எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“ஏ9′ வீதியிலுள்ள கோயில்களைத் திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை

ஏ9 வீதியிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்த பூஜைகளை நடத்த அனுமதி வழங்குமாறு சர்வதேச இந்து மதபீடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்து மத பீடத்தின் செயலாளர் ஆர்.பாபு சர்மா இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கும் ஏ9 வீதியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து நாளாந்தம் ஒருவேளை பூஜையையாவது நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்தப் பூஜையை நடத்துவதற்கான ஏற்பாட்டை எமது மதபீடம் மேற்கொள்ளும்.

முறிகண்டிப் பிள்ளையார் கோவில் உட்பட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள இந்து ஆலயங்களை மீண்டும் திறந்து பூஜை, வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகிறோம். வவுனியா முகாம்களிலுள்ள இந்து குருமாரை பூஜைகளில் ஈடுபடுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னித் தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன

kamal.jpgவன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த புதிய நியமனத்தை வழங்கியுள்ளார். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் செய்த மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவை பிரிகேடியர் சுதந்த ரணசிங்க வரவேற்றார்.

அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தமது அலுவலகத்திற்கு சென்று புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் போது முதல் ஆவணத்திலும் கையொப்பமிட்டார்.

இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கமல் குணரட்ன வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கள முனையிலிருந்து சிறந்த சேவைகளை வழங்கிவந்தார்.

நந்திக் கடல் களப்பு வரை முன்னேறிச் சென்று கள நடவடிக்கைகளுக்குப் பாரிய ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளார்

பிரிட்டனில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் போலி கடவுச்சீட்டுகளுடன் கைது

பிரிட்டனில் இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர் போலிக் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.  சிவபாலன் துரை என்ற இலங்கையர் பார்க் றோயல் பகுதியிலுள்ள நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் போலியான பிரெஞ்சு கடவுச்சீட்டு, 2 போலி தேசிய காப்புறுதி அட்டைகள், 2 பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப் பத்திரம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட சிவபாலன் துரையுடன் மற்றொரு புகலிடம் மறுக்கப்பட்டவரான சக்திவேல் சஞ்ஜீவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்ணாடி தயாரிப்பு பணியாளர்கள் இருவருடன் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மற்றைய இருவருக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேலை வழங்கிய சுப்பர் ரவ்கீறெட் கிளாஸ் நிறுவனம் 40,000 ஸ்ரேர்லிங் பவுண்ஸ் வரையிலான அபராதத்தை இப்போது எதிர்நோக்கியுள்ளது.

இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர்கள் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

050709imf_.jpgஇலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் முகாமைத்துவ இயக்குனரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த உதவி 20 மாதங்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூலை 24 ஆம் திகதி நடக்கவுள்ள நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் இந்த பொருளாதார உதவித்திட்டம் குறித்து ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ள சர்வதேச நாணய நிதியம், அந்த திட்டத்தை நிறைவேற்று சபை அங்கீகரிக்கும் பட்சத்தில், அதன் மூலம் இலங்கை உடனடியாக 313 மில்லியன் டாலர்களை பெறக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் அலுவலகங்களில் தேடப்படுகின்றனர்

இராணுவத்திலிருந்து தப்பியோடி தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றும் படையினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இராணுவத்திலிருந்து தப்பியோடி தற்போது தனியார் அலுவலகங்களில் கடமையாற்றுவோரில் 150 பேரது விபரங்களைப் பெறும் நோக்கில் நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேற்படி 150 பேரதும் முகவரி மற்றும் விபரங்களை வழங்குமாறு தொழில் ஆணையாளருக்கு உத்தரவிடக்கோரியே பொலிஸார் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்களில் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

தொழில் திணைக்களம் ஊடாக இவ்வாறானவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கிலேயே முதல் 150 பேரது விபரங்களைத் தொழில் திணைக்களத்திடமிருந்து பெறுவதற்காக நாரஹேன்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.

சூரிய கிரகணம் இன்று

sun.jpgசூரிய கிரகணத்தையோ, சூரியனையோ வெற்றுக் கண் களால் பார்ப்பதால் கண் பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படும் என்று கொழும்பு பல் கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவு ரையாளரும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜய ரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

இன்று (22ம் திகதி) சூரிய கிரகணமாகும். இதனை இந்தியா, நேபாளம், பங்களாதேசம், பூட்டான், மியன்மார், சீனா உட்பட்ட சில நாடுகளில் முழுமையாக பார்க்க முடியுமென்றாலும் இலங்கையில் பகுதியாகவே தென்படும். அத்தோடு கிழக்காசியா, இந்தோனேசியா மற்றும் பசுபிக் கரையோர நாடுகளிலும் இதனை பகுதியாகவே பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் காலை 6.03 மணி முதல் தென்படும் இச்சூரிய கிரகணத்தை சில நிமிடங்கள் வித்தியாசத்தில் வெவ்வேறு நகரங்களில் காட்சியளிக்கும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு நகரில் காலை 6.03 மணிக்கு தென்படத் தொடங்கும் இச்சூரிய கிரகணம் காலை 7.12 வரை இருக்கும். காலை 6.21 மணியளவில் உச்சமாக தென்படும் இச்சமயம் சூரியனின் 40 சதவீதத்தை சந்திரன் மறைப்பதால் இருட்டு நிலை ஏற்படுகின்றது. இச்சூரிய கிரகணத்தை நாட்டின் ஏனைய நகரங்களில் சில நிமிடங்கள் வித்தியாசத்தில் பார்க்க முடியும்.

உதாரணத்திற்குச் சொல்லுவதாயின் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு காலை 5.58 மணி முதல் காலை 7.15 மணி வரை தென்படும். காலியில் காலை 6.03 மணி முதல் காலை 7.11 மணி வரை பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இச்சூரிய கிரகணத்தை உயர்வான இடங்களிலிருந்தோ, மலை உச்சியிலிருந்தோ தெளிவாகப் பார்க்க முடியும்.

இங்கிலாந்தின் அழகுராணியாக முதல் தடவையாக கறுப்பின அழகி

miss_england-2009.jpgஇங்கிலாந்தின் முதலாவது கறுப்பு இன அழகுராணியாக ரேசல் கிறிஸ்ரி (20 வயது) திங்கட்கிழமை இரவு மகுடம் சூட்டிக் கொண்டுள்ளார். இவர் முன்னாள் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட சாம்பியன் லின்போர்ட் கிறிஸ்ரியின் மைத்துனி ஆவார். மேற்கு லண்டனிலுள்ள கென்ஸிங்டன் எனும் இடத்தைச் சேர்ந்த ரேசல் கிறிஸ்ரி 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிச் சுற்றொன்றில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை கார் விபத்து ஒன்றுக்கு ஆளாகிய ரேசல், சிராய்ப்பு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓர் இரவை மருத்துவ மனையில் கழித்தார். இந்நிலையில் தைரியத்துடன் அழகுராணிப் போட்டியில் கலந்து வெற்றி பெற்றுள்ள ரேசல் விபரிக்கையில், “”நான் வாழ்வில் எதைத் தெரிவு செய்தாலும், அதில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே எனது இலட்சியமாகும்” எனத் தெரிவித்தார்.

மத்திய லண்டனில் மெற்றோபோல் ஹில்டன் ஹோட்டலில் மேற்படி அழகுராணிப் போட்டி நடைபெற்ற போது இந்தப் போட்டியானது பாலியல் ரீதியான காட்சிப்படுத்தலாக உள்ளது என கண்டனம் தெரிவித்து ஹோட்டலுக்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

“ஒவ்வொரு பெண்ணும் ஒரு ராணிதான்’, “அழகு என்பது தோலில் இல்லை’ போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்

பாதாள உலகக் கோஷ்டியினர் சரணடைய வேண்டும் – பொலிஸ் மாஅதிபர் கோரிக்கை

jayantha_igp.jpgபாதாள உலகக் கோஷ்டியினரை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ அல்லது பொலிஸ் தலைமைக் காரியாலயத்திலுள்ள குற்றவியல் தொடர்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடமோ சரணடையுமாறு பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற ரட்ட யன எத்த எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பாதாள உலகக் கோஷ்டியினரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸ் மாஅதிபர், இதன்போது பொலிஸார் எத்தகைய அழுத்தங்களுக்கும் உட்பட மாட்டார்கள் எனக் கூறினார்.

பாதாளக் குழுக்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்க முடியும் எனக் கூறிய பொலிஸ் மாஅதிபர், இத்தகவல்களை பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் தலைமை அலுவலகம், கொழும்பு எனும் முகவரிக்கோ அல்லது 0112446174 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டோ அறிவிக்க முடியும் எனத் தெரிவித்தார். தகவல்களை வழங்குவோர் அவற்றைத் தமது பெயரைக் குறிப்பிட்டோ அல்லது குறிப்பிடாமலோ வழங்கலாம் என்றும் பொலிஸ் மாஅதிபர் மேலும் கூறினார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை கொன்று குவித்தவர்கள் எங்களுக்கு மனித உரிமைகள் பற்றி போதிக்கின்றனர் – ஜனாதிபதி

mahinda_raajapakse11.jpgஇலங்கையில் ஊவா வெல்லஸ்ஸவில் இடம்பெற்ற பெரும் கிளர்ச்சியைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட எல்லா இளம் ஆண்களையும் கொன்று குவித்த சில சக்திகள் இன்று எமக்கு மனித உரிமைகள் பற்றி போதிக்கின்றனர். கடந்த காலங்களில் அவர்கள் மேற்கொண்ட இந்த படுகொலைகளை மறைப்பதற்காகவே நமது நாடு மனித உரிமைகளை மீறுவதாக இப்போது குற்றம் சாட்டுகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரித்தானிய காலணித்துவ வாதத்திற்கு எதிராக 1818 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பெரும் கிளர்ச்சி நடந்தேறிய பண்டைய வெல்லஸ்ஸ பிரதேசத்தின் பெலவத்த சீனித்தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இப்பிரதேசத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன திட்டங்களை அவர்கள் தகர்த்ததன் மூலம் தன்னிறைவு பொருளாதாரத்தை திட்டமிட்ட முறையில் நசுக்கினர். மிகவும் வளம்பொருந்திய இப் பகுதி வறுமை மிக்கதொரு பகுதியாக மாற்றப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று எமது வீரமிக்க படைவீரர்களால் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த நாட்டைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் தன்னால் இயலுமான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி ஏகாதிபத்தியவாதிகளால் நிர்மூலமாக்கப்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்களை தனது அரசாங்கம் மீள் கட்டமைத்து முன்னிருந்ததைப் போன்று இந்தப் பிரதேசத்தை வளம் மிகுந்த ஒரு பிரதேசமாக மாற்றியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பி நாட்டு மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக சிறிய உள்ளுர் அமைப்புகள்ää மாகாணசபைகள்ää மத்திய அரசாங்கம் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு வினைத்திறன்மிக்க இயந்திரத்தின் சில்லுகள் போன்று ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார

சீன பொறியியலாளர் குழு நாளை யாழ். விஜயம்!

railway_lines.jpg
காங்கேசன்துறையிலிந்து பளைவரையான ரயில் பாதைப்புனரமைப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள சீன பொறியியலாளர் குழுவொன்று நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்

இதேவேளை, அம்பாந்தோட்டையிலிருந்து கட்டடக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு யாழ் புகையிரத நிலையம் முன்பிருந்தது போலவே புனரமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த புனரமைப்புப் பணிகளுக்கு அம்பாந்தோட்டை மக்களும் கனிசமான பங்களிப்பு வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்தேவி ரயில் சேவையை முன்னரைப்போலவே மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் காங்கேசன்துறையில் இருந்தும் வவுனியாவில் இருந்தும் ரயில் பாதை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.