தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள்

சிவப்புச் சித்திரை: புலிக்குள் ஏற்பட்ட பூகம்பம் கருணாவின் பிரிவு – அதன் விளைவு வெருகல் படுகொலை !

சிவப்புச் சித்திரை: புலிக்குள் ஏற்பட்ட பூகம்பம் கருணாவின் பிரிவு – அதன் விளைவு வெருகல் படுகொலை !

1986 மே 6 தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ மீது நடத்திய படுகொலைத் தாக்குதலிற்குப் பின் இடம்பெற்ற மிக மோசமான சகோதரப் படுகொலைத் தாக்குதல் 2004 ஏப்ரல் – சிவப்புச் சித்திரை வெருகல் படுகொலை. இந்தப் பிளவிற்குப் பல்வேறு காரணங்கள் அவரவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட போதும் இதன் பின்னணியில் பிரதேசவாதத்தின் கூறுகள் ஊறியிருந்தமை தவிர்க்க முடியாதது. யாழ் மையவாதவேளாள ஆணாதிக்க கருத்தியலுடனேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் பொதுப் புத்தியிலிருந்து முன்னெடுக்கப்பட்டது. தமிழ் – சிங்கள இன முரண்பாடு முன்நிறுத்தப்பட்டு ஏனைய முரண்பாடுகள் துப்பாக்கியின் நிழலில் தூங்கிக் கொண்டிருந்தது.

ஆங்காங்கே வெளிக்கெம்பிய ஏனைய முரண்பாடுகளில் கிழக்குப் பிரிவினை மிக முக்கியமானதாக மாறியது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கிடையேயும் வெளிப்பட்டது. வடக்கின் தலைவராக வே பிரபாகரனும் கிழக்கின் தலைவராக கருணா அம்மானும் உருவகப்படுத்தப்பட்டனர். இந்த கிழக்குச் சித்தாந்தத்தை கருணாவுக்கு அறிமுகப்படுத்தி அதற்கு அரசியல் வடிவம் கொடுத்தவர் பின்னாட்களில் மாமனிதராக்கப்பட்ட சிவராம். இதனை சிவாரம் தன் நெருங்கிய நண்பருடன் பகிர்ந்துகொண்டமை தேசம்நெற் அறிந்திருந்தது.

அதேவேளை இணைத் தலைமை நாடுகளை முகாமைத்துவம் செய்ய நியமிக்கப்பட்ட நோர்வே புலனாய்வுத் துறை, பிரபாகரனையும் பொட்டம்மானையும் அணுக முடியாததால் அதன் அடுத்த கட்டத் தலைமைகைளை, திசைதிருப்பி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுக்குச் செல்ல வற்புறுத்தினர். பேச்சுவாரத்ததைக் காலத்தில் கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

புலம்பெயர் நாடுகளில் இருந்த புலிகளின் அனைத்துக் கட்டமைப்புகளும் பெரும்பாலும் வடக்கின் யாழ்ப்பாணத்தாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதுவும் கிழக்குப் பிரிவினையை வலுப்படுத்திய விடயம். கருணா ஐரோப்பிய சுற்றுப் பயணம் செய்த போது விடுதலைப் புலிகள் அல்லாத பல கிழக்குப் பிரதிநிதிகளையும் சந்தித்தார். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கல்வி மற்றும் பொருளாதார வசதியால் வெளிநாடுகளுக்குச் சென்று பொருளீட்ட, மண் மீட்புக்காக கிழக்கு போராளிகள் பலிகொடுக்கப்படுகின்றனர் என்ற எண்ணக்கரு இந்த விஜயத்தின் போது கருணாவின் மனதில் ஆழப்பதிக்கப்பட்டது.

‘பேச்சுவாரத்தைகள் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு யாழ்ப்பாணம் போன்று கிழக்கும் கல்வி, மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும்’ என்ற எண்ணம் கருணா அம்மானிடம் வெளிப்பட ஆரம்பித்தது. அதற்கு தராக்கி சிவராம் அரசியல் வடிவம் கொடுத்தார்.

அதற்குப் பின் 2004 யூலையில் கருணாவின் பிளவு உலகறிந்தது. அன்றைய ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்கவின் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவாரத்தைகள் இடம்பெற்ற காலகட்டம். விடுதலைப் புலிகளுக்கள் ஏற்பட்ட இப்பிரிவினையை சந்திரிகா தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. வடக்கிலிருந்து கிழக்குக்குள் விடுதலைப் புலிகள் நுழைவதைத் தடுத்து, கருணா அம்மானோடு உள்ள ஆயிரக்கணக்கான போராளிகளை காப்பாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி சந்திரிகா அதனைச் செய்ய முன்வரவில்லை. அப்படிச் செய்தால் அரசுக்கும் புலிகளுக்குமான பேச்சுவாரத்தை முடிவுக்கு வந்துவிடும். மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் என்பதால் சமாதானப் புறாவாக ஆட்சிக்கு வந்த சந்திரிகாகுமாரதுங்கா புலிகளின் உட்பிரச்சினையிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய போராளிகள் கொல்லப்படும் அபாயத்தை உணர்ந்த கருணா பல ஆயிரம் போராளிகளையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். கிழக்கு மக்களின் உயிர்கள் வீணாக இழக்கப்படக் கூடாது என்ற உணர்வு அங்கு இருந்தது. கிழக்குப் போராளிகளை வைத்தே கிழக்குப் போராளிகள் கொல்லப்படுவார்கள் என்ற அச்சம் என்று வெளிப்பட்டு இருந்தது.

இந்த அச்சம் இறுதியில் நடந்தேறியது. வெருகல் கடல்பரப்பினூடாக புலிகள் நுழைந்து சரணடையுமாறு கோரி சரணடைந்தவர்களைப் படுகொலை செய்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 க்கும் மேற்பட்டது எனக் கருணா அம்மான் வெருகல் படுகொலை நினைவு நிகழ்வில் தெரிவிக்கின்றார்.

கருணாவின் வெருகல் படுகொலை நினைவுரையை மறுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன், கருணாவின் போராளிகளையும் தாங்கள் மாவீரர் பட்டியலில் இணைத்திருக்கின்றோம் என்றார். இது பற்றிய அரியநேந்திரனின் குறிப்பு:

“இந்த மோதல் ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணாதான். 2004, மார்ச், 03இல் விடுதலை புலிகளில்
இருந்து தாம் விலகிவிட்டதாக ஊடகத்தில் கருணா அறிவித்தார். 2004 மார்ச் 06 இல் விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவை நீக்கிவிட்டதாகவும் அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதன்பின்னர் தாம் கிழக்கு புலிகள், வன்னி புலிகள், என்ற பிரதேசவாத கருத்தை கருணா தரப்பினர் பரப்பி மட்டக்களப்பு நகர்பகுதி, செங்கலடி பகுதி எங்கும் யாழ்ப்பாண வர்த்தகர்கள், பொதுமக்கள் மீது பிரதேசவாதக் கருத்தை பரப்பி அவர்களை வெளியேற்றும் காடைத்தனத்தை புரிந்தனர்.

2004 ஏப்ரல் 04 பாராளுமன்ற, பொதுத்தேர்தல் முடியும் வரை விடுதலைப் புலிகள் கருணா குழுமீது எந்த நடவடிக்கையையும் செய்யவில்லை. 2004 ஏப்ரல் 09, இரவு தொடக்கம் 2004 ஏப்ரல் 10 வரை வாகரைக்கும், வெருகல் பாலத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கருணா தரப்பை சேர்ந்த போராளிகள் சிலர் உயிரிழந்தனர்.

2004 ஏப்ரல் 20இல் கிளிநொச்சியில், தலைமைச் செயலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலானாய்வு பொறுப்பாளர் பொட்டம்மான் மற்றும் புலிகளின் தளபதிகள் உள்ளிட்டவர்கள் 22, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தினர். அதுதான் 22, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தலைவரின் முதல் சந்திப்பு.

இந்த சந்திப்பின்போது நான் தலைவரிடம் கேட்டேன், “கடந்த 2004 ஏப்ரல் 10ஆம் திகதி கருணா குழுவினருடன் இடம்பெற்ற மோதலில் கருணா தரப்பில் மரணித்த போராளிகளை மாவீரர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் இனவிடுதலைக்காக போராடவே இயக்கத்தில்
இணைந்தார்கள் அவர்களை தவறாக கருணாதான் பயன்படுத்தினார்”, என்றேன். தலைவர் பதில் கூறுவதற்கு முன்னம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்னிடம் கூறினார், “அண்ணர் இந்த விடயங்களை எல்லாம் நாம் இங்கு கேட்கக் கூடாது”, என்றார்.

அப்போது உடனே தலைவர் தமது கையால் செ. கஜேந்திரனை பேசவேண்டாம். என சைகை காட்டிவிட்டு “அரியம் அண்ணர் கேட்டதில் என்ன தவறு உள்ளது அந்த போராளிகள் இன விடுதலைக்காகத்தானே போராட்டத்தில் இணைந்தவர்கள் அவர்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது உண்மை. அரியம் அண்ணர் கேட்டது சரி – அந்த போராளிகள் அனைவரையும் மாவீரர் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன்” என்றார்.”

வரலாற்றில் துரோகிகளாகப் பதியப்பட இருந்தவர்களை மாவீரர்களாகப் பதிய வைத்தி பெருமையை அரியநேந்திரன் வெளியிட்டு இருந்தார். இதற்குப் பிரதியுபகாரமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக பா அரியநேந்திரன் நிறுத்தப்பட்டார். தங்களுடைய போராளிகளின் படுகொலையை மூடிமறைத்துவிட்ட பா அரியநேந்திரனை மட்டு மக்கள் முற்றாகப் புறக்கணித்தனர். பா அரியநேந்திரன் மட்டக்களப்பில் குறைந்த வாக்ககளையே பெற்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புளொட் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் உமா மகேஸ்வரன் மற்கும் ஈரோஸ் ஈழ மக்கள் புரட்சிகர அமைப்பு பாலகுமாரன் தவிர்ந்த ஏனைய தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளே படுகொலை செய்தனர். உமா மகேஸ்வரன் பின்நாட்களில் அவருடைய மெய்ப்பாதுகாப்பாளராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பாலகுமாரான் சரணடைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டாரா, மாவீரர் ஆனாரா அல்லது இன்னமும் உயிருடனிருக்கின்றாரா? அவருக்கு அஞ்சலி செய்வதா இல்லையா என்ற குழப்பத்தில் காலங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் நீண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் சகோதரப்படுகொலைகளின் கொலைக்களமாகவே அமைந்தது. இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் எவ்விதத்திலும் குறைவில்லாத ஈவிரக்கமற்ற படுகொலைகள் நிறைந்த போராட்டமாவே அது முடிவுக்கு வந்தது. மோசமான யுத்தக் குற்றவாளிகள் எம்மத்தியிலும் உள்ளனர் என்பதை மறந்து நாங்கள் மனித உரிமைநாடகம் ஆடுகின்றோம். இனிமேலாவது சகோதரப்படுகொலை செய்யாத மனிதப்படுகொலை செய்யாத உரிமைக்கான மற்றவர்களின் ஜனநாயகத்தையும் உரிமையையும் மதித்துப் மற்றவர்களோடும் இணைந்து அனைவரது உரிமைக்காகவும் போராடுவோம்

பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக் குறியாகின்றது ? விதியா? சதியா ? ரிஎம்விபி இன் அடுத்த தலைவர் கருணா அம்மானா ?

பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக் குறியாகின்றது ? விதியா? சதியா ? ரிஎம்விபி இன் அடுத்த தலைவர் கருணா அம்மானா ?

அண்மையில் கருணா அம்மான் விசாரிக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் கைது இடம்பெற்றுள்ளது. கருணா – பிள்ளையான் – வியாழேந்திரன் இணைந்த கிழக்கு முன்னணி உதயம்பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நடந்த காலகட்டங்களில் கருணா இலங்கையில் இருக்கவில்லை. அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் பிள்ளையானையே குறிவைத்து பிரச்சாரம் செய்வதாக பிள்ளையானின் நெருங்கிய நண்பரொருவர் தேசம்நெற்குத் தெரிவித்தார். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் தனக்கு மாற்றுக் கருத்து இல்லை எனத் தெரிவிக்கும் அவர், கைது செய்யப்பட்ட காலகட்டம் தங்களுடைய அரசியல் செயல்பாட்டை முடக்கவே மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பிள்ளையானின் அரசியல் அஸ்தமனமாகின்றது என்ற கணிப்புகள் பரவலாகத் எதிர்வு கூறப்படுகின்றது. இக்கைதுக்கு சில மாதங்களுக்கு முன் இவற்றையெல்லாம் மீறி வருவேன் என்று பிள்ளையான் தேசம்நெற்க்குத் தெரிவித்திருந்த போதும் பிள்ளையானின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

 

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரன் கடத்தப்படுவதற்கு முன் கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கிழக்கைச் சேர்ந்த பால சுகுமாரன் கடத்தப்பட்டு இருந்தார். தற்போது லண்டனில் உள்ள பால சுகுமாரனுடன் இது தொடர்பில் உரையாடுவதற்குத் தொடர்பு கொண்ட போதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தக் கடத்தல் நாடகங்களுக்குப் பின்னால் பிரதேசவாதம் தலைதூக்கியிருந்த காலகட்டம் அது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் 2004 யூலை இறுதிப் பகுதியில் வெளியேறியாதிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகமும் வடக்கு – கிழக்கு பிரதேசவாதச் சிக்கலுக்கு உள்ளாகியது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் கருணாவுக்கு ஆதரவாக சில பேராசிரியர்கள் திரும்பினர். ஆனால் வடக்கைச் சேர்ந்தவர்கள் அணிசேரா நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர்களுடைய குடும்பங்கள் வடக்கில் இருந்தது.

2004 இல் கருணா அம்மானுக்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் போராட்டங்களை மேற்கொண்ட கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி தம்பையா திருச்செல்வம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2004 மார்ச் 24ஆம் திகதி மட்/கல்லடியிலுள்ள அவரது வீட்டில் இருந்தபோது சுமார் மலை 8.30 மணியளவில் ஆயுதமேந்திய இரு இளைஞர்களால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

2004ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான இராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு மக்களின் பெருமதிப்புக்குரியவர். மார்ச் மாதம் 30ஆம் திகதி அதிகாலை 07.40 மணிக்கு அவர் தன்னுடைய பூசையறையில் முருகன் படத்தில் முன்னால் நின்று தீபம் ஏற்றி சாம்பிராணி கொளுத்தி வழிபாடு செய்து கொண்டிருக்கையில் புலிகளால் சாராமரியாகச் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்நிலையில்தான் 2004, 63 வயதான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இரத்தினம் மௌனகுருசாமி, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரான மார்ச் 27ல் மட்/ பிள்ளையாரடியில் வைத்து கைத்துப்பாக்கி ஏந்திய புலிகளால் சுடப்பட்டார். எனினும் அதிஷ்ட வசமாக அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த வடக்கு – கிழக்கு பிளவின் போட்டியில் நடந்த மற்றுமொரு முக்கிய படுகொலை தமிழரசுக் கட்சியின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை. 2005 கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25இல் இவர் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பில் பிள்ளையான் குற்றம்சாட்டப்பட்டு கொலைக் குற்றச்சாட்டு நிருபிக்கப்படாத நிலையில் பிள்ளையான் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து 2006இல் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையானை கைது செய்து தண்டிப்போம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேயே அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 08 மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது பிள்ளையான் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏட்டிக்குப் போட்டியான கொலைக் கலாச்சாரம் புலிகள் உட்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களிடம் மலிந்து காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வளர்ந்த சகோதரப் படுகொலைக் கலாச்சாரம் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணா அம்மான் வெளியேறியதும் கிழக்கிலும் பரவியது. யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர்களே ஏட்டிக்கு போட்டியாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் படுமொசமான கொலைக் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.

இதற்கு பிள்ளையான் என அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் விதிவிலக்கல்ல. இவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் என்பதோடு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பிள்ளையான் மீது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனாலும் பிள்ளையான் மீதுள்ள நீண்ட குற்றச்சாட்டுகளின் பட்டியலில் இருந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தாங்கள் அரசியலுக்கு வந்த 2008க்குப் பின் தாங்கள் வன்முறையில் ஈடுபடவவில்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். ஆனால் நடைமுறையில் 2008க்கு முன்னும் பின்னும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் பல உள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசு தற்போது அடுத்தடுத்த முன்னாள் அமைச்சர்கள், முதலமைச்சர், பொலிஸ் தலைமைப் பொறுப்பாளர் என எவ்வித வேறுபாடுமின்றி சட்டத்தை மிகத் தீவிரமாக அமுல்படுத்த முயற்சிப்பதால் பிள்ளையான் இந்தக் கிடுக்குப் பிடியிலிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருதப்படுகின்றது.

இந்த வடக்கு – கிழக்கு முரண்பாட்டில் யாழ் மையவாதம் எப்போதும் ஏனையவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிவிடுகின்ற போக்கே இன்னமும் தொடர்கின்றது. தற்போது புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கும் உணர்வு பிள்ளையானையே மையம் கொண்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை நழுவவிட்ட ஒரே மாவட்டம் மட்டக்களப்பு. அந்த வகையில் பிள்ளையான் ஒரு இளகிய இரும்பு. தூக்கித் தூக்கி அடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் பிள்ளையான் கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்கப்படுவதும் அவை நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டிக்கப்படுவதும் மிக அவசியம்.

பிள்ளையான் தற்போது கிடுக்குப் பிடியில் மாட்டியுள்ளதால் கருணா அம்மானின் தலைமைத்துவத்திற்கு கதவுகள் திறந்துவிடப்படும் வாய்ப்பு உள்ளது. பிள்ளையானுக்கு விழுந்த வாக்குகளுக்குப் பின் யாழ் மையவாத எதிர்ப்பு பலமாக இருப்பதை தமிழ் தேசியவாதிகள் உணர்ந்து தமிழ் சமூகம் ஒரு பல்லின சமூகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளையானின் மீது அனைத்து பழிகளையும் போட்டுவிட்டு நாங்கள் சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக காட்டிக்கொள்ள முடியாது. கிழக்கை ஆதரித்தமைக்காக கிழக்கின் ஆளுமைகள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவையும் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் தொடர்ந்தும் புலிகளுக்கு தடை !

இந்தியாவில் தொடர்ந்தும் புலிகளுக்கு தடை !

 

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவி செய்வது கடும் குற்றம் எனவும் அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு இவ்வாண்டு மே 17, 18, 19 என வெவ்வேறு தினங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. 2009 மே 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்த செய்தியை 2009 மே 24 அன்று அதன் அன்றைய தலைவர் செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் அறிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இச்செய்தியை அப்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான ரிரின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பி இருந்தது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 பில்லியன் டொலர் சொத்துக்களை வைத்திருந்தவர்கள் அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிவந்தவர்கள் , தங்களிடம் உள்ள அசையும் அசையாத சொத்துக்கள் கேள்விக்கு உட்பட்டு விடும் என்பதால் வே பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்ற மாய விம்பத்தைக் கட்டினார்கள். இன்று ஈழத்தமிழ் சமூகத்தில் இருக்கின்ற தொழில் அதிபர்கள் என்று அறியப்படுகின்ற பெரும்பாலானவர்கள் உலகம் முழக்க கோடீஸ்வரர்களானது விடுதலைப் புலிகளின் பணத்தில் தான். இன்றும் தலைவர் வந்து கேட்டால் நாங்கள் கணக்குக் காட்டுவோம் எனச் சிலர் ரீல் விடுகின்றனர். பெரும்பாலனவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவை அன்றே அறிவித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து இன்று முப்பதிற்கும் மேற்பட்ட பிளவுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்குள் ஏற்பட்டுள்ளது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நிகழ்ந்த மோசமான தவறாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த புலனாய்வுப் போராளி முல்லை மதி வருமாறு தெரிவிக்கின்றார்: “ப சிதம்பரத்தோடு கதைத்தபோது புலிகளையும் அதன் தலைமையையும் காப்பாற்றியிருக்க முடியும் அதற்கான அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதாகவே சிதம்பரம் சொன்னார். சிவசங்கர் மேனனும் அதையே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்த சிலரும் விடுதலைப்புலிகளை அழித்தே ஆகவேண்டும் என வெறிபிடித்த காங்கிரஸ் கட்சி கொள்கை வகுப்பாளர்கள் சிலரும் புலிகளை பரம விரோதிகளாக கருதிய இந்திய உளவுத்துறையின் ஒரு பகுதியினரும் விடுதலைப்புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் உருத்திரகுமாரன் போன்றவர்களும் குழப்பியடித்தனர்.

ஒரு படி கீழிறங்கி இனத்தை காப்பாற்ற விடாத சுயகொளரவம் தன்மானம் இறுதியில் நான் நீ என்ற வறட்டு வாதமாகி அழிவில் முடிந்தது என்பதே உண்மை. சோனியாவின் பெயரை அநியாயமாக பயன்படுத்துகிறார்கள். கருணாநிதியை விட சம்மந்தன் என்ற கொடியனே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாட்டை முடக்கி வைத்திருந்தார்” எனக் குற்றம்சாட்டுகின்றார் முல்லை மதி.

புலிகள் உள்ளிட்ட 9 தமிழ் அமைப்புகள் 6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீடிப்பு !

புலிகள் உள்ளிட்ட 9 தமிழ் அமைப்புகள் 6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீடிப்பு !

தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகள் மீதான தடை நீடிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 இல் வெளியிடப்பட்ட இப்பட்டியலானது 2024 திருத்தி வெளியிடப்பட்டு இருந்தது அதன் தொடர்ச்சியாக நேற்று புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (TRO), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), உலக தமிழர் இயக்கம் (WTO), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WDRF), தலைமைச் செயலகம் (HQ), கனேடிய தமிழர் தேசிய அவை ஆகிய தமிழ் அமைப்புகளும்; தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாதே மிலாதே ஈப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, டருல் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ள்ஸ் ஆகிய இஸ்லாமிய அமைப்புகளும் வர்த்தமானி அறிவித்தலூடாக தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.

தடை நீடிக்கப்பட்ட 9 தமிழ் அமைப்புகளில் பெரும்பாலானவை கனடா மற்றும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. இவ்வமைப்புகளின் செயற்பாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ஆண்டுகள் கடந்து செல்ல இவ்வமைப்புகளின் ஆதரவுத் தளம் குறுகிக்கொண்டே சென்று தற்போது தனிமனித முரண்பாடுகளில் சிக்குண்டு ஒருவரை மற்றவர் தூற்றுவதாகவே காணப்படுகின்றது.

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் இவை தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இவற்றின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 222 தனிநபர்கள் மீதான தடையையும் அரசாங்கம் நீடித்துள்ளது. பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் அவற்றுக்கு நிதிஅளித்தவர்கள் என்ற அடிப்படையில் இவர்மீதான தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரன் அடுத்த தலைவரை காட்டாமல் விட்டது தவறு !தலைவர் இருக்கும் போதே சீமானைக் கழுவி ஊத்திவிட்டார்.

தலைவர் பிரபாகரன் அடுத்த தலைவரை காட்டாமல் விட்டது தவறு !தலைவர் இருக்கும் போதே சீமானைக் கழுவி ஊத்திவிட்டார்.

சீமான் – தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான தொடர்பின் உண்மைத்தன்மை, தமிழகம் உண்மையிலேயே ஈழத்தமிழர்களை அணைக்கிறதா..? ஈழத்தின் தமிழ்தேசியம் பெரியாரையும் உள்வாங்கியிருந்தததா..? சீமான் ஈழத்தில் பேசியது என்ன..? உள்ளிட்ட போராட்ட கால வரலாற்றின் வடுக்களையும், தடயங்களையும் தேசம் திரையுடன் மீள ஒரு தடவை பகிர்ந்து கொள்கிறார் தலைவர் பிரபாகரனோடு உரையாடிய பெண் ஆளுமை மாவீரர்களின் தாய், ஒரு போராளி – தமிழ்கவி அம்மா

துவாரகாவாக உயிர்த்தெழுந்தவர் கொல்லப்படும் அபாயம் ! புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வீரவணக்க அஞ்சலி !!

மே 18, 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதி செய்யும் வகையிலும், பிரபாகரனும் அவரது குடும்பமும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் பிரபாகரனுக்கு வீர வணக்க அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வு மக்களாலும் ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டால் துவராகாவாக மாறிய பெண் படுகொலை செய்யப்படுவார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வே பிரபாகரனின் இரத்த உறவான அவருடைய மூத்த சகோதரர் மனோகரன் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இளவயதில் பிரபாகரன் இருந்த தோற்றத்திலேயே இருக்கும் மனோகரன் வேலுப்பிள்ளையின் மகன் கார்த்திக் மனோகரன் தனது சித்தப்பா வே பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களுக்கு பல்வேறு செவ்விகளை வழங்கிய காரத்திக் மனோகரன் ஈழத்தமிழ் மக்களுக்காக போராடிய தனது சிறிய தந்தையை அவமானப்படுத்தும் வகையிலும் மக்களிடம் பணத்தைக் கொள்ளையிடும் வகையிலும் கதைகளைப் பரப்பி வருவதால் இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே தாங்கள் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கார்த்திக் மனோகரன் இந்த அஞ்சலி நிகழ்வை தான் தோன்றித்தனமாகச் செய்யவில்லை எனவும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கும் அமையவே இந்த இறுதி அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே 18 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த செய்தியை தமிழ் ஊடகப் பரப்பில் தேசம்நெற்றே முதலில் உறுதிப்படுத்தி வெளியிட்டு இருந்தது. இதுதொடர்பில் தேசம் நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலாளராக இருந்த கே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனின் நேர்காணலையும் வெளியிட்டு இருந்தது. அவர் இச்செய்தியை சர்வதேச ஊடகங்களுக்கும் 48 மணி நேரங்களில் அறிவித்து இருந்தார். இச்செய்தி அன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான ரி.ரி.என் இலும் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அத்தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்தவர் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் செயற்குழுவின் தலைவராக இருந்த எஸ் கருணைலிங்கம். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் செயற்பாட்டாளரான சுவிஸ் ரஞ்சனின் சகோதரர். இச்செய்தி வெளியிடப்பட்டதற்காக தங்களைப் புலிகளின் விசுவாசிகளாகக் காட்டிக்கொண்ட சிலர் அத்தொலைக்காட்சி நிறுவனத்தை தாக்கியும் இருந்தனர். அதன் பின் ரி.ரி.என்னும் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்று கும்பலோடு கோவிந்தாவாக ஜால்ரா அடித்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை முற்று முழுதாக உறுதிப்படுத்தினால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் கொதித்தெழுவார்கள். பிரபாகரன் எப்படி இறந்தார்? இறுதி நேரத்தில் என்ன நடந்தது? என்ற கேள்விகளும் எழும். இலங்கை, இந்திய அரசுகள் மீது யுத்தக் குற்றங்களும் எழும் தமிழர்கள் மத்தியில் இந்தியா நெருங்க முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும். இதற்காக பிரபாகரன் உயிரோடு தப்பித்துவிட்டார் என்ற வதந்தியை இந்திய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கசிய விட்டனர். நெடுமாறன், காசி ஆனந்தன் போன்ற இந்திய உளவுப் பிரிவான ரோ வின் முகவர்கள் இதனைப் பரப்புவதில் முன்நிற்கின்றனர். இவர்கள் தான் இப்போது துவாரகா வந்துவிட்டார், பிரபாகரனும் வருகிறார். ஆனால் இம்முறை பிரபாகரன் இந்தியாவை எதிர்க்கமாட்டார் என்றெல்லாம் கட்டியம் கூறுகின்றார் காசி ஆனந்தன்.

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்ட புலிகளின் ஒரு பிரிவினர் தற்போது இந்திய உளவுத்துறையின் முகவர்களாக சுவிஸில் உள்ள பெண்ணை துவாரகாவாக மற்றியுள்ளனர். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மக்கள் அவர் இனி வரமாட்டார் என்று நம்பினால் துவாரகா வேடம் போட்ட பெண் கொல்லப்பட்டு அவருடைய கதை முடிவுக்கு வந்துவிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்போதைய வேடம் கலைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள் மேலும் இந்திய உளவுத்துறையும் அம்பலப்படுத்தப்படும் என்பதால் போலித் துவாரகா கொல்லப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது நலன்களுக்காகத் தூண்டிவிட்டு தமிழ் – சிங்கள முரண்பாட்டை படுகொலைகளாக மாற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ. இந்திய புலனாய்வுத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் விக்ரர் தலைமையில் அனுராதபுரம் படுகொலையை 1985இல் மேற்கொண்டனர். சிங்களக் கிராமங்கள் தாக்கியளிக்கப்பட்டதும் இதன் பின்னணியிலேயே. தாங்கள் சொன்னதைச் செய்ததைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயதப் பயிற்சியை இந்தியா வழங்கியது. தமிழீழ விடுதலைப் போராட்டமே இந்திய நலன்களைப் பேணுவதற்கான போராட்டமாக மாறியது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய இந்தியா, 1987 இல் அமைதிப்படையாக இலங்கைக்குள் நூழைந்தது. புலிகளைக் குறைத்து மதிப்பிட்ட இந்தியாவும் இந்திய இராணுவமும் புலிகளிடம் வாங்கிக் கட்டியது.

அடிபட்டுக் கிடந்த இந்தியா தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தது. பிரபாகரனிடம் எவ்வித அரசியல் பார்வையும் தெளிவும் இல்லாதது இந்தியாவுக்கு மிகச் சாதகமாக அமைந்தந்து. இலங்கை இராணுவத்தை குறைத்து மதிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2006இல் மாவிலாற்றை மூடி சண்டையை வலிந்து ஆரம்பித்து இலங்கை இராணுவத்திடம் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தனர். இதற்குப் பின்னணியில் இந்தியாவும் மேற்குலகமும் இணைந்து செயற்பட்டனர். ஒப்பிரேசன் பீக்கன் என்ற 2003இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்ட தாக்குதல் திட்டமே பின் மீள்திருத்தம் செய்யப்பட்டு 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு அது முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

2008 பிற்பகுதிகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தப்பிக்கொள்ள முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. விடுதலைப் புலிகள் சிறிய ரக மல்ரிபரல்கள் கொண்டு தாக்க இலங்கை இராணுவம் கனரக சக்தி வாய்ந்த மல்ரிபரல்களைக் கொண்டு வந்து புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்தது. ஒரு சில மணித்தியாலங்களே கட்டாய இராணுவப் பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விட்டில் புச்சிகளாக வன்னி மண்ணில் உயிரிழந்தனர். இந்த யுத்தம் தோல்வி அடையும் என்பதை 2008 முடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் புலிகள் அழிக்கப்பட்டால் தாங்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்பதால் இது பற்றி மௌனமாகவே இருந்தனர். அப்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் மட்டும் தான், இதனை தேசம்நெற் நேர்காணலூடாக 2009 ஜனவரியில் வெளிப்படுத்தினார். அதில் தமிழ் மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்று 2009 ஜனவரியில் வேண்டுகோள் விடுத்தனர். அச்சமயத்தில் பாரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் பாரிய உயிரிழப்பொன்று ஏற்படப் போவதற்கான அறிகுறிகள் வெளித்தெரியத் தொடங்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் பார்வையற்ற அரசியல் தெளிவற்ற ஒரு முட்டாள்தனமான இராணுவக் கட்டமைப்பாக இருந்தமையால்தான் சர்வதேசம் ‘உங்களை இப்படித்தான் தாக்கி அழிப்போம்’ என்று கால அட்டவணை போட்டு அவர்களுடைய கையில் திட்டத்தை ஒப்படைத்து விட்டு தாக்கி அழித்துள்ளனர். நிலைமை தங்களுக்கு சாதகமாகவில்லை என்பது தெரிந்திருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முட்டாள்தனமாகத் தொடர்ந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மீண்டும் இந்திய அரசியல்வாதிகளை நம்பியதும் அவர்களுக்குப் பின்னிருந்த இந்திய புலனாய்வுத்துறையினரை கண்டுகொள்ளமல் இருந்ததும் தான். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குப் பிதில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் தமிழகத்தில் திமுகாவுக்குப் பதில் அம்மா ஜெயலலிதா அதிமுகா ஆட்சிக்கு வரும் என்றும் நம்பினர். அதனால் இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் மே 16, 2009 வரை சரணடையாமல் யுத்தத்தை இழுத்துக் கொண்டிருந்தனர். இலங்கை அரசோ யுத்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாக ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தியத் தேர்தல் ஆரம்பிக்க முன்னரே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இந்திய புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்கச் செயற்பட்டது.

இந்தப்பின்னணியில் நிகழ்த்தப்பட்டது தான் ஏப்ரலில் பிரபாகரன் இருந்த இடத்தை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். இத்தாக்குதலிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் பிரபாகரனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தனர். அச்சண்டையில் பிரபாகரன் உயிர் தப்பினார். அப்போது கூட அவர்கள் சரணடையும் முடிவை எடுத்திருந்தால் வன்னி யுத்தத்தில் 75 வீதமான உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் கதைகளைக் கேட்டும் அசட்டுத்தனமான முட்டாள்தனமான நம்பிக்கையிலும் பாஜாகா வரும் ஜெயலலிதா அம்மா வருவார், அவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பினர். இறுதி யுத்தம் நாளுக்குநாள் இறுக இறுக குறுகிய நிலப்பரப்புக்குள் மக்களும் புலிகளும் தள்ளப்பட்டனர். இந்திய – இலங்கைப் புலனாய்வுத்துறையும் யுத்தத்தை இழுத்தடிக்காமல் முடிவுக்குக் கொண்டுவர என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஏப்ரல் முதல் மே 18 வரையான ஆறு முதல் ஏழு வரையான வாரங்களிலேயே மிக மோசமான மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. இந்தப் பேரவலத்திற்குக் காரணம் பாஜாகா வும் ஜெயலலிதாவும் வந்து தங்களை மீட்பார்கள் என்ற நம்பிக்கையே.

மே 16 2009 தேர்தல் முடிவுகள் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்பில் மண் வீழ்ந்தது. அதனை அறிந்த சில மணி நேரங்களிலேயே தாங்கள் ஆயுதங்களை மௌனிக்கத் தயார் என்று தங்களுடைய தொடர்புகளுக்கு அறிவித்தனர். எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நேரம் இருக்கவில்லை. வெறும் வாய்வார்த்தைகளை நம்பி சரணடைய வேண்டியதாயிற்று. குறைந்தது சில வாரங்களுக்கு முன் தங்கள் சரணடைவை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்து சரணடைந்திருந்தால் வரலாறு வேறு வதமாக அமைந்திருக்கும். சரணடைந்த முக்கிய தலைவர்கள், தளபதிகள், பிரபாகரன் குடும்பத்தினர் எவ்வித மனிதாபிமானமும் காட்டப்படாமல் படுகொலை செய்யப்பட்டனர். ஆட்டத்தை தொடக்கிய இந்தியா, அதனை முடித்தும் வைத்தது. இப்போது தனது அடுத்த ஆட்டத்திற்கு இந்தியா தயாராகிவிட்டது. ஆனால் நாம் இன்னமும் பாடம் கற்கவில்லை…

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவிப்பு !

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

“ஊபா” சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு தடை செய்தது.

இத் தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியத் தேசிய பாதுகாப்புக் கருதி, 1992 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் முதன் முதலில் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு!

தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் வீட்டுச் சின்னத்தை மோசடி செய்ததாக ரோ புலிகள் என அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானிய நடைமுறைப்படி ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேசம்நெற்க்கு தெரியவந்துள்ளது. பிரித்தானிய சட்டப்படி ஒரு அமைப்பினுடைய பெயரையோ சின்னத்தையோ அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமானது. Intelectual Property Act 2014 – அறிவுசார் உடைமைகள் சட்டம் 2014 இன் படி தக்க அனுமதியின்றி தியாகராஜா திபாகரன், பாலநந்தினி பாலசுப்பிரமணியம் மற்றும் சொக்நாதன் கேதீஸ்வரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒழுங்காற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படத் துணியாத போதும் வெளிப்படையாக தங்கள் கட்சியை இந்திய புலனாய்வுப் பிரிவான ரோவின் முகவர்கள் வழிநடத்துவதை விரும்பவில்லை. அந்த அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தில் தமிழரசுக்கட்சியின் கிளை ஆரம்பிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த கட்சியின் செயலாளர் பா சத்தியலிங்கம் இலங்கைக்கு வெளியே தாங்கள் கிளைகள் எதனையும் ஆரம்பிப்பதற்கு அனுமதிவழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பின் தளமாகக் கொண்டு செயற்படும் தமிழ்வின் – லங்காசிறி மற்றும் ஐபிசி ஊடக அமைப்பின் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான திபாகரன் மற்றும் நிலா அணி தங்கள் ரோ நடவடிக்கைகளை நியாயப்படுத்த, ரோவின் தமிழ்நாட்டுப் பிரிவான க்யூ பிராஞ்சின் கட்டுப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை தடுத்து வைக்கும் சித்திரவதை முகாம்களை; அவை சித்திரவதை முகாம்கள் அல்ல என்றும் அங்கு இலங்கைத் தமிழர்கள் யாரும் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றும் ஐபிசி குழுமத்தைச் சேர்ந்த தமிழ்வின் – லங்காசிறி ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

தோழர் பாலன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு நீண்டகாலம் கொடுமைப்படுத் தப்பட்டனர். பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த தோழர் பாலன் என அறியப்பட்ட எஸ் பாலச்சந்திரன் சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதை முகாம்கள் பற்றி தேசம் சஞ்சிகையில் தொடராக எழுதியவர். தற்போது இக்கட்டுரைகளின் தொகுப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளிவந்துள்ளது. தோழர் பாலன் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை என்ற போராட்ட அமைப்பை நிறுவி வழிநடத்தியவர்களில் ஒருவர். சிறப்புமுகாம்களில் அனுபவித்த கொடுமைகளின் அடிப்படையிலும் தான் அவருக்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கிடைத்தது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவுக்கு செவிசாய்த்தமைக்காக தமிழரசுக் கட்சியின் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்தனர். ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் பத்மநாபாவையும் அவருடைய தோழர்களையும் படுகொலை செய்தனர், தங்கள் அமைப்பிற்குள்ளேயே மாத்தையாவைப் படுகொலை செய்தனர். ஆனால் தற்போது இந்த அமைப்பில் ஒருசாரார் தாங்கள் தடைகளை உடைப்பதில் வல்லவர்கள் என்று சொல்லி இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வோடு சேர்ந்து பிரபாகரன் குடும்பத்தையே உயிர்த்தெழ வைத்துள்ளனர். இன்னொரு பிரிவு தமிழரசுக் கட்சியை புலியரசுக்கட்சியாக்குவோம் என்று பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது. இன்னுமொரு பிரிவோ இலங்கைப் புலனாய்வுத்துறையினரோடு சேர்ந்து இயங்குகிறது. இவற்றுக்குள் தங்களை இணைத்துக்கொள்ள முடியாத பலர் பலவாக உடைந்து சிதறியுள்ளனர். இவர்கள் யாருடைய உறவும் வேண்டாம். செய்தியும் வேண்டாம் எனப் பலர் ஒதுங்கித் தனித்து வாழ்கின்றனர்.

லண்டன் தமிழரசுக்கட்சியை ‘றோ புலிகள் – திவாகரன் – நிலா’ கொம்பனி பொக்ஸடித்து முற்றுகையிட்டுள்ளது!

ஒருவர் தான் ஒரு முட்டாள் என்று உணர்வதற்குக்கூட ஒரு அடிப்படை அறிவு அவசியம். அந்தக் குறைந்தபட்ச அறிவும் இல்லாதவர்கள் தங்களைத் தாங்களே மிகச் சிறந்த சிந்தனையாளர்களாக, அறிவுஜீவிகளாக நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். இத்தகையவர்கள் அண்மைக்காலமாக புலம்பெயர் அரசியல் சூழலில் பெரும் தொந்தரவாக மாறியுள்ளனர். ‘புலிகளின் இளவரசி துவாரகா வந்துவிட்டார்’ என்றும் அவருக்குப் பின்னால் தாயார் மதிவதனியும் தந்தை பிரபாகரனும் வருகிறார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து ஒரு கூட்டம் அப்துல்லா என்பவர் தலைமையில் புறப்பட்டுள்ளது. அதே அமைப்பிலிருந்து இன்னுமொரு கூட்டம், இந்தியாவின் உளவு நிறுவனமான றோ தமிழீழம் எடுத்துத்தரும் என்று திபாகரன் – நிலா தலைமையில் சன்னதம் ஆடுகின்றது. புலிகளின் இந்தத் தரப்புகளை மக்கள் நம்புவதாகத் தெரியவில்லை. ஆனால் அத்தரப்புகள் தங்களைத் தாங்களே வெகுவாக நம்பி சிற்றின்பம் காண்கின்றனர்.

இந்த முட்டாள்தனங்களை தொந்தரவாக எண்ணிக் கடந்துசெல்ல முடியாதபடி, இவர்கள் தாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக வேறு கதையளந்து வருகின்றனர். இப்புலிகளின் இரு தரப்புகளையும் இந்தியாவின் உளவுத்துறையான றோ அமைப்பே பின்னணியில் இருந்து இயக்குகின்றது எனத் தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை ராஜபக்ச சகோதரர்கள் நடத்தினார்கள் என்பதிலும் பார்க்க இந்திய உளவுத்துறையான றோவே இந்த யுத்தத்தை நடத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் புலனாய்வுத்துறையினருக்குப் பயிற்சி அளித்ததே இந்திய புலனாய்வுத்துறையினர் எனத் தெரிவித்த அவர், கருணாவை தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரித்ததிலும் றோவினுடைய பங்களிப்பு இருந்ததாகத் தெரிவித்தார். ஆனால் இத்தகவலை தேசம்நெற் ஆல் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் தப்புவதற்க்கு நிறைய வாய்ப்புகள் இருந்ததாக றோ அமைப்பைச் சார்ந்த இராணுவத் தளபதி மதன்குமார் ஆணித்தரமாக கருத்து வெளியிட்டு வருகின்றார். துவாரகாவின் வருகைக்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

மறுமுனையில் திபாகரன் – நிலா கொம்பனி லண்டணிலிருந்து டெல்லிக்கு காவடி எடுத்ததை தேசம்நெற் பலதடவை அம்பலப்படுத்தியதுடன், இவர்கள் தமிழரசுக் கட்சியை புலி அரசுக் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்பதை பெப்ரவரி 25இல் வெளியிட்ட கட்டுரையில் வெளிப்படுத்தியும் இருந்தது. றோ தமிழீழம் எடுத்துத் தரப்போகின்றது என்று நம்பும் இக்குழுவின் செயற்பாடுகள் தமிழ் மக்களை கேவலப்படுத்தும் வகையிலும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சேவகம் செய்யும் பாணியிலும் அமைந்துள்ளது. அடிப்படைவாத பிஜேபி – ஆர்எஸ்எஸ் இன் கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இன, மத உணர்வுகைளத் தூண்டிவிடும் வகையில் இவர்கள் நடந்துகொள்கின்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த போதும் மத அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் ஒரு கிறிஸ்தவர் என்பதால் அவருக்கு எதிரான பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். இதேபாணியில் பா உ சுமந்திரனையும் கிறிஸ்தவர் என்பதற்காக தாக்குவதையும் பரவலாகக் காண முடிகின்றது.

இந்தியாவுக்கு சீனா எதிரி, அதனால் சீனாவை தமிழர்களின் எதிரி என்று காட்டி இந்தியாவுக்கு காக்கா பிடித்து தமிழீழம் பெற்றுவிடலாம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளுர் மதியுரைஞராக இருந்த மு திருநாவுக்கரசுவின் அதிரடித் திட்டம். வன்னி யுத்த காலத்தில் தமிழகத்தைச் சென்றடைந்த மு திருநாவுக்கரசு றோ வின் அரவணைப்பில் இருந்து வருகின்றார். அவர் வளர்த்தெடுத்த வாரிசுகள் தான் ‘திபாகரன் – நிலா’ கொம்பனி. இவர்கள் றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செய்யும் இக்குழு, ‘இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்தது மிகப்பெரும் அரசியல் தவறு’ என்று அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தற்போது இக்குழுவே தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையையும் கைப்பற்றியுள்ளது. மார்ச் மாதம் 10ம் திகதி தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய இருந்த போதே தேசம்நெற் இவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தி இருந்ததுடன் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சிறிவாஸ் சின்னத்துரையிடம் இது பற்றிக் கேள்வியும் எழுப்பி இருந்தது. நேற்று மார்ச் 13இல் லண்டன் வெஸ்ற்மினிஸ்ரரில் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு வந்திருந்த சின்னத்துரை சிறிவாசிடம் மார்ச் 10இல் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாகக் கேட்டபோது: “நான் கூட்டத்தை கூட்டியது தமிழரசுக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கே. தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளைக்கான அலுவலர்களைத் தெரிவு செய்வதற்காக அல்ல. ஆனால் கூட்டத்தை திசை திருப்பி புதிய அலுவர்களுக்கான தெரிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டதால் தான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன்” என்றார் சின்னத்துரை சிறிவாஸ்.

றோ புலிகள் தமிழரசுக் கட்சியைக் கைப்பற்றுவார்கள் என்பதை தேசம்நெற் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தது. மார்ச் மாதம் 10ம் திகதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே பெப்ரவரி 17 அன்று தமிழரசுக் கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd என்று ஒரு தனியார் நிறுவனமாக திபாகரன் – நிலா குழு பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்களாக கீத் என அறியப்பட்ட சொக்கநாதன் கேதீஸ்வரன், திபாகரன் என்று அறியப்பட்ட தியாகராஜா திபாகரன், நிலா என அறியப்பட்ட பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். பாலநந்தினி பாலசுப்பிரமணியம் நிறுவனத்தின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஸ்வரன், ஞானேஸ்வரன் ஆகியோர் திபாகரனின் உறவினர்கள், நண்பர்கள். கமலேஸ்வரன் லண்டன் வந்த சமயத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பினர்களை உள்வாங்க மேற்கொண்ட நடவடிக்கையை ‘திபாகரன் – நிலா’ குழு தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. நோர்த் ஹரோவில் ஜனவரி 28இல் நடைபெற்ற ஒன்றுகூடலில் இதற்கான திட்டமிடல் நடந்துள்ளது. ஆனால் தற்போது இந்த றோ புலிகளின் குளறுபடியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராகத் திருப்புகின்ற முயற்சி நடைபெறுகின்றது. ஆனால் தேசம்நெற் அறிந்தவரை ‘திபாகரன் – நிலா’ குழு சுமந்திரனுக்கு முற்றாக எதிரானவர்கள். திபாகரன் – நிலா – திருநாவுக்கரசு என்ற இந்த றோ புலிகள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுடன் நெருங்கிப் பணியாற்றியவர்கள். இவர்களுக்காக எஸ் சிறிதரன் இலங்கை அரசியல் யாப்பு என்ற திருநாவுக்கரசுவின் நூலையும் இலங்கையில் வெளியிட்டு இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் லண்டன் வந்திருந்த போது திபாகரனும் மயூரனும் எஸ் சிறிதரனை கிழக்கு லண்டனில் உள்ள வோல்தம்ஸ்ரோவில் வைத்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் கிளையை இப்படிக் குளறுபடியாகக் கைப்பற்றும் திபாகரன் – நிலா குழுவின் எண்ணத்திற்கு உடன்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்பதவி மீது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு நிதியாதரவு வழங்கும் ஒரு தொழிலதிபரும் கண் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் தற்சமயம் லண்டனிலேயே கல்வி கற்கின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

என்னதான் கொம்பனிச் சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சி போறம் லிமிடட் (Ilankai Thamil Arasu Kadchi (ITAK) Forum Ltd டை பதிவு செய்த போதும் இதற்கும் தமிழரசுக் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் ஏற்படப்போவதில்லை. தமிழரசுக் கட்சியும் இந்த அமைப்பைக் கண்டுகொள்ளப் போவதில்லை. இது ‘திபாகரன் – நிலா’ குழுவின் இன்னுமொரு ஆர்வக்கோளாறு குளறுபடி மட்டுமே. புதிய உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சந்தாவைச் செலுத்தினால் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால் அலுவர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்ட தலைவர் சொக்கநாதன் கேதீஸ்வரன், உப தலைவர் தியாகராஜா திபாகரன், செயலாளர் பாலநந்தினி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இந்த உறுப்புரிமையைத் தக்க வைக்க முடியாது. ஏற்கனவே தமிழரசுக் கட்சி மாநாடு கூட்டி தெரிவு செய்த தலைவரே தலைவராக முடியாமல் திண்டாடுகிறார். இதற்குள் ‘திபாகரன் – நிலா’ கொம்பனியின் நப்பாசைக்குக் குறைவில்லை.