சிவப்புச் சித்திரை: புலிக்குள் ஏற்பட்ட பூகம்பம் கருணாவின் பிரிவு – அதன் விளைவு வெருகல் படுகொலை !
1986 மே 6 தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ மீது நடத்திய படுகொலைத் தாக்குதலிற்குப் பின் இடம்பெற்ற மிக மோசமான சகோதரப் படுகொலைத் தாக்குதல் 2004 ஏப்ரல் – சிவப்புச் சித்திரை வெருகல் படுகொலை. இந்தப் பிளவிற்குப் பல்வேறு காரணங்கள் அவரவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட போதும் இதன் பின்னணியில் பிரதேசவாதத்தின் கூறுகள் ஊறியிருந்தமை தவிர்க்க முடியாதது. யாழ் மையவாதவேளாள ஆணாதிக்க கருத்தியலுடனேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் பொதுப் புத்தியிலிருந்து முன்னெடுக்கப்பட்டது. தமிழ் – சிங்கள இன முரண்பாடு முன்நிறுத்தப்பட்டு ஏனைய முரண்பாடுகள் துப்பாக்கியின் நிழலில் தூங்கிக் கொண்டிருந்தது.
ஆங்காங்கே வெளிக்கெம்பிய ஏனைய முரண்பாடுகளில் கிழக்குப் பிரிவினை மிக முக்கியமானதாக மாறியது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கிடையேயும் வெளிப்பட்டது. வடக்கின் தலைவராக வே பிரபாகரனும் கிழக்கின் தலைவராக கருணா அம்மானும் உருவகப்படுத்தப்பட்டனர். இந்த கிழக்குச் சித்தாந்தத்தை கருணாவுக்கு அறிமுகப்படுத்தி அதற்கு அரசியல் வடிவம் கொடுத்தவர் பின்னாட்களில் மாமனிதராக்கப்பட்ட சிவராம். இதனை சிவாரம் தன் நெருங்கிய நண்பருடன் பகிர்ந்துகொண்டமை தேசம்நெற் அறிந்திருந்தது.
அதேவேளை இணைத் தலைமை நாடுகளை முகாமைத்துவம் செய்ய நியமிக்கப்பட்ட நோர்வே புலனாய்வுத் துறை, பிரபாகரனையும் பொட்டம்மானையும் அணுக முடியாததால் அதன் அடுத்த கட்டத் தலைமைகைளை, திசைதிருப்பி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுக்குச் செல்ல வற்புறுத்தினர். பேச்சுவாரத்ததைக் காலத்தில் கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
புலம்பெயர் நாடுகளில் இருந்த புலிகளின் அனைத்துக் கட்டமைப்புகளும் பெரும்பாலும் வடக்கின் யாழ்ப்பாணத்தாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதுவும் கிழக்குப் பிரிவினையை வலுப்படுத்திய விடயம். கருணா ஐரோப்பிய சுற்றுப் பயணம் செய்த போது விடுதலைப் புலிகள் அல்லாத பல கிழக்குப் பிரதிநிதிகளையும் சந்தித்தார். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கல்வி மற்றும் பொருளாதார வசதியால் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்ட, மண் மீட்புக்காக கிழக்கு போராளிகள் பலிகொடுக்கப்படுகின்றனர் என்ற எண்ணக்கரு இந்த விஜயத்தின் போது கருணாவின் மனதில் ஆழப்பதிக்கப்பட்டது.
‘பேச்சுவாரத்தைகள் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு யாழ்ப்பாணம் போன்று கிழக்கும் கல்வி, மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும்’ என்ற எண்ணம் கருணா அம்மானிடம் வெளிப்பட ஆரம்பித்தது. அதற்கு தராக்கி சிவராம் அரசியல் வடிவம் கொடுத்தார்.
அதற்குப் பின் 2004 யூலையில் கருணாவின் பிளவு உலகறிந்தது. அன்றைய ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்கவின் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவாரத்தைகள் இடம்பெற்ற காலகட்டம். விடுதலைப் புலிகளுக்கள் ஏற்பட்ட இப்பிரிவினையை சந்திரிகா தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. வடக்கிலிருந்து கிழக்குக்குள் விடுதலைப் புலிகள் நுழைவதைத் தடுத்து, கருணா அம்மானோடு உள்ள ஆயிரக்கணக்கான போராளிகளை காப்பாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி சந்திரிகா அதனைச் செய்ய முன்வரவில்லை. அப்படிச் செய்தால் அரசுக்கும் புலிகளுக்குமான பேச்சுவாரத்தை முடிவுக்கு வந்துவிடும். மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் என்பதால் சமாதானப் புறாவாக ஆட்சிக்கு வந்த சந்திரிகாகுமாரதுங்கா புலிகளின் உட்பிரச்சினையிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய போராளிகள் கொல்லப்படும் அபாயத்தை உணர்ந்த கருணா பல ஆயிரம் போராளிகளையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். கிழக்கு மக்களின் உயிர்கள் வீணாக இழக்கப்படக் கூடாது என்ற உணர்வு அங்கு இருந்தது. கிழக்குப் போராளிகளை வைத்தே கிழக்குப் போராளிகள் கொல்லப்படுவார்கள் என்ற அச்சம் என்று வெளிப்பட்டு இருந்தது.
இந்த அச்சம் இறுதியில் நடந்தேறியது. வெருகல் கடல்பரப்பினூடாக புலிகள் நுழைந்து சரணடையுமாறு கோரி சரணடைந்தவர்களைப் படுகொலை செய்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 க்கும் மேற்பட்டது எனக் கருணா அம்மான் வெருகல் படுகொலை நினைவு நிகழ்வில் தெரிவிக்கின்றார்.
கருணாவின் வெருகல் படுகொலை நினைவுரையை மறுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன், கருணாவின் போராளிகளையும் தாங்கள் மாவீரர் பட்டியலில் இணைத்திருக்கின்றோம் என்றார். இது பற்றிய அரியநேந்திரனின் குறிப்பு:
“இந்த மோதல் ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணாதான். 2004, மார்ச், 03இல் விடுதலை புலிகளில்
இருந்து தாம் விலகிவிட்டதாக ஊடகத்தில் கருணா அறிவித்தார். 2004 மார்ச் 06 இல் விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவை நீக்கிவிட்டதாகவும் அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதன்பின்னர் தாம் கிழக்கு புலிகள், வன்னி புலிகள், என்ற பிரதேசவாத கருத்தை கருணா தரப்பினர் பரப்பி மட்டக்களப்பு நகர்பகுதி, செங்கலடி பகுதி எங்கும் யாழ்ப்பாண வர்த்தகர்கள், பொதுமக்கள் மீது பிரதேசவாதக் கருத்தை பரப்பி அவர்களை வெளியேற்றும் காடைத்தனத்தை புரிந்தனர்.
2004 ஏப்ரல் 04 பாராளுமன்ற, பொதுத்தேர்தல் முடியும் வரை விடுதலைப் புலிகள் கருணா குழுமீது எந்த நடவடிக்கையையும் செய்யவில்லை. 2004 ஏப்ரல் 09, இரவு தொடக்கம் 2004 ஏப்ரல் 10 வரை வாகரைக்கும், வெருகல் பாலத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கருணா தரப்பை சேர்ந்த போராளிகள் சிலர் உயிரிழந்தனர்.
2004 ஏப்ரல் 20இல் கிளிநொச்சியில், தலைமைச் செயலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலானாய்வு பொறுப்பாளர் பொட்டம்மான் மற்றும் புலிகளின் தளபதிகள் உள்ளிட்டவர்கள் 22, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தினர். அதுதான் 22, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தலைவரின் முதல் சந்திப்பு.
இந்த சந்திப்பின்போது நான் தலைவரிடம் கேட்டேன், “கடந்த 2004 ஏப்ரல் 10ஆம் திகதி கருணா குழுவினருடன் இடம்பெற்ற மோதலில் கருணா தரப்பில் மரணித்த போராளிகளை மாவீரர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் இனவிடுதலைக்காக போராடவே இயக்கத்தில்
இணைந்தார்கள் அவர்களை தவறாக கருணாதான் பயன்படுத்தினார்”, என்றேன். தலைவர் பதில் கூறுவதற்கு முன்னம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்னிடம் கூறினார், “அண்ணர் இந்த விடயங்களை எல்லாம் நாம் இங்கு கேட்கக் கூடாது”, என்றார்.
அப்போது உடனே தலைவர் தமது கையால் செ. கஜேந்திரனை பேசவேண்டாம். என சைகை காட்டிவிட்டு “அரியம் அண்ணர் கேட்டதில் என்ன தவறு உள்ளது அந்த போராளிகள் இன விடுதலைக்காகத்தானே போராட்டத்தில் இணைந்தவர்கள் அவர்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது உண்மை. அரியம் அண்ணர் கேட்டது சரி – அந்த போராளிகள் அனைவரையும் மாவீரர் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன்” என்றார்.”
வரலாற்றில் துரோகிகளாகப் பதியப்பட இருந்தவர்களை மாவீரர்களாகப் பதிய வைத்தி பெருமையை அரியநேந்திரன் வெளியிட்டு இருந்தார். இதற்குப் பிரதியுபகாரமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக பா அரியநேந்திரன் நிறுத்தப்பட்டார். தங்களுடைய போராளிகளின் படுகொலையை மூடிமறைத்துவிட்ட பா அரியநேந்திரனை மட்டு மக்கள் முற்றாகப் புறக்கணித்தனர். பா அரியநேந்திரன் மட்டக்களப்பில் குறைந்த வாக்ககளையே பெற்றார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புளொட் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் உமா மகேஸ்வரன் மற்கும் ஈரோஸ் ஈழ மக்கள் புரட்சிகர அமைப்பு பாலகுமாரன் தவிர்ந்த ஏனைய தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளே படுகொலை செய்தனர். உமா மகேஸ்வரன் பின்நாட்களில் அவருடைய மெய்ப்பாதுகாப்பாளராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பாலகுமாரான் சரணடைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டாரா, மாவீரர் ஆனாரா அல்லது இன்னமும் உயிருடனிருக்கின்றாரா? அவருக்கு அஞ்சலி செய்வதா இல்லையா என்ற குழப்பத்தில் காலங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் நீண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் சகோதரப்படுகொலைகளின் கொலைக்களமாகவே அமைந்தது. இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் எவ்விதத்திலும் குறைவில்லாத ஈவிரக்கமற்ற படுகொலைகள் நிறைந்த போராட்டமாவே அது முடிவுக்கு வந்தது. மோசமான யுத்தக் குற்றவாளிகள் எம்மத்தியிலும் உள்ளனர் என்பதை மறந்து நாங்கள் மனித உரிமைநாடகம் ஆடுகின்றோம். இனிமேலாவது சகோதரப்படுகொலை செய்யாத மனிதப்படுகொலை செய்யாத உரிமைக்கான மற்றவர்களின் ஜனநாயகத்தையும் உரிமையையும் மதித்துப் மற்றவர்களோடும் இணைந்து அனைவரது உரிமைக்காகவும் போராடுவோம்


அண்மையில் கருணா அம்மான் விசாரிக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் கைது இடம்பெற்றுள்ளது. கருணா – பிள்ளையான் – வியாழேந்திரன் இணைந்த கிழக்கு முன்னணி உதயம்பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் கருணா இலங்கையில் இருக்கவில்லை. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் பிள்ளையானையே குறிவைத்து பிரச்சாரம் செய்வதாக பிள்ளையானின் நெருங்கிய நண்பரொருவர் தேசம்நெற்குத் தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் தனக்கு மாற்றுக் கருத்து இல்லை எனத் தெரிவிக்கும் அவர், கைது செய்யப்பட்ட காலகட்டம் தங்களுடைய அரசியல் செயல்பாட்டை முடக்கவே மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றார்.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரன் கடத்தப்படுவதற்கு முன் கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கிழக்கைச் சேர்ந்த பால சுகுமாரன் கடத்தப்பட்டு இருந்தார். தற்போது லண்டனில் உள்ள பால சுகுமாரனுடன் இது தொடர்பில் உரையாடுவதற்குத் தொடர்பு கொண்ட போதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.











தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாக ரோ புலிகள் என அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானிய நடைமுறைப்படி ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேசம்நெற்க்கு தெரியவந்துள்ளது. பிரித்தானிய சட்டப்படி ஒரு அமைப்பினுடைய பெயரையோ சின்னத்தையோ அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமானது. Intelectual Property Act 2014 – அறிவுசார் உடைமைகள் சட்டம் 2014 இன் படி தக்க அனுமதியின்றி தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒழுங்காற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
தோழர் பாலன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு நீண்டகாலம் கொடுமைப்படுத் தப்பட்டனர். பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த தோழர் பாலன் என அறியப்பட்ட எஸ் பாலச்சந்திரன் சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதை முகாம்கள் பற்றி தேசம் சஞ்சிகையில் தொடராக எழுதியவர். தற்போது இக்கட்டுரைகளின் தொகுப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளிவந்துள்ளது. தோழர் பாலன் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை என்ற போராட்ட அமைப்பை நிறுவி வழிநடத்தியவர்களில் ஒருவர். சிறப்புமுகாம்களில் அனுபவித்த கொடுமைகளின் அடிப்படையிலும் தான் அவருக்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கிடைத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவுக்கு செவிசாய்த்தமைக்காக தமிழரசுக் கட்சியின் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்தனர். ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் பத்மநாபாவையும் அவருடைய தோழர்களையும் படுகொலை செய்தனர், தங்கள் அமைப்பிற்குள்ளேயே மாத்தையாவைப் படுகொலை செய்தனர். ஆனால் தற்போது இந்த அமைப்பில் ஒருசாரார் தாங்கள் தடைகளை உடைப்பதில் வல்லவர்கள் என்று சொல்லி இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வோடு சேர்ந்து பிரபாகரன் குடும்பத்தையே உயிர்த்தெழ வைத்துள்ளனர். இன்னொரு பிரிவு தமிழரசுக் கட்சியை புலியரசுக்கட்சியாக்குவோம் என்று பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது. இன்னுமொரு பிரிவோ இலங்கைப் புலனாய்வுத்துறையினரோடு சேர்ந்து இயங்குகிறது. இவற்றுக்குள் தங்களை இணைத்துக்கொள்ள முடியாத பலர் பலவாக உடைந்து சிதறியுள்ளனர். இவர்கள் யாருடைய உறவும் வேண்டாம். செய்தியும் வேண்டாம் எனப் பலர் ஒதுங்கித் தனித்து வாழ்கின்றனர்.