அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புலிகளை முடக்கினாலும் தேசியப் பிரச்சினையோ பிரிவினைவாதமோ முடிவுக்கு வரப்போவதில்லை – ஜே.வி.பி. கூறுகிறது

jvp-press-confe.jpgஇனப் பிரச்சினைக்குப் பலராலும் நிராகரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனையைத் தீர்வாக சமர்ப்பிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டு விட்டதற்காக பிரிவினைவாத பிரச்சினையும் , தேசியப்பிரச்சினையும் முடிவுக்கு வந்து விடப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளை அடுத்து அது தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கற் சபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“வழமை போன்றே இம்முறை தேர்தலும் நீதியானதும் சுதந்திரமானதாகவும் நடைபெறவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றை நியமிக்க இன்று கூட ஜனாதிபதியும் அரசாங்கமும் தயாராகவில்லை. இவ்வாறான தேர்தல்களை நடத்தி வெற்றிகளை பெறும் நோக்கமே இதற்குக் காரணம்.

இந்தத் தேர்தலில் பெற்ற வெற்றியை இறுதி யுத்தத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாக கோரும் அளவுக்கு அரசாங்கம் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் , 30 தொடக்கம் 40 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது ஒருபக்கம் அரசாங்கத்துக்கு கிடைத்த தோல்வியே.

எனவே இந்தத் தேர்தலை இறுதி யுத்தத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாக கோரியதன் மூலம் அரசாங்கம் படையினரது வெற்றிகளை அவமதித்து தரம் தாழ்த்தி விட்டது.

நாடு இன்று அபாயகரமானதொரு நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்காலத்தில் அதைப் பகிர்ந்து கொண்டு செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதேநேரம் அரசாங்கம் பலராலும் நிராகரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனையை முன்வைக்க செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராகவே இந்த பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

படையினரின் வெற்றிகளைப் பறிக்கும் இந்த முயற்சிகளை தோற்கடிப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்க நாம் தயாராக இருக்கிறோம். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க எவரும் முயற்சிப்பார்களாயின் அதை மக்கள் எதிர்ப்பார்கள் என்று நம்புகிறோம். அதற்கு ஜே.வி.பி. தலைமை வகிக்கும்.

எதிர்காலத்தில் நாம் முகம் கொடுக்கவுள்ள சமய, சமூக, பொருளாதார, கலாசார, நிதிநெருக்கடிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமோ , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடமோ பதில் கிடையாது. ஜே.வி.பி. யிடம் மட்டுமே அதற்கான பதில் இருக்கிறது.

இதேநேரம் இன, மத,குல பேதங்களின்றி மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலுமே ஏனைய ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகள் ஆகிவிட்டார்கள் என்பதில் எமக்கு இன்னும் நம்பிக்கையில்லை. ஏனெனில் எவரும் அதிகாரப் பகிர்வினையும் பிரிவினைவாதத்தையும் முற்றாக நிராகரித்து விடவில்லை.

அதிகாரப் பகிர்வை வழங்க அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைக்காத போதிலும் அது பற்றியே அரசாங்கம் பேசி வருகிறது. ஜனாதிபதியோ வெளிநாட்டு செய்தி சேவைக்கு (அல்ஜசீரா) அதிகாரப் பகிர்வு என்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றையாட்சி என்றும் கூறி ஏமாற்றி வருகிறார்.

இந்த அரசாங்கத்தால் பிரிவினைவாதத்தை தோற்கடிக்க முடியாது. ஏனெனில் அரசாங்கத்திலேயே அவ்வாறானவர்கள் இருக்கின்றனர். புலிகள் முடக்கப்பட்டு விட்டதற்காக பிரிவினைவாதமும் தேசியப் பிரச்சினையும் முடிந்து விடாது. சகல இன மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படும்வரை பிரச்சினைகள் முடியப் போவதில்லை. சம அந்தஸ்து என்பதற்கு அர்த்தம் தெரியாத கட்சிகளினால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது’ என்றார்.

சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி

tamilnaadu.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில்  17 ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை பிரமாண்ட மனிதச்சங்கிலி பேரணி நடத்தப்பட்டது.

சென்னை தாம்பரத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. அவைத்தலைவர் கண்ணப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, பா.ஜ.க. கலை இலக்கிய பிரிவு மாநில பார்வையாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், முன்னாள் அரசவை கவிஞர் புலமை பித்தன், திரைப்பட இயக்குனர்கள் வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், நடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் அறிவுமதி, ஓவியர் புகழேந்தி, ‘புதிய பார்வை  இதழ் ஆசிரியர் ம.நடராஜன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க. ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தொடங்கி மனித சங்கிலி, செங்கல்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, கரூர் வழியாக குமரி வரை நீடித்தது. திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தமிழின உணர்வாளர்கள், மதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்ள வேண்டியிருந்தது, சோனியா அழைப்பின் பேரில்  ராமதாஸ் டெல்லி சென்றதால், பாமக மேல்மலையனூர் எம்எல்ஏ செந்தமிழ்ச்செல்வன், முகையூர் எம்எல்ஏ களிவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேபிள் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் படையினரால் கைது

vavuniya-tv.jpgவவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த சன் ரீவி மீள் ஒளிபரப்புத் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் திங்களன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பொலிசாரிடம் மேல் விசாரணைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளனர். உரிய அனுமதிப்பத்திரமின்றி தொலைக்காட்சி நிலையம் நடத்தி வந்தமைக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையத்திற்குச் சென்ற இராணுவத்தினர் அந்த நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் உட்பட நான்கு பேரைக் கைது செய்ததுடன், தொலைக்காட்சி ஒளிபரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களையும் கைது செய்யப்பட்டவர்களுடன் விசாரணைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தோனிப்பிள்ளை மரியசீலன் (40), ஜெய்கிஷ் (45). அன்ரனி (40), புரூஸ் (38) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

தமிழ்நாட்டில் புதிய இயக்கங்கள் அடுத்த கட்டத்தில் உருவாகக்கூடும்- தமிழ்த் தேசிய பிரச்சினை எல்லை தாண்டிவிட்டது; சிறிதுங்க ஜயசூரிய

தமிழ்த் தேசியப் பிரச்சினை இப்போது எல்லைகளை தாண்டிச்சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் புதிய இயக்கங்கள் உருவாகும் பிரச்சினை அடுத்த காலகட்டத்தில் ஆரம்பிக்கப்படக்கூடும். இப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகத் தோற்றம் பெற்றுவருகிறது என்று ஐக்கிய சோசலிசக்கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிதுங்க ஜயசூரிய ஏ.என்.ஐ. செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை சாத்தியமில்லாத போது புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும் சிறிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார்.

யுத்தத்தில் வெற்றி கொள்வது தமிழர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வராது. அது பிரபாகரனையோ அல்லது புலிகளையோ வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ள சிறிதுங்க, தமிழர் பிரச்சினையை தமிழகத் தலைவர் நாடகத்தை அரங்கேற்றுவதாக விமர்சித்துள்ளார்.

பல வருடங்களாக இது நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கும் ஏனைய சர்வதேச அரசுகளுக்கும் அவர்கள் (தமிழகத் தலைவர்கள்) அழுத்தம் கொடுக்கின்றனர். இது அவர்களின் நாடகத்தின் ஓரங்கம் என்று தான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல்களை கண்டிப்பதால் யுத்தம் நின்று விடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமாதானப் பணியாளராக இலங்கைக்கு வருகை தர ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் திட்டம்

இலங்கையில் யுத்தநிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் பேச்சு நடத்தப் போவதாக வாழும் கலை மன்றத்தின் ஆன்மீகக் குருவான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ள சுவாமி ரவிசங்கர் அங்கு வைத்து இதனைக் கூறியுள்ளதாக “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்தது. அத்துடன், விரைவில் பாகிஸ்தானுக்கும் தான் செல்லப்போவதாக ரவிசங்கர் கூறியுள்ளார்.

சமாதான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டுள்ளேன். தொடர்ந்தும் அதனை மேற்கொள்வேன். விரைவில் பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளேன். இருதரப்பு அதிகாரிகளுடனும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். யுத்தநிறுத்தம் தொடர்பாக இலங்கை, இந்திய அரசாங்கங்களிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அங்கு செல்வேன். ஜனாதிபதி ராஜபக்ஷவையும் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தனித்தனியாகச் சந்தித்து யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும். இராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டிய தேவையுள்ளது. ஆன்மீகக் கல்வியானது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை அகதிகள் தமது தாயகத்துக்குத் திரும்பிச் சென்று கௌரவத்துடன் வாழ்வதற்கான சகல முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன். இலங்கை அகதிகளின் தொழில், வீடுகள், நிலங்கள் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கவேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி மக்கள் பாதுகாப்புடன் வெளியேற இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துங்கள்

வன்னியில் மோதலில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இராணுவ நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பொன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிய பகுதியில் அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக குறிப்பிட்ட கால வரையறைக்குள் உடனடியாக ஒருதலைப்பட்சமாக மோதல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் கேட்டிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திகள் தெரிவித்தன.

அத்துடன், பலவந்தமாக பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பொது மக்களை விடுவிக்குமாறு சர்வதேச சமூகம் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

“விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்புக்காக அவர்களை வைத்திருக்கக்கூடும். ஆனால், இது தொடர்பான சர்வதேசத்தின் அபிப்பிராயம் தங்களின் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பும் என்று சமாதானத்திற்கான தமிழர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மோதல் இடம்பெறும் பகுதிகளிலுள்ள சகல பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியமானதாகும். அத்துடன், அவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான தார்மீக உரிமை இந்த நிலையில் உண்டு. தங்களின் தரப்பில் அந்த நடவடிக்கையானது நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். நீங்கள் புலிகளுடனேயே போரிடுகிறீர்கள். தமிழ் சமூகத்திற்கு எதிராக அல்ல என்பது குறித்தும் தமிழ் மக்களின் துன்பம் தொடர்பாக மனிதாபிமான ரீதியான கரிசனையை மனதில் அதிகளவுக்கு கொண்டுள்ளீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு திரும்பினால் உயிருக்கு ஆபத்து- எம்.பி. சிவாஜிலிங்கம்

Sivajilingam M K
இலங்கைக்கு நான் திரும்பிச் சென்றால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார் என இந்தியாவிலிருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது அந்த இணையத்தளம் மேலும் தகவல் தருகையில் மதுரைக்கு வந்த சிவாஜிலிங்கம், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விடயங்களை பின்வருமாறு தொகுத்துத்தந்துள்ளது.

‘வன்னி பகுதியில் தமிழர்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதனால் தமிழர்கள் சாவின் விளிம்பில் உள்ளனர். சர்வதேச அளவில் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இலங்கையில் ஏற்கனவே 3 தமிழ் எம்.பி.க்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நான் நாடு திரும்பினால் தேசத் துரோக குற்றம் சாட்டி சிறையில் தள்ளி கொன்றுவிடுவார்கள். எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதனால் இந்தியா வந்தேன். இங்கிருந்தபடியே தமிழ் மக்களுக்காக போராடுகிறேன் என்றார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் உயர் மட்டக் கூட்டம் இன்று

election-commissioner.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் உயர் மட்டக் கூட்டம் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் இன்று (17) தேர்தல் திணைக்களத்தில் நடைபெற உள்ளது. கொழும்பு, களுத்துறை, மற்றும் கம்பஹா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள், வாக்குச் சாவடிகள் அமைத்தல் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட உள்ளது. மேல்மாகாண சபை கடந்த மாதம் கலைக்கப் பட்டதோடு வேட்பு மனுக்கள் நாளை மறுதினம் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளன. தேர்தல் ஏப்ரல் மாதம் முதற் பகுதியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு 5கோடி:தமிழக பட்ஜெட்

tamilnadu-ass.jpgதமிழகத்தின் நடப்பு (2009-10) ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. நிதி அமைச்சர் அன்பழகன்  9.30மணிக்கு  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு 5கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஈழத் தமிழரைக் காப்பாற்றக்கோரி தமிழகத்தில் இன்று மனிதச்சங்கிலி

1102-vaiko.jpgஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறுகோரி தமிழகம் முழுவதிலும் இன்று பெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டு பங்கேற்கவேண்டும் என்று அந்த இயக்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. ஆனால், புலிகள் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லி, மொத்த தமிழ் இனத்தையே இலங்கை இராணுவம் அழிக்கத் துடிக்கிறது. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு குரல் கொடுத்தாக வேண்டும்.

நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோத்து நிற்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. பெப்ரவரி 17ஆம் திகதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம் கோர்த்து நிற்போம்.

இலங்கைத் தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலியை உடைப்பதற்கு நாம் மனித சங்கிலி அமைப்போம். கண்ணை இமை காப்பது போல இலங்கை தமிழர்களைக் காக்கும் இமைகளாக மாறுங்கள். தாய்த் தமிழகத்தின் மன வேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும்.’  இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.