‘ஐ. சி. ஆர். சி பணியாளர்கள் வன்னியிலிருந்து வெளியேறவில்லை’ -தகவல் அதிகாரி

red-cr.jpgவன்னியில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ. சி. ஆர். சி) பணியாளர்கள் வெளியேறி வரவில்லையென்று சங்கம் தெரிவித்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் தொடர்ந்தும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவார்களென்று சங்கத்தின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ன  தெரிவித்தார்.

வன்னியிலிருந்து நோயாளர்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட போது, ஐ. சி. ஆர். சி பணியாளர்களும் அவர்களுடன் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் அந்தப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்று பணிகளை ஆரம்பிப்பார்களென்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறிவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை கிடையாதெனவும் அவர் கூறினார்.

வன்னியிலிருந்து ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஐ. சி. ஆர். சி. கப்பல் மூலம் நேற்று முன்தினம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு- மாத்தளன் கடற்பரப்பிலிருந்து கப்பல் மூலம் நோயாளர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான நோயாளர்களுள், கடுமையாகக் காயமுற்றவர்கள் பலர் இருந்துள்ளார்கள். இதனால், நோயாளர்களோடு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் உடன் வந்தார்கள் என்று அதன் தகவல் அதிகாரி சரசி தெரிவித்தார்.

“நோயாளர்களுடன் வந்துள்ள பணியாளர்கள் மீண்டும் அந்தப் பகுதிகளுக்குச் சென்று வழமை போன்று மனி தாபிமானப் பணிகளை மேற்கொள்வார்கள். இதிலிருந்து சங்கம் விலகி நிற்காது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நேயாளர்கள் வந்த கப்பலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துப் பணியாளர்களும் வெளியேறி வந்து விட்டதாக வெளியாகியிருந்த செய்தியை அவர் மறுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *