எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஆசிரியர் வழிகாட்டி கைநூல்கள்; 20 ஆம் திகதி முதல் விநியோகம் – கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நடவடிக்கை

261009school_child_dp.jpgஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவசப்பாடப் புத்தகங்கள் இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலவசப் பாடப்புத்தகங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக மட்டத்தில்  விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   
தரம் 12இல் கற்பிக்கவுள்ள ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு,  தயார் செய்து கொள்ள வசதியாக ஆசிரியர் வழிகாட்டி  கைநூல்கள் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் என அச்சிடப்பட்டுள்ள ஆசிரியர் வழிகாட்டிகைநூல்கள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் சகல பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது. 

மீள்குடியேற்ற செயற்பாட்டுக்கு மேலும் ரூ. 75 கோடி – பாராளுமன்றத்தில் நேற்று குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

parliament.jpgமீள்குடி யேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு 75 கோடி ரூபாவை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட மேற்படி குறைநிரப்பு பிரேரணையை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் சர்ப்பித்துப் பேசினார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பேசும் போது:-

எமது அமைச்சு இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது. வடபகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள் 21 நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் துரித வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் மீளக் குடியர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேரே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் 12 நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர். இவர்களும் விரைவில் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர். இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மீளக்குடியமர்த்தும் போது 25 ஆயிரம் ரூபா வழங்குகின்றோம். அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்குரிய உலர் உணவு, விவசாயம், மீன்பிடித் தொழில் என்பவற்று க்கான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் சொந்த இடங்களில் மீளக்குடியமரக் கூடிய வாய்ப்பு 19 வருடங்களின் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை யிட்டு வட மாகாண முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிக்கடன்பட்டவர்களாக உள்ளனர். வெளியேற்றப்பட்ட வவுனியா முஸ்லிம்கள் ஏற்கனவே அவர்களது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர் என்றார்.

முதலில் ஜனாதிபதி தேர்தல். உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளிவரலாம்.

srilanka.jpgஎதிர் வரும் ஜனவரி இறுதிப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாமென தேசம் நெற்றிட்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. நாளை 19 ஆம் திகதி ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் 4 வருடங்கள் நிறைவடைகின்றது எனவே நாளையின் பின்பு ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம். முன் கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டுமானால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்த பின்னரே அதற்கான அறிவிப்பை விடுக்கமுடியும். அனேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவருமென எதிர்பார்கப்படுகின்றது. 

கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் தேசிய தேர்தல்கள் தொடர்பாகவே பேசப்படுகிறது. கடந்த வாரம் வரை பல்வேறுபட்ட ஊகங்களையும் ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாநாட்டில் முதலில் எந்தத் தேர்தல் எப்போது நடைபெறுமென ஜனாதிபதி அறிவிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த மாநாட்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பை தவிர்த்துக் கொண்டார். நான்கு வருடங்களை நிறைவு செய்யாமல் இது குறித்த முடிவை அவரால் அறிவிக்கமுடியாது என்பதாலேயே அன்று அதிலிருந்து ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டதாகத் தெரியவருகிறது. அன்றைய மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுதந்திரக்கட்சி உயர்பீடக்கூட்டத்தில் ஆராய்ந்து விரைவில் அறிவிப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தார். நேற்றைய தினம் சுதந்திரக்கட்சியின் உயர் மட்ட அங்கத்தவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு ஜனவரி 22 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாமென ஊகங்கள் தெரிவிக்கின்றன.

முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்டோர் விவரம் வவுனியா செயலகத்தில் பார்வைக்கு – பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருந்த வேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வவுனியா செயலகத்தில் காட்சிப்படுத்தப்படும். வன்னி சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும்   ஜனாதிபதியின்  சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம் பெற்ற சந்தப்பில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.

நேற்றுமுன்தினம் வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் கொண்ட குழு, நேற்று பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியது. அகதி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேற்றைய சந்திப்பில் தாங்கள் விவரமாக எடுத்து விளக்கியதாக அக்குழுவில் அங்கம் வகித்த என்.சிறிகாந்தா எம்.பி. தெரிவித்தார். நேற்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர் தெரிவித்தவையாவது:

*முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்ந்தவர்களைக் கைது செய்யும் செயற்பாடுகள் சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு முழு விசாரணைகள் முடிவுற்ற நிலையில் மீள் குடியமர்த்தப்பட்டவர்கள், தொல்லைகள் எதுவும் இன்றி வாழ அனுமதிக்க வேண்டும்.

* இடம்பெயர்ந்த மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு “ரசிது” வழங்க வேண்டும்.

* முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும்.

*போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

*மீளக்குடியமர்ந்தவர்களுக்குப் போது மான அளவு கொடுப்பனவு வழங்க வேண்டும்

பொன்சேகாவுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும்

031109sarathfonseka.jpgஜெனரல் சரத் பொன்சேகா விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அவருக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அத்துடன், அவர் பொருத்தமான இடத்துக்குச் செல்லும் வரை இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வசிக்க முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.ஜெனரலுக்கு 70 கொமாண்டோக்களும் புல்லட் புரூவ்கார் ஒன்றும் பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்படவுள்ளதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் டெய்லி மிரர் இணையத்தளச் சேவைக்குக் கூறியுள்ளார். புலிகளின் பட்டியலில் தான் இப்போதும் இருக்கின்றதாகவும் தமக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஓய்வுபெற்ற ஜெனரல் கோரிக்கை விடுத்திருந்தார்.

சபைக்குள் நந்தன குணதிலக்க திடீர் சுகயீனம்

சற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக்க சபைக்குள் அவரது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போது திடீரென சுகயீனமுற்று சிறிது நேரம் அவதிப்பட்டார்.

நேற்று சபைக்குள் விவாதம் நடைபெற்றும் கொண்டிருந்த போது அமைச்சர் நந்தன குணதிலக்க தமது ஆசனத்தில் அமர்ந்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அமைச்சர் தனது நெஞ்சை கையால் அழுத்திப் பிடித்துக் கண்களை மூடிக் கொண்டு அவதிப்பட்டார். அருகிலிருந்த அமைச்சர் சாலிந்த திசாநாயக்க அமைச்சரின் நெஞ்சை தடவிக் கொடுத்தார். அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தி ற்கு வந்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் அமைச்சருக்கு பாராளு மன்ற உதவியாளர் ஊடாக வெந்நீர் குடிக்கக் கொடுத்தார்.

அதன் பின்னர் நந்தன குணதிலக்க நெற்றிப்பொட்டை விரல்களால் அழுத்திப் பிடித்தபடி அமர்ந்திருந்தார். அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபைக்கு வெளியே சென்று பாராளுமன்ற நெறியாளர்களை அழைத்து வந்து அமைச்சர் நந்தன குணதிலக்கவை சபைக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

புதிய 1000 ரூபா நாணயத்தாள் நேற்று முதல் புழக்கத்தில்

new1000ru.jpgநாட்டில் சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்குமான வழி பிறந்துள்ளதையொட்டி இலங்கை மத்திய வங்கி ஞாபகார்த்த ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றினை நேற்று வெளியிட்டு வைத்தது. மத்திய வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட கப்ரால் புதிய நாணயத்தாளினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். 1998ம் ஆண்டின் 6ம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் நேற்று முதல் தேசிய ரீதியில் புகழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

new1000.jpg

rs1000.jpgதாளினது முன்பக்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் சுபீட்சத்தினை நோக்கி முன்னேறிச் செல்கின்ற இணக்கம்மிக்க ஒரு நாடு என்ற தொனிப்பொருளும் தாளின் வலது பக்கத்தில் ஜனாதிபதியின் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நிதி முகாமைத்துவத்தினால் பொருளாதாரம் 3.5 சதவீத வளர்ச்சி சபையில் அமைச்சர் சியம்பலாபிட்டிய பெருமிதம்

பல நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோதிலும் எமது பொருளாதார வளர்ச்சியை இவ்வருடம் 3. 5 சதவீதமாகப் பேண முடிந்ததாக நிதி, அரச வருவாய்த் துறை அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒதுக்கீடு திருத்தச் சட்டம், மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், தாவரப் பாதுகாப்பு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ஆகியவற்றின் விவாதத்தை சபையில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- கடந்த காலத்தில் மேலதிகமாக அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலமைக்கு அரசாங்கம் முகம் கொடுத்தது. இந்நாட்டின் அரச வருவாய் ஏற்றுமதி, இறக்குமதியில் தான் தங்கியுள்ளது. உலக பொருளாதாரத்தின் வீழ்ச்சி நேரடியாக அரச வருவாயையே பெரிதும் பாதித்தது. கடந்த 30 வருட கால யுத்தமும், அரச வருவாயையே அதிகளவில் பாதித்தது.

2009ம் ஆண்டில் உலகின் பல நாடுகள் எதிர்பார்த்த அரச வருவாயைப் பெற்றுக்கொள்ளவில்லை. இதற்கு உலக பொருளாதார வீழ்ச்சியே காரணமாகும். தென்னாபிரிக்கா, இந்தியா, நோர்வே, வியட்நாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அரச வருவாய் வீழ்ச்சி அடைந்தது.

இருப்பினும் எமது உல்லாசப் பயணத்துறை, ஆடைத் தொழிற்றுறை, சிறு தேயிலை தோட்டத் துறை போன்ற கைத்தொழில் துறைகளைப் பாதுகாக்கவென நாம் 16 பில்லியன் ரூபாவை செலவிட் டுள்ளோம்.

சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி வெடிக்கும்: சம்பந்தன் எச்சரிக்கை

sampanthan.jpgஇலங் கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும். இவ்வாறு கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் இதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார் 

பொலிவியாவில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்: உடன் நடவடிக்கை வேண்டுமென்கிறது யுனிசெப்

பொலிவியாவில் இடம் பெறும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யுனிசெப் அந்நாட்டு அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

இவ்வாறான அநியாயங்களில் ஈடுபடும் குற்றவாளிகளில் பெருமளவானோர் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாதுள்ளதை சுட்டிக்காட்டிய யுனிசெப் அமைப்பு பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடு வோரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தெரிவித்துள்ளது.

தென்னமெரிக்க நாடுகளில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம் பெறும் நாடாக பொலிவியா உள்ளது. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள போதும் பொலிவியாவில் அதிகரித்துவரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களையிட்டு யுனிசெப் கடும் கவனம் செலுத்தியுள்ளது.

தலைநகர் லாபாஸிலுள்ள யுனிசெப் அதிகாரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பாலியல் துஷ்பிரயோகங்களுக்கெதிராக பொலிவிய மக்கள் கிளர்ந்தெழவேண்டும். இதற்கான காரணங்களைக் கண்டறிந்து இந் நிலையை மாற்ற வேண்டும். எதிர் கால இளைஞர்கள், சிறுவர்களுக்கு வள மான வாழ்வை வழங்க வேண்டுமானால் அவசரமாக இப் பணியைச் செய்து முடிக்க வேண்டுமென்றார்.

பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுவர்கள், இளைஞர்கள் உடல், உள ரீதியாகப் பாதிக் கப்படுகின்றனர். இதனால் வாழ்க்கையில் நம்பிகையிழக்கும் நிலைக்கும் சில சிறு வர்கள் செல்கின்றனர். பொலிவியாவிலுள்ள சகல தரப்பினரும் இப் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டு மென்றும் யுனிசெப் அழைப்பு விடுத்து ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.