நாட்டி லிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள ஜனாதிபதி, புலிகள் அமைப்பின் சர்வதேச தலைவராகவிருந்த கே. பி. யை கைது செய்ததன் மூலம் உலக நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளாரென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாமல் செய்வதாகக் கூறியே 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டாரெனக் கூறிய பாதுகாப்புச் செயலாளர், சமாதானம் முறிவடையும் பட்சத்தில் யுத்த நடவடிக்கைகளில் பிரவேசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென ஜனாதிபதி இந்தியாவுக்கான தனது முதலாவது விஜயத்தின் போது இந்தியத் தலைவர்களிடம் கூறியதனையும் அவர் நினைவுகூர்ந்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் யுத்தத்தை நிர்ப்பந்திக்கவில்லை.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் (07) ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே மேற்கண்டாறு தெரிவித்தார். சுமார் இரண்டு மணித்தியாலங்களாக இந்தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
ஜனாதிபதியினால் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை அழிந்து புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கான சதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறப்படுவது இந்த சதியின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி தலைமையில் நானும் முப்படைத் தளபதிகளும் புலிகளை உறுதியான திட்டமிடலின் கீழேயே அழித்தோம்.
ஜனாதிபதி இந்தியாவில் வைத்து தெரிவித்ததைப் போன்றே செய்தும் காட்டி விட்டார். பலர் இது வெறும் வாய் வார்த்தையென்றே நினைத்திருந்தனர். ஆனால் அவர் அதனை அத்தோடு நிறுத்திவிடவில்லை. புலிகள் அமைப்பின் சர்வதேச தலைவரான கே. பி.யை கைது செய்து மகத்தான வெற்றியை நிலைநாட்டியதன் மூலம் உலக நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
2005 ஆம் ஆண்டில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அதனைத் தொடர்ந்து தீவிரவாதத்தை ஒழித்தமையும் பெரும் வெற்றிகளாகும். கைது செய்யப்பட்டிருக்கும் கே. பி.யிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு பார்க்கையில், புலிகளின் வலைப்பின்னல் சர்வதேச நாடுகளிடையே விசாலமாக பரந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களது சொத்து விசாலமானது.
பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளின் போது எமது ஜனாதிபதி பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டார் எனவும் அவர் கூறினார்.