எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

13 வயதுச் சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்!

ரூரிங்கில் இருந்து மிற்சம் செல்லும் 280ம் இலக்க பஸ்ஸில் எறிய சிறுவன் ஒருவனை நபரொருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். யூன் மாதம் 22ம் திகதி பகல் 12.05 மணிக்கு நடைபெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தில் வைத்து குறித்த நபர் சிறுவனின் முழங்காலில் கையை வைத்தபடி உரையாடியுள்ளார். பின் சிறுவன் பிகர்ஸ்மார்ஸ் என்ற இடத்தில் இறங்கிய போது அவனைப் பின்தொடர்ந்து அவனின் மறைவிடத்தைத் தடவி ‘இது பெரியதா’ எனக்கேட்டுள்ளார். இச்சிறுவனுடன் நட்பு கொள்ள விரும்பவதாகவும், சிறுவன் அவனது வேலையை முடித்துவிட்டுத் திரும்பும் வரை தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.  பயத்தில் அச்சிறுவன் சத்தமிட்டு தனது உறவினர் ஒருவரை உதவிக்கு அழைத்தபோது அம்மனிதர் ஓடிவிட்டார்.

ஆறடி உயரம். 30 வயது மதிக்கத்தக்க அம்மனிதரின் நடை உடையை அவதானித்த போது அவர் ஓர் இலங்கையராக இருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் இலங்கையரா என்பது உறுதியாகவில்லை. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக உறவில் உள்ள ஆண்கள் இவ்வாறான பாலியஸ் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவது தற்போது வெளிவருகின்றது. 

கடந்த 8 மாதங்களில் டெங்குக் காய்ச்சலினால் 208 பேர் பலி

dengue.jpgஇலங் கையில் கடந்த 8 மாதங்களில் டெங்குக் காய்ச்சலினால் 208 பேர் பலியாகியுள்ளனர்; 28 ஆயிரத்து 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 52 பேர் பலியாகியுள்ளதோடு 4965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டெங்கு நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

schools.jpgஇரண்டாம் தவணை விடுமுறையின் பின் தமிழ், சிங்கள பாடசாலைகள் இன்று (07) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. க.பொ.த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டம் இடம்பெறும் பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்படும் எனினும் க. பொ. த. (உ/த) பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் முதல் கட்டமும் 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 13 ஆம் திகதியும் க. பொ. த. (உ/த) பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் 2 ஆம் கட்டம் இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படும்.

அதேவேளை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பிக்க ப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. (உ/த) பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையின் முதல் கட்டம் இடம்பெற்ற பாடசாலைகள் வருமாறு: கொழும்பு றோயல் கல்லூரி, ஆனந்தாக் கல்லூரி மற்றும் டி. எஸ். சேனநாயக்க கல்லூரி, கம்பஹா பண்டாரநாயக்க மகா வித்தியாலயம், களுத்துறை மகா வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வுட் வித்தியாலயம், பெண்கள் உயர் பாடசாலை, காலி வித்தியாலோக வித்தியாலயம்.

இவ்வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இ.போ.ச தலைவர் எம். டி. பந்துசேன தெரிவித்தார். இதில் முதற் கட்டமாக நூறு பஸ்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து தவணை அடிப்படையில் பணம் செலுத்தி பஸ்களை கொள்வனவு செய்ய உள்ளதாக கூறிய அவர் அதிக வருமானம் ஈட்டக் கூடிய வீதிகளில் அவற்றை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை டிப்போக்களில் திருத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள பஸ்களை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் திட்டமொன்று போக்குவரத்து அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 25 பஸ்கள் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று

nallur.jpgநல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று 7ம் திகதி காலை ஏழு மணியளவில் நடைபெறுகிறது. தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் நாடெங்கும் இருந்து பெருந்தொகையான மக்கள் நல்லூர்க் கந்தன் உற்சவத்துக்கு வருகை தந்திருப்ப தனால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை யாழ். மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

குடிநீர், மலசல கூட வசதிகள் என்ப வற்றையும் மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் முக்கியமான சில இடங்களில் மருத்துவ முகாம்களையும் அமைத்துள்ளனர். பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியால யத்தில் திருவிழாக் காலத்திற்கான தற்கா லிக பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் விசேட சேவைகளை நடத்துகின்றன.

தென் இலங்கையில் உள்ள பெருமளவு வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தகப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஆலய வீதிகளில் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. தாகசாந்தி நிலை யங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு

அரசியலமைப்பின் 18வது திருத்த த்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதென இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உட்பட அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகட்சிகளின் தலைவர்கள் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பினும் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் குறைபாடுகளை தீர்த்து வைப்பது அரச அதிபர்களின் பொறுப்பு

jhon.jpgவடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் மக்களின் தேவைகள் குறைபாடுகளை இனங்கண்டு இதனைத் தீர்த்து வைப்பது அரசாங்க அதிபர்களினது பொறுப்பாகுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான நாடளாவிய மாவட்டச் செயலாளர்களின் மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் புதிய சிந்தனை, வினைத் திறமையுடனான செயற்பாடுகள் மூலமே சிறந்த அரச நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப முடியுமென குறிப்பிட்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செயற் பட்டதாலேயே பல வெற்றிகளைச் சந்திக்க முடிந் துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மாவட்டச் செயலாளர்களின் மாநாடு முதற்தடவையாக இம்முறை யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்றும் ஆரம்பமாகி இரண்டு நாள் நிகழ்வாக இடம்பெறுகிறது. இம்மாநாட்டில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன் நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

கோஷ்டி மோதலில் தப்பி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி மரணம்

கட்டுநாயக்க பொறியியல் தொழில் நுட்ப நிறுவன மாணவர்களுக்கும் வெளியாருக்குமிடையில் ஏற்பட்ட தகராறின் போது சிதறி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி இறந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றதாக பொலிஸார் கூறினர்.

தொழில் நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ள கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களை வெளியில் இருந்து வந்த 15 பேர் கொண்ட குழு தாக்கியுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் ஏற் பட்ட மோதலில் இரு மாணவர்க ளும் வெளியார் மூவரும் காயமடைந்து நீர்கொழும்பு ஆஸ்த்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மோதலின் போது சிதறி ஓடிய கேகாலை மற்றும் கெகிராவையைச் சேர்ந்த இரு மாணவர்களே விபத் தில் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை சட்டவிரோதமாக தொழில்நுட்ப நிறுவனத்தில் நுழை ந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவ த்துடன் மாணவர்களுக்கு தொடர்பு ள்ளதா என அறிய விசாரணை நடத்தப்படுகிறது.

வெள்ளவத்தையில் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

வெள்ளவத்தை மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வந்தவருமான செல்வரட்ணம் செல்வராணி (62 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கூறியதாவது;

வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலிருந்து செல்வரட்ணம் செல்வராணி (62 வயது) என்ற பெண் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு பார்வைக்கோளாறு உட்பட பல நோய்கள் இருப்பதாகவும் அதனால் தான் தனது குடும்பத்திற்குப் பாராமாக இருக்க விரும்பாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தப் பெண் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வந்துள்ளார். இவரின் தற்கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah_Nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புக் கலைமாணிப் பட்டதாரிகளை உருவாக்கி வெளியேற்றி வருவதை நாம் அறிவோம். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் பயிலும் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வுக்காக ஒவ்வொருவரும் துறைத்தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட, தெரிந்தெடுத்த ஒரு விடயத்தை வைத்து விரிவான ஆய்வினை மேற்கொண்டு 100 பக்கம் வரையிலான ஆய்வாக அதனைத் தமது இறுதித் தேர்வின் ஒரு பகுதியாக தாம் சார்ந்த துறைப்பீடத்திற்கு வழங்குவதுண்டு.

மற்றைய பல்கலைக்கழகங்களைப் போலல்லாது  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமக்கென்று ஒரு பதிப்பகப் பிரிவினை ஒருபோதும் கொண்டிராததால், இவ்வாய்வுகளை நூலுருவில் கொண்டுவந்து அதனைத் தான் சார்ந்த சமூகத்திற்கு வழங்கித் தமது கல்விசார் அடைவினை சமூகமயப்படுத்துவதற்கும், அவ்வாய்வேடுகள் பரவலாக சமூகத்தின் பிற புத்திஜீவிகளிடம் சென்றடையச்செய்து பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் மற்றும் ஆய்வுப் புலமையை பட்டைதீட்டிக்கொள்வதற்கும் இன்றளவில் வாய்ப்பில்லாது போய்விட்டது. இதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தான் சார்ந்துள்ள தமிழ்ச் சமூகத்துடன் மேற்கொள்ளக்கூடிய ஒரு உறவுப்பாலத்தை போக்குவரத்திற்காகத் தடைசெய்துவருகின்றது.

இதனால், ஆய்வினை மேற்கொள்ளும் பட்டதாரிகள் தாம் பெரும் பணச்செலவினதும் உடல் உழைப்பினதும் கால விரயத்தினதும் பெறுபேறாக உருவாக்கிய ஆய்வுகள் கிணற்றில் போட்ட கற்களாக பல்கலைக்கழக பீடங்களின் துறைத்தலைவர்களின் இறாக்கைகளில் தஞ்சமடைவதுடன் தமது பிறவிப் பெரும்பயனை எய்திவிடுகின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஆய்வு மாணவரின் சுயமுயற்சியால், அல்லது இவ்வாய்வு பற்றிய தகவல் அறிந்த சிலரால் வெளியாரின் உதவியுடன் நூலுரவாக்கி வெளியிட்டுள்ளனர். இத்தகைய ஆய்வுகளை நூலுரவாக்கி வெளியிடுவதில் மற்றைய பதிப்பகங்களைவிட, கொழும்பு குமரன் புத்தக இல்லம் அதீத அக்கறை காட்டிவருவதும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

இந்நிலையில் நூலுரவாக்கப்பட்ட அய்வுகள் பற்றிய பட்டியலையோ, அவற்றின் இருப்பு பற்றிய தகவல்களைக்கூட பல்கலைக்கழகங்கள் பேணிவருவதாகத் தகவல் இல்லை. பல்கலைக்கழக வட்டாரத்தின் மூலமல்லாது, தினசரிப் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாகவே இவ்வாய்வுநூல்களின் இருப்பு பற்றி அறியமுடிகின்றமை கவலைக்குரியதாகும்.

அமுதுப் புலவருக்கு அஞ்சலி: விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

இவ்வகையில் அண்மையில் எனக்குக் கிட்டிய பத்திரிகைத் தகவல்- 2006ஆம் ஆண்டு தமிழ்த்துறையில் இறுதித்தேர்வினை மேற்கொண்ட டயானா மரியதாசன் என்பவர் தனது சிறப்புக் கலைமாணித் தேர்வுக்காக லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அண்மையில் 23.2.2010 அன்று மறைந்த இளவாலை அமுதுப் புலவர் பற்றிய விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார் என்பதாகும். இவரது ஆய்வு தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற தலைப்பில் 99 பக்கங்களில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. இதனை அருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ளார். 2006இல் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வென்ற வகையில் இது அவரது மறைவுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலைக் கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் அமுதுப் புலவர். இளவாலை தம்பிமுத்து –சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.
ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் தான் மரணிக்கும்வரை வாழ்ந்துவந்தார்.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

அமரர் இளவாலை அமுது பற்றிய ஆறு இயல்களைக்கொண்ட இவ்வாய்வு நூலின் இயல் ஒன்றில் அமுதுப் புலவரின் வாழ்க்கை வரலாறும், இயல் இரண்டில் அவரது கவிதைப் படைப்புகள் பற்றியும், இயல் மூன்றில் அவரது ஆய்வு நூல்கள் பற்றியும், இயல் நான்கில் அவரது வாழ்க்கை வரலாற்று நூல்கள் பற்றியும், இயல் ஐந்தில் அவரது பிற பணிகள் பற்றியும் பேசும் இவ்வாய்வின் ஆறாம் இயல் அமுதுப் புலவரின் வாழ்வும் பணிகளும் பற்றிதொரு விரிவான மதிப்பீடாக அமைந்துள்ளது. அமுதுப் புலவரின் இலக்கிய உலா, விருது வழங்கல், பிறந்த தினம், மேடைப் பேச்சுக்கள் என்பன பற்றிய புகைப்படக்காட்சிப் பதிவுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

இலங்கையில் இந்நூல் 200 ரூபாவுக்கு புத்தக விற்பனை நிலையங்களில் பரவலாக விற்பனையிலுள்ளன.