எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தமிழர்களுடன் உறவை வளர்த்த நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்

நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் எசல வீரக்கோன் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவினால் அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது இருவருட சேவைக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் திருப்பியழைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அமைச்சு வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது;

எசலவுக்கெதிராக அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் கொடுமைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியொன்றை நோர்வேயில் நடத்தும் திட்டத்தை எசல ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஒஸ்லோவைத் தவிர இலங்கைத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிகளவான ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் இக்கண்காட்சி நடைபெற்றது.நோர்வேயிலுள்ள தமிழ் மக்களுடனான உறவை வளர்ப்பதில் இவர் ஆர்வம் காட்டியதாகவும் எசல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தவிர எசலவின் தந்தையாரான பிரட்மன் வீரக்கோன் முன்னாள் ஜனாதிபதிகள் பலரது செயலாளராக இருந்தவர். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது அவரது முக்கிய ஆலோசகராயிருந்தார்.

இதன்போது விடுதலைப்புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் வீரக்கோன் முக்கிய பங்காற்றியதுடன் அதியுயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட தொடர்பாடல் சாதனங்களை நோர்வே நாட்டவர்கள் ஊடாக விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங் 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் – 2 வாரத்தில் அலுவலகம் செல்வார்

sing.jpgஇதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று வீடு திரும்பினார். இன்னும் 2 வாரத்தில் அவர் வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால், ஜனவரி 23ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் 14 மணி நேரம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு பிரதமரின் உடல்நிலை வேகமான முன்னேறியது. 28ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  எட்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனையில் இருந்து மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். புறப்படும் முன்பு,  சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ்களுக்கு, பிரதமர் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார்.

 டிஸ்சார்ஜ் செய்வதற்கு முந்தைய பரிசோதனைகளை மும்பை டாக்டர் ராம்காந்த் பாண்டா தலைமையிலான குழு செய்தது.  நேற்று அதிகாலை பிரதமர் எழுந்ததும் டீ குடித்தார். மருத்துவமனை வளாகத்தில் சிறிது தூரம் வாக்கிங் சென்றார். பின்னர் பத்திரிகைகள் படித்தார். சிற்றுண்டி கொடுக்க தயாரானபோது வீட்டுக்குப் போய் சாப்பிட விரும்புவதாக கூறினார். பிரதமர் நேற்று உற்சாகமாக காணப்பட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

‘இப்போது, வீட்டில் இருந்தபடியே பிரதமர் பணியாற்றுவார். 2 அல்லது 3 வாரத்தில் அலுவலகம் வந்து வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் பூரண குணமடையும் வரை டாக்டர் பாண்டா தலைமையிலான குழு அவரை கவனித்து வரும்’ என்று மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார். பிரதமரின் ஊடகத்துறை செயலாளர் தீபக் சாந்து விடுத்த அறிக்கையில், அடுத்து வரும் வாரங்களில் உணவு அளவு மற்றும் உடற்பயிற்சியை படிப்படியாக அதிகரிக்கும்படி டாக்டர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். தான் விரைவில் குணமடைய வேண்டி நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்ததற்காக பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் தாக்குதல்

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வில்லியம்ஸ் ரோட்டில்  ஓட்டல் வளாகத்தில் இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்துக்குள் இன்று மாலை திடீரென்று சுமார் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்து. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அருகே சென்று இலங்கை ராணுவத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, அலுவலக கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதில் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்து சிதறின.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பர போர்டுகளை அவர்கள் கிழித்து எறிந்தனர். இதைக் கண்டு அலுவலகத்துக்குள் பணியில் இருந்த ஊழியர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். கண்ணாடிகளை நொறுக்கும் சத்தம் கேட்டு ஓட்டல் வளாகத்தில் இயங்கி வந்த மற்ற கடை ஊழியர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து நொடிப் பொழுதில் தப்பி ஓடி விட்டது. இது குறித்து அலுவலக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணாடிகளை உடைத்த நபர்களை தேடி வருகிறார்கள்.

முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பம்

_army.jpgமுல்லைத் தீவு மற்றும் முல்லைத்தீவை சூழ உள்ள வீதிகளில் போக்குவரத்தை ஆரம்பிக்கும் வகையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

ஏ-9 வீதியில் போக்குவரத்து நடவடிக் கைகளை ஆரம்பிக்கும் வகையில் வீதியின் இருபக்கமும் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி மாவட்டத்திலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றது

முல்லைத்தீவில் புலிகளின் ஒன்றுகூடல் தளம் மீது விமானத் தாக்குதல

jet-1301.jpgமுல்லைத்தீவு களப்புக்கு வடக்கு பிரதேசத்திலுள்ள புலிகளின் ஒன்று கூடல் தளம் ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.  விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக தாக்குதல் விமானங்களைப் பயன்படுத்தி நேற்றுப் பிற்பகல் 4.20 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

முன்னேறிவரும் இராணுவத்தின் 59வது படைப் பிரிவினருக்கு உதவியாக நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகளும், களமுனை வீரர்களும் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

vote.jpgமத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலமான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் அந்தந்த மாவட்டங்களில் இடம் பெறவிருக்கின்றன. இரண்டு மாகாணங்களிலும் 66,909 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகைமை பெற்றிருப்பதாக மேலதிகத்தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமானசிரி தெரிவித்தார்.

இதன் பிரகாரம் மத்திய மாகாணசபையில் கண்டி மாவட்டத்தில் 17,784 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 5,592 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 9,417 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வட மேல் மாகாண சபையில் குருணாகல் மாவட்டத்தில் 29491 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 4625 பேரும் தகுதிபெற்றிருப்பதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் 63 வது சுதந்திரதினக் கொண்டாட்டம் தலைநகரில் விரிவான அடிப்படையில் இடம் பெறவிருப்பதை யொட்டி பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு பெருந்தொகையான பொலிஸாரும், முப்படையினரும் கொழும்புக்கு வரவழைக்கப்படுவதன் காரணமாக மத்திய, வடமேல் மாகாணங்களைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய தபால் மூல வாக்களிப்பின் போது தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் சார்பில் தலா ஒரு பிரதிநிதி வாக்களிப்பை கண்காணிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

தீக்குளித்த பள்ளப்பட்டி ரவி மரணம்: தலைவர்கள் அஞ்சலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சனிக்கிழமை அன்று உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இவர் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக் கோரியும், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும் தீக்குளித்ததாக ரவியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் காவல்துறையினர், ரவி இலங்கை தமிழருக்காக தீக்குளிக்கவில்லை என்றும் ரவி 2 வழக்குகளில் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர் என்றும், இன்னும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். அவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே தீக்குளித்துள்ளார் என்றும் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழருக்காக பள்ளப்பட்டி வாலிபர் ரவி தீக்குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரவி இலங்கை தமிழர்களுக்காகத்தான் தீக்குளித்தான் என்று வைகோ, திருமாவளவன் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.  இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மரணம் அடைந்த ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, பழ.நெடுமாறன் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்பட தமிழின ஆதரவாளர்கள் மதுரை விரைந்துள்ளனர்

எஞ்சியிருக்கும் புலிகளும் சரணடைய வேண்டும் தவறினால் படையினர் பணிய வைப்பர் – ஜனாதிபதி

Mahinda Rajapaksaஆயுதங் களைக் கைவிட்டு எஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். தவறும் பட்சத்தில் இராணுவத்தினரால் பணிய வைக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஹங்குரன்கெத்தவில் தெரிவித்தார். பாதுகாப்பு படையினரிடம் சரணடையும் புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்தவர்களைப் போன்று சகல வசதிகளும் வழங்கிக் கவனிக்கவும் தயாராகவுள்ளோம். என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹங்குரன்கெத்த ரிக்கில்லகஸ்கட பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், வட பகுதியில் நடைபெறுவது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமல்ல, மாறாக பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை.

வெண்ணிறச் சீருடை அணிந்து பாடசாலை செல்ல வேண்டிய அப்பாவி குழந்தைகள் ரி – 56 ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி, சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்துகொண்டு குற்றச்செயலில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச் செயல்களிலிருந்து இக்குழந்தைகளைப் பாதுகாப்பது மூன்று குழந்தைகளின் தந்தையான எனது பொறுப்பாகும். பயங்கரவாதம் இந்த நாட்டிலிருந்து முழுமையாக ஒழித்துக் கட்டப்படும். புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவே 48 மணித்தியால கால அவகாசம் வழங்கினோம்.

எமது பாதுகாப்பு படையினர் கிளிநொச்சியை விடுவித்த சமயம் ஆயுதங்களைக் கைவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை ஏற்று புலிகள் இயக்கத்தினரின் பல உறுப்பினர்கள் சரணடைந்தார்கள். அவர்களை எமது பாதுகாப்பு படையினர் தெம்பிலி இளநீர் வழங்கி மனமார வரவேற்றனர். இவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவர்களாக புலிகள் இயக்கத்தினரின் உடையுடன் வந்துதான் சரணடைந்தனர். அதனால்தான் புலிகள் இயக்கத்தில் எஞ்சியுள்ள உறுப்பினர்களையும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றேன். எமது வேண்டுகோள்படி சரணடைபவர்களை, கிழக்கு மாகாணத்தில் சரணடைந்தவர்களைப் போன்று கவனிக்கவும் தயாராகவுள்ளோம். இவ்வாறு சரணடையத் தவறும் பட்சத்தில் புலிகளை எமது பாதுகாப்பு படையினர் பணியவைப்பார்கள். இதனை எவராலும் தவிர்க்க முடியாது என்றார்.

புதுக்குடியிருப்பில் நேற்று மோதல் – பலத்த இழப்புகளென இருதரப்பும் தெரிவிப்பு

truck.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருவதாக பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.  புதுக்குடியிருப்புக்குத் தென்புறப்பகுதியில் படைநடவடிக்கையில் ஈடுபடும் 59 ஆவது படையணியினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் வலுநிலைகளைத் தகர்த்தழித்தவாறு முன்னேறியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. இதேநேரம், புதுக்குடியிருப்புப் பகுதியில் பாரிய படைநடவடிக்கைக்குத் தயாரான படையினர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி படையினருக்குப் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் நந்திக்கடல் வாவிக்கு மேற்கே படைநடவடிக்கையில் ஈடுபடும் 59 ஆவது படையணியே சனிக்கிழமை புதுக்குடியிருப்புக்கு தெற்கே புலிகளின் வலுநிலைகளை உடைத்து முன்னேறியதாக படைத்தரப்பு தெரிவித்தது. அன்று காலை 6 மணி முதல் முழு நாளும் நடைபெற்ற உக்கிர சமரில் 9 ஆவது சிங்கப்படையணி, 4 ஆவது விஜயபா படையணி மற்றும் 7 ஆவது கெமுனு படையணிகள் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை 1.5 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்நகர்த்தியுள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதுக்குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தத் தயாராயிருந்த படையினர் மீது நேற்று அதிகாலை தாங்கள் நடத்திய முன்கூட்டிய பாரிய ஊடறுப்புத் தாக்குதலில் படையினருக்குப் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் 3 யுத்த டாக்கிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளதாக “தமிழ்நெற்’, “புதினம்’ இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

கரும்புலிகளின் இருமுகாம், பெருந்தொகை ஆயுதங்கள் – விசுவமடுவில் மீட்பு

_army.jpgவிசுவமடு கரும்புலிகளின் பாரிய இரு முகாம்கள், புலிகளின் 12 சடலங்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை இராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களைத் தொடர்ந்து படையினர் மேற்கொண்டு வரும் தேடுதல்களில் இதுவரை காலமும் இவ்வளவு பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்படவில்லையெனவும், இதுவே முதல் தடவையென்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

விசுவமடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களைத் தொடர்ந்து படையினர் அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் 12 சடலங்களையும் பெருந்தொகை ஆயுதங்களுடன் கரும்புலிகளது இரண்டு பாரிய முகாம்களையும் கைப்பற்றியுள்ளனர். கரும்புலிகளது முகாம்களுள் ஒன்று நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அது இரண்டு மாடிகளைக் கொண்டதுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையில் மாளிகை போன்று அமைக்கப் பட்டிருந்ததாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டது.

நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமில் கணனிகள் உட்பட பல நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் நவீன முறையில் அமைக்கப்பட்ட குளியலறை, சமையலறை என்பனவும் இருந்துள்ளன. அத்துடன் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுடன் உடற்பயிற்சி நிலையமும் இருந்துள்ளது. சத்தம் வெளியில் கேட்காதவாறான ஜெனரேட்டர் ஒன்றிலிருந்தே இந்த முகாமுக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இங்கு தங்கியிருந்திருப்பாரென சந்தேகிக்கத் தோன்றுவதாகவும் ஊடக நிலையத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

இவையனைத்தையும் இராணுவத்தின் 58வது படையணியினரே கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கரும்புலிகளின் மற்றைய பாரிய முகாமிலிருந்து பெருமளவிலான வெடிபொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

121 மில்லிமீற்றர் கொண்ட மூன்று நவீன எறிகணைகள், 18 ரி – 56 ரக துப்பாக்கிகள், 05 எம். பி. எம். ஜி, ஒரு ஸ்நிப்பர், 08 செயலிழக்கக்கூடிய ஆர். பி. ஜி.கள், 02 டேர்மோ பெரிக் ஆயுதங்கள், 20 பிஸ்டல் துப்பாக்கிகள், மூன்று ஆர். பி. ஜி. ஆயுதங்கள், 59 கிரனேற் கைக்குண்டுகள், 07 கிளேமோர்கள், ஒரு நவீன மாற்றங் களுடனான கிளேமோர், ஒரு ட்ரைபொட், புலிகளினால் உபயோகிக்கப்படும் ‘அருள்’ எனப்படும் 35 குண்டுகள், 100 டெட்ட னேட்டர்கள், ஒரு ரேடியோ செட், 8.9 வகையான மூவாயிரம் ரவைகள், 35 கேஸ் குண்டுகள், 08 ஹெல்மட், 02 80 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02, 82 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 35 இடைப்பையுடன் கூடிய பட்டிகள், பெருந்தொகையான கரும்புலிகளின் ஆடைகள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.