அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

 

வடக்கிற்கான அபிவிருத்தி நிதியை வினைத்திறனாக பயன்படுத்துங்கள் என அரசாங்க அதிகாரிகளிடம் ஆளுநரும், கடற்தொழில் அமைச்சரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு 7,328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன், மாகாணசபைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதைச் செலவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் வருகைதரும் நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை அதிகாரிகள் வழங்கவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

இந்துசமுத்திரத்தை பாலைவனமாக்கும் தமிழக மீனவர்கள் – கச்சதீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

இந்துசமுத்திரத்தை பாலைவனமாக்கும் தமிழக மீனவர்கள் – கச்சதீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களினதும் தமிழக மீனவர்களினதும் பொருளாதாரத்தை தமிழக மீனவர்கள் அழிக்கிறார்கள் என்கிறார், கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர். இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர் சந்திரசேகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முறை கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இம்முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை. இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை. அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது.

எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகக்கூடும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என்றார் அமைச்சர் இராமலிங்கம்.

யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !

யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !

 

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கைநாட்டு; எழுத வாசிக்க தெரியாதவர் என எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அவமாரியாதையாக நேற்றைய நாடாளுமன்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியிருந்தார்.

சமீபத்தில் அமைச்சர் கப்பலில் தோட்டத் தொழிலாளராக வந்த வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் நாங்கள் அதாவது அர்ச்சுனாவின் யாழ்ப்பாண வம்சாவளியினர் கப்பல் கட்டி விட்ட மேட்டுக்குடியினர் என மட்டம் தட்டி வலைத்தளத்தில் பேசி இருந்தார். அர்ச்சுனா கடற்தொழில் அமைச்சர் மீது காட்டும் வன்மம் தான் வெள்ளாள யாழ்ப்பாண மேட்டுக்குடியைச் சேர்ந்தவன் என்ற மேலாதிக்க மனோபாவத்தின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு எனவே கருதப்படுகிறது. இராமலிங்கம் சந்திரசேகர் கடற்தொழில் அமைச்சாராக வந்ததை அர்ச்சுனாவைப் போன்று குறுந் தமிழ்த்தேசிய வெள்ளாள மேட்டுக்குடியினரும் விரும்பவில்லை. ஒரு மலையகத் தமிழன் அதுவும் ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் யாழ்ப்பாணத்தானை ஆளவா? என்ற காழ்ப்புணர்வை பலர் மனதில் வைத்துள்ளார்கள். எம்பி அர்ச்சுனா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காட்டுகிறார்.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீதான தனது அதிருப்தியை அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தனது பங்கிற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை நாய் என குறிப்பிட்டுள்ளார் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா.

மேலும் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் வடக்கின் சுகாதார நிலை தொடர்பில் பேசிய எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தின் மொத்த சுகாதார அமைச்சின் செலவுக்கு 0.019 வீதம் பிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்தோடு, முதுகெலும்பு இருந்தால் நான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என சுகாதார அமைச்சருக்கு சவால் விடுத்துள்ள எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கிலும் சுகாதாரத்துறை ஒழுங்கற்று காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.

அரச மருதுவமனையில் வரிசையில் காத்துநின்று மருந்து பெற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் – குவியும் பாராட்டுக்கள் !

அரச மருதுவமனையில் வரிசையில் காத்துநின்று மருந்து பெற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் – குவியும் பாராட்டுக்கள் !

 

கொழும்பு தேசிய கண் சிகிச்சை வைத்தியசாலைக்கு சென்றிருந்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மக்களோடு மக்களாக நின்று பொறுமையாக வரிசையில் சென்று மருத்துவரை சந்தித்தது பற்றி பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்தார்.

இதன்போது மக்கள் கண் சிகிச்சை பெற நின்ற நிலையில் அவரும் நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பின்னர் வைத்தியரை சந்தித்தார்.

அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்

எளிமையாக மக்களுடன் மக்களாக என்.பி.பி பா.உக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் உலாவருவது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாற்றமானது. முன்னைய அரசாங்கங்களில் பதவி வகித்தோர் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளையே தமக்கான மருத்துவ தேவைகளுக்காக நாடி வந்த நிலையில் என்.பி.பியினர் இலவசமருத்துவத்தின் தரத்தை பேணும் வகையிலும் அதனை மக்களிடையே ஊக்குவிக்கவும் நேரடியாகவே அரச மருத்துவமனைகளை நாடுவது மாற்றமான அரசியல் கலாச்சாரம் உருவாவதை காட்டுகிறது என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தாயார் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றமையும் கவனிக்கத்தக்கது.

எமது நாட்டின் கடல் வளத்தை அழித்து விட்டு தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் கவலை !

எமது நாட்டின் கடல் வளத்தை அழித்து விட்டு தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் – அமைச்சர் சந்திரசேகர் கவலை !

 

இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ‘தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள். தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது.

எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது. எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை’ எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

 அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !

அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தாக்குவதற்காக அண்மையில் காணொளி ஒன்றில் பா.உ இராமநாதன் அர்ச்சுனா “நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்” என மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான மொழியாடல்களை பயன்படுத்தியிருப்பது பலரையும் அருவருப்படைய வைத்துள்ளது.

பா உ அர்ச்சுனா ஊசி அர்ச்சுனாவாக இருந்த போதே தன்னுடைய சாதியத் திமிரை அப்பப்போ காட்டியதை தேசம்நெற் பல தடவைகள் அம்பலப்படுத்தியிருந்தது. 42 பாகை வெப்பநிலையிலும் ரை கட்டிவரும் அர்ச்சுனா தன்னை எப்போதும் கண்காணியாகவே கனவு காண்கின்றார். மற்றவர்களை முட்டாளாகவே காண்கின்றார். பெரும்பாலான முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று விளங்குவதற்கான அறிவு கூட இருப்பதில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்த டொக்கடர் முட்டாள் தான் இந்த அர்ச்சுனா என்கிறார் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான். இவ்வாறானவர்களைத் தெரிவு செய்கின்ற அளவுக்கு யாழ்ப்பாணத் தமிழ் தேசியத்திடம் அரசியல் வற்றிப் போய்விட்டது எனவும் சோலையூரான் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வாரம் பாராளுமன்ற அமர்வின் போது பா.உக்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, கழுதைகள் குதிரைகளோடும் தான் யாழ் மக்கள் போட்டோ எடுப்பார்கள் ஆனால் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், சந்திரசேகருக்கு தமிழ்பேச தெரியாது, என்.பி.பியின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் கத்தரி தோட்டத்து வெருளிகள் என பல வேண்டத்தகாத விடயங்களை கூறினார் இராமநாதன் அர்ச்சுனா. இதே கருத்துப்பட ஐபிசி யும் கீதபொன்கலனும் உரையாடல்களில் கருத்து வெளியிட்டு இருந்ததை தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றத்துக்கு வெளியிலும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தமிழ் ஒழுங்காக பேச தெரியாதவர், மலையக பின்புலத்தை சேர்ந்தவர் வசைபாடியுள்ளார் பா.உ இராமநாதன் அர்ச்சுனா. குறிப்பாக நீங்கள் கப்பலில் வந்த வெள்ளைக்காரர்கள் தான் உங்களை கொண்டு வந்தார்கள் போன்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்தி வழமையான யாழ்ப்பாண சாதிய மேலாதிக்க தமிழ்தேசிய தலைமைகளின் எண்ண ஓட்டத்துக்குள் தானும் இணைந்தவர் என்பதை மீள உறுதிப்படுத்தியுள்ளார் பா.உ அர்ச்சுனா.

கிளிநொச்சியில் உள்ள அதிகப்படியான மலையக தமிழ் மக்களின் வாக்குகளில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பா.உ சிறீரன் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை தோட்டக்காட்டான் என குறிப்பிட்டு தன் யாழ்ப்பாண சாதிய திமிரை காட்டியிருந்ததார். மேலும் மலையக பின்னணியை சேர்ந்த யாருமே தமிழரசுக்கட்சியின் அரசியலுக்குள் நுழைந்துவிடாமலும் கச்சிதமாக பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் வழமையான மலையக தமிழர்களை அடக்கி ஒடுக்கும் தமிழ்தேசிய வாதிகளின் கூட்டணியில் பா.உ அர்ச்சுனாவும் இணைந்துள்ளார் என பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதேவேளை, புலம்பெயர் தமிழர் எல்லாம் கழிப்பறை கழுவத்தான் செல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்தமைக்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை நோக்கி கூறிய “இக்கூற்றுக்காக முழுத் தமிழினமும் இலங்கைத் தமிழர்கள் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் இதை அமைச்சர் ஒருவருக்கு எதிரான கூற்றென்று ஒதுக்கி விட முடியாது. ஒரு சமூகத்துக்கு எதிரான கூற்று” என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “உண்மையில் அவர் கூறியிருந்திருக்க வேண்டியது ‘நாங்கள் கப்பலோட்டியவர்கள். நீங்கள் எமக்கு வழிகாட்டியாகவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மண்ணிலிருந்து வந்தவர்கள்’ என்றே.

சுதந்திரமடைந்த நாட்டில் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். அதற்கு எம் தமிழ்த் தலைவர்கள் , ஜி.ஜி.பொன்னம்பலம் உட்படப் பலரும் உடந்தையாகவிருந்தார்கள் என்பது வரலாறு. வடகிழக்கு எல்லைகளில் குடியேறி அதன் காரணமாகவும் துன்பத்தினை அனுபவித்தவர்கள் அவர்கள். இந்நிலையில் இவ்வாறானதொரு கூற்று அம்மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கேவலமான, துவேசம் மிக்க வசையாகவே கருதப்படும்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நீண்ட காலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர். ஒரு புரட்சிகர அமைப்பின் போராளியாக இருந்தவர். இந்நிலையில் அவரைப்பார்த்து இவ்விதம் வசை பாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. மன்னிப்புக் கேட்கப்பட வேண்டியது. கூறியவர் கேட்காதிருந்தாலும் , நாம் அனைவரும் மலையக மக்களிடம் மன்னிப்புக் கேட்போம்: ‘எம்மை மன்னித்து விடுங்கள்’ என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.

அர்ச்சுனாவுடைய கூற்று ஈழத்தமிழ் சமூகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதுடன் வெட்கித் தலைகுனியவும் செய்துள்ளது. ஈழத்தமிழர்களின் பல்வேறு தளங்களில் செயற்படுபவர்களும் பா உ அர்சுனாவின் சாதியவாதம், பிரதேச வாதம், இனவாதம் என்பனவற்றை மிக வன்மையாகக் கண்டித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அர்ச்சுனா இதுவரை பல்வேறு கழிசறையான மொழியாடல்களைக் கையாண்ட போதும் தற்போது பயன்படுத்திய வார்த்தைகள் அர்ச்சுனா எப்படிப்பட்ட மனிதர் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. தமிழ் தேசியத்தை முன்நிறுத்தும் அர்ச்சுனா மலையகத் தமிழர்களை கள்ளத் தோணிகள் என்கிறார், சிறிதரன் வடக்கத்தையான் என்கிறார், கஜேந்திரகுமாரோ மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தவர்களின் பரம்பரையில் நின்று அரசியல் செய்கின்றார்.

“சமஷ்டி, 13 ” தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினையல்ல – அமைச்சர் சந்திரசேகர் !

“சமஷ்டி, 13 ” தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினையல்ல – அமைச்சர் சந்திரசேகர் !

சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே நான் இங்கு வருவது உங்களுக்கு 13ஐ தருவதற்கோ, ஈழத்தை தருவதற்கோ, சமஷ்டியை தருவதற்கோ இல்லை என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார். தமிழர்கள் ஏராளமான பிரச்சினைகளால் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகளை மக்களோடு உரையாடுவதன் மூலமாக தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 15 வருடமாக இருக்கின்ற கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு எங்களுடைய அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும். ஆனால் இந்த வெற்றியில் பங்குகொள்ள சிலர் விரும்புகின்றனர்” என்றார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது ! சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும் ! அபராதமும் அதிகரிக்கப்பட வேண்டும் !

இலங்கை கடல் எல்லையின் தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கு முன் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய மீனவர்களுக்கு உச்ச அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கியருந்தது. எதிர்காலத்தில் இந்த அபராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதைக் கட்டுப்டுத்த முடியும். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எல்லை தாண்டும் மீன்பிடி தொடர்பில் புதிய சட்டமூலங்களையும் தண்டனைகளையும் அபராதங்களையும் அதிகரிப்பதினூடாக எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பது ஒரு லாபமற்ற செயல் என்பதை எல்லைதாண்டி வரும் மீனவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் வடக்கின் கடல் மற்றும் மீன் வளத்தை முழுமையாக சூறையாடும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகள் மீன்களின் இயக்க சமநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதையும் கடல் வள நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதேவேளை விரைவில் வெளி நாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னதாக பாடசாலைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என் றும் அரசியல்வாதிகள் பாடசாலை விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்.

இந்தநிலையில் கல்வி அமைச்சரின் அறிவிப்பையும் மீறி அமைச்சர் சந்திரசேகர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றனர்.

தமிழ் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர் ! முதுகெலும்பற்ற தமிழ் தேசியம் மௌனம் !

தமிழ் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர் ! முதுகெலும்பற்ற தமிழ் தேசியம் மௌனம் !
இந்திய அரசின் நிதி பங்காளிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையமானது திருவள்ளுவர் கலாச்சாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டமை , குறித்த நிகழ்வின் திரையில் தமிழ்மொழி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டமை என பல விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இலத்திரனியல் திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது. அதனைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். திருவள்ளுவர் கலாச்சார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றம் அல்ல. யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பெயர்களான யாழ். கலாச்சார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து எனவும் நிச்சயமாக அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
யாழில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட பின்னணியில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இருக்குமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்விடயம் தொடர்பில் முதகெலும்பற்ற தமிழ் தேசியவாதிகள் மௌனம் காத்தனர். யாழ் மண்ணில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டது தொடர்பில் அவர்கள் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. தங்கள் எஜமானர்களான இந்தியத் தூதரக அதிகாரிகள் மனம் கோணக்கூடாது என அவர்கள் மௌனம் காக்கின்றனர். இது விடயத்தில் சமூக வலைத்தளங்களும் பொங்கி எழுந்துள்ளன. ஆனால் தமிழ் தேசிய பாரம்பரிய ஊடகங்கள் இதுபற்றி எதுவும் தெரியாதது போல் அடக்கி வாசித்தனர்.
யாழ் மண்ணில் இந்திய தூதரக அதிகாரிகள் ஏதேச்சையாக தாங்கள் நினைத்தபடி நடக்கத் தலைப்படுகின்றனர். அப்பிரதேச மக்களோடு மக்கள் பிரதிநிதிகளோடு கலந்துரையாடாமல் பெயர் மாற்றம் மேற்கொண்டுள்ளனர். அமைச்சரைக்கூட எழும்பி இடம்மாறியிருக்க நிர்ப்பந்தித்துள்ளனர். இந்நிலைமைகளுக்குக் காரணம் முதகெலும்பற்ற தமிழ் தேசியவாதிகள் கொடுத்த இடமே.