::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புலிகள் மீது ஐ நா குற்றச்சாட்டு

sirjohnholmes.jpgமனித நேயப் போர் நிறுத்தம் அல்லது இலங்கைப் பாதுகாப்புப் படையினர் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஒரு தற்காலிக நிறுத்தம் என்பது நடைமுறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஐ நா கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித நேயப் பணிகளுக்கான துணைப் பொதுச் செயலர் ஜான் ஹோம்ஸ் பி பி சியின் ஆங்கில செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியின் போது இதைக் குறிப்பிட்டார்.

தற்போதைய இராணுவ சூழலை வைத்துப் பார்க்கும் போது, பொதுமக்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் கடைசி கேடயம் என்று தோன்றுவதாக கூறிய அவர், தான் ஒரு இராணுவ ஆய்வாளர் இல்லை என்ற போதிலும், அங்குள்ள சூழல் புலிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகத் தோன்றவில்லை என்றார் அவர்.

இதற்கு ஒரே தீர்வு புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதுதான் என்று ஹொம்ஸ் கூறினார் மேலும் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சற்று முன்னதாகவும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர முயன்ற ஆறு பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றுள்ளனதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகளை முற்றிலும் அழிப்போம்: சரத் பொன்சேகா

army-wanni.jpgவிடுதலைப் புலிகளை இலங்கையில் இருந்து முற்றிலுமாக அழித்து ஒழிப்போம்’ என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.  சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினங்களை முன்னிட்டு இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பொன்சேகா கூறியிருப்பதாவது:

முன்பு விடுதலைப்புலிகளிடம் இருந்த 13 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான பகுதிகள், தற்போது 23 சதுர கி.மீ. அளவுக்கு சுருங்கி விட்டது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், விமானங்கள், படகுகள் போன்றவற்றை அழித்து விட்டோம். இலங்கையில் இருந்து தீவிரவாதம் மற்றும் தனி ஈழம் கோரும் விடுதலைப்புலிகளின் கனவு ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிப்பதே எங்களின் லட்சியம்.

விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வரும் அப்பாவி மக்களுக்கு உபசரிப்பு, நட்பு மற்றும் அன்பை ராணுவம் அளித்து வருகிறது. பாதுகாப்பு வளைய பகுதிக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம் ஆகும். விடுதலைப்புலிகள் பிடியில் இருக்கும் மற்ற அப்பாவி மக்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இலங்கையில் விரைவில் அமைதி பூத்து குலுங்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் 514 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலமாக புல்மோட்டை பகுதிக்கு

taking-to-green-ocean.jpgஇலங் கையின் வடக்கே புதுமாத்தளன் மருத்துவமனையில் இருந்து நேற்று மேலும் ஒரு தொகுதி நோயாளர்களும், அவர்களது உறவினர்களுமாக 514 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள 48 மணிநேர மோதல் தவிர்ப்பு நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் வேளையில் திங்கள் கிழமையன்றும் இவ்வாறான ஒரு தொகுதி நோயாளர்கள் புல்மோட்டை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் அமைதிக்குப் பின்னர் மோதல்கள் மோசமாக வெடிக்கலாம் ?

pokkanai.jpgஅரசாங் கத்தின் மோதல் தவிர்ப்பு நடைமுறையில் இருக்கின்ற போதிலும், திங்கள் கிழமை இரவு பத்து மணி முதல் அதிகாலை வரையில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வலைஞர்மடம் பகுதியின் எல்லைப்புறத்தில் இரு தரப்புக்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுதத்ம் இருந்த காலத்தில் 93 பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் புதுமாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவி்த்திருக்கின்றன. 6 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு தினங்களிலும் பொதுவாக ஷெல் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், துப்பாக்கிச் சண்டைகள் நடைபெறுகின்ற பகுதிகளில் ஒன்றிரண்டு மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவுடன் அரசாங்கத்தின் மோதல் தவிர்ப்பு முடிவுக்கு வருவதையடுத்து, அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற ஓர் அச்ச உணர்வு பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருக்கும் மக்கள் மத்தியில் மேலோங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு நாள் அமைதிக்குப் பின்னர் மோதல்கள் மோசமாக வெடிக்கலாம் என்று அந்த மக்கள் மத்தி்யில் எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

தற்காலிக போர்நிறுத்தத்தின் முதல் நாளன்று இராணுவம் சிவிலியன்கள் மீது தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல்கள் நடத்தியதாக விடுதலைப்புலிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவம், அரச படைகளின் மீது கடுமையான இய்திரத்துப்பாக்கித் தாக்குதல்களை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாகக் கூறியிருக்கின்றது.

போர் நிறுத்தம் பற்றி இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டு

dr-palitha.jpgதமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் மோதல் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி, பாதுகாப்பு மண் அரண்களை உருவாக்கிக் கொண்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைச் செயலர் டாக்டர் பாலித கொஹன்னா குற்றம் சாட்டினார்.

போர் நிறுத்ததை நீடிப்பது பற்றி பேசுவதை விட, மோதல் நிறுத்த காலத்தில் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் வெளியேற அனுமதிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி முதலில் எழுப்பப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் அரசின் இந்த மோதல் நிறுத்த அறிவிப்பை, கண்துடைப்பு என்றும் ஒரு அரசியல் நாடகம் என்றும் விடுதலைப் புலிகள் விமர்சித்துள்ளனர்.

48 மணி நேர போர் நிறுத்த அறிவிப்புக் காலத்தில் 40 பொதுமக்கள் மட்டுமே அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

puthukkudi.gifவன்னியில் உள்ள மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்ட 48 மணி நேர  போர் நிறுத்த காலத்தில் இன்று 40  பொதுமக்கள் மாத்திரமே படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர்களில்  வடமராட்சி கிழக்கிலிருந்து படகு மூலம் வடமராட்சி, பருத்தித்துறை முனைப் பகுதிக்கு கடல் மார்க்கமாக 26 பேரும், வவுனியாவுக்கு தரை மார்க்கமாக 14 பேரும் வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் பருத்தித்துறைக்குச் சென்ற 26 பொதுமக்களும்  தென்மராட்சியிலுள்ள நலன்புரி  முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கண்துடைப்பு அறிவிப்பு : தேவை நிரந்தர போர் நிறுத்தம் – விடுதலைப் புலிகள்

lttelogo.jpgஇலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது ஒரு தலைபட்சமான போர் நிறுத்தம், கண்துடைப்பு அறிவிப்பு. இப்போது அவசரத் தேவை நிரந்தர போர் நிறுத்தமே என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் – முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.

சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை – புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோம்.

போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு மக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களையும் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிங்களப் படைகள் தொடர்ந்து நடத்துகின்றன.

உலகையும் – தமிழ் மக்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட இந்த அரசியல் நாடகத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று புலிகள் இயக்கம் நீண்ட நாளாகவே கோரி வருகின்றது.

இதனையே நாம் இப்போதும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இத்தகைய போர் நிறுத்தம் அரசியல் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அமைதி வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக்காணும் ஏது நிலையையும் அது உருவாக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புகின்றது.

இத்தகையதொரு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள புலிகள் இயக்கம் தயாராகவுள்ளது.

சிங்களப் படைகளின் முற்றுகைப் போருக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்கள் இங்கே சொல்லொணாத் துயர்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த அவல வாழ்க்கை உலகத்தலைவர்களாலும் – உலக மக்களாலும் அனுதாபமாகப் பார்க்கப்படுவது எமது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.

சிங்கள அரசின் உணவு மற்றும் மருந்துத் தடைகளால் மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், நன்னீர் கிணறுகளை அசுத்தமாக்கியுள்ளது.

இதனால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

படையினரின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படும், காயமடையும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 300 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.

மக்களின் வாழ்விடத்திற்கு நெருங்கி நின்றவாறு படையினர் நடத்தும் துப்பாக்கித் தாக்குதல்களால் இப்போது அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வெட்டவெளியான மணற்திடல்களில் – தறப்பாள் கூடாரங்களுக்குள் முறையான காப்பகழிகள் இன்றி வாழும் மக்களை இந்த ரவைகள் தாக்குகின்றன.

இவ்விதம் சிங்களப் படைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் எமது மக்களுக்கு உடனடிப் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாகவுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் சிறிலங்கா அரசு விரும்புவது போல அதன் ராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக, மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம் கொண்டதாகவும் அமைய வேண்டும்.

அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று புலிகள் கூறியுள்ளனர்.

வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

reoorters.jpgஇலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர். இது இலங்கை பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை புரிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுவதாகவே உள்ளது. யுத்த வலயங்களில் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் 1738 பிரகடனத்தை இலங்கை அரசு மீறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பாரிய அளவில் மனிதாபிமான சீர்குலைவும் யுத்தக் குற்றங்களும் வன்னியில் இடம்பெறும் நிலையில் சர்வதேச சமூகம் போர் நிறுத்தம் வேண்டும் என்று விடுக்கும் கோரிக்கைக்கு இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தொண்டு நிறுவனங்கள் வன்னிக்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறது. சுதந்திரமான பத்திரிகையாளர்களின் பிரசன்னம் இல்லாத இந்த யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது வெட்கக் கேடான செயலாகும். வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடை விதிக்கும் விடுதலைப் புலிகள் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இராணுவ வெற்றிகளை செய்திகளாக அரசு தருவதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் கூறுகிறது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயற்பட விடாமல் பொதுமக்கள் தகவல் அறியும் சுதந்திரத்திற்கு அரசு தடையாக உள்ளதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

இலங்கை அரசும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது. எங்கே இரத்தம் சிந்தப்படுகிறதோ அங்கே பேனா மையும் சிந்தப்படவேண்டும் என்றும் சர்வதேச பத்திரிகையாளர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களும் தம்முடன் சேர்ந்து பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன்

Pirabakaran V_LTTEபுதுக்குடியிருப்பில் ஏப்ரல் 5ல் இடம்பெற்ற தாக்குதலில் பல நூறு போராளிகளை இழந்து காப்பாற்றப்பட்ட புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தங்கள் இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இதனைத் தெரிவிக்கின்ற போதிலும் புலிகள் உத்தியோகபூர்வமாக இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தற்போது அங்கு இல்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்று உறுப்பினர் ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளார்.  (Related Article : Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

புதுக்குடியிருப்பில் புலிகளின் அதி முக்கிய தலைவர்கள் சிக்குண்ட நிலையில் இடம்பெற்ற மிக மூர்க்கத்தனமான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். கொல்லப்பட்டவர்களில் புலிகளின் முழு இராணுவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான கொமாண்டர் தீபன் கொல்லப்பட்டு இருந்தார். இதுவரை புலிகளில் கொல்லப்பட்ட போராளிகளில் மிக மிக முக்கியமான கொமாண்டராக தீபன் இருந்துள்ளார். அவர் உட்பட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டு இருந்தனர். இவர்களில் புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும், வே பிரபாகரனின் மெய்ப் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த கடாபியும் ஆட்லரிப் பிரிவுத் தலைவரான மணிவண்ணனும் அடங்கி இருந்தனர். இவர்களுடன் கிழக்கு பகுதிப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கீர்த்தி, மட்டக்களப்புத் தலைவர் நகுலன், ராதா படையணித்தலைவர் சீலாபரன், சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவுத் தலவர் அமிதாப், மோட்டார் பிரிவுத் தலைவர் கோபால் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சுச் செய்திகள் தெரிவிக்கின்றது. ஆயினும் இப்போராளிகளது இழப்புப் பற்றி புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. புலிசார்பு ஊடகங்களும் மௌனமாகவே உள்ளன.

கிடைக்கின்ற தகவல்கள் காயத்திற்கு உள்ளான வே பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி, அவரது மனைவி ஆகியோர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக தெரிவிக்கின்றன. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் சில முக்கிய தலைவர்கள் காட்டுப் பகுதிகளுக்குள் தப்பி உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

புலிகளின் தலைமை யுத்தப் பகுதியில் இருந்து தப்பித்ததும் அல்லது தப்பிச் செல்ல அனுமதிக்கபட்டதும் இலங்கை அரசாங்கத்தின் யுத்த நிறுத்த அறிவிப்பும் இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதும் எழுந்தமான நிகழ்வுகளா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இவையனைத்தும் இந்தியா பொதுத் தேர்தலுக்கு நெருங்குகின்ற நிலையில் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே சமாதான அணுசரணையாளர் பொறுப்பில் இருந்து நோர்வே நீக்கப்பட்டு உள்ளதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் கீழ்நிலைப் போராளிகள் சில நூறுபேரே உள்ளதாகவும் யுத்த நிறுத்த முடிவில் ஏனைய பிரதேசங்களைக் கைப்பற்றியது போல் இப்பிரதேசத்தையும் இராணுவம் பாரிய யுத்தம் இன்றிக் கைப்பற்றும் என்றும் தெரியவருகிறது.

இப்பிரதேசத்தில் இருந்து புலிகளின் தலைமை பின்வாங்கியது அல்லது எஸ்கேப்பானது உறுதியானால் அங்கு ஏற்படக் கூடிய பாரிய மனித அவலம் தவிர்க்கப்படும்.

முல்லைத் தீவில் புலிகளின் தலைமை தப்பித்துக் கொண்டது அல்லது தப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது இது முதற்தடவையல்ல. இந்திய இராணுவத்துடனான மோதலின் இராணுவச் சுற்றி வளைப்பில் இருந்து புலிகளின் தலைமை அன்று தப்பித்துக் கொண்டது அல்லது தப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின் முல்லைத்தீவில் சிக்குண்ட புலிகள் தங்களது தலைமையைப் பாதுகாக்க மக்களை கேடயமாக்கியதும் அதானால் இலங்கை இனவாத அரசின் இராணுவத் தாக்குதலில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். பத்தாயிரம் வரையானோர் மோசமான காயங்களுக்கு உள்ளாயினர். மூன்று தசாப்த கால தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை உறுதுணையாக இருந்த வன்னி மக்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாக்க அதி உச்ச விலையைச் செலுத்தினர். இனவாத அரசின் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடிய மக்களை பிடித்து அடித்து முதுகுத்தோலை உரித்தனர். அல்லது தப்பியோடியவர்களை புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

எது எப்படி இருப்பினும் புலிகளின் தலைமை இன்று அப்பிரதேசங்களில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக அல்லது பின்வாங்கிவிட்டதாக தெரியவருகின்றது. இதனை கிளிநொச்சி வீழ்ந்த கையுடன் செய்திருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம். ஆயினும் இப்போது தன்னும் அவர்கள் தப்பியோடியது அல்லது பின்வாங்கியது இன்னும் பல்லாயிரம் இழப்புகளை தவிர்க்க உதவியுள்ளது.

இணைத்தலைமை நாடுகள் இந்தியா உட்பட ஆதரவளித்த பீக்கன் புரஜக்ற் திட்டத்தின்படி;
01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதி குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.

01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியும்  குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.

01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியின் கடைசி 15 முதல் 20 கிலோ மீற்றர் வரையான பகுதியும் கைப்பற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

அடுத்து  01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இது மிகவும் சிரமமானதும் அதிக காலத்தை வேண்டி நிற்பதுமான நடவடிக்கை.

இன்று பின்வாங்கிய புலிகள் மீண்டும் தங்களை சுதாகரித்துக் கொண்டு தாக்குதலை நடத்த தயங்க மாட்டார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுடைய அபிலாசைகளை திருப்திப்படுத்தும் அரசியல் தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் ஏற்படுத்தவில்லை. அந்த நம்பிக்கையை ஏற்படுத்தப் பொவதும் இல்லை என்ற உணர்வே பெரும்பான்மையான தமிழ் மக்களிடம் உள்ளது. அதனால் இன்று புலிகள் ஓரம் கட்டப்பட்டாலும் இலங்கை அரசினதும் அதனுடன் இணைந்து இயங்குகின்ற சக்திகளினதும் செயற்பாடுகள் மீண்டும் புலிகளின் தேவையை உச்சத்திற்கு கொண்டு வரும் என்கின்ற அச்சம் உள்ளது. இந்த வரலாற்று நச்சு சக்கரத்தை மாற்றி அமைக்கின்ற அரசியல் பலம் இன்னமும் இலங்கையில் இல்லை என்பதே வேதனையான உண்மை.

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை பலவினப்படுத்தியதில் அன்றும் சரி இன்றும் சரி புலிகளின் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்கள் நியாயமான அரசியல் லட்சியங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தலைமையின் நியாயமற்ற போராட்டங்களால் அடிபட்டுச் சென்றது மட்டுமல்ல எதிர்மறையாக அதுவே தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் வழிகோலியது.

புலிகள் எதிர்காலத்தில் தங்கள் அரசியலற்ற அரசியலைக் கைவிட்டு தங்களை மீளாய்வுக்கு உட்படுத்துவது அவசியம். அப்படிச் செய்யாத வரை அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏகபிரதிநிதிகளாக அல்ல ஏகப்பட்ட பிதிரிநிதிகளில் ஒருவராகவும் வர இயலாது. துரதிஸ்டவசமாக இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள சமூகங்கள் மத்தியில் உள்ள அரசியல் தலைமைகள் ஒன்றும் புலிகளின் தலைமையிலும் பார்க்க குறிப்பிடத்தக்கவை என்றும் சொல்லிவிட முடியாததாலேயே இலங்கை இவ்வாறான ஒரு பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்றது. குறைந்தபட்சம் யுத்தம் முடிவுக்கு வரும் போது ஒட்டுமொத்த இலங்கை மக்களும் மீளவும் பலம்பெறுவார்கள். அவர்களைப் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியும்.

காயமடைந்த 18 சிவிலியன்கள் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதி: பாதுகாப்பு பிரதேசத்தில் உணவு விலைகள் உச்சம்

pokkanai.jpgபாதுகாப்பு பிரதேசத்தில் இன்றும் 18 பொதுமக்கள் காயங்களுடன் புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இவர்களில் அனேகமானவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள் உச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. உணவுப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதனால், அங்குள்ள மக்கள் பெரும் கஸ்டத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு சில கடைகளே இருப்பதாகவும் அவற்றில் – ஒரு கிலோ அரிசி 300 ரூபாவுக்கும், ஒரு கிலோ கோதுமை மா 350 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோ 2000 ரூபாவுக்கும், வெங்காயம் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும், பால் மா பக்கட் ஒன்று (440 கிராம் நிறையுடையது) 2200 ரூபாவுக்கும், மிளகாய் ஒரு கிலோ 9000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.