எனது பாடசாலை என்ற உணர்வை மறந்து எமது பாடசாலை என்று நாம் கருதி செயல்பட்டால் நிச்சயம் எமது வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வியில் வளர்ச்சியும் அபிவிருத்தியும் அடையும். இவ்வாறு கால் நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.
புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு கூறினார்.
பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “இன்று அதிபர்களும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் தமது பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி போன்ற விடயங்களையே சிந்திக்கின்றனர். இது தவறு ஆகும். கல்வி வளர்ச்சி பற்றி சிந்திப்பதில்லை. ஆகவே வளங்கள் அதிகமாகக் காணப்படும் பாடசாலைகள் வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும்.
வளங்கள் என்று கூறும் போது அது ஆசிரியர்களாக இருக்கலாம். முக்கியமான பாடத்திற்கு எமது பாடசாலையில் ஒருவர் இருந்தால் அவரை வேறு பாடசாலையில் அப்பாடத்தைக் கற்பிக்க கிழமையில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் அனுப்பினால் அப்பாடசாலையின் மாணவர்கள் முன்னேறுவார்கள். இலக்கை அடைய முடியும். எதிர்காலத்தில் எமது வலயம் கல்வியில் நல்லதொரு முன்னேற்றப் பாதையை சென்றடையும். ஆகவே அதிபர்களும் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ‘ என்றார்.