அரச மருதுவமனையில் வரிசையில் காத்துநின்று மருந்து பெற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் – குவியும் பாராட்டுக்கள் !
கொழும்பு தேசிய கண் சிகிச்சை வைத்தியசாலைக்கு சென்றிருந்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மக்களோடு மக்களாக நின்று பொறுமையாக வரிசையில் சென்று மருத்துவரை சந்தித்தது பற்றி பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்தார்.
இதன்போது மக்கள் கண் சிகிச்சை பெற நின்ற நிலையில் அவரும் நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பின்னர் வைத்தியரை சந்தித்தார்.
அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்
எளிமையாக மக்களுடன் மக்களாக என்.பி.பி பா.உக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் உலாவருவது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாற்றமானது. முன்னைய அரசாங்கங்களில் பதவி வகித்தோர் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளையே தமக்கான மருத்துவ தேவைகளுக்காக நாடி வந்த நிலையில் என்.பி.பியினர் இலவசமருத்துவத்தின் தரத்தை பேணும் வகையிலும் அதனை மக்களிடையே ஊக்குவிக்கவும் நேரடியாகவே அரச மருத்துவமனைகளை நாடுவது மாற்றமான அரசியல் கலாச்சாரம் உருவாவதை காட்டுகிறது என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தாயார் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றமையும் கவனிக்கத்தக்கது.