பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

“நாட்டை கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா

நாட்டை கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். எனவே அவ்வாறான மோசடிக்காரர்களான அரசியல்வாதிகளிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்களாலேயே நாடு இன்று இவ்வாறான நிலையில் உள்ளது. அந்த வழியில் வந்தவர்களே இன்றும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

எனவே அவர்களது ஆட்சியின் கீழ் குறுகிய காலத்துக்குள் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று மக்கள் எதிர்பார்க்கக் கூடாது.

எனவே மோசடிக்காரர்களான அரசியல்வாதிகள் தொடர்பில் அறிந்து, அவர்களிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் யார் வந்த எந்த வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. எனவே ஊழல், மோசடியற்ற நாட்டை நேசிக்கும் தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

நிவாரணங்களுக்காகவும், சமூர்த்தி கொடுப்பனவுகளுக்காகவும் வாக்களித்தால் கடந்த ஆண்டைப் போன்று மீண்டும் அனைத்தையும் இழக்க நேரிடும்.

இவ்வருடம் அரசியலமைப்புக்கேற்ப அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும். ஆனால் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை எனினும் மீண்டும் மக்கள் ஏமாற்றப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

“புலிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து கொடுத்தவருக்கு டெலிகொம் நிறுவனத்தை விற்க இலங்கை அரசாங்கம் முயற்சி.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே டெலிகொம் நிறுவனத்தை விற்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தங்கத் திருடனை எப்படிப் பாதுகாத்து இந்தச் சபைக்கு அழைத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம் என்றால் இன்று சட்டத்தைப் பற்றி பேசி பயனில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், “இவற்றைச் செய்வதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

மக்கள் உணவு, பானங்கள் இன்றி தவித்து வருவதோடு, இக்கட்டான சூழ்நிலையை மக்கள் புரிந்து கொண்டு வாழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.

பல்வேறு சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்து மக்களை அடக்க முயற்சிக்கிறது. அதனைக் கொண்டு ஊடகங்களை பழிவாங்க முயற்சிக்கின்றனர்.

இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் ஊழல் நிறைந்தது என்பதோடு, ஊழல் தடுப்பு மசோதாவை கொண்டு வர முயற்சிக்கின்றனர். இவர்கள் ஒரு ஹிட்லரைப் போலவே வாழ முயற்சிக்கின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு – கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிருப்தி !

வடக்கு கிழக்கில் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை அரசியல் தேவை கருதி விடுவிக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பூகொட மண்டாவல, ரணவிரு கிராமத்தில் இடம்பெற்ற போர்வீரர் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

 

இன்று நாட்டை ஆட்சி செய்பவர்கள் மட்டுமன்றி பலர் போர் வீரர்களை மறந்து விடுகின்றனர். இப்போது சிலருக்கு போர் நடந்ததா என்று கூட தெரியாது. மொத்தத்தில் தற்போதைய அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் போர்வீரர்களை கண்டுகொள்ளவில்லை.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட சில காணிகள் உள்ளன. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட சில நிலங்களைத் திருப்பித் தரவும் வாய்ப்புள்ளது. ஆனால், அரசியல் நலன் கருதி அந்த நிலங்களை திருப்பி கொடுப்பதை ஏற்க முடியாது.

வடக்கு, கிழக்கில் வாக்குகளுக்காக பேராசை கொண்ட சக்திகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் தவறான இடத்தில் வைக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. என்ன ஒரு கோழைத்தனமான செயல். நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள்.

தற்போதைய ஆட்சியே கோழைத்தனமானது. அருவருப்பானது. பலவீனமாக உள்ளது. அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய அறிவார்ந்த தலைவர் இந்த நாட்டிற்கு தேவை. அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று பலர் கேட்கிறார்கள், கேட்பது எளிது ஆனால் பதில் சொல்வது கடினம்.

சரியான தலைமையை தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் தியாகங்களைச் செய்தால் அதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், வீட்டில் கண்ணாடி முன் பார்க்கும்போது, ​​எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரைக் காண்கிறேன்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு சல்யூட் அடிக்க முடியும் ஏனென்றால் தற்போதைய ஜனாதிபதி, ராஜபக்சவை போல ஊழல்வாதி அல்ல, ஆனால் வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் அவருக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டேன், அவர் மேதை அல்ல, பலவீனமானவர்.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சிங்கள பெண்ணை திருமணம் செய்து சிங்களவராகவே வாழ்ந்த விக்கினேஸ்வரன் இன்று தமிழராக நடிக்கிறார்.” – சரத் பொன்சேகா

“இலங்கை ஒற்றையாட்சி நாடாகும், இங்கு சமஷ்டிக்கு இடமில்லை, இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள்.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சமஷ்டி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தென்பகுதி அரசியல்வாதிகள் பலர் தங்களது எதிர்க் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணை திருமணம் செய்துள்ளார், பிள்ளைகளும் சிங்கள வழியில் வாழ்கின்றனர், தெற்கில் படித்துள்ளார், தெற்கில் தொழில் செய்தார், தற்போது தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார், அவர் ஒரு சிறந்த சந்தர்ப்பவாதி.

இவ்வாறு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மகிந்தராஜபக்சவுக்கான மலசலகூடத்துக்காக மட்டுமே 600 கோடி ரூபா – நாடாளுமன்றில் சரத்பொன்சேகா !

“ தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்”.என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நேற்றைய(22.09.2022)  நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பாளராக இருந்த போது 50 இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்பட்டது. இதற்கு பினனர் வந்த ஒருவருக்கு 100 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து இளைப்பாரிய இராணுவ அதிகாரி ஒருவர் செயற்பாட்டு பணிப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவாக செலுத்தப்பட்டது.

நாமல் ராஜபக்சவின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பெண்ணாகவும், பணியாற்றி வருமானங்களை திரட்டி வந்தார்.

அதேநேரம், கடந்த 2010 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவிற்கு சிறிலங்கன் எயார்லைன்சில் மலசலகூடம் ஒன்றை நிர்மாணிக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. 600 கோடி ரூபாய் செலவில் ஒரு மலசலகூடம் நிர்மாணிக்கப்படுமாக இருந்தால் அதில் தங்கத்தினாலான உதிரிப்பாகங்களே பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். போராட்டங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து செயற்பட்டனர். மோசடிகளுக்கு எதிராக போராட்டங்கள் மூலமே தீர்வுகளை காணமுடியும். கசிப்பு விற்பனை செய்தாவது நாடாளுமன்றத்திற்குள் வரும் பலர் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை.

இந்த நிலையில், போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டு நிராயுதபானியான விடுதலை என பெயரிட வேண்டும். அத்துடன், இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே நாட்டில் மோசடியற்ற நிலையை கொண்டுவர முடியும்.

தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அவசரமாக கொண்டுவரகூடிய விடயமல்ல. அது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது. எனினும் தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்”, எனக் குறிப்பிட்டார்.

“இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைப்பேன்.”- பொன்சேகா

நாட்டின் நிலைமை தொடர்பாக பிரதமரிடம் எந்த திட்டமும் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் மக்களை நிரந்தரமாக ஏமாற்றி வருகிறதென குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன்போது, பிரதமரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியேற்று ஊழல்வாதிகளை தண்டிக்க விருப்பம் இல்லையா என கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “நான் பொலிஸ் அமைச்சரானால் முதலில் இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். அதுதான் பிரச்சினை. ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்பாகவே நான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது எனக்கு எந்த நிபந்தனையும் இருக்கவில்லை.

செய்ய வேண்டிய திட்டம் பற்றி பேசினேன். அந்த திட்டத்திற்கு ஜனாதிபதி உடன்படவில்லை. இதனையடுத்து, ரணிலுக்கு பதவி வழங்கப்பட்டது. எனினும் அவர் எதுவுமே செய்யாமல் இருக்கிறார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் வசைபாடுகிறார்.” – எம்.கே. சிவாஜிலிங்கம் காட்டம் !

“டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும்.” என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிவருகின்றார்கள். இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரத்திற்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி குண்டர்களினால் சுட்டும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரண தண்டனை தீர்ப்பு நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது முதல் தடவை அல்ல. அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா என்பதற்கு பதில் கூறவேண்டும். இறுதியுத்தத்தின் போது பிரபாகரனின் படம் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள் இலங்கை பூராகவும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால் தற்போது குறித்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்திற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது? அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத்பென்சேகா, பிரபாகரன் ஒரு வீரன் கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதை கூறுகின்றார்.

படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். சரணடைவது என்றால் ஆயுதங்கள் இல்லாமல் தான் சரணடைவது. அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோமென ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம், யார் புதைத்தது என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலை கரைத்துவிட்டோம் எறிந்துவிட்டோம் என்றார்கள். ஒரு போர் வீரனது உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது மரபு.

பிரபாகரனது இறப்புத் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே அரசாங்கங்கள் கூறிவருகின்றது. பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணாவையும் தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்தநபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் மரண விசாரணை நடைபெறவில்லை.

உலங்கு வானூர்தி மூலம் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட வைத்திய அதிகாரியை கூட்டிச்சென்று மரண சான்றிதழை வழங்கவில்லை. இந்தியாவிற்கு ஒரு நீதிமன்ற சான்றிதழை வழங்கியுள்ளீர்கள் இதனைவிட ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை. அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும் அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார் சடலத்தை எடுத்தோம் புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடன் பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் தாயார் இதனைக் கூறியுள்ளார்.

பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோம் என்றார்.

“ஜே.வி.பியிர் வேறு. புலிகள் வேறு. புலிகளை நினைவு கூற அனுமதிக்கமாட்டேன்.” – சரத் பொன்சேகா

அடுத்து வரும் தங்களது ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக தன்னை நியமிப்பதாக கட்சித் தலைவர் தெரிவித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மாசல் சரத் பொன்சேக்க  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சு,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்க்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அடுத்த அரசில் எனது பணிகளை நிறைவு செய்ய முழு அதிகாரம் தருவதாகவும் தலைவர் தெரிவித்தார். அடுத்த ஐக்கிய மக்கள் சக்தி அரசொன்று உருவாகும். அதில் நான் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவேன். மோசடியுடன் தொடர்புள்ளவர்கள் இருந்தால் எதிர்தரப்பில் மட்டுமன்றி எமது தரப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றார்.

எல்.ரீ.ரீ.ஈ நினைவு கூரல்கள் தற்பொழுது நடைபெறுகிறது. தேசிய மட்டத்தில் முடிவு எடுத்து அவற்றை நிறுத்த வேண்டும். இந்த விடயத்திற்கு எனது கட்சித் தலைவரினதும் கட்சியினதும் அனுமதி உள்ளது. அதனால் பொறுப்புடனே சொல்கிறேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பாதுகாப்பு செயலாளரை கோருகிறேன். இறந்தவர்களை நினைவு கூருவதாக சொல்கின்றனர். அதில் பிரச்சினை கிடையாது. அதற்கு பிரபாகரனின் பிறந்தநாளை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. பிரபாகரனை அவரது குடும்பத்தினரால் நினைவு கூரமுடியும்.

பிரபாகரனின் பிறந்த தினத்தில் மாவீரர் தினத்தை கொண்டாடுவதை ஏற்க முடியாது. புலிகள் இயக்கத்தை தொடர்புபடுத்தி நினைவு கூருவது சட்டவிரோதம். புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாகும்.எல்.ரீ.ரீ. ஈ நினைவு கூரலும் ஜே.வி.பி நினைவு கூரலும் ஒன்றல்ல. அரசியல் மாற்றம் ஏற்படுத்தவே ஜே.வி.பி முயன்றது. நாட்டை பிரிக்க அவர்கள் முயலவில்லை என்றார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை என எதிர்க்க போவதில்லை – சரத் பொன்சேகா

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை ஐக்கிய மக்கள் சக்தி  உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை என எதிர்க்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குடிவரவு குடியகல்வு சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், இருப்பினும் கல்வி பயில்வதற்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுகொள்ள முடியாது என கூறினார்.

இவ்வாறு கட்டணம் வசூலிப்பது ஏழை மாணவர்கள் கல்வி பெறுவதைத் தடுக்கும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாதுகாப்பு தரப்பினரை விமர்சிப்பதை அங்கீகரிக்கப் போவதில்லை. இதேவேளை இயற்கை உரப் பயன்பாட்டினை கொண்டுவர கடுமையான முயற்சியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

“சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். அவருக்கான பாதுகாப்பு மீள வழங்கப்பட வேண்டும்” – நாடாளுமன்றில் சரத்பொன்சேகா !

பேரணியில் கலந்துகொண்ட காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனை தானே நிறுத்தியதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு அரசே பொறுப்பு கூற வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மீண்டும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10.02.2021) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவரது உயிர்பாதுகாப்பை கருத்திற்கொண்டே விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அவர் பாதயாத்திரை சென்றதை அடிப்படையாகக் கொண்டு அவரது பாதுகாப்பை நீக்குவது ஒழுக்கமான செயலல்ல. அதனால் அவருக்கு இருந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

அதனைத் தொடந்து எழுந்த சரத்பொன்சேகா தெரிவிக்கையில்,

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணி நடத்தியதாக தெரிவித்தும் பயங்கரவாதிகளுக்காக முன்னின்று செயற்பட்டாரென்ற காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

பேரணியை தடைசெய்யக்கோரி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கவில்லையென்றே நினைக்கிறேன்.

மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து அவரது பாதுகாப்பை நீக்குவதாக இருந்தால், எமது பொலிஸ், இராணுவத்தினரை கொலை செய்த கருணா, பிள்ளையானுக்கு எவ்வாறு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியும்? பிள்ளையானை சுற்றி இராணுவத்தினர் இருப்பதை காணும்போது எமக்கு வெட்கமாக உள்ளது.

சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர்.

அதனால் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பை நீக்குவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றார்.