தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது ஜே.வி.பி என்கிறது எதிர்க்கட்சி’, ‘இல்லை இல்லை புலிகளே குண்டு வைத்தனர்’ என மன்னிப்பும் கோரிய பா.உ அர்ச்சுனா !
யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் கருத்து வெளியிட்டமை கவலையளிக்கின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று முன்தினம் அவரது வரவு செலவுத் திட்ட உரையில் யாழ்ப்பாண நூலகம் குறித்து கருத்து தெரிவித்தார். யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று எமது தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது விடயம் குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம்.
எமது பெயர் பூசப்பட்டமை குறித்து ரணில் விக்ரமசிங்க பல வருடங்களுக்கு முன்னர் இந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மன்னிப்பு கோரியிருந்தார். நாங்கள் கீழ்ப்படிவான முறையில் அந்த விடயத்தை மேற்கொண்டோம். ஆனால் அது குறித்து கதைக்கும் போது ஜனாதிபதிக்கு இந்த விடயம் நினைவுக்கு வரவில்லையா.
அன்று ஜேவிபியினர் பௌத்தர்களின் தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட போது அதற்கு மன்னிப்பு கோரியிருந்தார்களா அவர்கள் ஏன் கவலைப்படுவதில்லை.
யாழ்ப்பாண நூலகம் குறித்து கதைப்பது சரி நீங்கள் செய்த பிழை குறித்து உங்களுக்குள் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளீர்களா.” என தெரிவித்தார்.
இதனிடையே குறுக்கிட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தலதாமாளிகையை புலிகள் அழித்திருந்தால் அதற்காக வடக்கு மக்களின் பிரதிநிதியாக நான் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார். அப்போது எதிர்க்கட்சி பா.உ காபீர் காசிம் நீங்கள் ஜே.வி.பிக்காக மன்னிப்பு கோருகிறீர்களா..? அல்லது தமிழ் மக்களுக்காகவா என கேட்டபோது நான் புலிகள் தலதாமாளிகையை தாக்கியதற்காக மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார்.