இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்க முடிவு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

26parliament.jpg2010ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் முழுமையாக தயாராக இருந்தது. ஆனால் பொருளாதார நிபுணர்களினதும் அரசியல் கட்சித் தலைவர்களினதும் கோரிக்கைகளின் அடிப்படையிலே வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது இடைக்கால கணக்கறிக் கையொன்றை முன்வைக்க அரசாங்கம் முடிவு செய்ததாக சபை முதல்வரும் சுகாதார போஷாக்கு அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தினதோ வேறு அழுத்தங்கள் காரணமாகவோ இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டுக்காக இடைக்கால கணக்கறிக்கையொன்றை சமர்ப்பிக்க தீர்மானித்திருப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

இடைக்கால கணக்கறிக்கை இந்த மாத முதற்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  நவம்பர், டிசம்பர் மாதங்கள் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நடத்தப்படும். குழுநிலை விவாதத்தின் பின்னர் இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்படும்.

அரசியல் யாப்பின் பிரகாரமே அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இலங்கையில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுவது இது முதற் தடவையல்ல. 1866 இல் முதன் முதலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையில் முதற் தடவையாக 1931 இல் முதன் முதலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்காக 1982ல் ஆட்சியில் இருந்த ஐ. தே.க அரசு இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்தது.

1994 இல் அன்றிருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசும் இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதற்காக 1999 நவம்பரில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2001 இல் ஐ. தே. க அரசு கூட இடைக்கால கணக்கறிக்கை முன்வைத்தது.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுவது புதிய விடயமல்ல. 2010ல் தெரிவாகும் புதிய அரசாங்கத்திற்கு தாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வாய்ப்பளிக்கும் வகையிலே வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் அரசு பணிகளை தடையின்றி தொடரவுமே இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை முன்வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் 2010ல் தெரிவாகும் புதிய அரசாங்கத்திற்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க, புதிய வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்க வாய்ப்பு ஏற்படும்.

பாராளுமன்றத் தேர்தலின் பின் புதிய அரசாங்கமொன்றும் புதிய அமைச்சரவையொன்றும் தெரிவாக உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது பொருத்தமல்ல. இது குறித்து பொருளாதார நிபுணர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் அரசுக்கு தெரியப்படுத்தின என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *