அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மலையகத்தில் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் பரிந்துரை

மலையகத்தில் அரச நிர்வாக எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கான பரிந்துரை அறிக்கை எதிர்வரும் (28) புதன்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

மலையகத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து கூட்டாகத் தயாரித்துள்ள இந்த ஆலோசனை அறிக்கை 145 பக்கங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மலையக அரச நிர்வாக எல்லை மீள்நிர்ணய ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் பீ. பீ. தேவராஜ் தெரிவித்தார்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 195 கிராம சேவையாளர் பிரிவுகளும், 13 பிரதேச செயலாளர் பிரிவுகளும் புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்று முன்மொழியப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தற்போதுள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மேலதிகமாக ஏழு பிரிவுகளைப் புதிதாக உருவாக்க வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் புதிதாக உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அது தொடர்பில் இறுதியான விரிவான பரிந்துரைகளைத் தயாரிக்கவென கால அவகாசம் கோரியிருப்பதாகவும் தேவராஜ் தெரிவித்தார். மேலும், மலையகப் பெருந்தோட்டங்களை உள்வாங்கும் அரச நிர்வாகக் கட்டமைப்புகளுக்குத் தோட்டத் தமிழ் இளைஞர், யுவதிகளை நியமிப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தெங்குப் பொருள் ஏற்றுமதி மூலம் ரூ. 24 பில். வருவாய் – பிரதமர்

தெங்குப் பொருட்களின் ஏற்றுமதியின் மூலம் தற்போது 24 பில்லியன் ரூபா வருடாந்த வருமானமாகக் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இதனை 75 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் தி. மு. ஜயரட்ன கூறினார்.

தெங்குச் செய்கையாளர்களின் வருடாந்த கூட்டம் நேற்று (25) பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது :- நாட்டில் தற்போது அமைதி, சமாதானம் ஏற்பட்டுள்ளதால் தெங்கு செய்கையாளர்கள் தமது நடவடிக்கைகளை சிரமங்களின்றி மேற்கொள்ள முடியும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலும் தெங்கு செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நாடு முழுவதும் தெங்கு செய்கையை பிரபல்யப்படுத்த முடிந்தால் தெங்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் வருமானத்தை மும்மடங்காக அதிகரிக்க முடியும் என்று பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கம் எச்சரிக்கை

புகலிடம் வழங்குவதற்கு எதிராக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. துன்புறுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்ற அடிப்படையில் புகலிடம் அளிப்பதோ அல்லது அகதி அந்தஸ்து வழங்குவதோ சட்டவிரோத மற்றும் முறையற்ற புலம்பெயர்வை மறைமுகமாக ஊக்குவிக்கும் நடவடிக்கை என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

சட்டவிரோதமான முறையில் கடல் போக்குவரத்தை தடுத்து நிறுத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கை விரிவுபடுத்தியிருப்பதாகவும் குறிப்பாக சிறிய படகுகளில் ஆட்கள் பொருட்களைக் கடத்திச் செல்வதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன கூறியுள்ளார்.

வியட்நாமின் கனோயில் இடம்பெற்ற 17 ஆவது ஆசியான்மாநாட்டின் போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத முறையற்ற புலம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளிப்படைத்தன்மை வாய்ந்த கொள்கைகள் உள்ளடக்கப்படவேண்டும் எனவும் இடமாற்றுத் தரிப்பிடமாக மற்றும் புலம்பெயர்வுகளை உள்ளீர்க்கும் நாடுகள் சட்டவிரோத புலம்பெயர்வு மற்றும் மக்கள் முறையற்ற நகர்வுகள் என்பவற்றுக்கு ஊக்குவிப்பு அளிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ருஹுணு பல்கலை மாணவன் மரணம் தொடர்பில் தாக்கியவர் அடையாளம் காணப்பட்டார்

மரணமான ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அருணபண்டாரவை தாக்கியதாக கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பண்டார தனது தாயிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

ருஹ¥ணு பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்கும் ‘பஸ்ஸா’ என்றழைக்கப்படும் இந்திக பஸ்நாயக்க என்ற சந்தேக நபர் தீவிர ஜே. வி. பி. ஆதரவாளர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

மாணவரின் மரணம் குறித்து நேற்று பொலிஸ் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை பொலிஸ் மாஅதிபர் நடத்தினர். இச்சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதுளை ஆஸ்பத்திரியில் மரணமான மேற்படி மாணவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென இரண்டு சி. ஐ. டி. பொலிஸ் குழுக்களும் இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

மரணமான பண்டாரவின் தாயார், சீ. ஐ. டி. பொலிஸாருக்கு நேற்று முன்தினம் இரவு வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 22ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு பதுளை ஆஸ்பத்திரியில் 32வது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள எனது மகனை பகல் உணவுடன் பார்க்கச் சென்றேன். ‘என்னடா மகனே… பல்கலைக்கழகத்துக்கும் அனுப்பி பொலிஸார் அடிக்கும் வரை என்னடா செய்து கொண்டிருந்தாய்…? என்று கேட்டேன்.

என்னை பொலிஸார் அடிக்கவில்லை அம்மா… என் அறைக்குள் வந்து ‘பஸ்ஸா’ தான் என் தலையில் பொல்லால் அடித்தான். என் முதுகிலும் அடிபட்டது என மகன் கூறினான். யாராடா அந்த ‘பஸ்ஸா’ எனக் கேட்டேன். எனக்கு கீழ் மட்டத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் தான் எனக் கூறினான்’ என பண்டாரவின் தாய் வாக்கு மூலம் அளித்துள்ளார். பண்டார தனது தாய்க்கு தெரிவித்த விடயங்கள் அவரது மரணவாக்கு முலமாகத்தான் கொள்ள வேண்டியுள்ளது என்றும் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

சீ.ஐ.டி. பொலிஸாருக்கு தான் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ‘பஸ்ஸா’ என்றழைக்கப்படும் இந்திக பஸ்நாயக்கவைக் கைது செய்ய விசேட பொலிஸ் தனிப்படைகள் இரண்டு அனுப்பப்பட்டுள்ளன. ஊவா பரணகமவி லுள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போது அவர் அங்கு இருக்கவில்லை. சந்தேக நபரான பஸ்நாயக்கா எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார். பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு ள்ளனர். சந்தேக நபரான பஸ்நாயக்கவின் பின்னணி பற்றி பொலிஸார் விசாரணை செய்த போது இவர் தீவிர ஜே.வி.பி. ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.

மரணமான மாணவன் தொடர்பாக பொலிஸாரினால் சேகரிக்கப்பட்ட அனை த்து சாட்சியங்களும் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மரணம் தொடர்பான இறுதி தீர்ப்பு நீதிமன்றமே வழங்கும். அந்த மாணவரை பொலிஸார் தாக்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றார்களே என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது, இரண்டு சீ.ஐ.டி. குழுக்களும், இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்களும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த சாட்சி யங்களை அவர்களிடையே ஒப்படைக்கலாம். ஆனால், அவை பொய் சாட்சியங்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ருஹுணு பல்கலை: முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு

ருஹுணு பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பாக முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளாரென ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மேற்படி மாணவனின் மரணம், பல்கலைக்கழகத்தின் பதற்றநிலை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளது.

இதேவேளை இம்மரணம் தொடர்பாக இதுவரை கிடைக்கப் பெற்ற அறிக்கைகள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பொலிஸ் திணைக்களம் நடத்தும் இவ்வாறான விசாரணைகளின் விபரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றார்.

மலையக தோட்ட புல் தரைகளில் களைகொல்லி பயன்படுத்த தடை

மலையகப் பெருந்தோட்டங்களில் கால்நடை வளர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். தோட்டங்களில் கால்நடை வளர்ப்புக்குப் பூரண உதவிகளைப் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். தோட்டங்களில் காணப்படும் புல்தரைகளில் தோட்ட நிர்வாகங்கள் களைக்கொல்லி பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென்றும் பணிப்புரை விடுத்திருக்கிறார்.

நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நேற்று முன்தினம் நுவரெலிய மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது நுவரெலிய மாவட்டத்தினை பிரதிநிதித்து வப்படுத்துகின்ற அமைச்சரான நவீன் திசாநாயக்க, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், மாகாண பிரதான செயலாளர், மத்திய மாகாணசபை தலைவர், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்ட மக்களை பெருமளவில் கொண்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவராகத் தன்னை தெரிவு செய்தமையினையிட்டு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், நாட்டில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற வேறுபாடு இல்லை. எல்லா மக்களும் சமமானவர்கள் என்பதனை அவரது இந்த செயற்பாடு தெளிவுபடுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இங்கு தலைமையேற்று உரையாற்றிய அ¨மைச்சர் தொண்டமான், நுவரெலியா மாவட்டம் பல குறைபாடுகளை கொண்டி ருக்கின்றது. அரசியல்வாதிகள் மட்டுமன்றி, நிறுவன அதிகாரிகளும், ஒன்றிணைந்து துரித கதியில் எமது மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்றார்.

கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடை முறைப்படுத்தப்பட்ட 358 வேலைத்திட்டங்களில் 238 திட்டங்கள் பூரணமடைந்திருப்பதாகவும், ஏனையவை செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான செயற்பாடுகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

லெபனானில் பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு – 3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள்

housemaids.jpgபல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. லெபனானிலிருந்து நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க அறிவித்துள்ளார்.

விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

றுஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

றுஹுணு பல்கலைக்கழக மாணவனொருவர் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு பொலிஸாருக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

எனினும் இராணுவத்தினரும் மேலதிக பொலிஸாரும் நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் ஒருவர் பதுளை ஆஸ்பத்திரியில் மரணமான சம்பவத்தையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் 18 ஆம் திகதி மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பையடுத்து பொலிஸார் அங்குவந்து மாணவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த மாணவனொருவர் பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த மாணவர் மரணமானதாக றுகுணு பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

றுஹுணு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவனான பண்டார என்பவரே மரணமானார்.இந்த மாணவன் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலே அவரின் மரணத்துக்குக் காரணமென மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்து மாத்தறை பஸ் நிலையம் அருகில் பிரதான வீதியில் நின்று நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் மாத்தறையில் இருந்து கதிர்காமம், அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாரõம, தங்காலை, திக்குவல்ல பகுதிகளுக்கான பஸ் சேவைகளும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டன. இதேவேளை, இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய இரு விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தென்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆடிவேல்; அலரிமாளிகை முன் ஜனாதிபதி வழிபாடு

aadivila.jpgகொழும்பில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஆடிவேல் விழா நேற்று மிகக் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. ஜுலை 27 ஆந் திகதி வரை நடைபெறும் ஆடிவேல் விழாவின் ஆரம்பமாக கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் காவடி ரதபவனி நேற்றும் காலை எட்டு மணியளவில் ஆரம்பமாகி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம் வரை சென்றது. பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ சென்ற ரதபவனி அலரி மாளிகையில் விசேட பூஜைக்காகத் தரித்து நின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாரியாரும் மாளிகைக்கு முன்பாக மேள தாளத்துடன் அழைத்து வர அவர்கள் காலி வீதியில் வைத்து விசேட பூஜைகளை நடத்தினர். ஆடிவேல் விழாவில் இவ்வாறு ஜனாதிபதி விசேட பூஜை வழிபாடு நடத்தியது இதுவே முதற் தடவையாகும். அங்கு ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் ஆலய அறங்காவலர் சபையினர் பொன்னாடையும் மலர்மாலையும் அணிவித்துக் கெளரவித்தார்கள். மேலும், செட்டியார் தெரு ஸ்ரீபுதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி இன்று (24) காலை 7.30 அளவில் ஆரம்பித்து பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தைச் சென்றடைகிறது. சம்மாங்கோடு ஆலய காவடி ரதம் திங்கட்கிழமை (26) திரும்பி வரவுள்ள நிலையில் வெள்ளி ரதம் 27 திங்கட்கிழமை மீண்டும் செட்டியார் தெரு ஆலயத்தை வந்தடையும்.

புசல்லாவ தோட்டம் – மற்றொரு மாணவி நேற்று தற்கொலை

புசல்லாவை பிளக்போரஸ்ட் தோட்டப் பகுதியிலுள்ள பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தனக்குதானே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

க. பொ. த உயர்தர வகுப்பில் இரண்டாவது தடவையாகக் கற்கும் பெரமையா சாந்தி (வயது 21) எனும் மாணவி தனது வீட்டில் சேலை ஒன்றினால் சுருக்கிட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புசல்லாவை பகுதியில் இடம்பெற்ற பாடசாலை மாணவிகளின் 3வது தற்கொலைச் சம்பவம் இதுவாகும்.