சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

அரசியல்வாதி வாக்களிக்கும்போது புகைப்படம் எடுக்க தடைவிதிப்பு

election_ballot_cast.jpgமேல் மாகாணசபைத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட எந்தவொரு அரசியல்வாதியும் வாக்களிக்கும்போது புகைப்படமெடுப்பதை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தடைசெய்துள்ளார்.

வாக்களிப்பு தினத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் ஊடகவியலாளர்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள், தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்கள் எவரையும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாமென அவர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள், அரசாங்கத் தரப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எவராக இருப்பினும் அவர்களை புகைப்படங்கள் எடுக்கக் கூட அனுமதிக்க வேண்டாமென தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம் வாக்களிப்பு நிலையங்களுக்குள்ளும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள்ளும் ஊடகவியலாளர்களையோ, படப்பிடிப்பாளர்களையோ தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களையோ அனுமதிக்க வேண்டாமென தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரசியல் தலைவர்களிடம் பேட்டி காணவும் புகைப்படமெடுக்கவும் விரும்பும் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு நூறு யார் தொலைவுக்கப்பால் அதனைச் செய்ய முடியுமெனவும் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ் தேவி இன்று முதல் வவுனியா வரையில் சேவை!

bati-trnco.jpgதமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு யாழ் தேவி ரயில் இன்று மீண்டும் வவுனியா வரைக்கும் சேவையில் ஈடுபட்டது. பாதுகாப்பு கரணங்களை முன்னிட்டு இச்சேவை முன்னர் மதவச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று காலை 5 :45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட யாழ்தேவி கடுகதி ரயில் முற்பகல் 10.10 மணக்கு வவுனியாவை அடைந்தது. இன்று மாலை வவுனியாவிலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்ளம் அறிவித்துள்ளது. இன்று முதல் தினமும் காலை 5.45 மணிக்கு யாழ் கடுகதி வவுனியா வரையில் சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிவதே கொல்லப்பட்டோருக்கு நாம் செலுத்தும் கெளரவம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து ஐக்கிய இலங்கையில் பல்லின மக்களையும் ஒற்றுமையாய் வாழும் சூழலை ஏற்படுத்துவதே பயங்கரவாதத்தால் பலிகொள்ளப்பட்ட தலைவர்களுக்குச் செய்யும் உயர்ந்த கெளரவமாகும். அதற்கெதிரான எத்தகைய அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்கத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமரர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளாகி கொலையுண்ட ஒரு வருட காலத்திற்குள் அதற்குக் காரணமான பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிக்க முடிந்துள்ளதெனவும் தெரிவித்த ஜனாதிபதி ஜெயராஜ் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய வெற்றிகளைக் கண்டு பெருமிதமடைந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் சிரார்த்த தினத்தையொட்டி அன்னாரின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய தொகுப்பு நாலும் ஞாபகார்த்த முத்திரைவெளியீடும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. சபாநாயகர் உட்பட பெருமளவிலான அமைச்சர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை அரசியல் ரீதியாகவன்றி எனது சகோதரனாகவே பார்க்கின்றேன். அரசியல் ரீதியான போராட்டங்களிலும் என்னோடு நெருங்கி செயற்பட்டவர் என அவரைக் குறிப்பிட முடியும். அவர் இல்லாத இத்தகைய நிகழ்வொன்றில் நான் உரையாற்றுவேன் என நான் எதிர்பார்த்ததேயில்லை. இது எமது துரதிர்ஷ்டம்.

அவர் இல்லாத போதுதான் அவர் பற்றிய இழப்பு எமக்கு புலப்படுகிறது. நாடு மீளக்கட்டியெழுப்பப்படும் நிலை யில் அவரின் வெற்றிடம் உணரப்படுகிறது. சட்டக் கல்லூரியில் அவருடனான நெருக்கம் ஏற்பட்டது. விடுமுறையில் எமது ஊருக்கு வருவார். நாம் யாழ்தேவி ரயிலில் யாழ்ப்பாணம் சென்றது ஞாபகத்துக்கு வருகிறது.

மும்மொழிகளிலும் தேர்ச்சியுள்ள அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதிலும் விவாதிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். சவாலுக்கு முகங்கொடுக்கக் கூடிய துணிவு, ஆளுமையுள்ள குரல் ஆகியவற்றின் மொத்த உருவமாக அவர் திகழ்ந்தார். பாராளுமன்றத்தில் அனைவரோடும் நெருக்கமும் மிகுந்த அன்பும் கொண்டி ருந்த அவர் 2007 வரவு செலவுத் திட்டத் தின் போது பாராளுமன்றத்தில் மேற் கொண்ட நடவடிக்கை அபாரம். சிலர் கட்சிதாவ முயற்சித்த வேளை சிறந்த தலை வராகவிருந்து செயற்பட்டதை என்னால் நினைவு கூரமுடியும்.

அரசியலில் தீர்மானமெடுக்கும் துணிவு மிக முக்கியமானது. அந்த வகையில் அவ ரது பங்களிப்பு முக்கியமானது. அரசியலில் மட்டுமன்றி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சமூக சேவை அளப்பரியது. அவ ரது மரணத்தில் கண்ணீர் செறிந்த ஆயிர மாயிரம் மக்கள் அதற்குச் சான்று. அவர் விட்டுச் சென்ற பணியை அவரது தொகுதி மக்களுக்கு அவரது மனைவி சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தொடருவார் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

புது வருடத்தை முன்னிட்டு விஷேட பஸ், ரயில் சேவை -இன்று முதல் அமுல்

udayathevi.gifதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. மேலதிகமாக சுமார் 400 இ.போ.ச பஸ்களும் 20 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு கூடுதலான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதன்படி இன்று முதல் பதுளை, ஹட்டன், மஹவ, ரம்புக்கனை, காலி ஆகிய பகுதிகளுக்கு மேலதிக ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன. இது தவிர அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை, திருகோணமலை ரயில் சேவைகளுக்கு மேலதிக ரயில் பெட்டிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மட்டுமன்றி மீண்டும் கடமைக்கு திரும்புவதற்காகவும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. விசேட ரயில் சேவை எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறும்.

இதேவேளை, பண்டிகையை முன்னிட்டு 400 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இ.போ.ச கூறியது. பதுளை, கண்டி, ஹட்டன், பொலன்னறுவை, ஹங்குரங்கெத்த, காலி, மாத்தறை, ஹம்பாந் தோட்டை உட்பட கொழும்பிலிருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் மேலதிக பஸ் சேவைகள் இன்று (8) முதல் ஈடுபடுத்தப்பட வுள்ளதாக இ.போ.ச பிரதி பொது முகாமையாளர் பி.ஏ. லிவினிஸ் கூறினார்.

இது தவிர சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது சொந்த இடங் களுக்குச் செல்வதற்காகவும் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர வர்த்தக வலயங்களில் இருந்து அநுராதபுரம், ஆனமடுவ போன்ற பகுதிகளுக்கு விசேட இ.போ.ச பஸ்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ரயில் சேவையுடன் இணைந்ததாக கூட்டு பஸ் சேவையொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா கவும் அவர் கூறினார். இதன்படி பொல்கஹ வல, குருணாகல் போன்ற பிரதான ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து விசேட இ.போ.ச பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதேவேளை, பண்டிகையை முன்னிட்டு கூடுதலான தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை கூறியது. கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக் குச் செல்லவும் திரும்பி கொழும்பு வரவும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 20ம் திகதி வரை மேலதிக பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

மட்டு., வவுனியாவுக்கு விசேட ரயில்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவிற்கும் மட்டக்களப்பிற்கும் புதிதாக இரு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது-

இதன்படி கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு புதிதாக கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த யாழ்தேவி ரயில் தினமும் காலை 5.45 மணிக்கு கொழும்பிலிருந்து ஆரம்பமாகி காலை 9.10 மணிக்கு அநுராதபுரத்தையும் 9.40 மணிக்கு மதவாச்சியையும் 10.07 மணிக்கு வவுனியாவையும் சென்றடையும். மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்படும் யாழ்தேவி ரயில் இரவு 8.35 மணிக்கு கொழும்பை வந்தடையும். இந்த ரயில் பொல்கஹவல, குருணாகல், மஹவ, அநுராதபுரம், மதவாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நிறுத்தப்படும்.

இதேவேளை கொழும்பு-மட்டக்களப்புக் கிடையில் புதிதாக உதயதேவி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10.30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் இந்த ரயில் 3.16 மணிக்கு கல்லோயாவையும் 6.30 மணிக்கு மட்டக்களப்பையும் வந்தடையும். இந்த ரயில் சேவையுடன் இணைந்ததாக கல்லோயா விலிருந்து தினமும் 3.20 மணிக்கு ரயில் சேவை யொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது 5.00 மணிக்கு திருகோணமலையை வந்தடையும். மீண்டும் இந்த ரயில் காலை 7.45 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து பயணமாகி பிற்பகல் 3.40 மணிக்கு கொழும்பை வந்தடையும். இந்த ரயில் பொல்கஹவல, குருணாகல், மஹவ, கலாவெவ, கெகிராவ, கல்ஓயா, ஹிங்குரா கொட, பொலன்னறுவை, மன்னம்பிட்டிய, பூனானை, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும்.

ருபெல்லா தொடர்பாக தவறான கருத்துக்கள்: தடுப்பு மருந்து வழங்கலுக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் – நிமல்

nimal-sri-pala.jpgருபெல்லா தடுப்பு மருந்து தொடர்பாகத் தவறான கருத்துக்களைப் பரப்பி தேசிய தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் மாத்தறை மாவட்ட எம்.பி. ஜினதாச கித்துலேகொடவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாத்தறையில் ருபெல்லா தடுப்பு மருந்து பெற்ற மாணவி உயிரிழந்தமைக்கு அம்மாணவியின் உடலில் காணப்பட்ட ஒவ்வாமையே காரணம். மாறாக குறித்த தடுப்பு மருந்து தரம் குறைந்ததோ, காலம் கடந்ததோ அல்ல.

இதனை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மருத்துவ நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் இவ்விடயம் தொடர்பாக நடாத்திய விசாரணை மற்றும் பரிசோதனை தொடர்பான அறிக்கையை எமக்குக் கையளித்துள்ளனர். அதனை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறேன். அந்த அறிக்கையின் பிரதியை விரைவில் தருகின்றேன். ருபெல்லா தடுப்பு மருந்து இற்றைவரையும் இந்நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியான சம்பவம் ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

இத்தடுப்பு மருந்து பெற்ற 25 மாணவிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படக் காரணம் ஒருவர் உயிரிழந்ததால் ஏற்பட்ட உளரீதியான தாக்கமேயாகும். இதனையும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றார்.

ஆயூர்வேத சிகிச்சை முறையை பிரபல்யப்படுத்த இலங்கைக்கு வெளிநாடுகள் அழைப்பு!

tissa_karaliyaddda.jpgஇலங்கையின் ஆயுர்வேத வைத்திய முறையை  அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் கியுபா போன்ற நாடுகளில் பிரபல்யப்படுத்த அந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரளியத்த தெரிவித்தார். இந்த அழைப்புக்கள் தோடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் நான்கு இடங்களில் ஆயர்வேத சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றின் மூன்றின் ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் என அமைச்சின் ஆலோசகர் ஜயசிறி மெண்டிஸ் தெரிவித்தார். அவற்றுக்குத் தேவையான மூலிகைகள் மற்றும் உபகரணங்கள் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை அபுதாபி நகரிலும் எதிர்வரும் 24 ஆம் 25 ஆம் திகதிகளில் ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தவும் சிகிச்சை மத்திய நிலையம் ஒன்றை  திறந்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றும் முதற்கட்ட நடவடிக்கை!

வடக்கி லிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றும் முதற்கட்ட நடவடிக்கை இம்மாத இறுதியில் அல்லது மே மாத முதற்பகுதியில் மன்னாரில் ஆரம்மபிக்கப்படும் என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை கண்டறியவும் அவர்களுக்கு தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படு;திக் கொடுக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் நலன்புரி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வட பகுதியிலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் சிதறி வாழ்கின்றனர். இவர்களுள் உள்ள வறிய மக்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள இடைத்தங்க்ல் முகாம்களில் செல்லொனாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்

அமெரிக்க அதிபர் ஒபாமா திடீர் பாக்தாத் விஜயம்

obama_ap.jpg

முன்னறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதிபர் ஒபாமா பாக்தாதுக்கு சென்றுள்ளார். துருக்கிக்கான நீண்ட விஜயத்தின் முடிவில், சிறிது நேரத்துக்கு முன்னர் இராக்கிய தலைநகருக்கு அவர் சென்று இறங்கியுள்ளார்.

அவர் அமெரிக்க படையினரையும், இராணுவ தளபதிகளையும் சந்திப்பார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.இராக்கிய அதிபர் ஜலால் தலபானியையும், பிரதமர் நூரி அல்மலிக்கியையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும், அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஹெலிக்கொப்டரில் செல்வதற்கு மோசமான கால நிலை இடம் கொடுக்காத காரணத்தினால், அநேகமாக அவர்களுடன் அவர் தொலைபேசியிலேயே உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி லிபியா பயணம்

mahinda.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை லிபியா புறப்பட்டுச் செல்லவுள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் முதற்தடவையாக லிபியாவுக்கான விஜயத்தை அவர் மேற்கொள்கிறார்.

லிபியா அரசாங்கத்தால் கடந்த வருடம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்த இது வழிவகுக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லிபியத் தலைவருடனும் அரசாங்கத்துடனும் பல பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளார்

முன்னாள் அமைச்சர் ஈ.எல்பி. ஹுருள்ளே காலமானார்

சிரேஷ்ட அரசியல் வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான ஈ.எல்.பி. ஹுருள்ளே நேற்று மாலை காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 90 ஆகும். மாலினி கலகொட ஹுருள்ளே (86)யின் கணவரான இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை யாவார்.

ஹொரவப்பத்தானை தேர்தல் தொகுதியிலிருந்து 1956ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், 1970ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 1977ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையிலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

1965 இல் போக்குவரத்து அமைச்சராகவும் 1977 இல் கலாசார அமைச்சராகவும் ஈ.எல்.பி. ஹுருள்ளே இருந்துள்ளார். 1988 இல் மத்திய மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றிருந்தார். 1991ஆம் ஆண்டு முதல் சில வருடங்களுக்கு அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளார்.

சுகவீனம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று மாலை உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது பூதவுடல் ரேய்மண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (8ம் திகதி) மாலை 6.30 மணிக்கு பொரளை கனத்தையில் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்கான இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்படும்.