ந. சபைக்கான வேட்பு மனுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க யாழ். மாநகர சபைத் தேர்தலுக்காக நான்கு அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சைக் குழுக்கள் இரண்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் மற்றுமொரு சுயேச்சைக் குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதுடன் சுயேட்சைக் குழு இலக்கம் ஒன்றிற்கு கப்பல் சின்னமும் இரண்டாம் குழுவிற்குப் பூட்டுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

500 ரயில்வே ஊழியர்களுக்கு நாளை நிரந்தர நியமனம்

25dallas_alahapperuma.jpgஒப்பந்த அடிப்படையிலான மற்றும் தற்காலிக ரயில் ஊழி யர்கள் 500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (27) வழங்கப்ப டவுள்ளன. இது தொடர்பான வைபவம் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழஹப்பெருமவின் தலைமையில் நாரஹேன் பிட்ட சாலிகா மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமைச்சர் லசந்த அழகியவன்ன, ரயில்வே பொதுமுகாமையாளர் பீ. பீ. விஜேசேகர உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.