அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

லியன் பஸ்கோ இலங்கை விஜயம்

lio.jpgஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் லியன் பஸ்கோ இன்று இலங்கைக்கு வரவுள்ளார். அவர் இரு நாட்கள் இலங்கையில் தங்கி இருப்பார்.

லியன் பஸ்கோ இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசுத் தரப்புப் பிரமுகர்களையும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை நேரில் சந்தித்து அரசியல் நல்லிணக்கம், மனித உரிமைகள், அகதிகள் மீள்குடியேற்றம் ஆகியன சம்பந்தமாகப் பேசுவார் என்று ஐ. நா. அறிவித்துள்ளது.

போலி வங்கி வலையமைப்பை ஏற்படுத்தி பல பில்லியன் ரூபா மோசடி செய்த நபர் கைது

நாடளாவிய ரீதியில் போலி வங்கி வலையமைப்பினை ஏற்படுத்தி பொதுமக்களிடமிருந்து பல பில்லியன் ரூபாய் மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற பெயரில் செல்வத்துரை தனராஜா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது எண்ணத்தை நிறைவேற்றும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 39 போலி வங்கிக் கிளைகளை ஸ்தாபித்திருந்தாரென்ற தகவல் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

இந்தப்போலி வங்கிகள் கிராமிய முதலீட்டு அபிவிருத்தி வங்கி நிறுவனம் எனும் பெயரிலேயே இயங்கி வந்துள்ளன. இதேவேளை சந்தேக நபர் தனது மனைவி மற்றும் உறவினர்களை உள்ளடக்கிய பணிப்பாளர் சபையொன்றினை நிறுவியதன் மூலமும் பல வாடிக்கையாளர்களை இதில் முதலீடு செய்ய வைத்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். பொலிஸாரினால் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பிரதான சந்தேக நபர் போலி வங்கிகளுக்கான பணிப்பாளராக அதன் தலைமையகத்தில் செயலாற்றி வந்துள்ளார். அதனைத் தவிர இந்த வங்கிகளில் பெரும் எண்ணிக்கையான பட்டதாரி களும் உயர் கல்வி கற்போரும் பணி யாற்றி வந்துள்ளனர். பிரதான சந்தேக நபர் கைதானதையடுத்து அவரது மனைவியும் உறவினர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

மேலும் இவர் பல்வேறு இடங்களில் மக்களை ஏமாற்றி மோசடி செய்தமை காரணமாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவரென்ற உண்மையும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இப்போலி வங்கிகள் மற்றும் அதன் உரிமையாளர், அவரது குடும்பம் தொடர்பான தகவல்கள் கிடைக்குமாயின் அதனை கம்பளை பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பெற்றுத்தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போலி முகவர்களூடாக மலேசியா சென்றோர் நிர்க்கதி

போலி வெளிநாட்டு முகவர் நிலையங்களினூடாக மலேசியா சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை துரிதமாக இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது.

கூடுதல் சம்பளம் கிடைக்கும் உயர் தொழில்களை பெறுவதற்காக வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு பல இலட்சம் ரூபா பணம் செலுத்திய நூற்றுக்கும் அதிகமான இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இவர்கள் உரிய தொழில் கிடைக்காததால் மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக மேலதிக பொது முகாமையாளர் எம்.கே. ருகுணகே கூறினார். இவர்களில் பலர் கடவுச் சீட்டோ, பணமே இல்லாமல் வெறும் கையுடனுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளமுள்ள தொழில் வழங்குவதாக கூறி மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட இவர்கள் சிற்றூழியர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மீனவர் மேம்பாட்டுக்கு ரூ.550 இலட்சம் இலகு கடன். 70 பேருக்கு முதற்கட்டமாக நேற்று வழங்கி வைப்பு

cha.jpgவட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 550 இலட்சம் ரூபா நிதியை அரசாங்கம் இலகு கடனாக வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மீனவர்களில் 70 பேருக்கு நேற்று முதற்கட்டமாக இந்த நிதி வழங்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இந்தப் பிரதேசங்களின் மீனவர்களின் நலனை கருத்திற் கொண்டு இலங்கை வங்கியின் ஊடாக இலகு கடன் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன யாழ்.குருநகரில் நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த மீனவர்களுக்கான இலகுக் கடனை வழங்கி வைத்தார். தலா 50 ஆயிரம் ரூபா தொடக்கம் 4 இலட்சம் ரூபா வரையான தொகை அந்தந்த மீனவர்களின் தேவைக்கமைய வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த மீனவர்களில் 160 மீனவர்கள் இந்த இலகுக் கடன் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் இவர்களில் 70 மீனவர்களுக்கே நேற்று முதற்கட்டமாக வழங்கப்பட்டது என்றார்.

வலை, மீன்பிடி உபரகணங்கள் போன்றவற்றிற்கு அவர்கள் இந்த நிதியை பயன்படுத்தவுள்ளனர். இந்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு முதல் வருடம் கொடுக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து எந்த அறவீடும் அறவிடப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சினால் 32 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட மாவட்ட மீனவ அபிவிருத்தி திணைக்கள கட்டடத்தை அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று திறந்து வைத்தனர்.

சகல நவீன வசதிகளையும் கொண்டதாக இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உட்பட உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டு. விதவைகளுக்கு சுயதொழில் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு சுயதொழில் முயற்சிக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான நிதி உதவிகளை வழங்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இந்திய உயர்ஸ்தானிகருட னான பேச்சுவார்த்தையின் போதே இந்திய அரசு இந்த நிதியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள 800 விதவைகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டு நிதி உதவி மற் றும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு விசேட பயிற்சி நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளன. எதிர்வரும் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

20ஆவது தடவையாக அகாசி இன்று வருகிறார்

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கான ஜப்பானிய அரசாங்கத்தின் பிரதிநிதி யசூசி அகாசி 20 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை வருகை தருகிறார்.எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அகாசி அரச அதிகாரிகள், ஆளும் கட்சி, எதிரணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பார்.

அதேசமயம் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக் குடியேற்றுமாறும் தேசிய நல்லிணக்கத்துக்கான அரசியல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அகாசி அழைப்பு விடுப்பார் என்று ஜப்பானிய தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களின் குடியேற்றக் கிராமங்களுக்கு செல்லவுள்ள அகாசி இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நாளை “இலங்கை நிலைவரம்”

இலங்கை நிலவரம் தொடர்பாக நாளை புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆராயவுள்ளது. பிரிட்டிஷ் தொழிற்கட்சியை சேர்ந்த உறுப்பினர் சியோபாயின் மக்டொனாக் இவ்விவகாரம் தொடர்பான விடயத்தை சபையில் எழுப்பவுள்ளதாக பிரிட்டிஷ் பாராளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக கலந்துரையாடுமாறு மக்டொனாக் எம்.பி. கோரிக்கை விடுக்கவுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த தொழில்கட்சி தற்போது பிரதான எதிர்க்கட்சியாகவுள்ளது.கன்சர் வேட்டிவ் லிபரல் அரசாங்கமே தற்போது அதிகாரத்திலிருக்கிறது.

கல்முனையில் சிவில் பாதுகாப்புக் குழு அடையாள அட்டைகள் யாவும் ரத்து

பாரிய குற்றச் செயல்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் சிவில் பாதுகாப்புக் குழுவினருக்குரிய அடையாள அட்டையைப் போன்ற போலியான அட்டையொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கல்முனை பிரதேசத்தில் இயங்கும் சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டைகள் யாவும் செல்லுபடியற்றதென அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டைகள் யாவும் இன்று 15ம் திகதியுடன் செல்லுபடியற்றதாகி விடுவதாக கல்முனை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் குற்றச் செயல்களிலிருந்து அவர்களை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை கிராமங்கள் தோறும் முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்க ளுக்கு அதிகார பூர்வமான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 12 அகதிகள் பலி

இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 12 அகதிகள் பாதகமான காலநிலை காரணமாக கடலில் மூழ்கி காணாமல் போய் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

அவர்களில் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையோர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களெனவும், அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படும் நோக்கில் பெரிய கப்பலில் இருந்து மீன்பிடி படகுக்கு மாற்றும் போது ஏற்பட்ட பாதகமான காலநிலை காரணமாக அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர்களிடமிருந்து பணம் வசூல்; 5 உத்தியோகத்தர்கள் வேலை நீக்கம்

வர்த்தகர்களிடம் சட்ட விரோதமாக பணம் வசூலித்த குற்றத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஐந்து உத்தியோகத்தர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி ஐவரையும் உடனடியாக வேலை நீக்கம் செய்யுமாறு கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகார சபைத் தலைவர் ரூமி மர்சூக்கைப் பணித்துள்ளார். மேற்படி ஐவரும் அநுராதபுர மாவட்டத்தின் பதவிய சிறிபுர, பராக்கிரமபுர மற்றும் கெப்பித்திகொல்லாவ பகுதிகளில் வர்த்தகர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலித்துள்ளனர்.

இவர்களை பதவிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் உத்தியோக த்தர்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பின் அதிகார சபை அவர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இவர்கள் வவுனியாவிலுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபைக் கிளையில் பணிபுரிந்தவர்களாவர்.