புலம்பெயர் வாழ்வியல்

புலம்பெயர் வாழ்வியல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அவர்களுடைய வாழ்வியல், சமூக, அரசியல் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புகலிடம் தேடி பிரான்ஸ் வந்தவர்களுக்கு வதிவிட உரிமையை வழங்கு! – பாரிஸ் ஊர்வலம் : த ஜெயபாலன்

Paris_Protest_14Mar09வதிவிட அனுமதியற்று பிரான்ஸில் வாழும் அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்கக் கோரி பிரான்ஸ் பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சில நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை 9வது கொலற்றீவ் (9ème COLLECTIF) அமைப்பினரும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர். வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்கள் சார்ந்த நலன்களே இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பிரதான கோசமாகவும் கோரிக்கையாகவும் அமைந்திருந்தது. குறிப்பாக யுத்த்தாலும் படுகொலைகளாலும் வன்முறை அரசியலாலும் பாதிப்புற்று புகலிடம் தேடி பிரான்ஸ் வந்த இலங்கை மக்களுக்கு வதிவிட அனுமதி வழங்கு என்ற கோசம் கொண்ட பதாகையே பிரதானமாக முன்னெடுக்க்பட்டது.

பிரான்ஸ் அரசு ‘வதிவிட அனுமதியற்ற மக்களை அவமானப்படுத்தும் முறையில் சோதனை இடுவது, அவர்கள் வாழும் குடியிருப்புக்களை சுற்றிவளைத்து குற்றவாளிகள் போல் கைது செய்வது, சிறையில் அடைப்பது, நாட்டைவிட்டு பலாக்காரமாக அனுப்புவது, போன்ற மனித உரிமை விழுமியங்களை மீறும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்’ என்ற கோரிக்கை வலுவாகவும் தீவிரமாகவும் ஆர்ப்பாட்டக்காறர்களால் முன்வைக்கப்ட்டது. ‘பிரான்ஸ் அரசு வதிவிட அனுமதியற்றவர்களை ஆபத்தானவர்களாக நோக்குகின்ற போக்கை கைவிட வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் முப்பதாயிரம் வதிவிட அனுமதியற்றவர்களை கைது செய்து சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் அடைத்து நாட்டைவிட்டு வெளியேற்றும் அரசின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டுமென்றும், இந்த சிறப்பு முகாம் என்ற சிறைகள் மூடப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்ட்டது.
 
சமூகப்பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தோழர்கள் கிறீஸ்தோபர், மேரிகிறீஸ்ரியன், தோமா, கிறீஸ்ரி, செபஸ்த்தியான், ரமணன், வரதன், கஸ்ரோ, அசோக் முதலானோர் ஊர்வலத்தை நெறிப்படுத்தினார்கள்.  இவ் ஊர்வலத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வதிவிட உரிமை மறுக்கப்ட்ட மக்களும் தங்கள் தங்கள் கோரிக்கைகளோடு பதாகைகளை தாங்கி வந்தனர். பிரான்சில் உள்ள பல்வேறு இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்த தோழர்களும் சமூக அக்கறையாளர்களும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

Paris_Protest_14Mar09இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்வர்களில் ஒரு பிரிவினர் ‘மாக்கற்றிப் போர்சனி’ பிரதான வீதியில் உள்ள தேவாலயத்தினுள் நுழைந்து அங்கேயே தங்கி உள்ளனர். தேவாலய பரிபாலனசபையினர் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் வெளியேற மறுத்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தங்குமிட வசதியற்றவர்கள் தருப்பி அனுப்பப்பட தீர்மானிக்கப்பட்டவர்கள் தேவாலயத்தில் அடைக்கலம் பெறுவது இது முதற்தடவையல்ல. இவ்வாறான சம்பவங்கள் பிரான்ஸில் ஏற்கனவே இடம்பெற்று உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்து வெளியேற மறுத்து தங்கள் கோரிக்கைக்கு மேலும் வலுச்சேர்த்து உள்ளனர்.

பிரான்ஸின் பிரித்தானியாவை ஒட்டிய கடற்கரைப் பகுதியான கலை என்ற பகுதியில் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காகப் பலர் தினமும் முயற்சித்துக் கொண்டு உள்ளனர். பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் கொன்ரைனர் லொறிகளில் தாவி தங்களை பிரித்தானியாவுக்குள் கொண்டு சேர்க்க அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் சிலர் கலை ப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியும் உள்ளனர். இந்தப் பகுதி ஐரோப்பாவின் சேரியாக வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடுமையான குளிரிலும் அடிப்படை வசதிகளற்ற வாழ்நிலைக்கு உதவாத தரத்தில் உள்ள இக்கூடாரங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா தனது எல்லைப் பாதுகாப்பை மிகவும் இறுக்கமாக்கி உள்ள நிலையில் பிரித்தானியக் கனவுடன் பலர் பிரித்தானியாவின் அக்கரையில் காத்திருக்கின்றனர்.
 
சமூகப் பாதுகாப்பு அமைப்பினர் கடந்த வாரமும் யுத்த நிறுத்தத்தைக் கோரி ஒரு ஊர்வலத்தை நடாத்தி இருந்தனர். அதனை புலி அதரவாளர்கள் எனக் காட்டிக்கொண்ட சிலர் குழப்ப முயற்சித்த போதும் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் திட்டமிட்டபடி நடந்தது. ஆனால் இந்த ஊர்வலம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சமூக பாதுகாப்பு அமைப்பு எதிர்வரும் காலங்களில் இலங்கை மக்கள் நலன் சார்ந்த அரசியல் சமூக கலாச்சார விடயங்களில் கவனம் செலுத்தி செயற்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக அசோக் தேசம்நெற்றிக்கு தெரிவித்தார்.

இன்று வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம்.

No_One_Is_Illegalபிரான்சில் வாழும் வதிவிட அனுமதி அற்ற அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம் இன்று சனிக்கிழமை (14.03.2009) அன்று பிற்பகல் 14.00மணிக்கு பாரிசில் மெற்றோ Barbés Rochchouart முன்றலில் நடைபெற இருக்கிறது.

இவ் ஊர்வலத்தை 9வது கொலற்றீவ் (9ème COLLECTIF ) அமைப்பினரும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் ( Comité de Défense Social) சேர்ந்து ஒழுங்கு படுத்தியுள்ளனர். எனவே பிரான்சில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட அனைவரையும் மற்றும் சக அக்கறையாளர்களையும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையோடு அழைக்கிறார்கள் .

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் கரிசனையும் அக்கறையும் கொண்டு செயற்பாட்டுத்தளத்தில் இயங்கும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினர் சென்ற ஞாயிறு (07.03.2009) இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை பாரிசில் நடத்தினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் ஊர்வலத்தில் வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களுக்கு பிரான்சில் வதிவிட அனுமதி வழங்கவேண்டுமென்ற கோசத்தையும் முன்வைத்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

‘மியா கணக்கில் வீக்’ முத்தின் ஆய்வு! : சேனன்

MIAMuttukrishna Sarvananthanமுத்துகிருஸ்ணா சர்வானந்தன் என்ற ‘பொருளாதார நிபுணர்’ சென்ற வருடம் லண்டன் வந்திருந்த பொழுது வித்துவான் அவதாரத்தில் உலக – இலங்கை பொருளாதாரம் பற்றி எமக்கெல்லாம் மிருதங்கம் வாசித்துபோன கதை பலருக்கும் தெரியும். உலக பொருளாதாரம் சரியாது. மேற்குலக அதிகாரம் எல்லாத்தையும் சிம்பிளா வெண்டு போடும். இதனால் இலங்கைக்கு பாதிப்புவராது என்று அவர் பினாத்திக் கொண்டிருந்த பொழுது தடுத்தாண்ட கேள்விகளை நோக்கி நெற்றிக்கண் திறக்கப்பட்டு சுட்டெரிக்கப்பட்டதும் எமக்கு தெரியும்.

இந்த முட்டாள்தனத்தை சுட்டிக்காட்ட வெளிக்கிட்ட த.ஜெயபாலனுக்கு படிப்பறிவு கிடையாது என்ற கண்டு பிடிப்பை செய்து இவர்கள் யாழ்ப்பான -வெள்ளாள மத்தியதர வர்க்க மேலாண்மையை நிலைநாட்ட முயன்றதும் எமக்குத் தெரியும். ‘பொருளாதார சரிவு தொடர்ந்தும் நீடிக்காது’ என்ற அடிப்படையிலேயே வித்துவான் விளாசினார் என்று எமக்கு விளக்கங்கள் தரப்பட்டது. இதுகளை பொருளாதார விரிவுரையாளர் புதியவன் ‘மென்மையாக’ கண்டித்திருந்ததும் அறிவோம். அவரது பழைய கதைகள் கிடக்க. மீண்டும்  வித்துவான் மிருதங்கம் எடுத்துள்ள கதைக்கு வருவோம்.

தெற்கில் சனம் செக்பொயின்றுகளுக்குள் சிக்கி விழுந்தெழம்பிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு ஜனநாயக சூரியன் மக்களின் முள்ளந்தண்டுகளை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வடக்கு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இதுகிடக்க, எங்கள் அன்பு வித்துவான் – பொருளாதார புலிக்கு பொங்கிக்கொண்டு வருகிறது பாருங்கள் கோபம்! கோபம்! இலங்கை ராணுவம், கருணா, பிள்ளையான், சங்கரி முதலானவர்கள் மேல் என்று அவசரப்பட்டு கதறிப்போய்  விடாதீர்கள். “பிள்ளையின்” கோபம் மியா என்ற இசை கலைஞர் மேல். மியா கணக்கு வழக்குகளில் பிழைவிட்டு கதைத்து விட்டதாகக் கோபம்.

முதல் அடி என்னவாக இருக்கும் என்பது நீங்கள் ஊகிக்கக்கூடியது. ஜெனொசைட் என்ற சொல்லை பாவிக்கக் கூடிய அளவுக்கு மியாவுக்கு படிப்பறிவு இல்லை என்பதே அந்த அடி. எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? என்று சந்தேகித்து கிழே படிக்க அடுத்த அடி விழுகிறது எங்கே எப்படி 3,00,000 தமிழர்கள் யுத்த பிரதேசத்துக்குள் மாட்டியுள்ளார்கள் என்று மியா கவனமாக எண்ணினார்? என்ற கெட்டிக்காரத்தனமான கேள்வி. 30,000 அல்ல 3,00,000 என்ற எண்ணிக்கையை எப்படி செய்தார் என்ற தொனியுடன் கேட்கப்படுகிறது கேள்வி. பின்பு தன் படிப்பறிவாள் வந்த கெட்டிக்காரத்தனத்தை கொட்டி பின்வருமாறு அவர் விளக்குகிறார்.

“2003 சுனாமிக்கு பின்பம் 2005 ஐ.நா.வுக்காக புலிகளின் கட்டுப்பாடு பகுதிகளில் வேலை செய்தவன் என்ற முறையிலும் யுத்தப் பிரதேசத்தில் 1,00,000 இருந்து 1,50,000 வரையிலான மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதே என்னால் அடித்துக்கூற முடியும்.” அற்புதம் என்று கூரை அதிர நாம் சிலாகித்தோம். உலகம் முழுக்க ‘அகதி’யாக திரிவதால் மீயாதான் கற்பனை செய்த தாயகத்தில் நடப்பது பற்றி தெரியாதவர் என்றொரு அடிவேறு.

ஐயோ பாவம் மியா, அந்த பாடகி செய்த தவறென்ன? சனத்தொகை மற்றும் ராணுவத்தின் எண்ணிக்கை முதலான எண்களை அதிகப்படுத்தி கூறியதுதான் அவர்செய்த தவறு.

அந்த தவறை திருத்த நமது பொருளாதார புலிக்கு உரிமை உண்டு. உண்டே உண்டு ஐயா! 1,00,000ல் இருந்து 1,50,000 என்ற கணிப்பீட்டை கரெக்டா எப்படி மேதை கணிப்பிட்டார் என்ற விபரம் எமது மூளைக்கு எட்டவில்லை. தவிர இந்த நம்பர் விளையாட்டு உங்களுக்குத்தான் தேவை. நமக்கல்ல. உணர்ச்சிவசப்படும் கலைஞர்களுக்கு தேவையில்லை. பாதிக்கப்படும் மக்கள் மூன்று லட்சமாக இருந்தால் என்ன முப்பதினாயிரமாக இருந்தால் என்ன? உரத்து குரல் கொடுக்க ஒருத்தி முன்வருவது பிழையா? 70,000 மக்கள்தான் அகப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு கத்துகிறதே அது பற்றி ஏன் கோபம் வரவில்லை? மீயா செவ்வி வழங்கிய அதே காலப்பகுதியில் வெளியான இங்கிலாந்து கார்டியன் பத்திரிக்கையில் 4 1/2 லட்சம் மக்கள் அகப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை? இதுகள் பற்றி உங்கள் மண்ணாங்கட்டி கோபம் ஏன் மௌனம் கொண்டிருக்கிறது?

‘மியா கணக்கில் வீக்’ என்று கண்டுபிடித்து காட்ட இக்கட்டுரை எழுதியாதாக நம்ப முடியவில்லை? உங்கள் பிரச்சினை மியா புலி ஆதரவு தொனியில் பேசியதுதான். அதை நேரடியாக சொல்லி வெளிப்படையாக பேசாமல் குத்தி முறிகிறீர்கள்.

பின்பு ‘புலி புள்ள புடிக்குது’ என்ற பழைய பல்லவியை பாடி நெத்தியில் அடிக்கிறமாதிரி ஒரு கேள்வி கேட்கிறார் அவர். தமிழ் பிள்ளைகளை புலிகள் காவு கொள்வது ஜெனோசைட் இல்லையா என்ற அக்கேள்வி சபாஸ் சரியான கேள்வி என்று நிர்மலா குதிக்கலாம். ஆனால் எமது கழுத்துக்கு மேல் இருக்கும் மூளை சொந்தமாக சிந்திப்பதால் கோபம் கிளறுகிறது. இலங்கை ராணுவம் செய்வது ஜெனோசைட் கிடையாது என்று வாதிடும் நீர் புலி செய்வது ஜெனோசைட் இல்லையா என்று கிண்டல் அடிப்பது உமது உயர்வர்க்க மொக்கத்தனத்தை படம் போட்டு காட்டுகிறது. இன்றிருக்கும் சூழலில் இதைவிட கோரமான அயோக்கியத்தனத்தை கோத்தபாய ராஜபக்சேவிடம் தான் நாங்கள் பார்க்க முடியும். அடுத்த “சிங்கள ரத்தினா”  உங்களுக்கு தான் முத்து!

இந்த போக்கிரி பார்வையுடன் அவர் சொல்கிறார் இரண்டு பக்கமும் மக்களை கொன்று கொண்டிருப்பது தமக்கு ‘concern’ ஆக இருக்கிறதாம். ஐயா உங்களைப் போல் மீயாவுக்கு ‘concern’ வரவில்லை. ஒரு கலைஞராக அவருக்கு கொதிப்பு வந்திருக்கிறது. நான் ஒரு அகதி என்று நெஞ்சை நிமிர்த்தி கூறும் ஒரு கலைஞரை ஒரு அகதியான நான் பெருமையுடன் பார்க்கிறேன்.

புலிகள் முஸ்லீம்களை கொல்வது தெரியாதா? சிங்கள கிராமங்களில் வேட்டையாடியது தெரியாதா? மூஸ்லீம்கள் வேட்டையாடப்பட்டது தெரியாதா? என்று வரிசை படுத்திய உமது கேள்விகள் பலமானவை. கேட்கப்பட வேண்டிய கேள்விகளே. ஆனால் இந்த கேள்விகளை நாம் கேட்பதற்கும் நீர் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நீர் அதிகாரம் சார்ந்து கேட்கிறீர் நாம் மக்கள் சார்ந்து கேட்கிறோம்.

மக்கள் பிரதிநிதித்துவம் செய்ய உமக்கு யார் அதிகாரம் வழங்கியது என்று மீயாவை கேட்டு பீற்றும் உமக்கு மக்களை பற்றிப் பேச யார் அதிகாரம் வழங்கினார்கள்? லாபத்துக்கு மக்களை விற்கும் நீர் உயர் மட்டங்களில் குசுகுசுப்பதோடு நிறுத்திக்கொள்ளும். 84ல் அகதியாக போனவர் 25 வருடமாக இலங்கை வராதவர் மற்றும் அவர் இலங்கை தமிழரா என்பதே சந்தேகம் போன்ற அம்புகளை மியா நோக்கி எறியும் நீர் ஒரு கணம் சிந்தித்து பாரும்.

உமக்கு வெளி நாடுகளில் இருக்கும் நட்பு வட்டாரங்கள் எப்போது அகதியாகின? லண்டனில் உம்மை அழைத்துக் கூட்டம் போட்ட கோஸ்டிகள் எல்லாம் இப்ப தான் வன்னியில் இருந்து வந்தவை என்று நினைப்பா? குண்டு சத்தமென்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியுமா? யுத்தத்தில் வாழ்தல் தெரியுமா?

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் தமிழரை நோக்கி ஒரு அகதியான மியா நீட்டும் கரங்களை தட்டிவிட்டு உனக்கு தகுதி இல்லை என்று ராஜபக்ச கூரையில் நின்று கூவும் நீர் கொழும்பில் நிம்மதியாக வாழலாம். உம்மை அதிகாரம் காப்பாற்றும் உமது பணி அவர்களுக்கு தேவை. “நான் உயிர்தப்பியிருப்பது அதிர்ஷ்டவசமானது” போன்ற ஜோக்குகளை அடிக்காதயும்.

போக்குவரத்து விதிகள் ஒரு சொட்டுமற்ற சென்னை தெருக்களை அடிக்கடி கடக்கும் நான் உயிர் பிழைத்துக் கொண்டிருப்பது ஒரு அதிர்ஷ்டம் தான். அப்படியானதே உமதும்!

பாவம் மியா, நீர் ஒரு பொருளாதார புலி அல்லவா. மீயாவை விட்டுவிட்டு உம்மிட எடியுகேசனுக்கு ஏத்த மாதிரி ஒரு ஆள பிடிச்சி மோதும்.

வள்ளம் அனுப்பினேன்…… ஹெலி அனுப்பினேன்……. : ஈழமாறன்

Pirabakaran_Vஎங்கு பார்த்தாலும் ஒரு குடையின் கீழ் அணி திரளுங்கள். இரண்டு குடையின் கீழ் அணி திரளுங்கள் என்று ஒரே அவியல். ஐபிசியில என் ரி ஜெகன் அண்ணன் தொப்புள்கொடி அறுநாக்கொடி என்று அறுவை தாங்க முடியேல்ல. மூலைக்கு மூலை சங்கம். நாட்டுக்கு நாடு கோசம். பிரபாகரனைக் காப்பற்றுவதற்காக வன்னி மக்கள் என்ற முலாம் பூசிக் கொண்டு, சன்னி பிடித்தலையும் கூட்டத்தை பார்த்து சிரிப்பதற்கு கூட மனமில்லாத துயர் மனதை வாட்டுகிறது. (இடைக்காடர் கொஞ்ச நாள் குடை பிடித்தார். இடையிலை காடர் ஒட இப்ப புது கோஸ்ரி கிளம்பியிருக்கு)

தலைப்புக்கு வருவோம். றீடஸ் டஜஸ்ற் (Readers Digest) என்ற புத்தகத்தில் சில வருடங்களுக்கு முன் வாசித்த ஒரு சிரிப்பு பகுதி. ‘ஒரு நாட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அந்த நாட்டு அரசு மக்களை பொது இடங்களில் கூடுமாறு பணிக்கிறது. அப்போதுதான் இலகுவாக பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை நகர்த்தலாம் என்பது திட்டம். மக்கள் அல்லோகலப் பட்டு பக்கத்தில் இருந்த பாடசாலைக்கு ஓட ஒரு யேசுவின் மீது அதீத அன்பு கொண்ட பக்தன் மட்டும் வீட்டில் இருந்து வெளியேற மறுத்து விடுகிறான். வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அந்தச் சமயம் ஒரு வள்ளம் வந்து ஏறிக் கொள் என்று கேட்க மறுத்து விடுகிறான் பக்தன். வெள்ளம் கூரையை மூடுகிறது. பக்தன் கூரைமேல் ஏறி நிற்கிறான். மீண்டும் ஒரு வள்ளம். மறுத்து விடுகிறான் பக்தன். உங்களுக்கு கடவுளில் நம்பிக்கை இல்லாவிட்டால் செல்லுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னைக் கடவுள் காப்பாற்றுவார். இப்போது வெள்ளம் கூரையையும் தாண்டி அவன் கழுத்துக்கு வருகிறது. அந்த வேளையில் ஒரு ஹெலி ஏணியை இறக்கி ஏறும்படி வற்புறுத்த மறுத்து விடுகிறான் பக்தன். பின் மரணம். கடவுளிடம் செல்லும் அவன் சாதாரண மக்கள் முன்னால் என் அன்பை கொச்சைப் படுத்தி என்னை ஏமாற்றி விட்டாயே ஆண்டவா. நான் மரணித்தது கூட கவலையில்லை நீ தக்க தருணத்தில் உதவி உன்னை நம்பியவர்களை காப்பாற்றியிருக்க வேண்டாமா என்று கேட்கிறான்.

அமைதியாக பொறுமையாக பதட்டமில்லாமல் இருக்கும் கடவுள் சொல்கிறார். “பக்தா இரண்டு வள்ளம் அனுப்பினேன். ஒரு தடவை ஹெலி கூட அனுப்பினேன். நீ எதிலுமே ஏற மறுத்து விட்டு தற்போது என்னைக் குறை சொல்வது என்ன நியாயம்.”’

ஏக பிரதிநிதித்துவம் என்ற பிசாசு பிடித்து தலைமைப் பதவி என்ற மாயக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எதிரே நின்றவர்கள் எல்லாரையும் எதிரி என்று சுட்டுவிட்டு குடை, படை என்று ஒப்பாரி வைக்கிறீர்களே நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்த சில வால்கள் உட்பட தமிழர்களுக்குச் செய்த பாதகச் செயலுக்காக தார்மீகப் போராட்டத்தை தர்பார் சண்டித்தனமாக ஆக்கி விட்டு ஒரு குடையின் கீழ் வாருங்கள் என்று கூவுவதற்க்கு பதிலாக பெற்றோல் ஊத்தி மற்றவன் கொழுத்த நீங்கள் மறத் தமிழன் பட்டம் கொடுக்கிறதை விட்டுவிட்டு உங்களுக்கு நீங்களே பெற்றோல் ஊத்திக் கொழுத்தலாமே. லண்டனிலை பெற்றோல் ஸ்ரேசன் முழுக்க நம்மட ஆக்கள் தானே. இலவசமா வாங்கலாம்.

பிரபாகரன் என்ற தழிழீழ பக்கதனுக்கு அதனை அடைவதற்கு எத்தனையோ வள்ளங்கள் வந்து நின்றன. எத்தனையோ ஹெலிகள் வந்து நின்றன. அத்தனையிலும் ஏற மறுத்து விட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரளுங்கள் என்று கூச்சலிடுகிறீர்களே தமிழ் பேரவை என்ற போர்வையைப் போத்திக் கொண்டு சில புலத்து ‘மா’க்களே உங்களுக்கு என்ன தமிழன் கேணயன் என்ற நினைப்பா? புலம்பெயர் சூழலிலும் பிளேன் விளையாட்டுக் காட்டுகிறீர்களா?

சித்திரா அச்சகத்தில சுந்தரத்தில தொடங்கினியல். (அன்றைக்கு கூட இருந்தனியல் உதுகளைப் பற்றி ஏதும் சொல்லலாமே.) கள்ளக் காதலியிடம் தமிழீழ உணர்வு தலைக்கேறி ஒளித்து ஒளித்து செல்கையில் கைக்குண்டு வீசி காலை உடைத்து விட்டு 70க்கும் மேற்பட்ட சக அமைப்பு போராளிகளை ஒரு அறையினுள் பூட்டி வைத்து கொன்றபோது உங்கள் ஒரு குடையின் கம்பி உடைந்து போனது தெரியாதா புலத்து ‘மா’க்களே? மட்டக்களப்பில் இருந்து வந்து, பயிற்சி முடித்துவிட்டு தமிழீழக் கனவில் படுத்திருந்த ரெலோ போராளிகளை நாயைச் சுடுவது போல சுட்டு தெருத் தெருவா ரயர் போட்டு எரித்தீர்களே. அன்று சோடா உடைத்து கொடுத்து விட்டு, இன்று சொகுசா வெளி நாடுகளிலே வாழும் புலத்து ‘மா’க்களே அப்போது இரண்டாவது கம்பி உடைகிறதே என்று சொன்ன போது ஏக பிரதிநிதித்துவ பித்தம் தலைக்கேறி தலைகால் தெரியாமல் வென்ற யுத்தம் எல்லாம் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன் செய்தது. தோத்ததெல்லாம் பால்ராஜ் செய்தது என்று கொண்டாடிவிட்டு இன்று எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் உங்கள் குடையை.

முள்ளிக் குளத்தில் முகாம் இட்டிருந்த புளட் இயக்கப் போராளிகளை சுற்றிவளைத்து சுட்டு விட்டு அறிக்கை விட்டபோது சிவாஸ்றீகல் அடித்து விட்டு சந்தோசப்பட்ட புலத்து ‘மா’க்களுக்கு திடீரென குடைபிடிக்கும் எண்ணம் வருவதற்கு காரணம் என்ன?

காத்தான் குடியில் பள்ளிவாசலில் ”அல்லா எங்களைக் காப்பாற்று” என்று கதறக் கதற கர்ப்பிணிப் பெண்கள் என்று கூடப் பார்க்காமல் வெட்டித் தள்ளிய போது உங்கள் குடையின் இன்னொரு கம்பி முறிந்து போனது. பின் அனுராதபுரத்தில் அப்பாவி மக்களைச் சுட்டபோது, 24 மணி நேரத்தில் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தபோது, பாடசாலை அதிபர்கள், புத்திஜீவிகள், சகபோராளிகள், பக்கத்து நாட்டுத் தலைவன் என்று உங்கள் ஏகத்தலைவன் ஏகப்பட்ட மக்களின் அவலங்களுக்கு, அழிவுக்கு காரணமாக இருந்தபோது மேதகு என்று பட்டம் சூட்டி பச்சை குத்தித் திரிந்த இந்தச் சில புலத்து ‘மா’க்கள் அமைதியாக இருந்து விட்டு இப்போது கொக்கரிக்கிறீகளே கொழுத்தினவனுக்கு விழா எடுக்கிறீர்களே இப்போது எங்கிருந்து வந்தது இந்த ஞானம்.

ஊரில் சொலவார்கள் ‘அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது’ என்று. அரசியலால் வென்றிருக்க வேண்டிய போராட்டத்தை வெறும் ஆயுத்ததால் வெல்லப்போன தம்பிக்கு அடிவிழும் போது வந்திருக்கின்ற இந்த ஞானம் வேடிக்கையான ஞானம். அண்ணைக்கு மரணப்பயம் என்பது இப்போதுதான் புரிகிறதோ. பொட்டன் வைத்த பொட்டுக்கெல்லாம் இப்போதுதான் ஞானம் பிறக்கிறதோ. மாத்தையா என்ற போராளியை குறைந்த பட்ச கவுரவம் கூட கொடுக்காமல் சுட்டுத் தள்ளிய திமிரில் கருணா அம்மானுக்கு ஆப்பு வைக்க போன போது புரியாத தெரியாத சர்வதேச சமூகம் திடீரென தெரிந்திருக்கென்றால் அண்ணைக்கு அடி கொஞ்சம் பலமோ. அழுகை அழுகையா வருதோ?

சீமானுக்கு காசு கொடுத்து நெடுமாறனுக்கு ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்து தமிழக மக்களை தெருவுக்கு கொண்டுவந்து புதுக் குடியிருப்பையாவது காப்பாத்த வன்னி மக்கள் என்று முலாம் பூசி நீங்கள் காட்டும் பூச்சாண்டி புரியாமல் போக நாம் ஒன்றும் சாம் பிரதீபன் மாதிரி முகட்டைப் பார்த்துக் கொண்டு புலி வால்பிடிக்க தீபம் தொலைக்காட்சியில் கவிதை வாசிக்கும் நிஜத்தை மறந்த முட்டாள்கள் அல்ல.

ஏக பிரதிநிதித்துவம் என்றால் என்ன? ரெலோ தேவையில்லை. ஈபி தேவையில்லை. புளட் தேவையில்லை. முஸ்லிம்கள் தேவை இல்லை. இவ்வளவேன் எந்தப் புலத்து ‘மா’க்களும் தேவை இல்லை என்று புதுவை ரத்தின துரை எழுதின கவிதையில் வந்த நீங்கள் தேவையில்லை புலி மட்டும், புடுங்கும் என்பது தானே. அப்படி தனிச்சு நின்று புடுங்கப்போறம் என்று ஒரு லட்சம் மக்களைக் காவு கொடுத்த திட்டம் வகுப்பதில் கெட்டிக்காரன் வேலுப்பிள்ளையின் மகனிடம் போய் கேட்கலாமே ஏன் அண்ணை திட்டம் போட்டு சிங்கள ராணுவத்திற்கு பாடம் புகட்டாமல் புதுக் குடியிருப்பு வரை நீங்களே பாடம் கற்றுக் கொண்டு போறியள், இனி எப்பதான் அடிபடப் போறியள் என்று. முல்லைத்தீவு முகாம் விழுந்த போது தலைவர் நேரடி கண்காணிப்பு. ஜெயசிக்குறு ஓடியபோது தலைவர் தலைமையில் ஒப்பறேசன். இப்ப துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓடும் போது தலைவர் முதல்லேயே ஓடிவிட்டாரா. இல்லை என்றால் ஒரு திட்டத்தை போட்டிருக்கலாமே. 

குழந்தை பிறக்கிறபோது குறிப்பு எழுதுவார்கள். அப்போ ஊர் சாத்திரி சொல்வார். இவருக்கு தரையிலை கண்டம். தண்ணியிலை கண்டம் என்று. அதுபோல மாவிலாறு தண்ணியிலை கை வைக்கும் போது தெரிந்திருக்க வேண்டும் அண்ணைக்கு கண்டம் ஸ்ராட் பண்ணுதெண்டு. பால மோட்டையிலை அடி விழும் போது தலைவர் பொறுமையா இருந்தார். மல்லாவியிலை மரண அடி விழுந்த போது தலைவர் பொறுiமாய் இருந்தார். கிளிநொச்சி வரைக்கும் எத்தினை கதை விட்டீர்கள். உள்ளுக்கை விட்டு அடிப்பார் என்று உள்ளுரக் கனவு கண்டுகொண்டு மன்னாரில் மக்கள் செத்தபோது மட்டக்களப்பில் மக்கள் செத்தபோது வவுனியா வடக்குப் பிரதேச சண்டையில் மக்கள் செத்தபோது மூதூரில் மக்கள் செத்தபோது தாசீசியஸின் பாசையில் மக்கள் எல்லாம் மாடுகள் என்று பேசாமல் இருந்து விட்டு தலைவர் புதுக்குடியிருப்புக் காட்டுக்கை சூடுதின்ற யானைபோல சுழரும்போது வந்திருக்கும் உங்கள் ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் போகுமளவுக்கு தமிழ் பேரவையில் வேலை செய்பவர்கள் அல்ல மக்கள். எமக்கு நிஜமும் தெரியும். புலியினால் ஏற்பட்ட வலியும் தெரியும். அதனால் ஏற்பட்ட வடுவும் தெரியும்.

அதால இலங்கை அரசாங்கத்தின்ர ஜில்மால் கோல்மால் தெரியேல்லை என்று நினைக்க வேண்டாம். அதுவும் தெரியும். தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறதும் தெரியும். அவைக்கு தனிவிருந்து இருக்கு. அது கிடக்கட்டு இப்ப.

ஜ.நா வுக்கு சொல்லச் சொல்லிறியள். சொல்கெயிமிட்ட சொல்லச் சொல்லிறியள். கருணாநிதியிட்டை சொல்லச் சொல்லிறியள். ஒபாமாவுக்கு கடிதம் போடச் சொல்லிறியள். (ஒபாமா என்ன ஆனந்தசங்கரி என்ற நினைப்பா) பிறவுணுக்கு மனு அனுப்பச் சொல்லிறியள். இது எல்லாத்திற்க்கும் காரணம் வன்னி மக்களைக் காப்பாற்றுவதுதான் என்றால் அண்ணைக்கு ஒரு கடிதம் போட்டிருந்தால்  எல்லாம் முடிந்திருக்குமே. அடைச்சி வைச்சிருக்கிறது அண்ணை. அதுக்குள்ள உள்ள சனத்துக்கு நீங்களும் செல் அடிக்கிறியல். தப்பிப் போற சனத்தையும் சுடுறியல். பிறகு  ஜ.நா வுக்கு மனுக்குடுக்கிறயல்? என்ன எங்களை வைச்சு நீங்கள் காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே?

முதல் வள்ளம் திம்புப் பேச்சு வார்த்தையில் வந்து நின்றது. பிரபாகரன் ஏறிக்கொள்ளவில்லை. வெள்ளமும் அவ்வளவாக இருக்கவில்லை. மன்னித்து விடலாம். பின்னர் வந்தது இலங்கை இந்திய ஒப்பந்த வள்ளம். இந்த வள்ளத்தைப் பிடிச்சு சாதுரியமாக அரசியல் செய்திருந்தால் ஒரு கரை சேருறதுக்கு வாய்ப்பு இருந்தது. இலங்கை வந்திருக்கும் இந்திய இராணுவத்தோடு ஒத்துழைத்திருந்தால் ஜேவிபி போன்ற இனவாத கட்சிகள் தெற்கில் தலையெடுத்து விரிவடையும் போது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களுக்கு உதவிசெய்து நிரந்தர தீர்வுக்கு இட்டுச் செல்லக் கூடிய அரசியல் சூழலை உருவாக்கியிருக்கலாம்.

அல்லது குமரப்பா புலேந்திரன் உட்பட 11 பேரையும் கொழும்பு கொண்டு செல்ல விட்டிருந்தால் இலங்கை அரசின் ஒப்பந்த முறிப்பைச் சாதகமாக்கி இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம். துப்பாக்கியையும், குண்டுகளையும், பொட்டனையும் நம்பும் ஒரு இராஜதந்திர தூரநோக்கற்ற பிரபாகரனிடம் முடிவுகளை ஒப்படைத்துவிட்டு; சோட வாங்கிக் கொடுப்பதிலும், மஞ்சள் சேலையை கட்டிக் கொண்டு, அவற்றை உருவப் படத்தையும் தூக்கிக் கொண்டு, ஊர்வலம் போனால் தமிழீழம் கிடைக்கும் என்று உந்த TNA காரரும், சில கேணைக் கூத்தர்களும் மேடையில் கத்த கடும் குளிரில் நின்று நீங்கள் விசிலடித்ததும் மேளம் அடித்து நடனம் ஆடியதும் வன்னி மக்கள் மீதான கருணையின் நிமித்தம் அல்ல என்பதை புரிந்து கொள்ள நாமும் முகட்டைப் பார்த்துக் கொண்டு கவிதை வாசிக்க வேண்டிய தேவை இல்லை.

கடைசியா மாவீரர் உரை வாசிக்கும் போது தெரியும். இனித் தலைவர் நாயோட்டமும் சில்லறைப் பாச்சலும் தான் என்று. தமிழ்நாட்டில் அணுவாயுத சாலையை வைத்திருக்கும் இந்தியாவுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு பத்து றாத்தல் குண்டு போடுற மருந்தடிக்கிற பிளேனைக் கொண்டு வந்து என்ன விளையாட்டு. இதுவரைக்கும் விமானம் வைத்து கெரிலா அமைப்புக்கள் போராடாது இருக்கும் போது நாம் செய்தால் உலக வல்லரசுகள் பயப்பிடுமே. இந்தியாவுக்கு கவலை வருமே. இதுக்காகவே பூண்டோடை ஒளிச்சு கைலாயம் அனுப்பிடுவாங்களே என்று கூட யோசிக்காமல் கொண்டைக்கிளாறன் குருவி சைசிலை இரண்டு பிளேன். பத்திறாத்தல் குண்டு. இப்ப படுத்து உறங்க பத்து ஏக்கர் காணி கூட இல்லாத நிலை. ரெண்டு பிளேனையும் ஆமிக்காறன் பிடிச்சிட்டாலும் என்று 14 வயசில இருந்து வளர்த்தெடுத்த பெடியளை குண்டைக் கட்டி அனுப்பிறரே வேலுப்பிள்ளையின் மகன் இதென்ன சூதாட்டமா விட்டுப் பார்க்க. தமிழ் மக்களின் தலைவிதியை தனித்துத் தீர்மானிக்கிறோம் என்று சொல்லிவிட்டு குருட்டுத்தனமா விளையாட்டுக் காட்டினால் என்ன நடக்கும் என்று சிந்தித்து இருக்க வேண்டாமா?

அடுத்து வந்த வள்ளம் சந்திரிகா கப்டன்யாய் இருந்து செலுத்தி வந்த வள்ளம். இயலாமல் போகும் போது யுத்த நிறுத்தம் அறிவிப்பதும் அதனை சாக்காக வைத்து புலத்து மக்களிடம் காலிறுதி அரையிறுதி இனி கடைசியிலும் கடைசி என்று ஏதோ கால்பந்து உலகக்கிண்ண விளையாட்டு மாதிரி திகதி குறித்து புரட்ச்சி செய்யப் புறப்பட்ட புலிகளுக்கு வக்காலத்து வாங்கிய பேரவை போன்ற ஏதிலிகள் அன்று தட்டிக் கேட்காமல் இன்று ஒப்பாரி வைத்தால் என்ன செய்வது.

காலம்சென்ற மதிகெட்ட உரைஞ்சர் என்ன சொன்னார் என்று உந்தப் புலத்து ‘மா’க்கள் எல்லாம் மாவீரர் நிகழ்வில் கைதட்டி விசிலடிச்சவை. சந்திரிகாவை தான் வைச்சிருக்கிறதோ தலைவர் வைச்சிருக்கிறதோ என்று சின்ன இழுபறியாம். அந்தாள் அறளைபேந்து ஏதோ உளற இங்க உள்ள விசலடிச்சான் குஞ்சுகள் பட்டபாடு. அது ஏதோ மிசன் ஸ்ரேட்மன் மாதிரியெல்லோ உந்த புலத்து ‘மா’க்கள் துள்ளினவை.

அன்றைக்கு கூட்டணிகாரர் உசுப்பேத்திவிட நீங்களும் தமிழீழம் கேட்டியல். சரி ஆர்வக்கோளாறு நாங்களும் உங்களுக்கு பின்னால வந்தம். ஆனால் கூட்டணிகாரர் எல்லாம் சுத்துறான்கள் என்று சொல்லி கதைக்க வாறம் என்று போட்டு போட்டும் தள்ளிப் போட்டியள்.

ஆனால் சந்திரிகா ஆட்சிக்கு வருகிற போது நிலைமைகள் மாறியிருந்தனவே. அதற்கு ஏற்றால் போல் ஒரு தீர்வை நோக்கி புலிகளும் மாறியிருக்க வேண்டும் அல்லவா? அரசியல் சாணக்கியம் என்பதும் அதுதானே. ஆனா என்ன செஞ்சியல். நீலனை போட்டத் தள்ளினியல். சர்வதேசமே அறிஞ்ச ஒரு ஒரு அரசியல் சட்ட வல்லுனர். அந்தாள் வைச்ச தீர்வு உங்களுக்கு விளங்கேல்லை எண்டா என்ன போட்டுத் தள்ளுறதே.

அது என்ன இயக்கத்தில் ஒருத்தரும் பொம்பிளையளை பார்க்கக் கூடாது. தொட்டும் பாக்கக் கூடாது என்று சட்டம் போடுறியள். தொட்டதுக்காக சுட்டும் போடுறியள். ஆனா உண்ணாவிரதம் இருந்த பெட்டையளைத் தூக்கிக்கொண்டு போறியள்.  மதியை வாட்டசாட்டமா கண்டவுடனை மெதுவா தொட்டும் பாக்கிறியள். மஞ்சள் தண்ணி வேறை ஊத்துறியளாம். பிள்ளையும் பெறுறியள். அதை பிழையென்று நான் சொல்ல வரேல்ல. ஆனா ஒழுக்க விதி என்ற பெயரிலேயே உமாவையும் சுட்டியள். கூட இருந்தவனை சுட்டியள். பிறகு மாற்றத்தின் தேவையை தலைவருக்கு சதி வரும் போது உணர்ந்தீர்கள் தானே.  கால மாற்றத்தைக் கண்டு ஒழுக்க விதியையும் மாத்தினீர்கள் தானே. அதுதானே ஒரு போராட்ட அமைப்புக்கு தேவையான கொள்கையும் கூட. அதே போல சந்திரிகா தலைமையில் வந்த வள்ளத்தில் ஏறியிருந்திருக்க அல்லவா வேண்டும். இது என்ன உங்கள் குடும்பச் சொத்தா? 60000 மக்கள் பலியாகியிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வள்ளம் வன்னிக் கடலில் நின்றபோது ஏறமறுத்து தமிழ் மக்களின் தலைவிதியை நாசமறுத்து போட்டு ஜ.நா வுக்கு கடிதம் போட்டால் உது என்ன விளையாட்டு.

ரெலோ எதிரி. ஈபி எதிரி. மகிந்த எதிரி. இந்தியா எதிரி. அமெரிக்கா எதிரி. ஜரோப்பா எதிரி. முஸ்லிம்கள் எதிரி. கருணா, பிள்ளையான் எதிரி. புளட் எதிரி. புளியம் பொக்கணை பொன்னம்மாக்கா மகளை அனுப்ப மறுத்ததாலை அவவும் எதிரி. சரி அதை விடுவம். தமிழ் பேரவையையும் தீபம் தொலைக்காட்சி சாமும் மனிசியும் தவிர புலிகளுக்கு யார் நண்பர்கள். யாராவது ஒரு நாடு. ஒரு கட்சி (TNA) ஜோக் அடிக்கக் கூடாது நான் சீரியசா கேக்கிறன். ஒரு சங்கம். ஏன் நீர் மாடுகள் மாதிரி சாய்த்துக் கொண்டுபோய் சுத்திவர விட்டு விட்டு நடுவிலே நின்று உயிர்ப்பிச்சை கேட்கும் வன்னி மக்களில் குறைந்தது 3 பேராவது ஆதரவளித்தால் தமிழீழம் சாத்தியம் என்று நம்பலாம். அதில் எதுவுமே சாத்தியமில்லாமல் பொட்டனையும் நடேசனையும் தவிர இயக்கத்தில் இருந்த அத்தனை திறமை சாலிகளையும் எதிரியாக்கி போட்டு 40 கி.மீ.பரப்பளவுக்குள் ஓடி ஒழிந்து கொண்டு சர்வதேச சமூகம் கண்ணைத் திறக்க வேண்டும் என்று அறிக்கை விட்டால் இது என்னப்பா விளையாட்டு. அரசியல் ஒரு விளையாட்டு அரங்கு என்று இதற்க்குத்தான் சொன்னார்களோ?

ஜயா சர்வதேசத்துக்குள் தான் இந்தியா இருக்கு. இந்தியாவிலை வைச்சு ராஜீவை போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் பிரான்ஸ் இருக்கு. அங்கு வைத்துத்தான் சபாலிங்கத்தைப் போட்டியள். ஏன் உங்கட நாதனை கஜனைப் போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் இங்கிலாந்து இருக்கு. இந்த நாட்டுப் பிரசை அதுவும் உங்களுக்கு வாலாட்டிக் கொண்டிருந்த ஒரு அபிமானி பார் என்றால் பளார் என்று அறைந்துவிடும் அளவுக்கு அபிமானி. இந்த பிரித்தானிய பிரைசையைக் கூப்பிட்டு வெளிநாட்டுக் கோவணத்தையும் அவிட்டுப் போட்டு எலியை விட்டா? (இந்த ‘கோவணம்’ அண்ணன் ‘ராசாகரனின்ட மார்க்ஸிச டிக்சனரியில’ இருந்து சுட்டது. அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.) இது என்ன அம்மண விளையாட்டு. இது ஏதும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய தமிழர்களின் வீர விளையாட்டுகளில் இதுவும் ஒன்றோ?

சர்வதேசத்திற்குள் தான் கனடா இருக்கு. அங்கை பத்திரிகை ஆசிரியர்களை அடிச்சியள். இப்படி சர்வதேசம் முழுக்க நாசம் பண்ணிப்போட்டு. இப்ப உங்கட கோவணத்தையும் மகிந்த பிறதேர்ஸ் புடுங்கப் போறாங்கள் என்ற உடன ஒபாமாவுக்கு கடிதம் போடுங்கோ. இன்ரநஷனல் கொம்மியூனிற்றை சொல்லுங்கோ எண்டா. எங்கை நீங்கள் அநியாயம் பண்ணாது விட்டீர்கள் நாம் அங்கு சென்று முறையிட. அதென்ன ஜெயதேவனின்ர கோவணத்தைக் கழற்றும் போது ஒருவருக்கும் நீங்கள் கடிதம் போடச் சொல்லேலை. பிரபாகரன்ரை கோவணம் பறிபோகும் போது மட்டும் துள்ளினா இது என்னப்பா நியாயம். வேணும் என்றால் சாம் பிரதீபனிடம் சொல்லி அண்ணையின் கோவணம் என்ற தலைப்பில் ஒரு போன் இன் (Phone in) புறோக்கிறாம் வைக்கச் சொல்லுங்கோ. சந்தா கட்டின ஆக்களை பைத்தியக்காரர் என்று நினைக்கும் தீபம் நிருவாகம் நிச்சயம் அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். என்னடா GTV, IBC பற்றி வாயே திறக்கிறான் இல்லை என்று யோசிக்க வேண்டாம். அதுதான் திறந்தாலே தெரியுமே.

சரி எல்லா வள்ளத்தயும் விடுவோம். கடைசியாக வந்தது நோர்வேயிலிருந்து ஹெலி. தமிழர்களின் போராட்ட வரலாறில் கவுரவமாக ஒரு தீர்வை அடைவதற்கான கடைசி வழி. இரணைமடுக் குளத்திலை ஏறுறியள். மாலை தீவிலை இறங்கிறியள். தாய்லாந்து போறியள். சரக்கு வேறை பாக்கிறியள். சமஜ்டி முறையிலான ஒரு தீர்வுக்கு கையொப்பம் இட்டு விட்டு நாடு திரும்பின கருணாவை நாட்டை விற்று விட்டு வந்துவிட்டான் என்று நையாண்டி பண்ணிவிட்டு கவுரவமான ஒரு தீர்வுக்கு கிடைத்த ஹெலியை தவறவிட்ட வரலாற்றில் தமிழினம் என்றும் மன்னிக்க முடியாத  தவறை இழைத்திருக்கிறார் பிரபாகரன்.

நீங்கள் காலில் விழுந்து கதறியழுது, செஞ்சிக் கூத்தாடி, பிச்கைச கேட்டு கடிதப் போட்டு, மண்டியிட்டு, தமிழினம் வரலாற்றில் காணாதா அவமானங்களையும், இழிவுகளையும் சந்திக்க வைத்து, இன்று புதுக்குடியிருப்பு காட்டுக்குள் புடையன் பாம்புகள் போல வெடிபட்ட கரடிகள் போல வெந்து துடிக்கிறீர்களே ஒரு வேளை பிரபாகரனும் பொட்டனும் சக பாடிகளும் இந்த இறுதி அழிவிலருந்து தப்பித்துக் கொண்டாலும் தமிழினத்தின் மரியாதை கௌரவம் நியாயமான தீர்வு என்று அத்தனையையும் குழி தோண்டிப் புதைத்ததற்காக வரலாறு உங்கள் மீது காறி உமிழும் என்பதை மறந்து விடவேண்டாம்.

எத்தனை வள்ளம் வந்தது. எத்தனை ஹெலி வந்தது. எத்தனை தடவை எங்கள் மக்கள் கவுரவமாக வாழக் கூடிய சந்தர்ப்பம் வந்தது. அத்தனையையும் போட்டு நொருக்கி விட்டு ‘உள்ளே விட்டு அடிப்பார்’ என்ற கனவில் இருந்த புலத்து ‘மா’க்களிடம் கேட்பது இதுதான். காப்பாற்றப்பட வேண்டியது வன்னி மக்களும் அவர்களது வாழ்வும். அது உங்கள் உள்ளங்களை உறுத்தினால் ஊர்வலம் செல்லுங்கள். வன்னி மக்களை விடுவிக்கும்படி. உண்ணாவிரதம் இருங்கள். உயிர்களைக் காப்பாற்றும் படி. எண்ணை ஊற்றி உங்களை நீங்களே கொழுத்துங்கள். பிரபாகரனே உனது முட்டாள் தனத்திற்கு ஒரு எல்லை இருக்கு. போதும் பிளளைகளைக் கூட்டிக்கொண்டு எங்காவது தொலைந்து விடும்படி. தமிழர்கள் இனி தங்கள் தலைவிதியை ஏகப்பட்ட பிரதிநிதிகளிடம் கொடுத்து நிர்ணயித்துக் கொள்ளட்டும்.

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாரிஸில் படுகொலைக்கு எதிரானதும் தமிழ் – சிங்கள இன ஒற்றுமையைக் கோருகின்றதுமான போராட்டம்! : த ஜெயபாலன்

Paris_Protest_07Mar09இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் இன்று பாரிஸில் இடம்பெற்றது. இக்கண்டன ஊர்வலம் பாரீஸ் Place Georges Pompidou இருந்து ஆரம்பமாகி பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு முன்றலில் முடிவுற்றது. 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் பிரெஞ் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டிருந்தனர். வழமையாக புலி ஆதரவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு மாறுபட்ட வகையில் இந்தக் கண்டன ஊர்வலம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு  செய்திருந்த இந்த ஊர்வலத்தில் பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் கலந்து கொண்டிருந்தன. இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களுக்கு உள்ளேயே வைத்திருந்த நிலையில் இருந்து தாம் நாழும் நாடுகளில் உள்ள பிரதான போராட்ட அரசியல் அமைப்புகளுடன் இணைந்து போராட முற்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது அமைந்து உள்ளது.

இக்கண்டன ஊர்வலம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள தேசம்நெற் வாசகர் சண் இவ்வாறு தெரிவிக்கிறார், ”இந்த நேரத்தில் இப்படியான இந்த ஊர்வலம் இவர்கள் வைக்கும் கோசம் எல்லா கொலைகளையும் கண்டிக்கும் நேர்மை எல்லா கொள்ளைக்கார அமைப்புக்களையும் கண்டிக்கும் துணிவு எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. பரிசில் இன்னும் இலங்கை அரசுக்கு விலைபோகாத உறுதியான நண்பர்கள் இருப்பது இன்னும் நம்பிக்கை தருகிறது.”

Paris_Protest_07Mar09– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தை புலி ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் வேறுபட்ட காரணங்களுக்காகப் புறக்கணித்தனர்.

புலி ஆதரவாளர்கள் அதற்கும் மேலே சென்று இந்த ஊர்வலம் பற்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்ததுடன் சுவரொட்டிகளை ஒட்டிய பிரெஞ்சு மற்றும் தமிழ் ஏற்பாட்டாளர்களை தாக்கவும் முற்பட்டு உள்ளனர். அவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தும் உள்ளனர். இந்தக் கண்டன ஊர்வலம் பற்றிய சுவரொட்டிகளை நேற்று முன்தினம் லாச்சப்பலில் ஒட்டிவிட்டுத் திரும்பியவர்களை இடைமறித்த சிலர் தங்கள் கைத்தொலைபேசி மூலம் மேலும் பலரை வரவழைத்து 30 – 35 பேர் சுற்றி வளைத்து வசை பாடியதுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தையும் கிழித்தெறிந்தனர்.

இன்று ஊர்வலம் ஆரம்பிக்கப்படும் இடத்திலும் கூடிய தங்களை புலி ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் தங்கள் வசைகளைக் கொட்டினர். இவர்களது அடாத்தான செயல்களால் அவ்விடத்தில் வன்முறை நிகழும் என்று அஞ்சிய பலர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் திரும்பினர். அவ்வாறு திரும்பிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தேசம்நெற்றுடன் தொடர்பு கொண்ட போது, தான் தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் சென்றதாகவும் ஆனால் அங்கு இந்த ஊர்வலத்தை குழப்ப விளைந்த சிலர் தகாத வார்த்தைகளை தமிழிலும் பிரெஞ்சிலும் பேசியதாகவும் நிலைமை பதட்டமாக இருந்ததால் தாங்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். அந்த வார்த்தைகளைக் கேட்கவே காது கூசுவதாகக் கூறிய அவர் அவர்கள் அதனை பலருக்கும் மத்தியில் திருப்பித் திருப்பிக் கூறியதாகக் கூறினார்.

‘தமிழ் மக்களுக்குப் போராட நீங்கள் யார்?’, ‘அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோம்.’, ‘சிங்களவனோடு சேரச் சொல்லுறியளோ’ என்று ஆரம்பித்து தமிழ், பிரெஞ் மொழிகளில் உள்ள தகாத வார்த்தைகள் அனைத்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வசையாகக் கொட்டப்பட்டது.

Paris_Protest_07Mar09நிலைமையை ஏற்கனவே உணர்ந்திருந்த காவல்துறையினர் பல வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டதுடன், சிவில் உடையிலும் பலர் உலாவவிடப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்த கொண்டவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படாமல் இருக்க அதனைக் குழப்ப முற்பட்டவர்கள் காவல்துறையினரால் ஓரங்கட்டப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களைச் சுற்றி காவல்துறையினர் தொடர்ந்து சென்றனர்.

‘தாங்கள் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்களிலும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட பிரெஞ்சுத் தோழர் ஒருவர், இது தங்களுக்கு புதிய அனுபவம்’ எனக் குறிப்பிட்டதாக இந்தக் கண்டன ஊர்வல ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அசோக் யோகன் கண்ணமுத்து தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். இந்த ஊர்வலத்தில் தமிழ் – சிங்கள மக்கள் இணைய வேண்டும் என்ற கோசத்தை புலி ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் தங்களை மீறி யாரும் குரல் கொடுப்பதை தடுப்பதாகக் குறிப்பிட்டார்.

புலி எதிர்ப்பாளர்களான EPDP, PLOTE, TELO, TMVP போன்ற ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்ததால் அவர்களும் இந்தக் கண்டன ஊர்வலத்தை புறக்கணித்ததாக அசோக் தெரிவித்தார். இன்னும் சில ‘மாற்றுக்கருத்து’, ‘ஜனநாயகம்’ பேசும் சிலர் வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.

வன்னி மக்களின் மனித அவலம் மிகமோசமடைந்த நிலையிலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய குழுவாத அரசியலில் இருந்து விடுபடாதவர்களாகவே உள்ளனர். புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைக் கொண்டு புலிகளின் அரசியல் பேரம்பேசலுக்கான இறுதி முயற்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.  புலி எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது புலிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளனர்.

இந்த இரு முக்கிய அணிகளுக்கு அப்பால் மக்களது நலன்சார்ந்த போராட்டங்கள் மிகவும் பலவீனமானமதாகவே உள்ளது. அவர்களுடைய குரல்களையும் பல்வேறு வகையில் அடக்குவதற்கான முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. Key Board புரட்சியாளர்களைத் தாண்டி இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமாக கலகட்டம் இது. இவ்விடத்தில் தேசம்நெற் கருத்தாளர் நாதனுடைய குறிப்பை இங்கு மீளப்பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

Paris_Protest_07Mar09”இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற வேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.”

இளையோர் போராட்டங்களும் புலி எதிர்ப்பாளர்களின் போக்கும் ஒரு மீள்பார்வை : நாதன் (தேசம்நெற் கருத்தாளர்)

TYO_Logo யுத்தம் தொடங்கிய பின்னர், பிணங்களை உற்பத்தி செய்பவர்களும் இன்றும் பிணங்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனத்துடிக்கும் மனித விரோதிகளும் தெளிவாகவே அம்பலப்பட்டு நிற்கின்றனர். இந்திய பிராந்திய வல்லரசானது தனது பங்கிற்கு புலிகள் மேற்கொள்ளும் யுத்தநிறுத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறிக் கொள்கின்றது. இந்திய மையஅரசு தனக்கும் இப்போ நடக்கும் யுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சில அறிக்கைகளை விட்டு விடுகின்றனர். இன்று நடைபெறும் யுத்தமானது கூட்டுச் சதியின் ஊடாக அனைத்துத் தரப்புக்களின் ஆசீர்வாத்துடன் நடைபெறுகின்றது. மனிதத்தை கொல்பவர்களும் கொல்ல துணைபோகின்றவர்ளும் பல்வேறு தளத்தில் இருந்து தத்தம் கடமைகளை செய்துகொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் சில செயற்பாடுகளை செய்வதில் சுயமாக முடிவெடுக்கவும், கருத்துக் கூறவதை தெளிவாக முன்வைக்கும் நிலையில் அமெரிக்கா இருக்கின்றது. சர்வாதிகாரிகளை உருவாக்கும் இந்த வல்லரசு தென்கிழக்காசியாவில் நடைபெறும் மனித அலவலத்தை காட்டி தன்னுடைய நேசமுகத்தை தமிழ் மக்களின் இழப்புக்கள் மூலமாக காட்ட எத்தனிப்பதையே இங்கு கணிக்க முடிகின்றது. அமெரிக்கா தனது படையின் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்ற முனைவதாக வந்த தகவலானது இந்தியா பிராந்திய வல்லரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவாகவே கொள்ள முடிகின்றது. இவ்வாறு சுயமாக எடுக்கும் முடிவினை அமெரிக்கா கொண்டுள்ளதையும், இந்திய அதிகாரிகள் ஒப்புக்கு அறிக்கை விடுவதையும், இந்தியாவின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என்பதை சிறிலங்கா அரசு திடமாக நம்புகின்ற நிலையில் இந்த யுத்தத்திற்கு அமெரிக்காவே நேரடியாக பின்னிக்கின்றது.

மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது – நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு பூட்டப்பட்ட பூட்டானது சாவி இன்றி இருக்கின்றது. பூட்டைத் திறப்பதற்கு சாவி யாரிடம் இருக்கின்றது என்பதை தெரிந்தும் தெரியாது ஒரு நாடகம் நடக்கின்றது. இவ்வாறு சர்வதேச சதிகள் தமிழின அழிப்பிற்கு துணை போகையில் சர்வதேச ஒத்துழைப்பின் மூலமே சதியினை முடியடிக்க முடியும். இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களைப் பற்றி பலமுறை எழுதப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் அங்கு அழிக்கப்படுவது மக்கள் என்பதை ஏற்க மறுப்பவர்களாகவும், பிணங்களை உருவாக்கத் துணை போகின்றவர்களாக புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இன்று புலம்பெயர்நாடுகளில் நமது மக்களுக்காக போராட்டத்தில் குதித்துள்ள இளையோர்கள் முன் தியாகிகளாக, ஒரு விமான ஓட்டிகளான ரூபன் அல்லது சிரித்திரன்; இவர்களோ பிரபாகரன் வீரர்களாக அல்லது உதாரண புருசர்களாகத் தெரிவர். இன்றைய இளையோர் பெரும்பான்மையானர்கள் இங்கு சிறுவயதில் வந்தவர்கள் மற்றும் இங்கு பிறந்தவர்களாவர். இவர்களுக்கு வரலாற்றினை தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை. இவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழும் காலத்தில் தமிழ் மக்களின் அவல நிலை என்ன? அவர்களுக்காக யார் போராடுகின்றார்கள்? என்பதேயாகும். இவர்களுக்கு எமக்கு தெரிந்த 30 வருட கால வரலாறு இளையோருக்கு தேவையற்றதாக இருக்கின்றது. இளையோரின் போராட்ட உணர்வை புலியெதிர்ப்பாளர்கள் எவ்வாறு சொச்சைப்படுத்துகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஜெர்மனியில் உள்ள பிரித்தானிய அமெரிக்க ஜப்பான் தூதரங்கள் மீதான புலிகளின் வன்முறைகள். “இளையோர் அமைப்பை தீவிரவாதத்திற்குள் உந்திவிடும் புலிகளின் நடவடிக்கைக்ள்”

SLDF_Germany“இத்தகைய ஊர்வலங்களுக்கு இளம்பராயத்தினர் தற்போது முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். 24.02.09 அன்று ஜெர்மனி டுசல்டோர்வ் நகரத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊர்வலத்தில் பெருமளவு இளம்பராயத்தினர் புலிக்கொடிகளுடனும் பிரபாகரனின் புகைப்படங்களுடன் கலந்து கொண்டதுடன் பிரிட்டிஷ், மற்றும் ஜப்பான் தூதரங்களிற்கு எதிராக முட்டை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்காவின் தேசியக்கொடி எரிக்கப்பட்டு ராஜபக்ஷாவின் பொம்மை உருவம் பகிரங்கமாக எரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளில் புலிகளினால் இளம்பராயத்தினர் பயன்படுத்தப்படுவதால் மொத்த தமிழ்மக்கள் மீதான விமர்சனங்கள் ஏற்படும் எனவும் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.”  http://www.thenee.com/html/290209-4.html

இளையோரைப் பொறுத்தவரை வரலாறு தேவையற்றவையாக இருக்கின்றது. இளையோரின் தேசத்தின் மீதான பற்றுதல் மதிக்கப்பட வேண்டியதாகும். இவர்களைத் தூற்றுவதால் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்க முடியும் என்பதையே புலியெதிர்ப்பாளர்களின் அறிக்கை காட்டுகின்றது. இழையோர் அவர்களின் வயதுக்குரிய துடிப்புடன் போராடுகின்றார்கள். இவர்களை வழிநடத்துவதற்கு சரியாக அமைப்பு இல்லை என்பதே உண்மை. தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் தலைவர், தேசியம், தமிழீழம் என்ற மட்டத்தினுள் இருந்து கொண்டு போராடுகின்றதினால் இவர்களின் உழைப்பு என்பது வீண் விரையமாகின்றது. முன்னர் கூறியதுபோல தேசத்திற்காக உயிரைக் கொடுப்பவர்கள் தான் உதாரண புருசர்களாக இருக்க முடியும். இழையோரின் போராட்டப் பாதையை நெறிப்படுத்துவதை விட்டுவிட்டு எதிரியுடன் துணைபோகும் குழுக்கள் இந்த இழையோரின் உதாரண புருசர்களாக உருவாக மாட்டார்கள்.

இன்னெரு விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். அதாவது போராட்டம் என்பது மாலை நேரவிருந்தல்ல. போராட்டங்கள் பலவகை உண்டு. அதேவேளை உணர்வுகள் வெளிப்படுவதிலும் பல வகை உண்டு. இவைகள் அரசியல் உணர்விற்கேற்ப மாறுபடும். இன்று போராட்டத்தை ஐரோப்பிய வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் உண்டு. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தச் சமூத்துடன் எவ்வித தொடர்பும் அற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் போது மேற்கொள்ளப்படுகின்ற இனவாதத்திற்கு எதிரான எந்தப் போராட்டங்களிலும் பங்கெடுக்காதவர்கள், உலகில் போராடும் இனங்களின் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவைக் கொடுக்காதவர்கள், தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கெடுப்பதில் ஆர்வமின்மை, வாழுகின்ற நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற பொதுப்பிரச்சனைக்கான போராட்டங்களில் பங்கெடுக்காதவர்கள் இவற்றை வெறுத்து ஒதுங்கினர். போராட்டத்தில் பங்கு பற்றினால் அவர்களைப் பற்றி கீழ்தரமாக கணித்துக் கொண்டனர்.

நாம் ஊர்வலங்களுக்கு செல்வதில்லை. அவ்வாறானவர்கள் வேறுவிதமான சிந்தனை கொண்டவர்கள். இடதுசாரி அமைப்புக்களுடன் ஏற்படுத்தப்படும் தொடர்புகளின் மூலம் தமது நலன் பாதிக்கப்படும் என ஒதுங்கியவர்கள். இடதுசாரிகளுடனான தொடர்பு என்பது தீண்டத்தகாத சாதியுடன் கூட்டு வைப்பது போல புலம்பெயர்ந்தவர்கள் பலரின் நிலைப்பாடு இருந்தது. ஏன் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டாளர்கள் தீபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கு என்று ஒரு பெயர் உண்டு அதனை காப்பாற்றுவது போல நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இதனையும் மீறி லண்டன் ஊர்வலத்தில சில அசம்பாவிதம் நடைபெற்றது. இவ்வாறான நிகழ்வுகள் கூட இவர்களின் போராட்ட விதிமுறைக்கு அப்பாற்பட்டதாக போராட்ட ஒழுங்கிணைப்பாளர்களுக்கு இருந்தது.

நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.

TYO_Protestஇன்று மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் இங்கு நடைபெறும் போராட்டங்களில் பங்குபற்றுவது எப்போ? ஆதரவு திரட்டுவது எப்போ? எனக் கேள்வி கேட்கப்படுவதும் இயல்பானதே. ஆனால் புலிகளின் ஆதரவாளர், ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர். மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி, மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.) இன்றைய இராணுவத் தோல்விகளை இட்டு விரக்தி கொள்வதற்கு மக்களே காரணம் எனக் கூறுகின்றார். மக்கள் தேசத்தின் விடுதலை பற்றி ஆழமாகச் சிந்திக்கவில்லை என்வும் கூறினார்.

ஆனால் புலிகளின் தலைமை மீதுதான் இந்த விமர்சகர் குற்றம் சுமத்தியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு லாயக்கில்லாது அப்பாவிகளான மக்கள் மீது தனது வெறுப்பைக் காட்டினார். இவ்வாறானவர்களின் பேச்சுக்களை மாற்றியமைப்பதற்கு இங்கு வாழ்து போராடுவதன் மூலமே போராட்டத்திற்காக பாதைகளை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். எமது போராட்டம் இன்றோ நாளையே முடியப் போவதில்லை. இன்று சர்வதேச சதியினால் எமது மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படப் போகின்றது. உரிமைகள் மறுதலித்து, மழுங்கடிக்கப்படுகின்ற போகின்ற நிலையில் புதிய தலைமுறையாகி நீஙகள் நடைமுறைப் போராட்டத்தின் மூலம் உங்கள் எதிரிகள் யார் என்பதை போராட்டங்களே கற்றுக் கொடுக்கும்.

வன்னியில் இனவழிப்பு யுத்தம் ஆரம்பித்த காலம் முதலே உங்கள் போராட்டத்திற்கு தகுந்த பலன்கிடைக்கவில்லை என உங்கள் மனம் குமுறுகின்றது. இவைகளை உணர முடிகின்றது. இங்கு சர்வதேச சதி என்பது பொருளாதார நலனின் அடிப்படையில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுரண்டும் பொருளாதார அமைப்பை பற்றி அறிந்து கொள்ள அதற்கான தேடலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

நாம் எதிர்காலத்தை தீர்க்கமாக அறிந்து கொள்ள எமக்கு அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலமே தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம் என்பது உரிமைகள் மறுதலித்து, மழுங்கடிக்கப்படுகின்ற நிலையை போக்குவதற்கான போராட்ட நுணுக்கம் உங்களுக்கு ஏற்படும்.

அவைக்காற்றுக் கழகத்தின் மரணத்துள் வாழ்வு ஒரு அலசல் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Balendra_Kநாடகம் : மரணத்துள் வாழ்வு
நெறியாள்கை : க பாலேந்திரா
நடிப்பு: மனோகரன் மனுவேற்பிள்ளை, க பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா
பிரிதியாக்கம் : சி சிவசேகரம் மனோகரன் மறுவேற்பிள்ளை

இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீதியோரத்தில் ஸ்ரீலங்கா படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களில் ஒருவராக இருந்து பின்னர் விடுதலையாகி லண்டன் வந்து வழமையான குடும்ப சக்கரத்தில் ஈடுபடுகிறார் மாலினி. மாலினியின் கணவர் உலகமறிந்த ஒரு மனித உரிமைவாத சட்டத்தரணி (தமிழ் சட்டத்தரணி).

கொடுமையான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் பலியாகி அந்த மனவடுக்களுடன் மனஉளைச்சலுடன் துன்பப்படும் மாலினி நாளடைவில் ஒரு உணர்வற்ற நடைபிண வாழ்க்கையை முன்னெடுக்கிறாள். மாலினியின் நிலமை இப்படி பரிதாபகரமாக இருக்க, அவரின் கணவர் ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முனையும் ஒரு சர்வதேச சட்ட நிபுணர்கள் குழுவின் முக்கிய சட்டத்தரணியாக சர்வதேச நீதி உலகில் பவனிவருகிறார். வாகனம் பழுதுபட்டு வீதியோரத்தில் நிற்க தமிழ் சட்டத்தரணிக்கு எதேட்சையாக உதவி செய்கிறார் ஒரு தமிழ் டொக்டர் ராஜரட்ணம்.

இந்த டொக்டர் ராஜரட்ணம் தான் கதையின் கிளைமாக்ஸ்…….. இவர் தான் சிங்கள இராணுவத்தினரால் மாலினி பாலியல் வன்செயலுக்கு உட்படுவதற்கு  உடந்தையாக இருந்தவர். அத்துடன் மாலினியை வன்முறைக்கும் உட்படுத்தியவர். மாலினியின் கணவரின் கார் பழுதுபட உதவிக்கு வந்த இந்த டொக்டர் ராஜரட்ணம் சட்டத்தரணியுடன் சேர்ந்து தண்ணியடிக்க வீட்டுக்கு வந்து மாலினியிடம் அகப்பட்டுக் கொள்கிறார். மாலினியின் அடிமனதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வேதனைகள் இங்கிலாந்தில் கடற்கரையோரத்தில் உள்ள வீட்டில் துப்பாக்கி சண்டைகளாக வெடிக்கின்றன. ஆப்பிழுத்த குரங்கின் கதை போல வீட்டினுள் மாட்டிக் கொள்கிறார் டொக்டர் ராஜரட்ணம்.

உலக மனித உரிமை சட்டவாதியின் மனைவி வீட்டினுள் துப்பாக்கியை ஒழித்து வைத்திருந்து அட்டகாசம் பண்ணும் சம்பவங்களும், தலைவிரி கோலமாக துப்பாக்கியுடன் திரியும் மனைவியுடன் சமரசம் செய்யும் உலகம் தெரிந்த தமிழ் சட்டவாதியும், ஸ்ரீலங்கா இராணுவத்தில் வைத்தியராக இணைந்திருந்து தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் தமிழ் வைத்தியரும், வீதியில் உதவி செய்ய வந்து மாட்டிக் கொள்ளும் டொக்டர் ராஜரட்ணமும்………… இங்கிலாந்து வீட்டில் இடம்பெறும் இச்சம்பவங்கள் யதார்த்தத்திற்கு முற்றும் விலகி நிற்கின்றன.

ஓர் நியாயமான யதார்த்தமான கருவை யதார்த்தமற்ற சம்பவங்கள் நியாயப்படுத்த தவறியதால் கரு அடிபட்டுப் போனது போன்ற உணர்வு தென்படுகின்றது.

ஒலி, ஒளி, நடிப்பு வழமைபோல் உயர்தரத்தில் இருந்தாலும் இப்படைப்பை கதைச் சூழ்நிலைகளும் சம்பவங்களும் நியாயப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தக் காரணத்தால் க பாலேந்திராவின் ஏனைய நாடகங்களில் இருந்த தாக்கம் மரணத்தில் வாழ்வு நாடகத்தில் இருக்கவில்லை என்றே கூறவேண்டும்.

தண்ணி அடித்து நியாயம் பேசும் நடுத்தர வயது லண்டன் தமிழ் வைத்தியர், மனைவியை சமாதானப்படுத்துவதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் தமிழ் சட்டத்தரணி…………… லண்டனில் உள்ள சகஜ நிலமையை மனக்கண் முன் கொண்டு வருகிறது. மாலினியாக நடித்த ஆனந்தராணியின் நடிப்பு தரமாக இருந்தாலும் அந்த திறமையை பாத்திரம், சம்பவங்கள் நியாயப்படுத்தவில்லை.

ஓர் ஆழமான அரசியல் நியாயத்தை கூற முற்பட்ட இந்த படைப்பு யதார்த்தமற்ற கற்பனைகளால் மூழ்கடிக்கப்பட்டதைப் போன்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது. 

யுத்தத்தை எதிர்க்காத – புலத்து புலி எதிர்ப்பு மையம் : சேனன்

Wanni_Warசிறு பத்திரிகை சூழலில் தனிக்காட்டு ராஜாக்களும் குழுவாத போக்குகளும் மலிந்திருப்பது தமிழுக்கு புதிதில்லை. இருப்பினும் இவர்கள் இடதுசாரியம் சார்ந்த அடக்குமுறைகளுக்கு! அதிகாரத்துக்கு எதிரான போக்குகளை கொண்டவர்களாக இருந்ததுண்டு. அந்தக்காலம் மலை ஏறிக்கொண்டிருப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

தற்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள மிகமோசமான சூழலில் புலம்பெயர்ந்த அரசியல் / இலக்கிய பிதாமக்களின் பிற்போக்குத்தனங்கள் மேல் ஆயிரம் சூரியன் வெளிச்சம் விழுந்துள்ளது. தம்மை இடதுசாரியம் சார்ந்தவர்களாக காட்டிக்கொள்பவர்களாகவும் ஒடுக்கப்படும் விளிம்பு மக்களுக்காக கதைப்பவர்களாயும் பினாத்தித் திரியும் பலர் இன்று என்ன செய்கிறார்கள்? பேசுகிறார்கள்? என்பதை உற்று கவனியுங்கள். இவர்கள் தமக்கு மீறிய முற்போக்கு / அரசியல் இலக்கிய போக்குகள் எதுவும் புலத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வதில் இதுவரை மிக கவனமாக இருந்து வந்துள்ளார்கள்.

தொண்ணூறுகளுக்கு முந்திய போராட்ட இரகசியத்தை, குழுகுழுத்து மையங்கள் எழுப்பினரே அன்றி இவர்கள் ‘மாற்றை’ உருவாக்கவில்லை. இவர்கள் ‘போராட்ட இரகசியம்’ வெறும் கழிவிரக்கம் கொண்டவையாகவும் சுயபுலம்பல்களாகவும் இன்றுவரை இருந்துவருகிறது. இவர்கள் கட்டமைத்தவை யாவும் புலி எதிர்ப்பு மையவாதத்தை சார்ந்தவையே. பழைய இயக்க சகவாசம், மக்கள் விடுதலை பற்றிய தெளிவற்ற போக்கு, மார்க்சிய எதிர்ப்பு என்று எல்லாம் பின்னிப் பிணைந்ததுடன் புலி எதிர்ப்பு மையம் சுழல்கிறது.

இலக்கியம் என்று பார்த்தாலும் இதுவரை வந்தவைகளில் பெரும்பாலானவை வெறும் குப்பைகளே. உருப்படியாக எழுதுபவர்களும் புலிஎதிர்ப்பு மையத்துக்குள் வலிந்த இழக்கப்படுகிறார்கள். தொண்ணூறுகளுக்கு பிந்திய கொடுமைகள் – மக்கள் பல கோணங்களில் எதிர்கொண்ட கடும் இன்னல்கள் இவர்தம் இலக்கியங்களில் பார்க்க முடியாது.

சொந்த நாட்டிலேயே அகதி வாழ்வு, முஸ்லிம் மக்கள் பிரச்சினை, சிங்கள பேரினவாதமும் தமிழ் தேசியவாதமும் இன்று கண்டுள்ள புதிய எல்லைகள், மலையக மக்கள் பிரச்சினைகள் எதுவுமே இவர்கள் இலக்கியங்களில் பார்க்க முடியாது. இன்றும் முஸ்லிம் பிரச்சினைகளை முஸ்லிம்களும், மலையக மக்கள் பிரச்சினைகளை மலையக மக்களும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றி அண்மையில் கவிஞர் இளைய அப்துல்லா ஒரு கவிதை சி.டி. வெளியிட்டுள்ளது இவர்களில் பலருக்குத் தெரியாது. யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. பசீரின் கவிதைப் புத்தகத்தின் உயிர்நாடி பேசப்படவேயில்லை. ஆனால் மிகமோசமாக எழுதும் பலரது ‘புலி எதிர்ப்பு’ கவிதைகள் முக்கியத்துவம் பெறுவதை நாம் அவதானிக்க முடியும்.

அத்துடன் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளில் சுற்றிவர நிகழும் ஒடுக்குமுறைகள் சுத்தமாக கவனிக்கப்படுவதில்லை. அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களில் நிகழும் பூகம்பங்களும், ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த போராட்டங்கள் எதுவும் இவர்கள் கவனத்தை ஈர்த்ததில்லை. ‘புலி எதிர்ப்பு தமிழ்ர்’ என்ற குறுகிய பண்பாட்டு வலையத்துக்குள் இவர்களின் கற்பனைகள் சுழல்கின்றன. புலம்பெயர் இலக்கியம் வெறும் புலம் ஏங்கும் இலக்கியம் மட்டுமே. புலம்பல் இலக்கியம் என்றும் சொல்லலாம். 83க்கு முந்திய  – சிலசமயம் 90களுக்கு முந்திய – பழைய குட்டைகளையே இன்றும் கிளறிக் கொண்டிருக்கும் இவர்கள், தற்கால தலைமுறை தமிழர்களின் உணர்வலைகளுக்கு ஏற்பனும் நெருங்கி வரமுடியாதவர்கள்.

போராட்டங்கள் நடத்தும் நாடுகளில் இருந்து சிறந்த போராட்ட இலக்கியங்கள் எழுந்துள்ளதை நாம் பார்க்க முடியும். ஆனால் இலங்கை மக்கள் மத்தியில் இதுவரை அவதானத்துக்கு உந்தி நடப்பவை எல்லாம் புலம் ஏங்கும் இலக்கியங்கள் மட்டுமே. யாரும் எழுதவில்லை என்பதல்ல அதன் அர்த்தம். புறவயக் காரணிகளின் ஆழமையான காரணியாக புலம் ஏங்குதல் இருக்கிறது என்பதுமல்ல அதன் அர்த்தம். பல ‘எழுத்துக்கள்’ கவனிக்கப்படவில்லை என்பதுதன் உண்மை.

புலிகள் வளங்கிய ‘துரோக முத்திரை’ என்ற பொதுமையத்தை நோக்கி ஆளுமைகளை விரயம் செய்யும் இவர்கள், இறுக்கமான கதையாடலில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒருபடம் பார்த்தால் பல படங்கள் பார்த்ததற்கு சமன் என்பது போல்தான் புலம்பெயர் இலக்கியமும் போர்முளக்களுக்குள்ளல் இயங்குகிறது. துரோக முத்திரை எதிர்ப்பிலக்கியத்தில் தவறில்லை. ஆனால் அதுமட்டுமே மையமாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கும் இவர்கள் மடத்தனம்தான் புரியவில்லை.

பல முக்கிய போராட்ட இலக்கியங்கள் அடக்குமுறையுடன் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கவிதைகள் பல எழுதியவர்களின் உயிர்களை போராட்டம் கவ்விக்கொண்டு விட்டது. அவர்களும் அவர்தம் இலக்கியங்களும் மறக்கப்படுவது ‘அதிகாரத்துக்கான அம்புலோதி’ பாற்பட்ட சிந்தனை போராட்டத்திலேயே நிகழ்கிறது.

தற்போது இடதுசாரிகள் மேல் ‘மத்திதர வர்க்க நக்கலை’ வளர்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்ட குறுக்குழு வாதங்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்டுவருகிறார்கள். இதை தமிழ்நாட்டுக்கும் கடத்தி தம் சுயவிலாசத்தை நீட்டப் பார்க்கிறார்கள். புலத்தில் தலித்தியம் சார்ந்த விழிப்பு எழுப்பியமைக்கு இந்த மிதாமக்களே காரணம். இன்றும் இவர்கள் பல முட்டுக்கட்டைகளை கட்டமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புலி எதிர்ப்பு இலக்கியம் மட்டுமே புரட்சிகர இலக்கியமாக இருக்க முடியும் என்ற தமது அறிவிலி நிலைப்பாட்டை மோட்டுத்தனமாக இலக்கியவாதிகள் மேல் திணித்துவரும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். குறிப்பாக சமீப காலங்களில் அகதியாக புலம்பெயர்ந்த இளவயதினர் பலர் தமக்கு சம்மந்தே இல்லாத தனக்கு முந்திய போர்முலக்களை பின்பற்ற அழுத்தப்படுவது கேலிக்கிடமானது. அதேபோல் பல இளவயதினர் வலது சாரியத்துக்கு பலிகடாக்களாக்கப்படுவதன் புண்ணியமும் இவர்களையே சாரும்.

இந்த போக்கு இன்று இவர்களை ‘மக்கள் எதிர்ப்பு’ ஸ்தானத்தில் நிறுத்தியுள்ளது. யுத்தவெறி இலங்கை இராணுவத்தின் கொடுமை இவர்களையும் வெளிக்காட்டியுள்ளது. புலிகள் இராணுவ ரீதியாக பாரிய தோல்வியை காணும் இத்தருணத்தில் – தெற்கின் சிங்கள பேரினவாதம் பேயாட்டம் ஆடும் இத்தருணத்தில் – ஆயிரக்கணக்கில் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தல், இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் என்ன செய்கின்றன? தமிழ்நாட்டிலும் உலகெங்கும் மக்கள் லட்சக்கணக்கில் ஒடுக்குமுறைக்கு எதிராக திரளக்கூடிய இத்தருணத்தில் இவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள். புலிகள் நசுக்கப்பட்டு போர் ஓயட்டும் என்று காத்திருக்கிறார்கள். இலங்கை அரசைப்போல் போர் முடிதலுக்கு காலவரையறை கணித்து ஆடி ஆவணிக்கு பிறகு கூட்டங்கள்போட திட்டங்கள் போடுகிறார்கள்.

புலி மைய வாதத்தில் புதைந்துள்ள இவர்கள் மக்கள் போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள். தனிநபர்கள் தெனாவட்டைக் காட்டி புகழ் சவாவி காய்கிறார்கள்.
மக்கள் போராட்டம் அவசியமான கட்டத்தில் நீங்கள் எங்கே? ஒடுக்கப்படுபவர்களுக்கான உங்கள் குரல் எங்கே? மக்களை மிரட்சியுடன் பார்த்தேன் ஒதுக்குகிறீர்கள்? சுத்தி நின்று மக்கள் இவர்கள் காதுகளில் ‘உ’ என்று கூவியும் இவர்கள் தூக்கத்தால் எழ மறுக்கிறார்கள். அவர்கள் கருனாவின் – பிள்ளையானின் அதனை வளர்க்கும் பேரின வாதத்தின் மடியில் நிம்மதியாய் தூங்குகிறார்கள். ஒரு சதத்துக்கும் உதவாத உங்களை சரித்திரம் சரிக்கும் காலம் வந்துவிட்டது.

பின்குறிப்பு : அவர்கள் / இவர்கள் என்ற பெரும் சொல்லாடலில் பல முகங்களை – பெயர்களை மைப்படுத்தியிருப்பினும் அவசியமேற்படின் அவற்றை பிரசுக்க எந்த தயக்கமும் இல்லை.

பிரான்ஸில் பொலிஸ் அதிகாரி படுகொலை! ஆறு தமிழர்கள் கைது!!! : த ஜெயபாலன்

French_Policeபெப்ரவரி 21ல் பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுனவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சென்சன்ரனிஸ் பகுதி பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார். அயூலின் டான்லேம் (33) என்ற பொலிஸ் அதிகாரியே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஆறு தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெளியான மரண விசாரணைகளின்படி துப்பாக்கியில் இருந்து 14 தோட்டாக்கள் சுடப்பட்டு இருந்ததாகவும் படுகொலை செய்யப்பட்ட அதிகாரியின் தலைப் பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்து உள்ளதாகவும் அவற்றில் ஒன்றே உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் மரண விசாரணையில் தெரியவந்து உள்ளது.

லூ பரிசியன் உட்பட பிரானிஸின் தேசியப் பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுன பாரிஸின் லா சப்பலுக்கு ஒப்பானது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதி. அங்குள்ள கத்ருட் பகுதிக்கு அருகாமையில் மயூரிஸ் பிரோ வீதியில் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் பொலிஸ் அதகாரி அயூலீன் டான்லேம் வந்தள்ளார். அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாகியது என்றும் முடிவில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்தே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பொலிஸார் மறுநாள் காலையே ஒரு பெண் உட்பட ஆறு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் கைது செய்யப்பட்டவர் ஒருவரின் தாயார் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ள பிபிசி சந்தேசயா (பிபிசி சிங்கள மொழிச் சேவை) இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றது. சில புலி எதிர்ப்பு இணையங்களும் இச்சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி உள்ளன.

தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகளின்படி இச்சம்பவம் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிக்கும் அப்பகுதியில் இருக்கும் சில தமிழர்களுக்கும் இடையேயான விவகாரம் எனத் தெரியவருகிறது. இச்சம்பவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டது அல்ல என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட விரோதமாக விசா பெறமுயற்சித்து இருந்ததாகவும் அவர்களுக்கு அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஊடாக அயூலின் டான்லேம் இன் தொடர்பு கிட்டியதாகவும் லக்குறுனவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றுமொரு செய்தி இவர்களுக்கிடையே பணம் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. இச்செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே சென்சென்ரனிஸ் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மோசடிக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்று இவ்வாரம் விடுதலையாகி உள்ளதாக அப்பகுதி உள்ளுர்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அயூலின் டான்லேம் மீதும் அவ்வாறான ஒரு சம்பவம் தொடர்பான பதிவு உள்ளது. ஆயினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ட்டிருக்கவில்லை. தொடர்ந்தும் பொலிஸ் அதிகாரியாகவே பணியாற்றி வந்தார்.

சம்பவத்தின் போது விடுப்பில் இருந்த அயூலின் டான்லேம் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் சென்றிருந்தமை விசாரணைகளின் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிந்திய செய்திகளின்படி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் அயூலின் டான்லேம் இன் துப்பாக்கியைப் பறித்து வானத்தை நோக்கியும் தரையை நோக்கியும் வேட்டுக்களைத் தீர்த்ததாகத் தெரிவித்து உள்ளார். அயூலின் டான்லேம் மீது பாய்ந்த இரு குண்டுகளையும் யார் சுட்டது என்பது இன்னும் அறியப்படவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கிறது.

மேற்கு நாடொன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலை தொடர்பில் தமிழர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவையாகும்.

._._._._._.

பொலிஸ் அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக லு பரிசியன் பத்திரிகையில் வெளியான செய்தியின் தமிழ் வடிவம் கீழே பிரசுரிக்கப்பட்டு உள்ளது. – தமிழில் சபா நாவலன் (நன்றி : இனியொரு)

பிரான்சில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : இலங்கையர்கள் கைது

25 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட வயதை உடைய ஒரு பெண் உள்பட 5 பிரஞ்சு இலங்கையர்கள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரிலியன் டான்செல்ம் என்ற பரிஸ் 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிஸ் புற நகர்ப் பகுதியான லா குருனேவ் என்ற இடத்தில் கொலை செய்யப்படது தொடர்பான இந்த இலங்கையர்கள் மீதான வழக்கு இன்று காலை விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு சந்தேக நபர்களை நாளைகாலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்தப் பொலீஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியானது கொலைசெய்யப்பட்ட அதே கட்டிடத் தொடரிலுள்ள குப்பைதொட்டியொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையிலேயே இவர் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் சம்பவம் நடைபெற்ற நேரம் கடைமையில் ஈடுபட்டிருக்கவில்லை. தேசிய போலிஸ் இணையம் என்ற பொலிஸ் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த Fபாபியன் மொடிகொம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட ஒரிலியன் டான்செல்ம் சண்டையொன்றில் சிக்குண்டிருக்கலாம் எனவும் ஆனால் அதற்கான காரணங்கள் தெளிவற்றதாக உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் முன்னதாக ஊழல் குற்றச்சாட்டொன்றின் சாட்சியாக பொலிஸ் சேவைப்பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதும், பின்னர் சந்தேகம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். இதே இடத்தில் கடமையாற்றும் பிறிதொரு பொலீஸ் உத்தியோகத்தரும் ஊழல் குற்றச்சாட்டொன்றின் பெயரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட போதும், இன்றைய விசாரணைகளின் படி, இவ்விரு சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவரவில்லை எனப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.

பொபினி பொலீஸ் பிரிவின் பிந்திய தகவலின் அடிப்படையில், பழிவாங்கல், குடிபோதையிலான மோதல், பணத்தகராறு போன்ற எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழ் மக்களின் துருவ அரசியல் ஏற்படுத்தும் பதட்டமும் மிரட்டல்களும் : த ஜெயபாலன்

Stop Voilenceபிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்ணணி அறிவிப்பாளரும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று (பெப்ரவரி 18) மாலை பிரான்சின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மூன்று இனந்தெரியாத உறுப்பினர்கள் வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் ‘அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லவும் இல்லையேல் பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று கணவரிடம் கூறும்படி எச்சரித்து உள்ளனர். ‘ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உங்கள் கணவர் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று திருமதி உதயகுமாரிடம் வந்த நபர்கள் எச்சரித்து உள்ளனர்.

இப்பயமுறுத்தல் தொடர்பாக டிரான்சி பொலிசில் முறையிட்டு உள்ளதாக உதயகுமார் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். ஏற்கனவே ரிஆர்ரி தமிழ்அலைக்கு பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உதயகுமார் நேற்றைய பயமுறுத்தல் எல்ரிரிஈ தரப்பிலிருந்தே வந்துள்ளதாக தான் நம்புவதாகவும் பொலிஸில் அவ்வாறே முறையிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்தினால் அரசியல் அரங்கத்தில் மாற்றங்கள் ஏற்படுமா எனக் கேட்ட போது இதுவரை அவ்வாறான முடிவுகள் எதனையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும் வழமைபோல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சம்பவதினம் மாலை 5 மணியளவில் உதயகுமார் வசிக்கும் அப்பாற்மன்ட் இன்ரகொம்மில் உதயகுமாரை அழைத்து உள்ளனர். அப்போது உதயகுமார் வீட்டில் இருக்கவில்லை. இன்ரகொம்மில் திருமதி உதயகுமார் உதயகுமார் வெளியே சென்றத்தைத் தெரிவிக்கவும் வந்தவர்கள் ‘நாங்கள் உங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும்’ என்று சொல்லி உள்ளனர். அவர்களது குரலில் சந்தேகம்கொண்ட திருமதி உதயகுமார் தானே கீழே வருவதாகக் கூறிவிட்டு பிள்ளைகளை அப்பாட்மன்டில் பூட்டிவிட்டு கீழே சென்றுள்ளார். அங்கிருந்த மூவரில் ஒருவர் வாயிலுக்கு வந்து ” உதயகுமாருக்கு அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள் இல்லாட்டி பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று எச்சரிக்க பின்னாலிருந்து மற்றுமொரு குரல் ”ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உதயகுமார் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று ஓங்கி ஒலித்தது. ‘அதனை அவரிடமே சொல்லுங்கள்’ என்று திருமதி உதயகுமார் கேட்கவும் ‘சொல்ற விதத்தில் சொல்லுவோம்’ என்ற வகையில் பதில் அளித்துவிட்டுச் சென்று உள்ளனர். ‘வந்தவர்கள் தங்களை அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அறமுகப்படுத்தி உள்ளனர்.

ரிஆர்ரி வானொலியில் இடம்பெற்றுவரும் அரசியல் நிகழ்ச்சிகளான உறவுப்பாலம், அரசியல்அரங்கம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் உதயகுமார் அவர்களே தொகுத்து வழங்கிவருகின்றார். அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. உறவுப்பாலம் நிகழ்சி வாராவாரம் ஒரு அரசியல் பிரமுகரை நேயர்கள் நேரடியாக கேள்வி கேட்கும் வகையில் அமைந்தது. கடந்த வாரம் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததுடன், உதயகுமாருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

ஞாயிறுதோறும் இடம்பெறும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியும் மிகவும் பிரபல்யமானது. அதேவேளை, எல்ரிரிஈ ஆதரவாளர்களும் இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைப்பதும் உண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த நிகழச்சியில் கலந்துகொள்ளும் எல்ரிரிஈ ஆதரவாளர்கள் அந்த நிகழ்ச்சியையும் வானொலியின் இயக்குநர் குகநாதனையும் தனிப்பட்டவகையில் தாக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்த பதில்கள் குறித்த மிகவும் காட்டசாட்டமான விமர்சனம் ஒன்றை மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்-டக்ளசின் கலந்துரையாடல் என்ற தலைப்பில் “இனியொரு” இணையத்தளத்தில் சபா நாவலன் எழுதி இருந்தார். அதில் ‘இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. “தோழர்” டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா படித்திருக்காமல் இருக்க முடியாது. இந்த கீழ்த்தரமான சிந்தனையால் விதைக்கப்பட்ட இனவாதம், பிரிந்து வாழ்வதற்கான உணர்வை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இன்னுமின்னும் ஆழ விதைக்கும் என்பதை அமைச்சர் தோழர் “டக்ளஸ்” சிந்திக்காமல் “மாண்புமிகு” அமைச்சராகியிருக்க முடியாது. இந்த மகிந்த சிந்தனையை மாவோ சிந்தனைக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் பிரச்சாரம் வேறு மேற்கொள்ளும் மாண்புமிகு, “முன்நாள் இடதுசாரி” அமைச்சர் தேவானந்தா, இந்தச் சிந்தனையில் மக்கள் மயங்கி, அரச குடியேற்றத்திட்டத்திற்கு மகிந்த புரம் என்று திரு நாமம் சூட்ட “தோழரை” கேட்டுக் கொண்டார்களாம்.??!! இப்படித்தான் 14.02.09 அன்று டான் வானொலியில் உறவுப்பாலம் நிகழ்ச்சியூடாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த “தோழரின்” பதில்கள் மகிந்த பாசிசத்தின் இன அழிப்பின் நியாயப்படுத்தலாக நகர்ந்து சென்றது.” என்று நாவலன் காட்டமான ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். இறுதியில் ”மகிந்த, பிரபாகரன், தேவானந்தா போன்ற எல்லோருமே அப்பாவிகளைக் கொன்று குவித்து அவர்கள் சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டாலும், எஞ்சியிருக்கும் சொற்ப மக்களுக்கு மத்தியில் இவர்கள் யுத்தக் குற்றவாளிகளே! சொந்த மக்களையே கொன்று குவித்த சமூக விரோதிகளே!!” என்றும் சபா நாவலன் குறிப்பிட்டு இருந்தார்.

சபா நாவலனின் இவ்விமர்சனத்திற்காக அவருக்கு இன்று தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மிரட்டல் உதயகுமாருக்கு மிரட்டல் வந்த பக்கத்தில் இருந்து வரவில்லை. சபா நாவலனுக்கு வந்த மிரட்டல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது வைத்த விமர்சனத்திற்காக வந்த மிரட்டல் என்கிறார் சபா நாவலன்.

ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வுகள் தற்போது மிகவும் உணர்ச்சியூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இன்றைய இந்த அவலத்திற்கு முழு முதற் காரணமாயுள்ள இலங்கை அரசு மீதும் அதன் ஆதரவு சக்திகள் மீதும் அதேசமயம் போராட்டம் என்ற பெயரில் மக்களைப் பணயம் வைத்துள்ள எல்ரிரிஈ மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இவை ஒரு பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவற்றின் ஒரு வெளிப்பாடாகவே கிங்ஸ்பரி விகாரைக்கு ஜனவரி முற்பகுதியில் சில விசமிகள் தீ வைத்துள்ளனர். அதிஸ்டவசமாக தீ கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

மேலும் லண்டனில் நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் கொலைப் பயமுறுத்தல்களுக்கு உள்ளாகி பொலிஸில் முறையிடப்படும் வரை சென்றதுடன் சில நாட்கள் வீட்டில் தங்கி இருக்க வேண்டாம் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டு இன்னுமொரு பாதுகாப்பான வீட்டில் தங்கவேண்டி ஏற்பட்டுள்ளது. தொழிற்கட்சி கவுன்சிலராக உள்ள போல் சத்தியநேசன் அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன்ரிம்ஸ் ஊடாக ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியே இப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் எப்போதும் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்பதும் எப்போதும் மக்கள் அணுகக் கூடிய வகையில் செயற்படும் கவுன்சிலர் என்பதும் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சில இளைஞர்கள் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் சிலரால் தூண்டப்பட்ட ஒரு அடையாளத்தை தேடும் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

அதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக ஜனவரி 26 அன்று முன்னாள் ஈபிஆர்எல்எப் உறுப்பினரும் வெளிப்படையாக தனது அரசியல் கருத்தக்களை வெளியிடுபவருமான லாபீர் என்றழைக்கப்படும் எஸ் பரமநாதன் ஈஸ்ற்ஹாமில் வைத்து மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டதுடன் மேலும் தாக்கப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் மக்களிடையே இருந்து வந்த துருவ அரசியல் இந்த அவலமான சூழலிலும் மக்கள் சார்ந்ததாக இல்லாமல் தாங்கள் சார்ந்த அமைப்பை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. அவற்றின் வெளிப்பாடாகவே இந்த மிரட்டல் சம்பவங்கள் அமைகிறது. மேலும் சில வன்முறைக் குழுக்களும் தங்களை இன்னார் என்று அடையாளப்படுத்தி ஒரு அடையாளத்தை தங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான மிரட்டல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முற்று முழுதாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம். தமிழ் மக்கள் கடந்து வந்த அரசியல் பாதை இனித் தெரிவு செய்ய வேண்டிய அரசியல் பாதை தொடர்பான விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள், மதிப்பீடுகள் அவசியம். வன்முறை மிரட்டல்கள் மூலம் இவற்றை நிறுத்தலாம் என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்க முற்படுவதற்கு ஒப்பானது.