இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர். இது இலங்கை பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை புரிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுவதாகவே உள்ளது. யுத்த வலயங்களில் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் 1738 பிரகடனத்தை இலங்கை அரசு மீறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பாரிய அளவில் மனிதாபிமான சீர்குலைவும் யுத்தக் குற்றங்களும் வன்னியில் இடம்பெறும் நிலையில் சர்வதேச சமூகம் போர் நிறுத்தம் வேண்டும் என்று விடுக்கும் கோரிக்கைக்கு இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தொண்டு நிறுவனங்கள் வன்னிக்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறது. சுதந்திரமான பத்திரிகையாளர்களின் பிரசன்னம் இல்லாத இந்த யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது வெட்கக் கேடான செயலாகும். வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடை விதிக்கும் விடுதலைப் புலிகள் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இராணுவ வெற்றிகளை செய்திகளாக அரசு தருவதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் கூறுகிறது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயற்பட விடாமல் பொதுமக்கள் தகவல் அறியும் சுதந்திரத்திற்கு அரசு தடையாக உள்ளதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் தெரிவிக்கிறது.
இலங்கை அரசும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது. எங்கே இரத்தம் சிந்தப்படுகிறதோ அங்கே பேனா மையும் சிந்தப்படவேண்டும் என்றும் சர்வதேச பத்திரிகையாளர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களும் தம்முடன் சேர்ந்து பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.