இரா. சம்பந்தன்

இரா. சம்பந்தன்

“இனியும் ராஜபக்ஷக்களிடத்தில் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது .” – இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு !

“இனியும் ராஜபக்ஷக்களிடத்தில் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது .” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக சாடியுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வினை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பிலும்ரூபவ் அடுத்து வரும் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் குறித்தும் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையினால் தான் போர் இடம்பெற்றது என்பதை ஜனாதிபதி மறந்து விடக்கூடாது. போரின் காரணமாகவும் அக்காலத்தில் இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவுகளில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் காரணமாகவுமே நாடு மீள முடியாத பொருளாதார வீழ்க்குள் சென்றுள்ளது.

செல்வநாயகம் போன்ற தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனக் குழுமத்தினரும் சமத்துவமாகவே விரும்பினார்கள். அதற்கான ஒப்பந்தத்தையும் செய்தார். ஆனால் அவர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு தென்னிலங்கை பெரும்பான்மைத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு பதிலாக அதனை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கினார்கள்.

இதன், விளைவாக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்து தனிநாடு கோரி போராடினார்கள். இந்த ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு வரையில் நீடித்தது. அந்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு தற்போது 12ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக் கோரிக்கையை நாம் அழுத்தமாக முன்வைத்து வருகின்றோம்.

இவற்றையெல்லாம் மறந்து விட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டில் இனப்பிரச்சினை இல்லாதது போல் கருத்துக்களை வெளியிடுகின்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கருதுவது அவருடைய உரையில் மிகத் தெளிவாக உள்ளது.

அவ்விதமாக அவர் கருவாராக இருந்தால் அது அவர் காணும் பகற்கனவாகும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது வேறு எந்த விடயங்களிலும் நிரந்தரமான தீர்வினை அடைய முடியாது. இது ஜனாதிபதிக்கு புரியவில்லை. அவர், தான் பெரும்பான்மை மக்களினதும்,  கடும்போக்கு பௌத்த தலைவர்களினதும் ஆதரவோடு ஆட்சிப் பீடம் ஏறியவர் என்பதால் அவர்களை மட்டும் திருப்திப் படுத்தினால் போதும் என்று கருதுகின்றார். அவர் அதனை பல இடங்களில் வெளிப்படுத்தியும் உள்ளார்.

ஆனால் அவர் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டும். அவர்(கோட்டாபய) உட்பட அவருடைய சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா, பிரேமதாஸ, என்று அனைத்து தலைவர்களும் தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதனால், அவர்கள் உள்ளுரிலும் சர்வதேச அரங்குகளிலும் சர்வதேச நாடுகளிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியாக இருக்கும் கோட்டாபய திடீரென்று விழித்தெழுந்தவர் போன்று எவ்வாறு இனப்பிரச்சினையே இல்லை என்று கூற முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ராஜபக்ஷக்கள் மீண்டும் பதவிக்கு வந்ததன் பின்னர் அவர்களின் போக்கு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. இனியும் இவர்களிடத்தில் நீதி, நியாயம் ஆகியவற்றை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கப்போவதுமில்லை.

ஆகவே, தமிழ் மக்களின் ஆணைபெற்றவர்கள் என்ற அடிப்படையில் உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டினை நாம் கோருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். சர்வதேச நாடுகள், அமைப்புக்கள், அனைத்தினதும் கவனத்திற்கு இந்த விடயத்தினை நகர்த்தவுள்ளோம்.

தற்போதைய நிலையில் நாடு பொருளாதார நிலையில் மீளமுடியாத நிலையில் உள்ளது. இதற்கு காரணம் போர். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கியிருந்தால் இந்த போரே மூண்டிருக்காது. இந்தப் போரினால் பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுக்கான பரிகாரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.

இதேநேரம், இந்தப் போருக்காக அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவழித்துள்ளது. இதானால் பொருளாதாரம் மெல்லமெல்ல சரிந்து தற்போது மோசமடைந்துள்ளது. குறிப்பாக போர்க்காலத்தின்போது வரையறைகளின்றி ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அச்சமயத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தினை வெகுவாக தாக்கியுள்ளது.

ஆகவே தேசியப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காது நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. தென்னிலங்கை பெரும்பான்மை மக்களையும்ரூபவ் பௌத்த தேரர்களையும் மையப்படுத்தி தமது விரும்பத்திற்கேற்றவாறாக ஆட்சியை முன் கொண்டு செல்வதானது எதிர்காலத்திற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட 46.1 தீர்மானத்தில் எதனையுமே நடைமுறைப்படுத்தாது உள்ளது. இதனை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

“ஜனாதிபதியுடன் பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை.” – இரா. சம்பந்தன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரச தலைவராக பதவியேற்று இரு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை.

கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்மாத இறுதி வாரத்தில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரச தலைவர் தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கான பதிலை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிடுகையில்,

“ பேச்சுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை எமக்கு வரவில்லை. பேச்சு என்ற பெயரில் காலத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை. இந்த விடயத்தை அரச தலைவருடனான சந்திப்பின் நேரில் தெரிவிப்போம்.

நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழி சமைக்கும் வகையில் அந்தப் பேச்சு இடம்பெற வேண்டும். அதை விடுத்து இனியும் ஏமாறத் தயாராக இல்லை. அனைத்துக் கருமங்களும் நல்லபடி அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்” என்றார்.

“ராஜபக்ஷக்களுக்கு இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.” – இரா.சம்பந்தன்

“ராஜபக்ஷக்களுக்கு இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பௌத்த தேரர்களும் கைகோர்த்துள்ளனர். இனி ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது.

நாடெங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் அடைந்து வருகின்றன. வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றது. இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.

அடக்குமுறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசுக்கு இன்று தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது”  என்றார்.

இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பிரதான பதவியை நிராகரித்த கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் !

இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பிரதித் தலைவர் பதவியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ச(Chamal Rajapaksa) தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் (R.Sampanthan) தெரிவு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் அந்த பதவியை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன் அதில் 125 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வடக்கு மாகாண மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்.” – ஆளுநர் ஜீவன் தியாகராஜா

தனது அதிகாரத்திற்குற்பட்ட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுத் தயாராக இருப்பதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மேலும் மக்களின் உடனடி தேவைகளை எழுத்துமூலமாக ஒப்படைக்குமாறும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன் சில விடயங்களை முன்னிலைப்படுத்தியிருந்தார் என்றும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண எழுச்சி தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்தை வரவேற்ற இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

வெளியிடப்பட்டது பலவீனமான பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் – இரா.சம்பந்தன் , சித்தார்த்தன் ஆகியோரும் முன்னிலையில் !

இலங்கை நாடாளுமன்ற செயற்பாடுகளில் பலவீனமான உறுப்பினர்களின் பெயர்களில் தமிழ் உறுப்பினர்கள் சிலரும் இடம்பிடித்திருக்கின்றனர். அதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அலி சப்ரி உள்ளிட்டவர்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை – ஓகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட கணிப்பில் இந்த விபரம் வெளியாகியிருக்கின்றது. அந்த பெயர் பட்டியல் வருமாறு,

டிரான் அலஸ் – பொதுஜன முன்னணி (கொழும்பு) அலி சப்ரி ரஹீம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (புத்தளம்) மர்ஜான் பலீல் – பொதுஜன முன்னணி (களுத்துறை) நிப்புண ரணவக்க – பொதுஜன முன்னணி (மாத்தறை) ஆர். சம்பந்தன் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு (திருகோணமலை) குலசிங்கம் திலீபன் – ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (மன்னார்) சாரதி துஸ்மந்த – பொதுஜன முன்னணி (கேகாலை) உதயகாந்த குணதிலக்க – பொதுஜன முன்னணி (கேகாலை) எம்.எஸ். தௌபிக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (திருகோணமலை) அப்துல் ஹலீம் – ஐக்கிய மக்கள் சக்தி (கண்டி) ஆகியோர் உள்ளனர்.

இதேவேளை சபை அமர்வுகளில் குறைந்த நாட்களே கலந்துகொண்ட எம்.பிக்களின்பட்டியலிலும் தமிழ் உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். அவர்களில் இரா.சம்பந்தன், பிள்ளையான், ஜீவன் தொண்டமான், வினோ நோகராதலிங்கம், திகாம்பரம், சித்தார்த்தன், ஹலீம் மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ, டிரான் அலஸ், விமல் வீரவன்ச, மஹிந்த சமரசிங்க, திலும் அமுனுகம ஆகியோர் அடங்குகின்றனர்.

“தமிழர்களே நம்பிக்கையை இழக்காதீர்கள் . இறுதிவரை போராடியேனும் உரிமையை வென்றெடுப்போம்.” – புத்தாண்டு வாழ்த்தில் இரா.சம்பந்தன் !

“தமிழர்களே நம்பிக்கையை இழக்காதீர்கள் . இறுதிவரை போராடியேனும் உரிமையை வென்றெடுப்போம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது.  நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல.

தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் – தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

“சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.” – இரா.சம்பந்தன்

“சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றவகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா? என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்று தீர்மானங்கள் முன்னரும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தையுமே நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரிப்பதாக கூறுவதானது, சர்வதேச தீர்மானங்களை மீறுவதாக அமையும். அதுமட்டுமன்றி சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதாகவே அமையும். இது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் இனரீதியான மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியன தொடர்பில் விசாரணைகள் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். முன்னதாக ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினரின் அறிக்கையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் அவ்விதமான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே அக்குற்றச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது மிகவும் முக்கியமானதாகும். இலங்கை அரசாங்கம் அவ்விதமான விசாரணைகளை முன்னெடுத்திருக்கவில்லை. எனவே அவை தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அக்கருமம் காலப்போக்கில் நிச்சயமாக இடம்பெறும்.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக ஐ.நா.தீர்மானம், விசாரணை அறிக்கைகள் தொடர்பாக பல கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் ஐ.நா.தீர்மானத்தினை நிராகரித்துச் செயற்பட முடியாது. மேலும், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கரிசணை கொண்டு செயற்படும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்டகாலக் கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டு வருபவை.

இதில் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஆகவே அவ்விதமான நாடுகளை தவிர்த்துச் செயற்படுவதென்ற அறிவிப்பும் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு அரசியலை அடிப்படையாக கொண்டவையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படக்கூடாது.” – இரா.சம்பந்தன்

“தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படக்கூடாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வவுனியாவிலுள்ள சிங்களக் கிராமத்துக்கு இன்று வருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி பதவியேற்று 16 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால், அவர் இன்னமும் வடக்கு,கிழக்குக்கு வரவில்லை. தமிழ்க் கிராமங்களை தரிசிக்கவில்லை. வவுனியாவிலுள்ள சிங்களக் கிராமத்துக்கு மட்டும் அவர் வருகின்றார் என்ற தகவலை அறிந்தேன்.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கிராமத்துக்கான கலந்துரையாடலில் நேரடியாக பங்கேற்கும் ஜனாதிபதி, தமிழ்க் கிராமங்களை ஏன் புறக்கணிக்கின்றார் என்று எமக்குத் தெரியவில்லை.

Giving swift solutions to public grievances is neither political gimmick  nor media hype… – Presidential Secretariat of Sri Lanka

நாட்டின் மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும்.தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும்,அவர்களை பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கிராமங்களுக்கும் அவர் நேரில் விஜயம் செய்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.” ” என்றார்.

“இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை குழிதோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” – ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் இரா.சம்பந்தன் !

“இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை குழிதோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட விசாரணை ஆணைக்குழு தொடர்பாக குறிப்பிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை அரசு, தனது பொறுப்புக்கூறலைச் செய்யாது அதனைக் குழி தோண்டிப் புதைப்பதற்கே முயற்சிக்கின்றது. அதற்காகத் தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றவதற்காக இவ்விதமான காலதாமதப்படும் செயற்பாடுகளைத் திட்டமிட்டு முன்னெடுக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன கூட்டாக நிலைப்பாட்டை விபரித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும் பொறுப்புக்கூறலைச் செய்விப்பதற்கும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்வதற்குமான எமது முயற்சிகள் மேலும் தீவிரமாகத் தொடரும் என்பதையும் இலங்கை அரசுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட இந்த ஆணைக்குழுவில், முன்னாள் காவற்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமால் அபேசிறி ஆகியோரும் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், மனிதாபினமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக இற்றைவரையில் இலங்கை அரசு பொறுப்புக்கூறவில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இலங்கையில் கடந்த  காலங்களில் ஸ்தாபிக்கப்பட்ட  ஆணைக்குழுக்கள்  மற்றும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன இலங்கை அரசின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான சிபார்சுகளைச் செய்துள்ளன.

குறிப்பாக, 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் அமைக்கப்பட்ட  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்வேறு அமர்வுகளை நடத்தி 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி அதன் இறுதி அறிக்கையை அவரிடத்தில் சமர்ப்பித்தது. அதில் பல்வேறு விடயங்கள் சம்பந்தமான விடயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்திலும் கற்றுக்கொண்ட  பாடங்கள்  நல்லிணக்க  ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்தத் தருணங்களிலும் அதன் பின்னருமான காலத்தில் அந்த பரிந்துரைகள், தீர்மானங்கள் தொடர்பாக இலங்கை அரசாசு எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.

இந்நிலையில்தான் ஜனாதிபதி கோட்டாபய பழைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை விசாரணை செய்வதற்குப் புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கின்றார். இவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்று தற்போதைய சூழலில் தேவையற்றதொன்றாகும்.

இவ்வாறான ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் காலத்தைக் கடத்தலாம் என்று கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு எண்ணுகின்றது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் நடவடிக்கைகள்  எடுக்கப்படுவது போன்று காண்பித்து தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றிவிடலாம் என்றும் இந்த அரசு கருதுகின்றது.

எம்மைப் பொறுத்தவரையில், புதிய விசாரணை ஆணைக்குழுவானது ஏமாற்று வித்தையாகும். அதற்கு எவ்விதமான பெறுமதியும் இல்லை. அதன் விசாரணைகளும், அறிக்கைகளும் எவ்விதமான பயனையும் தரப்போவதில்லை. அதன் மீது எமக்கு நம்பிக்கையும் இல்லை.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை குழிதோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது மக்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும். அதில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. அரசு புதிய விசாரணை ஆணைக்குழு போன்ற குறைபாடுடைய விடயங்களைப் பயன்படுத்தி தப்பித்து விட முடியாது. பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான  எமது தீவிர செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதில் மாற்றமில்லை” – என்றார்.