தேசம் திரை

தேசம் திரை

சினிமா அறிமுகம், விமர்சனம் மற்றும் பதிவுகளும் செய்திகளும்.

‘லண்டன் மாப்பிளை’ ஓகஸ்டில் லண்டனில் படப்பிடிப்பு.

London Mappillaiகௌதம் விஷன்ஸ் நிறுவனம் பொலிவூட் சினி புறடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ‘லண்டன் மாப்பிளை’ திரைப்படம் பாரிய பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. 90 வீதம் படப்பிடிப்புக்கள் லண்டனிலும் மிகுதி இராமேஸ்வரம் பகுதியிலும் படமாக்கப்படவுள்ளன.

ஆகஸ்ட் முதலாம் திகதி லண்டனில் படப்பிப்புக்கள் ஆரம்பமாகும் இத்திரைப்படம் முழுநீள நகைச்சுவைப் படமாகும். லண்டன் பிரஜையான ஆர் புதியவன்  இயக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சித் தளங்கள் இதுவரை எந்த இந்தியத் திரைப்படங்களிலும் வராத அனுமதி பெறமுடியாத இடங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினம் இயக்கும் ராவணா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஸ்வந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகர் சத்தியராஜின் புதல்வி திவ்யா. இது மாத்திரமல்லாமல் நூற்றுக்கு மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய எஸ். ஏல். பாலாஜி முக்கிய பாத்திரத்தில் தோன்ற இருக்கிறார். நகைச்சுவை கலாட்டாவுடன் வித்தியாசமான  பாத்திரத்தில் முதல் முதல் தோன்ற இருக்கிறார் காதல் சுகுமார். இவர்களுடன் சேர்ந்து கலக்கும் இன்னொரு நட்சத்திரம் மண் படத்தில் தன் நடிப்பால் பாராட்டைப் பெற்ற விஜித்.

ஓளிப்பதிவு சி.ஜே. ராஜ்குமார். நடனம் எஸ்.எல். பாலாஜி. படத்தொகுப்பு சுரேஸ் அர்ஸ். தமிழகம் தலையசைத்து எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும் அற்புதமான ஜந்து பாடல்களுடன் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் பாலாஜி. கே. மித்திரன். இந்தப் படத்தின் மூலம் இன்னொரு பரிமாணத்துடன் தனது வசனங்களால் பிரமிப்பூட்ட வருகிறார் வசனகர்த்தா வசந்த் செந்தில். பாடல்களை இயக்குனர் புதியவனும் ஏக்நாத் அவர்களும் எழுதியுள்ளனர். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஆர் புதியவன்.

படப்பிடிப்புக் காலத்தில் சினிமாப் பயிற்சிப் பட்டறை ஒன்றை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக புதியவன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அப்போது இந்தக் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட இருக்கிறது.

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர்: முதல்வரிடம் உறுதி

karunanithi.jpgதமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படும் என தமிழ் திரைப்பட சீரமைப்பு குழுவினர் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளனர். தமிழ் திரைப்பட சீரமைப்பு குழவினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல் முறையாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை திருப்தியளிப்பதாக கூறிய அவர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு இனிமேல் தமிழில் பெயர் வைக்கப்படும் என உறுதியளித்தனர்.

முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ரங்கநாதன், தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படும் என உறுதியளித்தார்.
 

இலங்கை தமிழரின் கின்னஸ் சாதனை படத்துக்கு தணிக்கை குழு அனுமதி மறுப்பு

meera-jasmine.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவரும் பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுரேஷ் ஜோகிம் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் எடுத்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது.

58 கின்னஸ் சாதனை படைத்துள்ள சுரேஷ் ஜோகிம், தனது அடுத்த சாதனையாக 12 நாளில் தமிழ் படம் எடுத்து முடித்து திரையிடும் பணியில் ஈடுபட்டார். “சிவப்பு மழை’ என்ற அப்படத்தில் சுரேஷ் ஜோகிம், மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்தனர். வி. கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன். விஸ்வநாதன், இந்திரஜித், ஜமாலுதீன் ஒளிப்பதிவு. தேவா இசை. கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி 12 நாளில் படத்தை முடித்தனர். தணிக்கைக்காக புதன்கிழமை படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தர மறுத்தனர்.

இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறுதணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பிறகு சான்றிதழ் வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்’ என்றார்.

‘ஸ்லம்டாக்’ குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய வீடு

azhar_rubina.jpgஆஸ்கர் விருதை வென்ற‘ஸ்லம்டாக் மில்லியனர்’திரைப்படத்தில் நடித்த இரு இந்திய குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய வீடுகளை கொடுக்க அரசாங்கம் முன் வந்துள்ளது. மும்பையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் இவர்கள் இருவருடைய வீடும் இடிக்கப்பட்டது.

அசாரூதின் இஸ்மாயில் மற்றும் ரூபினா அலி என்ற இந்த இருவருக்கும் காங்கிரஸ் கட்சி வீடு கொடுக்க முன்வந்துள்ளது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடித்தமைக்காக இவர்களுக்கு வீட்டை விருதாக கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த வீட்டுக்கு ஆகும் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்று கொண்டுள்ளது.

’அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை ரமேஷ் விபத்தில் பலி

kovairamesh.jpg கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார் (30). சன் டி.வி.யில் வாரந்தோறும் ஒளிபரப்பாகிவரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். பெண் வேடத்தில் ரசிகர்களை கவர்ந்திழுப்பார். இந்த நிகழ்ச்சியால் பிரபலமான ரமேஷ், தனியாக கலை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார். இவரும், இவரது நண்பர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவரும் நேற்றிரவு திருவாரூரில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு, காரில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் காங்கயம் – திருச்சி ரோடு கொடுமுடி பிரிவு என்ற இடத்தில் வரும்போது கோவையில் இருந்து மணல் எடுக்க கரூர் சென்ற லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியாயினர்.

இதுபற்றி தகவலறிந்ததும் காங்கயம் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் போராடி காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபாகரன் குறித்த படத்தில் பிரகாஷ் ராஜ்

prakash-raj.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்தத் தகவலை  அவரே வெளியிட்டார். வித்தியாசமான வேடங்களைத் தேடித் தேடி செய்யும் பிரகாஷ் ராஜ், பிரபாகரன் வேடத்தில் நடிப்பது தனது கேரியருக்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்கிறார்.

இந்த வேடத்துக்காக பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை தேடிப்பிடித்து பார்க்கிறாராம் பிரகாஷ்ராஜ்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை இன்னும் அவர் வெளியிடவில்லை.  விரைவில் படம் குறித்த முழு விவரங்களைச் சொல்வதாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

Wanni_Warமிகக் கொடிய மனித அவலத்தில் இருந்து மீண்டு தொடர்ந்தும் துயர்மிகு வாழ்வை எதிர்நோக்கியுள்ள வன்னி மக்களுக்கு முடிந்த அளவு உதவிகளை மேற்கொள்வதற்கான சந்திப்பு ஒன்றினை தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் ஏற்பாடு செய்துள்ளனர். இச்சந்திப்பில் முக்கிய அம்சமாக வன்னியில் ஏற்பட்ட மனித அவலத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட உள்ளது. ஏற்கனவே ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் தனித்தனியாக முன்னெடுக்க முற்பட்ட உதவி நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ளவும் எவ்வாறு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் கலந்துரையாடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் இணைந்து நடாத்தும் குறும்படக் காட்சிப்படுத்தலின் 5வது காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து இச்சந்திப்பு சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கலந்துரையாடலில் முக்கியமாக உடனடி மற்றும் நீண்டகால உதவி நடவடிக்கைகள், உதவ முன்வருபவர்களை நேரடியாக உதவித் திட்டங்களில் இணைப்பது, அனைத்து உதவி நடவடிக்கைகளிலும் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருப்பது இதன் மூலம் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது என்பன பற்றியும் ஆராயப்பட உள்ளது. குறிப்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொள்வதால் காத்திரமான உதவித் திட்டங்களை செயற்படுத்த முடியும்.

மே 2 குறும்படக் காட்சி நிகழ்வில் சந்திரியின் கதை மெமறிஸ் ஒப் பாஸ்ற் ஆகிய இரு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஜானகி விஸ்வநாதனின் சந்திரியின் கதை சாதிய ரீதியான சமூக ஒடுக்குமுறையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குறும்படம். மெமறிஸ் ஒப் பாஸ்ற் தேம்ஸ்வலி பல்கழைக்கழக மாணவர்களின் தயாரிப்பு. இவற்றுடன் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட துறூத வின்டோ – யன்னலினூடாக என்ற ஆர் புதியவனின் குறும்படமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

சந்திப்பு விபரங்கள்:

6.30 pm on 2nd of May 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton

தேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரி

anura.jpgதேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரியொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை தகவல் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா முன்வைத்திருந்தார்.

அரசாங்க திரைப்படப் பிரிவுடன் இணைந்தாக இது இயங்கும். இதன் இயக்குணநராக பேராசிரியர் தர்மசேன பதிராஜ நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரியால் நிரந்தர வருமானம் கிடைக்கும்வரை இவருக்கு மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா அரச நிதியத்திலிருந்து சம்பளமாக வழங்கப்படும்.

கலைஞர் திஸ்ஸ அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று

thissa-abeysekara.jpgகாலஞ் சென்ற பிரபல சினிமாக் கலைஞர் திஸ்ஸ அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை கொழும்பு, ராஜகிரியவிலுள்ள சந்திரா டி சில்வா விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் இன்று காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை கொழும்பு தேசிய கலாபவனத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மாலை 3.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ள நடைபெற மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டு 3.30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் திஸ்ஸ அபேசேகர கடந்த 18ஆம் திகதியன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்லம்டாக் மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு : விலை $400,000

rubina.jpgபல ஆஸ்கார்களை குவித்துள்ள “ஸ்லம்டாக்  மில்லியனர்” திரைப்படத்தில் வரும் சிறுவர்களை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அதில் தேவன் படேல் மற்றும் ப்ரீடோ – லத்திக்காவின் சிறு வயது சிறுவர்களாக இஸ்மாயிலும் ருபீனாவும் நடித்திருந்தார்கள். நேற்று ஒரு பிரிடிஷ் நாளிதழ் “ஸ்லம்டாக்  மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு விலை USD $400,000 என்று அறிவித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ருபீனாவின் தந்தை ” குப்பத்தில் கஷ்டப்படும் எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை. எங்கள் குழந்தை ருபீனாவின் நட்சத்திர அந்தஸ்தால் அவரை தத்தெடுக்க பலர் முன் வரலாம். அதனால் இந்த விலையை நிர்ணயித்துள்ளோம். இவரது விலையால் அவளது எதிர்காலத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் நல்லது” என தெரிவித்திருந்ததாக பிரிடிஷ் நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிஎனென்-ஐபிஎன்னுக்கு நேரடியாக பேட்டியளித்துள்ள அவரது தந்தை இந்த செய்தியில் உண்மையில்லை. ஆனால் நாங்கள் வறுமையில் வாடுவதும், எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை என்பதும் உண்மை என தெரிவித்துள்ளார்.