முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருவதாக பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்புக்குத் தென்புறப்பகுதியில் படைநடவடிக்கையில் ஈடுபடும் 59 ஆவது படையணியினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் வலுநிலைகளைத் தகர்த்தழித்தவாறு முன்னேறியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. இதேநேரம், புதுக்குடியிருப்புப் பகுதியில் பாரிய படைநடவடிக்கைக்குத் தயாரான படையினர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி படையினருக்குப் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் நந்திக்கடல் வாவிக்கு மேற்கே படைநடவடிக்கையில் ஈடுபடும் 59 ஆவது படையணியே சனிக்கிழமை புதுக்குடியிருப்புக்கு தெற்கே புலிகளின் வலுநிலைகளை உடைத்து முன்னேறியதாக படைத்தரப்பு தெரிவித்தது. அன்று காலை 6 மணி முதல் முழு நாளும் நடைபெற்ற உக்கிர சமரில் 9 ஆவது சிங்கப்படையணி, 4 ஆவது விஜயபா படையணி மற்றும் 7 ஆவது கெமுனு படையணிகள் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை 1.5 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்நகர்த்தியுள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதுக்குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தத் தயாராயிருந்த படையினர் மீது நேற்று அதிகாலை தாங்கள் நடத்திய முன்கூட்டிய பாரிய ஊடறுப்புத் தாக்குதலில் படையினருக்குப் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் 3 யுத்த டாக்கிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளதாக “தமிழ்நெற்’, “புதினம்’ இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.