அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சிறுபான்மையினரைப் பாதிக்கும் விடயங்களுக்கு மு.கா. ஆதரவளிக்காது; நம்புகிறது தமிழ்க்கூட்டமைப்பு

அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பான விடயங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்காதென நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிப்பதென நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கூடி முடிவெடுத்திருந்தது.

இந்த நிலையில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பேச்சு களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு ஏதேனும் முட்டுக்கட்டையை ஏற்படுத்துமாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.  சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினவியபோது;

இது முஸ்லிம் காங்கிரஸின் தனிப்பட்டமுடிவு.இதனால் எம்மிடையேயான பேச்சுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுமென நினைக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரை சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.அது முஸ்லிம் மக்களாக இருந்தாலும் சரி.மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, வடக்கு,கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும் சரி பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனவே,அந்தப் பேச்சுகளுக்கு ஆபத்து இருக்காதென நினைக்கிறேன்.

தேறி வருகிறார் ஆரியவதி

ariyawathi_main.jpgஆணிகள்,  ஊசிகளை சூடுகாட்டி உடலில் ஏற்றப்பட்டிருந்த மாத்தறையைச் சேர்ந்த ஆரியவதி (49 வயது) எனும் பெண் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சத்திரசிகிச்சையின் பின்னர் குணமடைந்து வருகிறார். அவர் நேற்று பேசக்கூடிய நிலையில் இருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க நேற்று ஆரியவதியை பார்வையிட்டுள்ளார். அத்துடன் அப்பெண்ணுக்கு வீடொன்றையும் வழங்குவதாக அவர் தெரிவித்திருக்கிறார். உடலில் மீதமாக இருக்கும் 5 ஊசிகளையும் உடனடியாக அகற்ற முடியாதிருப்பதாகவும் ஏனெனில் அப்பெண்ணின் நரம்புகள் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் உடனடியாக அவற்றை அகற்றவில்லை எனவும் கம்புறுப்பிட்டிய மருத்துவமனை பணிப்பாளர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

இப்பெண்ணுக்கு 3 ஆயிரம் டொலர்களை அரசாங்கம் வழங்கும் என்று அதிகாரிகள் கூறினர். ஆஸ்பத்திரியில் வைத்து 1 இலட்ச ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதித் தொகை ஆரியவதி ஆஸ்பத்திரியை விட்டு சென்ற பின் கொடுக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் கூறினார்.

தனது குடிசையை வீடாக நிர்மாணிக்கும் நோக்கத்துடனேயே ஆரியவதி சவூதிஅரேபியாவுக்கு சென்றிருந்தார். கடந்த மார்ச்சில் அங்கு சென்றிருந்த ஆரியவதியை வேலைக்கு அமர்த்திய குடும்பம் கொடுமைப்படுத்தியுள்ளது. கணவனும் மனைவியும் தன்னை அடிப்பதாகவும் அவர்களின் ஏழு பிள்ளைகளும் தன்னை கொல்லப் போவதாக மிரட்டுவதாகவும் ஆரியவதி கூறியுள்ளார். மூன்று மாதங்கள் சித்திரவதைக்குள்ளான இவரை அவருக்கு வேலை பெற்றுக் கொடுத்த முகவரிடம் தொழில் வழங்கியவர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆரியவதியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிடுமாறு முகவரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆணிகளை சூடுகாட்டி பெண் (எஜமானி) தனது கணவரிடம் கொடுக்க அவர் தனது உடலில் அவற்றை அறைந்ததாக ஆரியவதி கூறியுள்ளார். நான் வலியால் சத்தமிட்டால் அவர்களின் பிள்ளைகள் என்னை கொல்லப் போவதாக கத்தியைக் காட்டி மிரட்டுவார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

அமைச்சர் எஸ்.பி இன்று யாழ். பல்கலை விஜயம்

University_of_Jaffna_Logoஉயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்படவுள்ளது. இங்கு விஜயம் செய்யும் அமைச்சர் பல்கலைக்கழகத்தில் 30 மில். ரூபாயில் நிர்மாணிக்கப்படவுள்ள சுகாதார, விஞ்ஞான கட்டடத்திற்கு அடிக்கல்லையும் நாட்டி வைப்பார்.

பணிப்பெண்களை ஜோர்தானுக்கு அனுப்புவதற்கு தொடர்ந்தும் தடை

இலங்கைப் பெண்களை ஜோர்தானுக்கு பணிப் பெண்களாக அனுப்புவதற்கு இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளமை தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இலங்கை பணிப் பெண்களுக்கு 200 டினாரை மாதாந்த சம்பளமாக வழங்க வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை ஏற்றுக் கொண்டாலேயே ஜோர் தானுக்கு பணிப்பெண்களாக இலங்கையரை அனுப்ப முடியும் என பணியகத்தின் தலைவர் அறிவித்திருந்தார்.

இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி

malinga.jpgஇலங்கை, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று தம்புள்ளையில் இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தில்சானும், ஜயவர்தனவும் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பிரவீன் குமார் வீசினார்.

முதல் ஓவரில் 3 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. 3 ஆவது ஓவரில் தில்சான் 2 பவுண்டரி விளாசினார். அதன் பின் இருவரும் அடித்து விளையாடினார்கள். இதனால் இலங்கை
அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தன. 9.1 ஓவரில் இலங்கை அணி 50 ஓட்டங்களை தொட்டது. சிறப்பாக விளையாடிய தில்சான் அரை சதம் அடித்தார். அவர் 36 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் இந்த ஓட்டங்களை எடுத்தார். 15.4 ஓவரில் இலங்கை அணி 100 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி 20.2 ஓவரில் 121 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது முதல் விக்கெட்டை இழந்தது. ஜயவர்தன 39 ஓட்டங்களில் இசாந்த் சர்மா பந்தில் தி. கார்த்திக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தரங்க 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கார களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய தில்சான் அதிக பட்சமாக 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்கஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை எடுத்தது.

இந்தப் போட்டியில் அதிக பட்சமாக தில்சான் சதம் அடித்தார். அவர் 115 பந்துகளில் 110 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். சங்கக்கார 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் இசாந்த் சர்மா, முனாப் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை எடுத்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியா செல்லும் பெண் சாரணியர்கள்

jaffna.jpgஉலக பெண் சாரணிய அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக மலேசியாவில் நடைபெற இருக்கும் கூடலில் பங்குபற்றுவதற்காக யாழ். மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் 36 பெண் சாரணியர்கள்  நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டனர். யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. எம்.பி. சில் வேஸ்த்திரி அலன்ரின் உதயனும் காணப்படுகிறார்.

யாழ், முல்லை, கிளிநொச்சியிலும் நல்லிணக்க குழுவின் அமர்வுகள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் விசாரணைகள் அடுத்த மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. பொது மக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக திறந்த அமர்வாக இங்கு விசாரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ.ஏ. குணவர்தன தெரிவித்தார்.

ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மேற்கொள்வார்கள். எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களிடம் சாட்சியங்கள் பெறப்படும். அதேவேளை ஒக்டோபர் மாதம் ஒன்பதாந் திகதி முதல் 11 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் நடைபெறும்.

ஆணைக் குழு முன் சாட்சியமளிக்க விரும்பும் பொதுமக்கள் குறித்த அரசாங்க அதிபர் அலுவலகத்துடனோ அல்லது ஆணைக்குழுவுடனோ தொடர்புகொள்ளலாமென அறிவிக்கப் பட்டுள்ளது. கொழும்பு- 7, ஹோட்டன் பிளேஸிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மூன்றாந்திகதி நடைபெறும் அமர்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எம். ஐ. எம். மொஹிதீன், பீ. எம்.டி. பெர்னாண்டோ ஆகியோர் சாட்சியமளிப்பர்.

செப்டெம்பர் ஆறாந்திகதி கலாநிதி அநுர ஏக்கநாயக்க, சுசந்த ரத்னாயக்க, கே.ரி. இராஜசிங்கம் (ஏஷியன் ரிபியூன்) ஆகியோர் சாட்சியமளிப்பார்கள். செப். 13ஆம் திகதி நடைபெறும் விசாரணையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மனிக் டி சில்வா, காந்தி நிலையத்தின் ஒரு பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் வழங்குவார்கள். 15 ஆம் திகதிய விசாரணையில் முன்னாள் சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜோன் குணரத்ன, அருட் தந்தை துலிப் டி. சிக்கேரா ஆகியோரும் 24 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப், மத நிறுவனமொன்றின் பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் அளிப்பர். 29 ஆம் திகதி பேராசிரியர் அர்ஜுன்அலுவிகார, கலாநிதி சமன், பீ. ஹெட்டிகே ஆகியோர் சாட்சியம் வழங்குவர்.

9000 ஓட்டங்களை கடந்த 3 வது வீரர் மகேல ஜெயவர்த்தன

mahela.jpgசர்வதேச ஒரு நாள்போட்டியில் 9000 ஓட்டங்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை மகேல ஜெயவர்த்தன பெற்றுக்கொண்டார்.  இன்று இடம் பெற்றுக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலே மகேல ஜெயவர்த்தன இச் சாதனையை நிலை நாட்டினார். ஏற்கெனவே சனத், அரவிந்த இந்த இலக்கைத் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் வெல்ல கூடுதல் முயற்சி தேவை – சங்ககரா

பொதுவாக இறுதி ஆட்டங்களின் போது  இந்திய அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று விடுவர். இது பலமுறை நடந்துள்ளது. இம்முறை சற்று கூடுதல் முயற்சி எடுத்து ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதை தடுப்போம். சேவக் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவரை விரைவில் அவுட்டாக்கினால் எங்களுக்கு நல்லது என இலங்கை அணித்தலைவர் தெரிவித்தார்.

தோனி தலைமையில் இந்திய அணி, இலங்கையில் தொடர்ந்து நான்கு ஒருநாள் தொடர்களில் கோப்பை வென்றுள்ளது. கடந்த 2008 (3-2), 2009 (4-1) ல் நடந்த ஒருநாள் தொடர்கள் 2009 முத்தரப்பு தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை என மொத்தம் நான்கு முறை சாதித்துள்ளது. இன்றும் வெல்லும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதிக்லாம்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வருகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் எதுவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

24 ஆணிகள் அறையப்பட்ட பெண்ணுக்கு சத்திரசிகிச்சை

kamburu-01.jpgசவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி உடம்பில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்ணுக்கு நேற்று மாத்தறை கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இந்த சத்திர சிகிச்சையின் மூலம் அவரது உடம்பிலிருந்து 16 ஆணிகள் அகற்றப்பட்டன. ஏனையவை உயிர் ஆபத்தை ஏற்படுத்தாதவை என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். அவரது உடலிலிருந்து 2 அங்குல ஆணிகள் 12 மற்றும் 2 1/2 அங்குல ஆணி ஒன்றும், மூன்று குண்டூசிகளும் அகற்றப் பட்டன. உடலில் மீதமுள்ள ஆணிகளை அகற்றுவதற்காக மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளதாக கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

kamburu.jpgகம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீரவின் ஆலோசனைக்கமைய வைத்திய நிபுணர் கமல் வீரதுங்க திலங்க த சில்வா, எச்.கே.கே. சதரசிங்க, மயக்க மருந்தேற்றும் வைத்திய நிபுணர் வசந்தி குணசேக்கர உள்ளிட்ட டொக்டர்கள் குழுவினர் சுமார் 3மணிநேரம் சத்திர சிகிச்சையில் ஈடுபட்டனர்.இரண்டு குழந்தைகளின் தாயான எல்.பி. ஆரியவதி (வயது 49)யின் மன நிலை பாதிக்கப் படும் என்ற காரணத்தினாலும், சத்திரசிகிச்சையைத் தொடர்ந்தும் நடத்துவதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும் நேற்றைய சத்திரசிகிச்சை 13 ஆணிகள், 3 குண்டூசிகள் நீக்கப்படுவதுடன் நிறுத்தப்பட்டது. அவரது உடலில் துருப்பிடித்த நிலையிலேயே இந்த ஆணிகள் இருந்தன.

இன்னும் சில தினங்களின் பின்னர் சத்திரசிகிச்சையை மேற்கொள்வது என டொக்டர்கள் தீர்மானித்ததுடன், மன நல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னர் குறிப்பிட்ட பெண் சாதாரண வார்ட் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் தேறி வருவதாகவும் டொக்டர்கள் தெரிவித்தனர்.

தனக்கு வேலை வழங்கிய சவுதிஅரேபிய நாட்டவர் உடலில் ஆணிகளை அடித்ததாக அப்பெண் கூறியிருந்தார். 24 ஆணிகளும் ஊசியும் உடலில் இருப்பதை எக்ஸ்ரே மூலம் தெரியவந்திருக்கிறது. நெற்றியிலும் ஆணி உள்ளது என்று மருத்துவமனைப் பணிப்பாளர் பிரபாத் கஜதீர கூறியுள்ளார்.

maid.jpgஇந்த ஆணிகள் 2 அங்குல நீளமுடையவையாகும். ஆரியவதியின் கைகள், கால்கள், அடிப்பாதங்களிலேயே அதிகளவுக்கு ஆணிகள் அறையப்பட்டுள்ளன. ஆனால் ஆரியவதியின் உட்புற உடல்உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை என்று டாக்டர் கஜதீர கூறினார்.கடந்த மார்ச்சில் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த இப்பெண் அதிகளவு உளப்பாதிப்புக்கு உட்பட்டவராகவே உள்ளார். தனது அவையவம் தொடர்பாக அதிகளவுக்கு விபரங்களை அவரால் கூற முடியவில்லை.

10 இலட்சத்து 80 ஆயிரம் இலங்கையர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில் 70 சதவீதத்தினர் பெண்களாவர்.

வீட்டுவேலையாட்களாக பணிபுரியும் இலங்கையர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் சிறு தொகையினர் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளிலும் தொழில் புரிகின்றனர்.

எஜமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சவூதி அரேபியாவில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனையை கோரியுள்ளது. பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க மேற்படி பெண் தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபரிடம் நேற்று கையளித்தார்.

இதேவேளை சவூதியிலுள்ள எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை இலங்கை தூதரகம் நேரடியாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதால் சவூதி அரசின் ஊடாக இதனை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியும் பணியகம் ஆராய்ந்து வருகிறது. இலங்கைப் பெண்ணுக்கு மிக மோசமான முறையில் சித்திரவதை நடந்துள்ளமை பற்றி சவூதியிலுள்ள இலங்கை தூதுவர் தனது அதிருப்தியையும் சவூதி அரசுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை வெளிநாட்டமைச்சு கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் மேற்படி பெண்ணின் மருத்துவ அறிக்கையையும் கோரியுள்ளது. சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதற்கான மருத்துவ அறிக்கைகள், எக்ஸ்ரே மற்றும் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆணிகளின் விபரங்கள் போன்றவற்றை சேகரிப்பதற்கு பணியகத்தின் மாத்தறை கிளை அதிகாரிகள் நேற்று கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர்.

சவூதியில் இவ்வாறு வீடுகளில் துன்புறுத்தப்படுதல், சித்திரவதைக்குள்ளாக் கப்படுதல் போன்ற சம்பவங்கள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக் குமானால் உடனடியாக இலங்கை தூத ரகத்துக்கு அறிவிக்குமாறு சவூதியிலுள்ள உள்ளூர் பத்திரிகைகள் மூலம் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஆணிகளால் குத்தி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணும் பலமுறை தனது உறவினர்களோடு பேசியுள்ள போதும் பல முறை இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்ட போதும் தனக்கு இவ்வாறான சித்திரவதை நடைபெற்றது என்பதை தெரிவிக்கவில்லை.

அச்சம் காரணமாகவே இவர் இவ்வாறு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் எவரும் அச்சமின்றி இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்க வேண்டும் என இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது. சவூதி எஜமானர்களிடமிருந்து நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்க பணியகம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.