அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புத்தாண்டு காலத்தில் முக்கிய பாதுகாப்பு குறித்து மட்டும் கவனம் செலுத்தவும் – படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு

mahinda.jpgதற்போது ஏற்பட்டுள்ள தோல்வியை முழுமையாக ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அரசாங்கத்திடம் சரணடைவதற்கு இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு பாரிய துன்பங்களுக்கு முகங்கொடுத்து வரும் அப்பாவி மக்கள் தேசியப் புத்தாண்டைப் பொருத்தமான முறையில் கொண்டாட வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

இதன் காரணமாகப் புத்தாண்டு காலப் பகுதியில் அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாத்திரம் அதிக கவனம் செலுத்தும்படி படை நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது 

கண்துடைப்பு அறிவிப்பு : தேவை நிரந்தர போர் நிறுத்தம் – விடுதலைப் புலிகள்

lttelogo.jpgஇலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது ஒரு தலைபட்சமான போர் நிறுத்தம், கண்துடைப்பு அறிவிப்பு. இப்போது அவசரத் தேவை நிரந்தர போர் நிறுத்தமே என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் – முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.

சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை – புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோம்.

போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு மக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களையும் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிங்களப் படைகள் தொடர்ந்து நடத்துகின்றன.

உலகையும் – தமிழ் மக்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட இந்த அரசியல் நாடகத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று புலிகள் இயக்கம் நீண்ட நாளாகவே கோரி வருகின்றது.

இதனையே நாம் இப்போதும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இத்தகைய போர் நிறுத்தம் அரசியல் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அமைதி வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக்காணும் ஏது நிலையையும் அது உருவாக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புகின்றது.

இத்தகையதொரு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள புலிகள் இயக்கம் தயாராகவுள்ளது.

சிங்களப் படைகளின் முற்றுகைப் போருக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்கள் இங்கே சொல்லொணாத் துயர்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த அவல வாழ்க்கை உலகத்தலைவர்களாலும் – உலக மக்களாலும் அனுதாபமாகப் பார்க்கப்படுவது எமது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.

சிங்கள அரசின் உணவு மற்றும் மருந்துத் தடைகளால் மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், நன்னீர் கிணறுகளை அசுத்தமாக்கியுள்ளது.

இதனால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

படையினரின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படும், காயமடையும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 300 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.

மக்களின் வாழ்விடத்திற்கு நெருங்கி நின்றவாறு படையினர் நடத்தும் துப்பாக்கித் தாக்குதல்களால் இப்போது அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வெட்டவெளியான மணற்திடல்களில் – தறப்பாள் கூடாரங்களுக்குள் முறையான காப்பகழிகள் இன்றி வாழும் மக்களை இந்த ரவைகள் தாக்குகின்றன.

இவ்விதம் சிங்களப் படைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் எமது மக்களுக்கு உடனடிப் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாகவுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் சிறிலங்கா அரசு விரும்புவது போல அதன் ராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக, மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம் கொண்டதாகவும் அமைய வேண்டும்.

அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று புலிகள் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இதுவரை 4,100 பொதுமக்கள் பலி; 8,800 பேர் காயம்! -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை

tna-mp-22.jpgவன்னியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து 100 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 8 ஆயிரத்து 800 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்தப் படுகொலைகள் அனைத்தும் அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளி விவகாரக் குழு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் மேலும்  கூறப்பட்டிருப்பவை வருமாறு:

குறிப்பாக கடந்த சில நாள்களில் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மனிதப் பேரவலம் குறித்து தமிழ்த் தேசிய  கூட்டமைப்பு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் 707 பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரம் பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.

அங்கு மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டமையினால் மனிதப் பேரவலம் தீவிரமாக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்துப் பொருள்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரானது. முன்னர் ஒரு போதும் எதிர்நோக்காத இன்னல்களை தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். பாதுகாப்பு வலயத்திலேயே மக்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்து வருகின்ற அதேவேளை, தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; கைது செய்யப்பட்டுள்ளனர்; காணாமற் போயுள்ளனர். இலங்கை அரசு தற்போது பாதுகாப்பு வலயத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அங்குள்ள மூன்று லட்சம் மக்களை அழிப்பதற்கான முயற்சியே இதுவாகும்.

எனவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இணைந்து உடனடியாக இராணுவ நடவடிக்கை நிறுத்தி யுத்த நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்  என்றுள்ளது.

நாவலப்பிட்டி நகரில் சக்திவாய்ந்த குண்டு கண்டுபிடிப்பு

sri-lanka-police00.jpg நாவலப்பிட்டி நகரில் உள்ள பொதுத் தொலைபேசி நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  நாவலப்பிட்டி பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள தொலைபேசி நிலையத்திலேயே இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, இது வழமையாக போக்குவரத்து நெரிசலான பகுதி எனவும் தெரிவித்தார்.

தொலைபேசி நிலையத்துக்குள் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று காணப்படுவதைக் கண்ட பயணி ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குத் கொடுத்த தகவலையடுத்தே அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் குறிப்பிட்ட குண்டை மீட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிஸ்கட் டின் ஒன்றுக்குள் இந்தக் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் எடை 750 கிராம் எனவும் தெரிவித்த பொலிஸார், பெருமளவு போக்குவரத்து நெரிசலும் சன நடமாட்டமும் உள்ள வேளையில் இது வெடித்திருந்தால் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்தக் குண்டு பின்னர் பொலிஸாரால் செயலிழக்கச் செய்யப்பட்டது. புதுவருடத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரப் பகுதியும் குறிப்பாக பஸ் நிலையப் பகுதியிலும் பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்த வேளையிலேயே இந்தக் குண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டது.

இச்சம்பவத்தையிட்டு நாவலப்பிட்டி நகரப் பகுதியில் அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை வேண்டும் என்று அதிபர் ஒபாமாவிடம் கோரிக்கை

caption.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களை சமாளிக்க கூடுதலான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வாரம் சோமாலிய நாட்டு கடற்பரப்பில் கடத்தப்பட்டு குறுகிய காலம் பிடித்து வைக்கப்பட்ட அமெரிக்க சரக்கு கப்பலில் இருந்த பணியாளர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமை வேண்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று உயிர்காக்கும் படகில் இந்தக் கப்பலின் காப்டனை, பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த கடற்கொள்ளையர்கள் மூவரை அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்று கடத்தப்பட்ட கப்பலின் தலைவரான ரிச்சர்ட் பிலிப்ஸஸை மீட்டனர்.

இவ்வாறு அவர் மீட்கப்பட்டது இன்னமும் கடற்கொள்ளையர்களின் பிடியில் இருக்கும் கடத்தப்பட்ட மற்ற கப்பல்களின் குழுவினர் குறித்த கரிசனையை அதிகரித்துள்ளது என்றும், வன்முறை சம்பவங்கள் மேலோங்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாக மொம்பாசாவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

இதனிடையே கென்ய நாட்டு துறைமுகமான மொம்பாசாவில் செய்தியாளர்களை சந்தித்த கடத்தபட்ட மெர்ஸ்க் அலபாமா என்கிற கப்பலின் குழுவினர், எவவாறு கப்பல் மீட்கப்பட்டு என்பது தொடர்பான விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

முதல்கட்ட தேர்தல் நடக்கும் 124 தொகுதிகளில் -பிரசாரம் இன்று ஓய்கிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு

india-election.jpgமக்களவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கும்  124 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த இடங்களில் 16ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரையில் ஐந்து கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 124 தொகுதிகளில் 16ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மொத்தம் 1,715 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 122 பேர் பெண்கள். இந்த தொகுதிகளில்  தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.  முதல் கட்டமாக, ஆந்திராவில் 22 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.சட்டீஸ்கரில் 11 தொகுதிகளிலும் ஒரிசாவில் 10, ஜார்கண்ட் 6, அசாமில் 3 தொகுதிகளிலும் 16ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இதேபோல், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் ஜம்மு&காஷ்மீர், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒரு  தொகுதியிலும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.   17 மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குபதிவு நடக்க உள்ள  124 தொகுதிகளில்  இன்று மாலை 5 மணியுடன்  பிரசாரம் முடிவடைகிறது.

மட்டக்களப்பில் தலைமறைவான 3 பொலிஸார் குறித்த தகவல்களைத் தந்துதவுமாறு மக்களிடம் வேண்டுகோள்

sri-lanka-police00.jpgமட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம், தலைமறைவாகியுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான தகவல்களைத் தந்து உதவுமாறு பொது மக்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்களான அகமது மீராசாகிபு அப்துல் ரஹீம் மற்றும் முகமது அலியார் நசார், பொலிஸ் கான்ஸ்டபிள் முகமது காசீம் அப்துல் ரசீத் ஆகியோர் தொடர்பாகவே தகவல்கைளத் தந்து உதவுமாறு பொது மக்களை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது

இது தொடர்பான அறிவித்தல் நேற்று ஒலி பெருக்கி மூலம் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிவுகளில் விடுக்கப்பட்டுள்ளது மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நீதிமன்ற வழக்கு சான்றுகளை மோசடி செய்தார்கள் என இவர்கள் மீது வழக்கு பதிவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி நபர்கள் தற்போது தலைமறைவாகியிருப்பதாகவும் இவர்கள் தொடர்பான மறைவிடங்கள் பற்றிய தகவல்களைப் பொது மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

reoorters.jpgஇலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர். இது இலங்கை பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை புரிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுவதாகவே உள்ளது. யுத்த வலயங்களில் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் 1738 பிரகடனத்தை இலங்கை அரசு மீறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பாரிய அளவில் மனிதாபிமான சீர்குலைவும் யுத்தக் குற்றங்களும் வன்னியில் இடம்பெறும் நிலையில் சர்வதேச சமூகம் போர் நிறுத்தம் வேண்டும் என்று விடுக்கும் கோரிக்கைக்கு இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தொண்டு நிறுவனங்கள் வன்னிக்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறது. சுதந்திரமான பத்திரிகையாளர்களின் பிரசன்னம் இல்லாத இந்த யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது வெட்கக் கேடான செயலாகும். வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடை விதிக்கும் விடுதலைப் புலிகள் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இராணுவ வெற்றிகளை செய்திகளாக அரசு தருவதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் கூறுகிறது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயற்பட விடாமல் பொதுமக்கள் தகவல் அறியும் சுதந்திரத்திற்கு அரசு தடையாக உள்ளதாக சுதந்திர ஊடகவியலாளர் ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

இலங்கை அரசும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் வன்னியில் சிக்கி தவிக்கும் மக்களைப் பற்றி தவறான தகவல்களை தருவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது. எங்கே இரத்தம் சிந்தப்படுகிறதோ அங்கே பேனா மையும் சிந்தப்படவேண்டும் என்றும் சர்வதேச பத்திரிகையாளர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களும் தம்முடன் சேர்ந்து பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுபீட்சம், புத்தெழுச்சி கொண்டுவரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்

mahinda-rajapaksha.jpgநாடு சமாதானம், சுபீட்சத்திற்கான புதியதோர் உதயத்தை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் எமது மக்களுக்கு சுபீட்சத்தையும் புத்தெழுச்சியையும் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புது வருடத்தை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மகிழ்ச்சிபொங்கும் இன்றைய தினத்தில் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் உள்ள எமது மக்கள் தேசம் முழுவதற்குமான ஒரு புதுவசந்தத்தை முன்னறிவிப்புச் செய்யும் புத்தாண்டின் மரபுகளை கடைபிடிக்கின்றனர். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து ஏற்கனவே விடுபட்டு சுதந்திரத்தை அனுபவிக்கும் கிழக்கு வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் சுதந்திர உணர்வோடும் சேர்த்து பால்பொங்கவைக்கும் தமது பாரம்பரிய மரபுடன் இப்புதுவருடத்தை வரவேற்கின்றனர். அதேபோன்று வடபகுதி மக்களும் தாம் எதிர்பார்க்கும் சுபீட்சத்திற்கும் சுதற்திரத்திற்குமான சாதகமான அடையாளங்களை இப்புதுவருடத்தில் காண்பர்.

இப் புதுவருடம் எமது மக்களிடடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் மேலும் பலப்படுத்தி புதிய நம்பிக்கைகளை கொண்டுவரும் அர்த்தம் நிறைந்த பெருநாளாக இருக்கும். இது எமது அரசாங்கமும் எமது மக்களும் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த சமாதானத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அர்ப்பணிப்புகளின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது.

புலரும் புத்தாண்டு எமது தேசத்திற்கு சமாதானத்திற்கான புதியதோர் உதயத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதோடு உலகின் கெளரவத்தையும் நன்மதிப்பையும் எமது நாட்டுக்குக்கொண்டுவரும். எமது மக்கள் புதுவருடத்தின் மரபுகளையும் சம்பிரதாயங்களையும் பேணுவதன் மூலம் ஏற்படுகின்ற ஐக்கியம், சகோதரத்துவம் என்பன நாட்டின் சுபீட்சத்திற்கு வழியமைக்கின்றது.

இந்த எதிர்பார்ப்பை மதித்து இம்முறை புதுவருடத்தை சம்பிரதாயபூர்வமாக பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். தேசிய விடுமுறை தினமான இந்த புதுவருட பண்டிகைத் தினத்தில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக சேவையில் ஈடுபட்டிருக்கின்ற முப்படையினர். பொலிஸார் மற்றும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்!

சீனாவில் மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம்

சீனாவில் முதல் முறையாக அந்நாட்டின் அமைச்சரவை மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டத்துக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

தற்போது இருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை வலுப்படுத்தி மேலும் விரிவுபடுத்தவும், இனரீதியான் சிறுபான்மையினர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்களுக்கான இவ்வகையான உரிமைகள் கூடுதலாக கிடைக்கவும், இந்த இரண்டு ஆண்டு கால செயற்திட்டம் உறுதி பூண்டுள்ளது.

இந்த தேசிய செயற்திட்டத்தின்படி, அரசின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்கிற பயமில்லாமல், உள்ளளூர் அரச அமைப்புகளை விமர்சிக்க மேலோங்கிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. மேலும் காவல்துறையின் சித்திரவதை மற்றும் அடக்கு முறையை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த செயற்திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகவே சீனாவின் கம்யூனிஸ அரசு அடிப்படை மனித உரிமைகளை விட, பொருளாதார சீர்திருத்தத்தையே முக்கியமாக கருதி முன்னெடுத்து வந்துள்ளது என்று சீனாவின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வந்துள்ளனர்.