அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கிழக்கிலுள்ள வைத்தியசாலையில் சோதனைக் குழுக்களை அமைக்க திட்டம்

hizbullah.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ள பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட சுகாதர சேவையை மேம்படுத்தல் தொடர்பான கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் கடமை நேரத்தில் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருவதால், வைத்தியசாலைப் பரிசோதனைக் குழுவொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் விடுத்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள், சுகாதரத் துறையின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் உடனுக்குடன் மீள்குடியமர்வு – அமைச்சர் அமீர் அலி

ameerali.jpgநிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் உடனுக்குடன் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ். எஸ். அமீர் அலி நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

எதிரணியினர் குறிப்பிடுவது போல் இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருக்கும் எண்ணம் அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கி இருக்கும் நலன்புரி நிலையங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாதிருப்பதற்காக மல்வத்து ஓயாவிலிருந்து 50 லட்சம் லீட்டர் நீரைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் காலத்திற்குக் காலம் வெவ்வேறுவிதமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.  இது வழக்கமானது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் எமது ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். இது தெளிவானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் இனியாவது இனவாதம் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர் எவருமே அங்கம் வகிக்கவில்லை என்பது அபத்தமானது. அச்செயலணியில் இரண்டு தமிழ் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். இதனைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லையெனக் கூறுவது எமக்கு கவலை அளிக்கிறது.
 

இன முரண்பாட்டுக்கு அடிப்படையான மொழிப் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை – அமைச்சர் டியூ குணசேகர

duegunasekara.jpgஇன முரண்பாட்டுக்கு அடிப் படையான மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது, என அரசியலமைப்பு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூகுணசேகர பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் சகல அரச நிறுவனப் பிரிவுகளிலும் மொழி செயற்படுத்தல் அதிகாரி களை நியமிக்கத் தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஓரிரு தினங்களில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்த தாவது;

33 வருட பயங்கரவாதம் 27 வருட யுத்தம் இவை முழு மையான முடிவுக்கு வரும்வரை அவசரகால சட்டத்திற் கான தேவை இருக்கும். நாம் என்றும் யுத்தத்தை விரும்புபவர்களல்ல. யுத்தத் தைத் தவிர்க்கக்கூடியவற்றை நாம் பலமுறை மேற் கொண்டுள்ளோம்.

யுத்தம் முடிவுக்கு வரவேண்டும், தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதற்கு அன்றே 13வது திருத்தச் சட்டத் திற்குச் சபையில் ஆதரவு வழங்கியவன் நான். 13வது திருத்தத்தில் மொழிப் பிரச்சினையும் அடங்குகிறது. இதற்கான அடிப்படைகளை நாம் இனங்கண்டுள்ளதுடன், அதற் குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரச நிறுவனங்களின் சகல பிரிவுகளிலும் மொழி செயலாற்றலை நடைமுறைப்படுத்தும் வகையில் அதிகாரி களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை இரண்டொரு தினங்களில் சமர்ப்பிக்கவுள்ளேன். இதன்படி தமிழில் அனுப்பப்படும் கடிதமொன்றுக்கு இனி சிங்களத்தில் பதில் அனுப்புவது நடைபெறாது. அவ்வாறு செயற்படும் அதிகாரிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்.

பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றத்தில் உள்ள பத்துக்குமேற்பட்ட கட்சிகளும் ஒருமைப்பாட்டுடன் செயற்படவேண்டும். ஜே. வி.பி. யே இன்று சிங்கள இன வாதத்திற்கு இடமளிக்கக்கூடாதென சபையில் கூறுகிறது. இதனை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். யுத்தம் வட, கிழக்கை மட்டுமல்ல இதர சகல பிரதேசங்களையும் பாதித்துள்ளது. சகல மக்களையும் பாதித்துள்ளது என்பதை சகலரும் உணரவேண்டும்.

எமது தொடர்புகளெல்லாம் ஏகாதிபத்திய நாடுகளுடன் மட்டும்தான் என ஐ. தே. க எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கூறினார். இதை நான் மறுக்கிறேன். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை ஆரோக்கியமானதாகவே உள்ளது.

நாம் சகல நாடுகளுடனும் ஒப்புரவுடன் செயற்பட்டு வருகிறோம். எனினும் எமது நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் விடயங்களில் நாம் கவனமாகச் செயற்படுவது அவசியம். இதனால் தான் அரசாங்கம் நாட்டுக்குச் சாதகமான தீர்மானத்தை இது விடயத்தில் மேற்கொண்டது. இந்தியா போன்ற அயல்நாடுகளை எமக்கு ஆதரவாக திருப்புவ தற்கும் இத்தகைய தீர்மானங்களே முக்கியமானதாக அமைந்தன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

images-snakes.jpgஇலங் கையில் பாம்புக் கடியினால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் நாடாள?விய ரீதியில் 33 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்குள்ளாகியதாக அடிப்படைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகளவில் பின் தங்கிய கிராமவாசிகளே பாம்புக்கடியினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக கவனம் செலுத்தாவிடின் மோசமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

மேலும், பாம்பு கடித்தவர்கள் நவீன சிகிச்சை வசதிகளை உடைய வைத்தியசாலைகளை அணுகாது அபாயகரமான பாரம்பரிய சிகிச்சைகளையே மேற்கொண்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாம்புக் கடியால் உயிரிழந்தவர்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாதோர் தொகை குறிப்பாக கிராமிய மட்டத்தில் பதிவு செய்யப்படவில்லை.  மின்சார வசதியற்ற கிராம மக்களே அதிகளவில் அரையிருள் வேளைகளில் பாம்புக்கடிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்புக்கு விசேட வேலைத் திட்டம்

tsunami.jpgநாடெங் கிலுமுள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பாதுகாக்க விசேட வேலைத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. நீதி அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஜகத் வெல்லவத்த தெரிவித்தார். இத்திட்டம் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று பிற்பகல் அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இத்திட்டத்தின்படி சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான மீள் கணக்கெடுப்பொன்று நடத்தப்படவுள்ளதுடன் அச்சிறுவர்களுக்கு உரித்துடைய சொத்துக்களின் விபரங்கள் குறித்தும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம்பருவத்தினர் தொடர்பாக கடந்த 2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடளாவிய ரீதியில் 5700 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 754 பேர் தமது பெற்றோர் இருவரையும் இழந்தவர்களாவர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான மீள் கணக்கெடுப்பு எதிர்வரும் 13ஆம் திகதி ஹம்பந்தொட்டையிலும் 15ஆம் 16ஆம் திகதிகளில் ஹிக்கடுவயிலும் நடைபெறவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும்.

இக்கணக்கெடுப்பின் பின்னர் இச்சிறுவர்களின் பேரில் இலங்கை வங்கியூடாக வங்கிக் கணக்கொன்றும் ஆரம்பித்துக் கொடுக்கப்படவுள்ளது. இதேவேளை,  சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை சட்டத்துக்கு முரணாக பராமரித்து வருவோர் இரண்டு வருட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

சீனாவின் சின் சியாங்க் பிராந்தியத்தில் வன்முறை தொடருகிறது

சீனாவின் சின் சியாங்க் பிராந்தியத்தின் தலைநகர் உரும்கியில் தொடரும் வன்முறை காரணமாக சீன அதிகாரிகள் அங்கே இரண்டாவது நாளாக இரவு நேர ஊரடங்கு உத்தரவை மீண்டும் கொண்டுவந்துள்ளனர். உள்ளூர் உய்குரிகளுக்கும் ஹான் சீனர்களுக்கும் இடையில் இந்த மோதல்கள் நடந்துவருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இந்த வன்முறைகளில் இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.அந்த நகரின் இணைய தொடர்புகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உரும்கியின் தெருக்கள் தற்போது அமைதியாக காணப்படுவதாக, அங்கே இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

முன்னதாக, நீண்ட கத்திகள், கம்புகள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தாங்கிய ஹன் சீன இனமக்கள் தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.  முஸ்லிம் உய்குரி இனமக்களின் தாக்குதல்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் முகமாகவே தாங்கள் இப்படி ஊர்வலமாக சென்றதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27ஆம், 28ஆம் திகதிகளில்!

election.gifஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தபால்மூல வாக்குப் பதிவு எதிர்வரும் 27ஆம்,  28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இத்தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்போருக்கான வாக்காளர் அட்டைகள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபை,  யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஊவா மாகாணத்துக்கு மொத்தம் 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 21 பேர் பதுளை மாவட்டத்திலிருந்தும் 11 பேர் மொனராகல மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படுவர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க தினமும் ரூ. 25 கோடி செலவு

வடக்கில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க தின மும் 25 கோடி ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்த மக்களுக்கு தினமும் உணவு, உடை, மருத்துவ வசதிகள், கல்வி மற்றும் நலன்புரி சேவைகள் அளிப்பதற்காக அரசாங்கம் தினமும் 25 கோடி ரூபா செலவிடுகிறது.

அந்த மக்களுக்கு சகல வசதிகளையும் வழங்க அரசாங்கம் சகல நடவடிக் கைகளையும் எடுத்து வருகிறது. வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் மறைத்து வைக்க ப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டுபிடிப்பதிலும் நிலக் கண்ணி அகற்றுவதிலும் படையினர் பெரும் பங்காற்றி வருகின்றனர். அவர்கள் உயிரை அர்ப்பணித்து இந்தப் பணிகளை செய்து வருகின்றனர். நிலக்கண்ணி அகற்றும் பணிகளுக்கு வெளிநாடுகளும் உதவி வருகின்றன.

வளங்கள் கூடிய பாடசாலைகள் வளம் குறைந்த பாடசாலைக்கு உதவ வேண்டும் – பிரதியமைச்சர் பாயிஸ்

schoolgirls-sri-lanka.jpgஎனது பாடசாலை என்ற உணர்வை மறந்து எமது பாடசாலை என்று நாம் கருதி செயல்பட்டால் நிச்சயம் எமது வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வியில் வளர்ச்சியும் அபிவிருத்தியும் அடையும். இவ்வாறு கால் நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு கூறினார்.

பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “இன்று அதிபர்களும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் தமது பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி போன்ற விடயங்களையே சிந்திக்கின்றனர். இது தவறு ஆகும். கல்வி வளர்ச்சி பற்றி சிந்திப்பதில்லை. ஆகவே வளங்கள் அதிகமாகக் காணப்படும் பாடசாலைகள் வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும்.

வளங்கள் என்று கூறும் போது அது ஆசிரியர்களாக இருக்கலாம். முக்கியமான பாடத்திற்கு எமது பாடசாலையில் ஒருவர் இருந்தால் அவரை வேறு பாடசாலையில் அப்பாடத்தைக் கற்பிக்க கிழமையில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் அனுப்பினால் அப்பாடசாலையின் மாணவர்கள் முன்னேறுவார்கள். இலக்கை அடைய முடியும். எதிர்காலத்தில் எமது வலயம் கல்வியில் நல்லதொரு முன்னேற்றப் பாதையை சென்றடையும். ஆகவே அதிபர்களும் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ‘ என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சக்திமிக்க வெடிபொருள் மீட்பு

மட்டக்களப்பின் மாமாங்கம் மற்றும் சித்தாண்டி பிரதேசங்களிலிருந்து அதிசக்தி வாய்ந்த அமுக்க வெடி குண்டுகள் கிளேமோர் குண்டுகள் மற்றும் ஆயுதங்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்ப டையில் 10 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த அமுக்க வெடி ஒன்றை மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மாமாங்கம் பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றை சோதனையிட்டபோதே இந்த அமுக்க வெடி குண்டை மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, வாழைச்சேனை, சித்தாண்டி பிரதேசத் தில் சுமார் 23 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட ஆயுதங்களை மீட்டெடுத் துள்ளனர். 20 கிலோ எடையுள்ள கிளேமோர், 2 கிலோ எடையுள்ள கிளேமோர், ஒரு கிலோ எடையுள்ள கிளேமோர், வயர் ரோல் மற்றும் ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.

மேலும் கிண்ணியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மூதூர் பிரதேசத்தில் பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கிலோ எடையுள்ள வெடிமருந்து, ரி-56 ரக துப்பாக்கிகள் -02, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் – 29, வெடிக்க வைக்கும் கருவி -01, ரி-56 ரக துப்பாக்கி பாகங்களையும் மீட்டெடுத்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.