தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இராணுவத்தினருக்கும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்ட பின்னணியில், தற்போது அங்கு நிலைமைகள் கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அபிஷிட் வெஜஜிவா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அபிஷிட் அவர்கள் மறுத்தார். இராணுவத்தினர் வெறும் சத்த வெடிகளை மட்டுமே வெடித்ததாகவும் அவர் கூறினார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா அவர்களின் ஆதரவாளர்களுக்கும் படையினருக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளுகளில், போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர். இந்த போராட்டங்களை தாம் ஏற்பாடு செய்யவில்லை என்று தக்ஷின் தெரிவித்தார்.