புலிகள் உள்ளிட்ட 9 தமிழ் அமைப்புகள் 6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீடிப்பு !
தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகள் மீதான தடை நீடிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 இல் வெளியிடப்பட்ட இப்பட்டியலானது 2024 திருத்தி வெளியிடப்பட்டு இருந்தது அதன் தொடர்ச்சியாக நேற்று புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (TRO), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), உலக தமிழர் இயக்கம் (WTO), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WDRF), தலைமைச் செயலகம் (HQ), கனேடிய தமிழர் தேசிய அவை ஆகிய தமிழ் அமைப்புகளும்; தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாதே மிலாதே ஈப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, டருல் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ள்ஸ் ஆகிய இஸ்லாமிய அமைப்புகளும் வர்த்தமானி அறிவித்தலூடாக தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.
தடை நீடிக்கப்பட்ட 9 தமிழ் அமைப்புகளில் பெரும்பாலானவை கனடா மற்றும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. இவ்வமைப்புகளின் செயற்பாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ஆண்டுகள் கடந்து செல்ல இவ்வமைப்புகளின் ஆதரவுத் தளம் குறுகிக்கொண்டே சென்று தற்போது தனிமனித முரண்பாடுகளில் சிக்குண்டு ஒருவரை மற்றவர் தூற்றுவதாகவே காணப்படுகின்றது.
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் இவை தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இவற்றின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 222 தனிநபர்கள் மீதான தடையையும் அரசாங்கம் நீடித்துள்ளது. பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் அவற்றுக்கு நிதிஅளித்தவர்கள் என்ற அடிப்படையில் இவர்மீதான தடை விதிக்கப்பட்டுள்ளது.