அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மட்டு. மாவட்ட பாடசாலைகளில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கும் பணி

sri-lankan-schools.jpgமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்வியலுவலகங்களும், பொலிஸாரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கையின் கீழ் பாடசாலை மாணவர் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மத்தி ஆகிய நான்கு வலயக் கல்வியலுவலகங்களின் மேற்பார்வையுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனையுடன் இப்பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுடன் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்களையும் நடாத்திவருகின்றனர்.

பாடசாலை மாணவர் பாதுகாப்புக் குழுவில் பாடசாலை அதிபர், பெற்றோர், பொலிஸார் மற்றும் அப்பாடசாலையின் ஆசிரியர்களில் ஒரு சிலர் அங்கம் வகிக்கவுள்ளனர். இப்பாதுகாப்புக் குழுக்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் செயற்படுவதுடன் பாடசாலை நேரங்களிலும் பாடசாலைக்கு செல்லும் போதும் பாடசாலையை விட்டு வீடு திரும்பும் போதும் கூடிய கவனம் செலுத்தவுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா 10 மி.டொலர் உதவி

vavuniyatents.jpgவடக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் வகையில் அவுஸ்திரேலியா 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் நேற்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஐ.நா. முகவர்கள் ஊடாக இந்த நிதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார். நீர் சுகாதார இருப்பிடம் உணவு மற்றும் ஆரோக்கிய செயற்பாடுகளுக்கு இந்நிதி பயன்படுத்தப் படும் என அவர் கூறினார். கடந்த டிசம்பர் தொடக்கம் அவுஸ்திரேலிய அரசு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென 23.5 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாதுகாப்பு வலயப் பகுதியில் மாற்றம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு

army-crest.jpgஇலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு வரையறுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரதேசமானது தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் அடர்த்தியாக இருக்கும் பிரதேசங்களை கருத்தில் கொண்டும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது.

தற்போதைய நிலையில் காரியமுல்லை வாய்க்கால் பகுதிக்கு தெற்கே இருக்கும் பிரதேசம், வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி உள்ளிட்ட நிலப்பகுதி புதிய பாதுகாப்பு வலையப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த பகுதியானது புதிய பாதுகாப்பு வலயப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு வெளியில் இருக்கும் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் மீதான தங்களின் தாக்குதல்களை தொடரும் என்று இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஆறு சதுர கிலோமீட்டர் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக விளங்கிவந்த நிலை மாறி, தற்போது இரண்டரை சதுர கிலோமீட்டர் பகுதியாக இது குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கை இராணுவம் விடுதலை புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்த அறிவிப்பு என்று விடுதலைப் புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் கூறினார்.

இந்தியாவின் இரண்டாவது மருத்துவக் குழு இலங்கை வரும் : பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

indo-lanka.jpgஇலங்கையின் வடக்கே மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள தனது இரண்டாவது மருத்துவ குழுவினரை அடுத்த வாரமளவில் இந்தியா அனுப்பி வைக்கவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

புல்மோட்டை முகாம்களில் ஏற்கனவே 60 நாட்கள் தங்கி சிகிச்சை அளித்து வந்த இந்திய வைத்திய குழுக்களுக்குப் பதிலாக இவர்கள் அப்பணியை தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல்துஷ்பிரயோகத்தின் பின் சிறுவன் கொலை – சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

gun00.jpgமொனராகல, கஹம்பான பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் வியாழக்கிழமை மாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மொனராகல பொலிஸாரும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர். கஹம்பான காட்டுப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.

சிறுவனை கொலை செய்து புதைத்த இடத்தை காண்பிப்பதாக பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் அங்கு மறைத்து வைத்திருந்த கைக் குண்டொன்றை எடுத்து பொலிஸார் மீது எறிய முற்பட்ட போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இவர் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினமே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளார்.  அத்துடன் சந்தேகநபர் இராணுவத்தைச் சேர்ந்தவரென்றும் மொனராகல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 493 பேர் புல்மோட்டை வருகை

icrc.jpg
முல்லைத்தீவிலிருந்து “கிறீன் ஓசன்’கப்பல் மூலம் வியாழக்கிழமை இரவு, காயமடைந்த மற்றும் நோயாளர்களென 493 பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்ட இந்தக் கப்பல் இரவு 8.35 மணியளவில் புல்மோட்டை கடற்பரப்பை வந்தடைந்தது.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு தலா 5,000 ஏக்கர் வீதம் மேச்சல் நிலம் ஒதுக்கீடு – அமைச்சர் நவரத்தினராஜா

era_thurairatnam.jpg கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தலா 5,000 ஏக்கர் வீதம் மேச்சல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கால்நடைப் பண்ணையாளர்கள் பல வருட காலமாக மேச்சல் நிலமற்ற நிலையில் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியதுடன் அவர்களது நாளாந்த வருமானமும் மிகக் குறைந்த நிலையிலே மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், பால் உற்பத்தி கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இப் பண்ணையாளர்கள் மேச்சல் நிலம் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து அவர் அபிவிருத்தியமைச்சர் சி.பி. ரத்னாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், பாற்பண்ணையாளர்களின் பிரச்சினை தீர்வு காணப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் கூடிய பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு கால்நடை பண்ணையாளர்களுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர மற்றும் பிரதேச செயலாளர், கால்நடை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் “போதையற்ற வாழ்வு’ ஓவியப் போட்டி

jaffna-map.jpgவட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் “போதையற்ற வாழ்வு’ என்னும் தலைப்பிலான ஓவியப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. இப்போட்டி பிரதேச செயலக மட்டம், மாவட்ட மட்டம், மாகாணமட்டம் ஆகிய மட்டங்களில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் பத்து ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்டப் போட்டி இடம்பெறும். மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து 15 ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டப் போட்டி இடம்பெறும்.

மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்படும் முதலாவது ஓவியத்துக்கு 15 ஆயிரம் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு 10 ஆயிரம் ரூபாவும் மூன்றாம் இடத்துக்கு 7,500 ரூபாவும் மேலும் ஐந்து சிறந்த ஓவியங்களுக்கு தலா ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தெரிவு செய்யப்படும் ஓவியங்கள் மாவட்ட மட்டத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. போட்டி சம்பந்தமான விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளுமாறு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஹட்டன் தோட்டத்தில் குளவி கொட்டி 13 பெண்கள் ஆஸ்பத்திரியில்

sri-lanka-upcountry.jpgதோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டியதால் 13 பெண்கள் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹட்டன் – அபோஸ்லி தோட்டத்தைச் சேரந்த பெண்களே இவ்வாறு குளவி கொட்டலுக்கு இலக்காகியுள்ளனர்

மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஹெனா நெஸ்டட் இலங்கை வரத் தடை

annan.jpgநியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதை, அரசாங்கம் தடைசெய்துள்ளது.மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை தொடர்பாக பொய்யான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

ஹெனா, சுற்றுலா வீசா அனுமதியுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து வவுனியாவுக்குச் சென்று, உண்மைக்கு புறம்பான தகவல்களை சேகரித்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யரான ஹெனா, தம்மை சட்டத்தரணியென கூறி, இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை ஏமாற்றியுள்ளதாக புலனாய்வு துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், இலங்கை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கிய 45 பக்க அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்பித்துள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.