இந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி கம்பனிகளின் உற்பத்திகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.
இந்தக் கம்பனிகளின் உற்பத்திகள் யாவும் அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதுடன், அக்கம்பனிகளின் உற்பத்திகளைத் தனியார் ஆஸ்பத்திரிகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் பெறுமதியை அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் மீளப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நோயாளர்களுக்குப் பயன்படுத்தப்படவிருந்த ஊசி மருந்து குப்பிகளுக்குள்ளும், சேலைன் போத்தலினுள்ளும், கண்ணாடித் துகள்களும், பிளாஸ்ரிக் துண்டுகளும் இருந்தமை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையிட்டு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு இந்த ஊசி மருந்து குப்பிகளையும், சேலைன் போத்த லையும் உற்பத்தி செய்து இலங்கைக்கு விநியோகித்த இந்தியாவின் ஆறு கம்பனி களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் அடிப்படையில் இந்தியாவின் நான்கு மருந்துப் பொருள் உற்பத்தி கம்பனிகளிலிருந்து அடுத்த இரு வருடங்களுக்கு எந்தவொரு மருந்துப் பொருளையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற் கேற்ப அக்கம்பனிகள் உற்பத்தி செய்யும் மருந்துப் பொருட்களின் இலங்கை பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இக்காலப் பகுதிக்குள் இக்கம்பனியினர் தங்களது உற்பத்திகளின் தரத்தை உறுதி ப்படுத்துவது அவசியம் என அமைச்சு குறித்த கம்பனிகளிடம் கேட்டிருக்கின்றது.
பெல்கோ பார்மா, வின்ஸ் பயோ புரடெக்ட் லிமிட்டட், கிளிச் மருந்து பொருள் கம்பனி, யுமெடிகா லெபோரட்டரி தனியார் நிறுவனம் ஆகிய நான்கு கம்பனிகளின் உற்பத்திகளே இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெல்கோ பார்மா நிறுவனத்தின் 18 வகையான ஊசி மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரி கூறினார்.