நாவலப்பிட்டி நகரில் சக்திவாய்ந்த குண்டு கண்டுபிடிப்பு

sri-lanka-police00.jpg நாவலப்பிட்டி நகரில் உள்ள பொதுத் தொலைபேசி நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  நாவலப்பிட்டி பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள தொலைபேசி நிலையத்திலேயே இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, இது வழமையாக போக்குவரத்து நெரிசலான பகுதி எனவும் தெரிவித்தார்.

தொலைபேசி நிலையத்துக்குள் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று காணப்படுவதைக் கண்ட பயணி ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குத் கொடுத்த தகவலையடுத்தே அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் குறிப்பிட்ட குண்டை மீட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிஸ்கட் டின் ஒன்றுக்குள் இந்தக் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் எடை 750 கிராம் எனவும் தெரிவித்த பொலிஸார், பெருமளவு போக்குவரத்து நெரிசலும் சன நடமாட்டமும் உள்ள வேளையில் இது வெடித்திருந்தால் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்தக் குண்டு பின்னர் பொலிஸாரால் செயலிழக்கச் செய்யப்பட்டது. புதுவருடத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரப் பகுதியும் குறிப்பாக பஸ் நிலையப் பகுதியிலும் பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்த வேளையிலேயே இந்தக் குண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டது.

இச்சம்பவத்தையிட்டு நாவலப்பிட்டி நகரப் பகுதியில் அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *