நாடளாவிய ரீதியில் போலி வங்கி வலையமைப்பினை ஏற்படுத்தி பொதுமக்களிடமிருந்து பல பில்லியன் ரூபாய் மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற பெயரில் செல்வத்துரை தனராஜா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது எண்ணத்தை நிறைவேற்றும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 39 போலி வங்கிக் கிளைகளை ஸ்தாபித்திருந்தாரென்ற தகவல் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இந்தப்போலி வங்கிகள் கிராமிய முதலீட்டு அபிவிருத்தி வங்கி நிறுவனம் எனும் பெயரிலேயே இயங்கி வந்துள்ளன. இதேவேளை சந்தேக நபர் தனது மனைவி மற்றும் உறவினர்களை உள்ளடக்கிய பணிப்பாளர் சபையொன்றினை நிறுவியதன் மூலமும் பல வாடிக்கையாளர்களை இதில் முதலீடு செய்ய வைத்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். பொலிஸாரினால் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பிரதான சந்தேக நபர் போலி வங்கிகளுக்கான பணிப்பாளராக அதன் தலைமையகத்தில் செயலாற்றி வந்துள்ளார். அதனைத் தவிர இந்த வங்கிகளில் பெரும் எண்ணிக்கையான பட்டதாரி களும் உயர் கல்வி கற்போரும் பணி யாற்றி வந்துள்ளனர். பிரதான சந்தேக நபர் கைதானதையடுத்து அவரது மனைவியும் உறவினர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
மேலும் இவர் பல்வேறு இடங்களில் மக்களை ஏமாற்றி மோசடி செய்தமை காரணமாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவரென்ற உண்மையும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
இப்போலி வங்கிகள் மற்றும் அதன் உரிமையாளர், அவரது குடும்பம் தொடர்பான தகவல்கள் கிடைக்குமாயின் அதனை கம்பளை பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பெற்றுத்தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.