அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வன்னியிலிருந்து நோயாளரை திருமலை அழைத்துவர தொடர்ந்து நடவடிக்கை

ship-10022009.jpgவன்னியில் யுத்தத்தினால் காயமடைந்த பொதுமக்களில் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தெரிவித்தது.

வன்னியில் காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் ஐ.சி.ஆர்.சி.யினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓஷியன்’ எனும் கப்பல் மூலம் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள சனசமூக நிலையத்தில் இயங்கும் தற்காலிக ஆஸ்பத்திரியிலிருந்தே இவர்கள் திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்த அனைத்து நோயாளிகளும் காயமடைந்தவர்களுமே ஐ.சி.ஆர்.சி. மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளரான சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

‘ஐ. சி. ஆர். சி பணியாளர்கள் வன்னியிலிருந்து வெளியேறவில்லை’ -தகவல் அதிகாரி

red-cr.jpgவன்னியில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ. சி. ஆர். சி) பணியாளர்கள் வெளியேறி வரவில்லையென்று சங்கம் தெரிவித்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் தொடர்ந்தும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவார்களென்று சங்கத்தின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ன  தெரிவித்தார்.

வன்னியிலிருந்து நோயாளர்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட போது, ஐ. சி. ஆர். சி பணியாளர்களும் அவர்களுடன் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் அந்தப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்று பணிகளை ஆரம்பிப்பார்களென்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறிவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை கிடையாதெனவும் அவர் கூறினார்.

வன்னியிலிருந்து ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஐ. சி. ஆர். சி. கப்பல் மூலம் நேற்று முன்தினம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு- மாத்தளன் கடற்பரப்பிலிருந்து கப்பல் மூலம் நோயாளர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான நோயாளர்களுள், கடுமையாகக் காயமுற்றவர்கள் பலர் இருந்துள்ளார்கள். இதனால், நோயாளர்களோடு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் உடன் வந்தார்கள் என்று அதன் தகவல் அதிகாரி சரசி தெரிவித்தார்.

“நோயாளர்களுடன் வந்துள்ள பணியாளர்கள் மீண்டும் அந்தப் பகுதிகளுக்குச் சென்று வழமை போன்று மனி தாபிமானப் பணிகளை மேற்கொள்வார்கள். இதிலிருந்து சங்கம் விலகி நிற்காது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நேயாளர்கள் வந்த கப்பலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துப் பணியாளர்களும் வெளியேறி வந்து விட்டதாக வெளியாகியிருந்த செய்தியை அவர் மறுத்தார்.

பிரிவினைவாத பிரசாரத்துக்கு தேசிய வானொலியில் இடமளிக்க முடியாது! – இ.ஒ.கூ. தலைவர் தெரிவிப்பு

hadson_samarasinghes.jpgபிரிவினை வாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற, முழு நாட்டுக்கும் சாத்தியமற்ற செய்திகளை தேசிய வானொலியின் அலை வரிசைகள் மூலம் ஒலிபரப்புச் செய்ய முடியாதென இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக ஒலிபரப்பாகும் பி.பி.சி. தமிழோசை மற்றும் பி.பி.சி. சந்தேசிய ஆகியவற்றை முன்னறிவித்தல் எதுவுமின்றி பி.பி.சி. நிறுவனம் நிறுத்தியுள்ளது.

பி.பி.சி. நிறுவன அதிகாரிகளின் இந்த தீர்மானம் தொடர்பாக அவர்களிடமிருந்து எமக்கு இது வரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களைச் சோதனையிடுவதற்காக விசுவமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் அண்மையில் இடம்பெற்ற புலிகளின் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக பி.பி.சி.யின் சந்தேசிய சிங்கள செய்திச் சேவையில் ஒலிபரப்பான செய்தி உண்மையை மூடி மறைப்பதாக அமைந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொதுமக்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு.

civilians-1002-09.jpgபுலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் பொதுமக்கள் தற்காலிகமாக 5 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கல்வி வலயப் பணிப்பாளர் ரஞ்சன் ஒஸ்வேல் தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் மகாவித்தியாலயம், நெல்லுக்குளம் மகாவித்தியாலயம், பூந்தோட்டம் மகாவித்தியாலயம், காமினி மகாவித்தியாலயம், முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 வார காலத்திற்கு தற்காலிகமாக இங்கு தங்க வைக்கப்படும் இவர்கள் மெனிக்பாமில் அமைந்துள்ள நிரந்த நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கல்வி வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இடவசதி குறைவாக காணப்படும் சந்தர்ப்பத்தில் ஏனைய பாடசாலைகளிலும் மக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தற்கொலைத் தாக்குதலை எதிர்க்கட்சியினர் கண்டிக்காமை கவலைக்குரியது -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவிப்பு

lakshman_yapa_abeywardena.jpgதமிழ் மக்களுககாகப்  போராடுவதாகக் கூறிக்கொண்டு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி தமிழ் இனத்தையே அழிக்கும் புலிகளின் செயற்பாட்டை கண்டிக்காமல் அன்றாட பாவனைப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு குரல் கொடுக்கும் எதிர்க் கட்சியினரின் நடவடிக்கை கவலைக்குரியது என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தம் முடிந்துவிட்டது அதனால் அன்றாட பாவனைப் பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர். யுத்தம் முடிந்து விட்டாலும் மற்றுமொரு யுத்தமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் யுத்தம் எம்மை எதிர்நோக்கி உள்ளது என்பதை மறந்த நிலையில் எதிர்க்கட்சி செயல்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான திட்டங்களை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

புலிகளின் மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலை உலக நாடுகள் உட்பட நாட்டின் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ள வேளையில் எதிர்க்கட்சியினர் கவலையோ கண்டனமோ தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது வருந்தத்தக்க விடயமாகும்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன.அதேபோன்று நாட்டிலுள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி மற்றும் விநாயக மூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்),  சந்திரகாந்தன் (பிள்ளையான் ) போன்றவர்களும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை இதனைக் கண்டித்துள்ளமை பாராட்டுக்குரியதாகும். உண்மையான தகவல் இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றைப்பற்றி கருத்துத் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் இந்தத் தாக்குதல் உண்மையானதென்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. உண்மை நிலையை உலகுக்கு எடுத்துரைத்த ஐக்கிநாடுகளுக்கு அரசாஙகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ராஜீவ் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும் கள்ளத் தோணியில் சென்று காரியத்தை கெடுத்தவர் வைகோ – ஸ்டாலின் தெரிவிப்பு

stalin.jpgஅரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூரில், இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணக் கோரியும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது;

இலங்கை பிரச்சினையில் 2 கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டுவிட்டது. ராஜீவ்காந்தி மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்த இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும்.

1989 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் கருணாநிதி டில்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ்காந்தி, தாங்கள் 2 நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசொலி மாறனும் உடன் இருந்தார்.

இலங்கை பிரச்சினையில் தீர்வுகாண முடியுமானால் அது தமிழக முதல்வர் கருணாநிதியால் தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ்காந்தி, மறுநாள் காலை வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வார்சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர்கள் இரண்டரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்காக கருணாநிதியை இலங்கைக்கு சென்று வருமாறும், அதற்கு என்ன தேவையோ அத்தனையும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு மறுநாள் சென்னை விமான நிலையத்திற்கு வந்த கருணாநிதியிடம் ஒரு கசப்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது, கோபாலசாமி எம்.பி. கள்ளத்தோணி ஏறி இலங்கை வவுனியா காட்டிற்கு சென்று பிரபாகரனை சந்தித்தார் என்பதுதான் அந்த செய்தி.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கள்ளத்தோணியில் ஏறி இலங்கைக்கு சென்ற அதிர்ச்சியான தகவலை கேள்விப்பட்டதை ராஜீவ்காந்தியிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். அப்போது நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு உறுப்பினர் கோபால்சாமி இலங்கைக்கு சென்றது பற்றி பிரச்சினை எழுப்பினார். அப்போதுகூட ராஜீவ்காந்தி பெருந்தன்மையாக இலங்கைக்கு சென்றவர் பத்திரமாக திரும்பிவர வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதன் பின்பும் நீங்கள் முயற்சி செய்தால் இலங்கையில் தமிழர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும். முயற்சி செய்யுங்கள் என்று ராஜீவ்காந்தி கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார். அவர் முயற்சி செய்ய சொன்ன பிறகுதான் நமது தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இரத்தம் சிந்தி கொலையானார். அதனால் தான், இலங்கை பிரச்சினை ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஆனது.

ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை எப்போதோ சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் தொடர்ந்து இன்றுவரை இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழர்களை காக்க வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் அனைத்தும் பாடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கட்சியோடு சேர்ந்து கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டுவோர்களையெல்லாம் மக்களுக்கு நன்கு தெரியும். தொடர்ந்து தமிழக மக்களுக்கு நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

புலிகளின் பாரிய அச்சகத்தொகுதி விசுவமடுவில் நேற்று கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_.jpgவிசுவமடு, சுந்தரபுரம் பிரதேசத்தில் புலிகளின் பிரதான அச்சகம் உள்ளிட்ட பாரிய முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். பெரும்தொகையான புதிய ரக வாகனங்கள், நவீன அச்சக இயந்திரங்கள், புகைப்படக் கூடம், பிரபாகரனின் பெனர்கள், போஸ்டர்கள், கட்டவுட்கள், லெமினேடிங் இயந்திரங்கள், கமராக்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையணியினர் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த முகாமை கைப்பற்றியுள்ளனர். விசுவமடு சுந்தரபுரம் பகுதியில் புலிகளுடனான கடும் மோதல்களைத் தொடர்ந்து முன்னேறிய படையினர் இந்த அச்சகப் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். 23 துப்பாக்கிகளும், புதிய ரகத்திலான வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

புலிகளின் தலைவர்கள் இம் முகாமில் கடந்த ஓரிரு தினங்களுக்குள் தங்கியிருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களுடன் பெருந்தொகையான சீடிக்களும் கைப்பற்றப்பட்டன. புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்கள், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பதியப்பட்ட சீடிக்களையே படையினர் கைப்பற்றியுள்ளனர். அச்சகத்தில் உள்ள நவீன உபகரணங்கள் அண்மையில் கொள்முதல் செய்யப்பட்டதாகவே தென்படுவதாக படைத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். புலிகளின் உள்நாட்டு, வெளிநாட்டு பிரசார நடவடிக் கைகளுக்காக இந்த அச்சகத்தையே அவர்கள் பிரதானமாக பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு தென்பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் நான்கா வது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த வன்னியாராய்ச்சி தலமையிலான படைப் பிரிவினர் அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மற்றுமொரு அச்சகம் ஒன்றையும், கட்டிங் இயந்திரம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

புலிகள் இயக்க உறுப்பினர்களின் புகைப்படங்களும், புலிகளின் முக்கிய புகைப்படங்களும் அச்சிடப்பட்ட பெருந் தொகையான புத்தகங்களையே படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், அச்சு இயந்திரங்களுடன் அவற்றுக்குத் தேவையான பெருந்தொகையான உபகரணங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

காட்டுத்தீ அனர்த்தத்தை குற்றச்செயலென பிரகடனப்படுத்தியது அவுஸ்திரேலியா

forest_fire.jpg
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பரவும் காட்டுத்தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ள அதேவேளை இத்தீ உண்டாவதற்கு காரணமாகவுள்ள சதிக்கும்பலைத் தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, வேறுபிராந்தியத்திலுள்ள மக்கள் இக்காட்டுத்தீயினால் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இக்காட்டுத்தீயில் பெரும்பகுதி வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டுள்ளவையென தெரிவித்துள்ள பொலிஸார் காட்டுத்தீ பரவியுள்ள பிரதேசங்களை குற்றவலயமெனவும் பிரகடனப் படுத்தியுள்ளனர்.

இக்காட்டுத்தீயினால் பெருந்தொகையான மக்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த சதிகாரர்களை அவுஸ்திரேலியப் பிரதமர் வன்செயல் புரிந்தவர்கள் என்றும் பாரிய கொலைகாரர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். காட்டுத்தீயினை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்தும் ஒரு நபருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அதேநேரம் தவறுதலாக காட்டுத்தீ ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு ஆகக்கூடியது15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தொடர்பான விசாரணைகளை இராஜாங்க ஆணைக்குழு மேற்கொள்ளுமென விக்டோரியா மாநில பிரதமர் ஜோன் புறும்பி அறிவித்துள்ளார்.

விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட இக்காட்டுத் தீயில் பெரும்பலானோரின் வீடுகள், கட்டிடங்களுக்குள்ளும் வாகனங்களுக்குள்ளேயுமே பலியாகியுள்ளனர்.

இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகப் போராடிவரும் தீயணைப்புப் படைவீரர்கள் உள்ளிட்ட அவசர உதவி அமைப்புகள் மேலும் பல உடல்களை மீட்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்காட்டுத் தீயினால் இதுவரை 203 பேர் பலியாகியுள்ள அதேவேளை,750க்கும் அதிகமான வீடுகளும் 5 இலட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் பரப்பளவான நிலப்பரப்பும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

அத்துடன் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காட்டுத் தீ ஏற்பட்டது முதல் இதுவரை 450 பேர் உடலின் 30 வீதமான பகுதிவரை காயமடைந்துள்ளனர்.

இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 3,400 தீயணைப்புப் படைவீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாக தீயணைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இக் காட்டுத் தீயிலிருந்து தப்பியவர்கள் புதர்க்காடுகளின் ஊடாக தீச் சுவாலை கொழுந்துவிட்டு எரிந்தன என்றும் விண்ணிலிருந்து தீ மழை பொழிந்தது போல இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இதுவெனக் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் வைகோ (13.02.2009) உண்ணாவிரதம்-அத்வானி சந்திப்பு

1102-vaiko.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று (13.02.2009) டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர்.

டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

அத்வானி வாழ்த்திப் பேச்சு:

உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை காணும்போது உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

டெல்லியில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும், உண்ணாவிரதத்தில் இத்தனை பேர் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை முக்கிய பிரச்சினையாக கருதி செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சீன, இந்திய மக்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. அங்கு மருத்துமனைகள் மீதும் குண்டு வீசப்படுகிறது. இது எங்கும் கேள்விப்படாத விஷயம். இது தமிழர்கள் பிரச்சனையோ, தமிழ்நாட்டு பிரச்சனையோ அல்ல இந்தியாவின் பிரச்சனை .

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் பாஜக என்றும் ஆதரவாக இருக்கும் என்றார் அத்வானி.

பின்னர் வைகோ பேசுகையில்,

பாஜக தலைவரும் பிரதமர் வேட்பாளருமான நீங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோட்டில் மதிமுக நடத்திய மாநாட்டிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள்.

1998ல் வாஜ்பாய் ஆட்சி நடந்த போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது பாஜக ஆட்சி அக்கறை காட்டியது. ஆனால் இன்றைய மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுகிறது என்றார்.

வைகோ – ராஜ்நாத் சிங் சந்திப்பு

முன்னதாக வைகோவை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் (13.02.2009 )உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அரசின் கொடூர ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழர்களை நினைத்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரிகிறது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், ராணுவத்தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை, இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, இந்திய அரசு தலையிட வேண்டும் என கனடாவின் வெளி விவகார அமைச்சர், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வற்புறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் செய்யுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் கூட்டு அறிக்கை விடுத்த பின்னரும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது, சிங்கள ராணுவமும், விமானப்படையும் ஏவுகணைத் தாக்குதலும், குண்டு வீச்சும் நடத்தியதில், மருத்துவமனையில் இருந்த 116 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 260 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.  உலக நாடுகளின் கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகி வரும் இலங்கை அரசு அதிலிருந்து தப்பிக்க விடுதலைப்புலிகள் தான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள் என்று கோயபெல்ஸ் பாணி பொய்ப் பிரசாரத்தை இரண்டு நாட்களாக செய்து வருகிறது.

இலங்கை அரசின் அராஜகத்தை, வெளி உலகத்துக்குத் தெரிவித்ததற்காக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர்களை, முல்லைத் தீவில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். மொத்தமாகத் தமிழ் இனத்தைக் கொன்று தமிழ் ஈழத்தையே சுடுகாடக மாற்ற ராஜபக்சே திட்டம் போட்டுவிட்டார். போர் நிறுத்தம் தான் ஒரே வழி என்பதை நன்றாக அறிந்திருந்தும், இந்திய அரசு அதை சொல்லத் தயாராக இல்லை.

ஏனெனில், விடுதலைப்புலிகளை அழிப்பது தான் இந்திய அரசின் நோக்கம். நான் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் குற்றம் சாட்டுகின்றபடி, இலங்கையில் கொல்லப்படுகின்ற ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், அவன் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், இந்திய அரசு, குறிப்பாக தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பாளி ஆகும். எனவே, இந்திய அரசின் துரோகத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், வதைபடும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, அகில இந்திய அளவில், ஆதரவு திரட்டவும், உண்மை நிலைமையை இருட்டடிப்புச் செய்யும் டெல்லி ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தைக் கடந்து, இந்திய மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கவும், தலைநகர் டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மதிமுக சார்பில், என்னுடைய தலைமையில், மிகப் பெரிய உண்ணாநிலை அறப்போர், காலை எட்டு மணி முதல் நடைபெறுகிறது.

இந்த அறப்போரில் பங்கு ஏற்பதற்காக, ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த உண்ணா நிலை அறப்போருக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர்களைக் காக்க உரை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

தீக்குளிப்போருக்கு நிதியுதவி இல்லை

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உயிர் துறப்போரின் குடும்பத்தினருக்கு இனி நிதியுதவி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக முதன் முதலில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த அமரேசன் ஆகியோர் தீக்குளித்து உயிர் நீத்தனர். இவர்களில் ரவி, அமரேசன் ஆகியோர் தற்கொலை குறித்து சர்ச்சை இருந்தது.

முத்துக்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவியை அறிவித்தது. ஆனால் அதை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். இந்த நிலையில் தீக்குளித்து இறந்த மற்றவர்களுக்கும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை பேரணியில் கலந்து கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்னை பாண்டியன் குடும்பத்திற்கோ தமிழக அரசு நிதியுதவி எதையும் அறிவிக்கவில்லை.

அவ்வாறு செய்தால், தற்கொலை செய்வதை ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என தமிழக அரசு கருதுவதால், நிவாரண நிதி அறிவிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.