அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பெருமழை, இடி, மின்னல் குறித்து எச்சரிக்கை

srilanka-today.jpgவடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. குறிப்பாக கிழக்குக் கரையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் கடுமையான காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இன்று முழுவதும் சில இடங்களில் கடுமையான மழை பெய்வதுடன் மழை சற்று குறைந்து காணப்பட்டாலும் சில நாட்களுக்கு தொடர்ச்சியான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இக்காலங்களில் இடிமின்னல் அதிகமாகக் காணப்படுவதால் பொதுமக்கள் சற்று அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு- கண்டி; கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக பாதை நிர்மாண பணிகள் விரைவில் ஆரம்பம்

உலக வங்கியின் நிதியுதவியுடன் நடை முறைப்படுத்தப்படவுள்ள கொழும்பு- கண்டி அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் விரை வில் ஆரம்பமாகுமெனவும் இது தொடர்பாக உலக வங்கியுடனான இறுதிப் பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்ற தாகவும் நெடுஞ் சாலைகள் அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். இதன் சமகாலத்தில் கொழும்பு-கட்டு நாயக்க அதிவேக பாதை நிர்மாணப் பணி களையும் மேற்கொள்ளவுள்ளதாக அமை ச்சர் தெரிவித்தார்.

அமைச்சின் தற்காலிக ஊழியர்கள் 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற இந்த நான்கு வருட காலங்களில் சுமார் 12,000 பேர் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சில் நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர். 2005ல் ஜனாதிபதி வழ ங்கிய வாக்குறுதிக்கிணங்க 2007ல் 5,000 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. அதற்கடுத்ததாக இன்று 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழி லாளர்களின் உயர்வைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு உன்னதத் தலைவர். அதனால்தான் அவரது பிறந்த தினமும், நான்காவது சேவை பூர்த்தி நிறைவும் முடிவடைந்த கையோடு 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குகிறார்

வடக்கிலிருந்து இன்று பசில் விசேட அறிவிப்பு முக்கியமான விடயம் என்கிறார் அமைச்சர் சமரசிங்க

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று சனிக்கிழமை வடக்கிற்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை சந்திக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அங்கிருந்து விசேட அறிவிப்பொன்றை விடுக்கவிருப்பதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவலை வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க, எனினும் வடக்கில் எங்கிருந்து பசில் ராஜபக்ஷ இந்த அறிவிப்பை விடுக்கவிருக்கிறார் என்பதை பாதுகாப்புக் காரணம் கருதி வெளியிட முடியாதென்றும் மறுத்து விட்டார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பசில் ராஜபக்ஷ வடக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவர் என்ற வகையில் நாளை (இன்று சனிக்கிழமை) வடக்கிற்குச் சென்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து பேசியதன் பின்னரே அவர் இந்த அறிவிப்பை விடுக்கவுள்ளார்.இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தக் குறுகிய காலப் பகுதிக்குள் நினைக்க முடியாத அளவுக்கு உரிமைகளை வழங்கும் முக்கியமானதொரு அறிவிப்பாக இருக்கும். அவர் அந்த அறிவிப்பை விடுத்ததன் பின்னர் அதன் விபரங்கள் தெரியவரும் என்று மகிந்த சமரசிங்க இதன்போது கூறினார்.

இதேநேரம், மீள்குடியேற்றம் தொடர்பாக இங்கு விளக்கமளித்த அமைச்சர் வெள்ளிக்கிழமை வரை வவுனியா (127,495), யாழ்ப்பாணம் (2,034), மன்னார் (970), திருகோணமலை (2,762) முகாம்களிலும் மற்றும் 7 வைத்தியசாலைகளிலும் (தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருபவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் 3,067 பேர்) மொத்தமாக உள்ள ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 328 பேர் (136,328) இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளனர்.கடந்த வாரத்தில் 143,161 ஆக இருந்த தொகை இவ்வாரம் 136,328 ஆக குறைவடைந்துள்ளது. ஒருவார காலப்பகுதியில் 6500 இற்கும் 7 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் மீள்குடியேற்றம் மேலும் அதிகரிக்கும். அத்துடன் இலங்கை வந்திருந்த மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா. உதவி செயலாளர் ஜோன் ஹோம்ஸ், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் திருப்தி வெளியிட்டுள்ளார். ஐ.நா.விடமிருந்து இம்மாதிரியான வார்த்தைகள் வெளிவருவது இதுவே முதற்தடவை. இதேநேரம், இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த ஓரிரு நாட்களில் 50 சதவீதத்தைத் தாண்டும் என்பதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்குள் தெளிவாக பெரும்பான்மையானோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருப்பர் என்றும் தெரிவித்தார்.

கருணாநிதியைக் கண்டித்து போஸ்டர்கள் – பரபரப்பு

20-poster-tamilnadu.jpgவிடு தலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற தலைப்பில் முரசொலியில் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஈழ விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் கலைஞரே, உங்கள் அறிக்கை மெளனத்தின் வலியா, துரோகத்தின் மொழியா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழின உணர்வாளர்கள், மதுரை என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் பெரியார் படமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்களை போலீஸார் உடனடியாக அகற்றி விட்டனர்.

20-poster-tamilnadu.jpg

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் -‘லங்கா’ பத்திரிகை: பொன்சேகாவுக்கு மேலதிக பாதுகாப்பு – ஹுலுகல்ல

031109sarathfonseka.jpgகூட்டுப் படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான ‘லங்கா’ பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார்.

“சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது. அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

உயர்தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வுபெற்றதும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட மேலதிகமான பாதுகாப்பை சரத் பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளதாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹுலுகல்ல மேலும் தெரிவித்தார்.

அனோமாவும் ராஜினாமா

anoma.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இதனை இராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

ரணவிரு சேவா என்ற படைவீரர்கள் நலத்திட்ட அதிகார சபையின் தலைவராக அனோமா பொன்சேகா இதுவரை காலமும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப் பேர் தற்போது முகாம்களை விட்டுச் சென்றுவிட்டனர் – ஐ.நா. அகதிகள் நிறுவனத் தலைவர்

mahinda-and-holmes.jpgஇலங்கை யின் வடக்கே அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களில் பாதிப் பேர் தற்போது முகாம்களை விட்டுச் சென்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணிகளுக்கான தலைமை அதிகாரி ஜான் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

இந்த முகாம்களுக்கு விஜயம் செய்து திரும்பியுள்ள ஜான் ஹோம்ஸ் இது விடயம் தொடர்பாக இலங்கை அரசு அளித்து வரும் விபரங்களை உறுதிப்படுத்தினார். ஒரு லட்சத்து முப்பத்தி ஐயாயிரம் பேருக்கும் குறைவானர்கள் தான் அங்கு எஞ்சியிருப்பதாக ஜான் ஹோம்ஸ் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பாதுகாப்புடன் மீளத் திரும்ப வேண்டும் என்பதையும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதையும் இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

இலங்கைக்கு மருந்து விநியோகிக்கும் நான்கு இந்திய கம்பனிகளுக்கு தடை

இந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி கம்பனிகளின் உற்பத்திகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

இந்தக் கம்பனிகளின் உற்பத்திகள் யாவும் அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதுடன், அக்கம்பனிகளின் உற்பத்திகளைத் தனியார் ஆஸ்பத்திரிகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் பெறுமதியை அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் மீளப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நோயாளர்களுக்குப் பயன்படுத்தப்படவிருந்த ஊசி மருந்து குப்பிகளுக்குள்ளும், சேலைன் போத்தலினுள்ளும், கண்ணாடித் துகள்களும், பிளாஸ்ரிக் துண்டுகளும் இருந்தமை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையிட்டு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு இந்த ஊசி மருந்து குப்பிகளையும், சேலைன் போத்த லையும் உற்பத்தி செய்து இலங்கைக்கு விநியோகித்த இந்தியாவின் ஆறு கம்பனி களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் அடிப்படையில் இந்தியாவின் நான்கு மருந்துப் பொருள் உற்பத்தி கம்பனிகளிலிருந்து அடுத்த இரு வருடங்களுக்கு எந்தவொரு மருந்துப் பொருளையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற் கேற்ப அக்கம்பனிகள் உற்பத்தி செய்யும் மருந்துப் பொருட்களின் இலங்கை பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இக்காலப் பகுதிக்குள் இக்கம்பனியினர் தங்களது உற்பத்திகளின் தரத்தை உறுதி ப்படுத்துவது அவசியம் என அமைச்சு குறித்த கம்பனிகளிடம் கேட்டிருக்கின்றது.

பெல்கோ பார்மா, வின்ஸ் பயோ புரடெக்ட் லிமிட்டட், கிளிச் மருந்து பொருள் கம்பனி, யுமெடிகா லெபோரட்டரி தனியார் நிறுவனம் ஆகிய நான்கு கம்பனிகளின் உற்பத்திகளே இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதன்படி பெல்கோ பார்மா நிறுவனத்தின் 18 வகையான ஊசி மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரி கூறினார்.

ஊ. சே. நிதி: மாவட்ட காரியாலயங்களிலும் விண்ணப்பிக்கலாம்

ஊழியர் சேம இலாப நிதியத்திற்கென தனியான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதால் ஊழியர் சேமலாப நிதியினைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள் தத்தமது மாவட்டக் காரியாலயங்களில் தமது விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு தொழிலமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதிய அலுவலகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும் பின்னர் அது நாரஹேன்பிட்டியிலும் இயங்கி வந்ததுடன் தற்போது தற்காலிக மாகத் தொழிலமைச்சில் சிறிய தொரு பிரிவில் இயங்கி வருகிறது.புதிய கட்டட நிர்மாணம் முடியும் வரை மாவட்ட அலுவலகங்களில் நமது சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.

180 நாட்கள் தொடர் பணி புரிந்த அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – தற்காலிக, சமயாசமய, ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவோர் தகுதி

anura.jpg180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ள தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு அரசாங்க துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்கள் அரச மற்றும் மாகாண பொதுச் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நியமிக்கப்படுவார்கள்.

அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 25 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நன்மை அடையவுள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என நிதி மற்றும் அரச வருவாய்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாது உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி திட்டமிடல் அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (19) கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, இது குறித்து மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தின் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பல்வேறு ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அவற்றில் சில ஆட்சேர்ப்புகள் திறைசேரியின் முழுமையான அனுமதியின்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே தற்காலிக சமயாசமய, மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கும் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினூடாக சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படும்.

இதன்படி, 2009 ஒக்டோபர் 31ம் திகதியாகும்போது தொடர்ச்சியாக 180 நாட்கள் பணிபுரிந்த, குறித்த பதவிக்குரிய தகைமைகளைக் கொண்ட 45 வயதுக்கு குறைவான ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

குறித்த நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் இவர்களுக்கு நியமனம் வழங்கப்படும். எதிர்வரும் காலங்களில் ஏற்படும் வெற்றி டங்களுக்கு ஏற்ப இவர்களுக்கு நியமனம் வழங்கி, மேலதிகமாக உள்ள ஊழியர் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் என்பவற்றில் பணிபுரியும் தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப் படையிலான ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதற்கான அதிகாரம் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, இனிமேல் திரைசேறியின் உரிய அனுமதியின்றி தற்காலிக, சமயாசமய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் நெருங்குவதால் அரசியல் நோக்கத்திற்காக அரசாங்க ஊழியர் களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவோ அல்லது கொடுப்பனவுகளை அதிகரிக்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு காலப்பகுதியிலும் அரசாங்க அத்தியாவசிய தேவைகளுக்காக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படுவது வழமையானது. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.